நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 30, 2023

திருப்புகழ்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 15
 வெள்ளிக்கிழமை


இன்றைய பதிவில்
பழனித் திருப்புகழ்

தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ... தனதான


கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து ... மதனாலே

கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ... மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ... யழிவேனோ..

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ... வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த ... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கருவில் உருவாகிப் பிறந்து, வயதுக்கு ஏற்றபடி வளர்ந்து,
பற்பல கலைகளைக் கற்றறிந்து, 

மன்மதனுடைய கணையினால், 
கருங்கூந்தற் பெண்களின் பாதச் சுவடுகள் மார்பில்  அழுந்தும்படியான இன்பங்களில் வாழ்ந்து 

(அதனால்) விளைந்த 
மகிழ்ச்சி (பின்னாளில்) பெரிய கவலைகளாகி
மனம் நொந்து, மிகவும் வாட்டம் அடைந்து, 

நாள்தோறும்
ஹரஹர சிவாய என்று நினைத்து வணங்காதவனாயும்
அறுவகைச் சமயங்களைப் பற்றி ஏதும் புரியாதவனாயும்,

உணவிடுவோர் தம்
இல்லத்தின் முன்பாக நாளும் வெட்கமின்றி  நின்று - அழிந்து போவேனோ?

ஆதிசேஷன் மீது துயில்கின்ற பெரிய பெருமாள் திரு அரங்கன் ஆகவும் உலகளந்த வாமனன் ஆகவும் விளங்கும் திருமாலவன் மகிழ்ச்சி கொள்ளும்படியான மருமகனே..

தாய், தந்தை எனும் இரண்டு வம்சாவளியிலும்
தூய ப்ரகாசனனாக விளங்குபவனே..

வெற்றி பெறும் கவிராஜ சிங்கமாக (சம்பந்த மூர்த்தியாக) புகலி நகரில் (சீர்காழி) அன்று தோன்றியவனே..

முன்பு ஒரு சமயம் -
பரவை நாச்சியார் வீட்டுக்கு
(சுந்தரருக்காக) ஒரு பொழுது தூது நடந்த பரமனுடைய அருளால் வளர்ந்த குமரேசனே..

பகையாய் நின்ற அசுரர் சேனைகளைக் கொன்று, தேவர்கள் சிறையினின்று மீளும் படியாக வென்று,
பழனிமலை மீதில் நிற்கின்ற பெருமாளே..

இத்திருப்பாடலில் ஞானசம்பந்தப் பெருமானையும் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளையும் அருணகிரியார் குறித்தருள்கின்றார்..

ஹர ஹர சிவாய - என்று நினைத்து வணங்காதவர்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள் - என்று அருணகிரி நாதர் சொல்வதைப் போலவே அபிராமபட்டரும் அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகின்றார் என்பது நினைவு கூரத்தக்கது..

முருகா
முருகா..
***

வியாழன், ஜூன் 29, 2023

வராஹி தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 14
வியாழக்கிழமை


தேவி வழிபாட்டில்
தை அமாவாசையை அடுத்து 
சியாமளா நவராத்திரியில் ஸ்ரீ சியாமளா தேவியையும்
பங்குனி   அமாவாசையை அடுத்து 
வசந்த நவராத்திரியில் ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும்
ஆனி  அமாவாசையை அடுத்து 
ஆஷாட நவராத்திரியில்  ஸ்ரீ வராஹி அம்மனையும்
புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்து 
சாரதா நவராத்திரியில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் வழிபடுவது வழக்கம்..

மகாளய பட்சத்தில் வரும் நவராத்திரி மட்டுமே நாடெங்கும் கொண்டாடப்படுவது..

அந்த வகையில்
தஞ்சை பெரியகோயில்  ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கடந்த (18ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்கியது..


அம்மனுக்கு நாள் தோறும் காலையில் யாக பூஜையுடன் அபிஷேகமும் மாலையில்
அலங்காரமும் நடைபெற்றது..

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாராஹி அம்மனுக்கு - 
இனிப்புகளாலும் 
மஞ்சளாலும் குங்குமத்தாலும்
 சந்தனத்தாலும் தேங்காய்ப் பூவினாலும் மாதுளை முத்துக்களாலும் தானியங்களாலும்  வெண்ணெயினாலும் கனிகளாலும் காய்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப் பெற்றது..

கீழுள்ள படங்கள்
நன்றி: தஞ்சாவூர்  Fb

முதல் நாள் இனிப்பு
இரண்டாம் நாள் மஞ்சள்
மூன்றாம் நாள் குங்குமம்
நான்காம் நாள் சந்தனம்
ஐந்தாம் நாள் தேங்காய்த் துருவல்
ஆறாம் நாள் 
மாதுளை முத்துகள்
ஏழாம் நாள் தானியங்கள்
எட்டாம் நாள் வெண்ணெய்
ஒன்பதாம் நாள்
கனிகள்
பத்தாம் நாள் காய்கள்
 மலர் அலங்காரம்
***
ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம்
***

புதன், ஜூன் 28, 2023

மனை மங்கலம் 4

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஆனி 13
 புதன்கிழமை


இது கர்ம பூமி.. 

முன்னமே தீர்மானிக்கப்பட்ட விதிகளின்படி
வாழ்வதற்காகவே - நாம் வந்திருக்கின்றோம்..  

லாபம் நஷ்டம், கஷ்டம் இஷ்டம் - வாழ்ந்துதான் ஆக வேண்டும்..

இறை வழிபாடு என்ற ஒன்று மட்டுமே கரை சேர்க்கும்.. 

பரிகாரங்கள் அல்ல.. 

இருப்பினும்,
உண்மையான பரிகாரம் என்பது - செய்த பிழைகளுக்கு மனம் வருந்துவதும் திருந்துவதும் ஏழைகளுக்கு இரங்கி உதவுவதும் தான்!..

மனமகிழ்ச்சிக்காக எளிய பரிகாரக் குறிப்புகளை பின்பொரு நாளில் தருகின்றேன் - என்று சொல்லியிருந்தேன்..

அதன் பொருட்டு இந்தப் பதிவு..

தானம் தவமிரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்கா தெனின்.. (19)

- என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு..

தானம் தவம் இரண்டைப் பற்றியும் பல இடங்களில் பேசுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.

அரிது அரிது - என்று வரிசைப்படுத்துகின்ற ஔவையார் -

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!.. 

- என்று நிறைவு செய்கின்றார்..

தானம் பிறர் பொருட்டு.. தவம் தன் பொருட்டு.. வானவர் நாட்டிற்கான இரண்டு கதவுகளில் ஒன்று தானத்தினாலும் மற்றொன்று தவத்தினாலும் திறந்திடும்.. - என்பார் வாரியார் ஸ்வாமிகள்..

தானம் என்ற சொல் சமஸ்கிருதம்..
அதற்கு அறம் என்பது நேரடியான பொருள்..

" அறம் செய விரும்பு!.." என்றவர் ஔவையார்..

மனதளவில் விருப்பம் கொண்டு வீணே பொழுது கழிக்காமல் ஏழை எளியோர்க்கு இயன்றவரை உதவ வேண்டும்..

அறம் செய விரும்பு -
என்றாலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து விட வேண்டும்..

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.. (36)

தானங்கள் பலவகை..

தானம் செய்வது அவரவர் விருப்பம்.. அவரவர் சூழ்நிலை..
ஆயினும், தோஷங்கள் விலகுவதற்காக  செய்யப்படும் தானங்கள் நன்மை அளிப்பன..

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று.. 
- என்று எழுதினார் கவியரசர்.. 

எத்தகைய சூழல் என்றாலும் தானம் கொடுப்பதை நாமே நம் கையால் கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்..

தானங்களைப் பற்றி புராண இதிகாச வரலாறுகளில் நிறையவே காணப்படுகின்றன.. 

கொடுப்பதற்கு மனமிருந்தும் பொருளின்றித் தவிப்போர்கள் புண்ணியர் ஆகின்றனர்.. 

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.. - என்று வள்ளுவப் பெருந்தகை குறிக்கும் அளவுக்கு தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் கொடையாகக் அளித்தவர் ததீசி முனிவர்..

ஊர் காக்கும் காவிரி மீண்டு வருவதற்காகத் தன் உயிரையும் கொடுத்தவர் ஹேரண்ட முனிவர்.. 

சாபத்தினால் வயோதிகம் அடைந்த
தகப்பன் யயாதிக்குத் தனது இளமையை தாரை வார்த்துக் கொடுத்தவன் இளவரசன் பூரு.. 

இவன் தேவயானியின் பணிப் பெண்ணாகிய ஷர்மிஷ்டைக்கு யயாதியினால் பிறந்தவன்.. இந்தத் தவறைச் செய்ததனால் தான் யயாதி இளமையை இழந்தான்..

தமிழ் வாழவேண்டும் - என்பதற்காக, ஆயுள் விருத்தி அளிக்கும் நெல்லிக்கனியை ஔவையாருக்கு ஈந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி.. 

தமிழ்ப் புலவனின் வறுமை தீர்வதற்காக தன்னையே தானமாகக் கொடுத்தவன் பெரு வள்ளல் குமணன்..

இப்படியிருக்க -
பொருள் இருந்தும் ஈந்து மகிழும் மனம் இன்றி ஒளித்து வைத்து வாழ்வோர்க்கு கடும் நரகங்கள் காத்திருப்பதாக  அப்பர் பெருமான் எச்சரிக்கின்றார்..

சரி.. தானம் யாருக்கு யார் கொடுப்பது?..

யாரும் கொடுக்கலாம்..
யாருக்கும் கொடுக்கலாம்..
வறியவர் எவரோ அவருக்குக் கொடுப்பதே சாலச் சிறந்தது..

ஏழை ஒருவனின் மனம் குளிரும்படிக்கு அளப்பரிய அன்புடன் செய்வதுவே - தானம், ஈகை, கொடை..

இதைத்தான் 
வகைப்படுத்திக் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை..

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து..


எளிய மனிதருக்கு 
ஏற்றவையாகவும் பொருள் படைத்தோர்க்கு உரியவையாகவும் சில தானங்கள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன.. 

தண்ணீர், மோர், உப்பு தானம் செய்வதால் தர்ம தேவதையின் நல்லாசிகள் கிட்டும்..

தயிர் தானம் செய்வதால் இந்திரிய தோஷம் விலகும்..

நெய் தானம் செய்வதால் பீடைகள் விலகும்..

பசும் பால் தானம் செய்வதால் துக்கமும் பிணிகளும் அகலும்..

தேன் தானம் செய்வதால் ஞான விருத்தி ஏற்படும்.

தீப தானம் செய்வதால் கண் நோய்கள் விலகும்..

நெல் தானம் செய்வதால் செல்வம்  விருத்தியாகும்..

அரிசி தானம் செய்வதால் தோஷங்கள் அகலும்..

தேங்காய் தானம் செய்வதால் தடைகள் விலகி வெற்றி சேரும்..

சர்க்கரை வெல்லம் தானம் செய்வதால் எதிரிகள் விலகுவர்..

நெல்லிக் கனி தானம் செய்வதால் மஹாலக்ஷ்மி ப்ரீதி ஏற்படும்..

காய்கள் தானம் செய்வதால் பித்ரு சாபம் நீங்கி முன்னோர் நல்லாசிகள் கிட்டும். மறந்தும் பாகற்காய் கொடுக்கக் கூடாது..

பழங்கள் தானம் செய்வதால் சகல காரியங்களும் சித்தியாகும்..

அன்ன தானம் செய்வதால் - வறுமை வந்து சூழாது. கடன் தீர்ந்து குறையாத செல்வம் சேரும்..

தாம்பூலம் தானம் செய்வதால் சாபங்கள் விலகும்..

வஸ்திர தானம் செய்வதால் ஆயுள் விருத்தி உண்டாகும்..

பசு தானம்  கன்றுடன் பசுவை தானம் வழங்குவதால் முன்னோர்க்கு நற்கதி விளையும். சந்ததியர்க்கு நல்வாழ்க்கை அமையும்..

வெள்ளி தானம் செய்வதால் சகல போகங்களும் உண்டாகும்..

ஸ்வர்ண தானம் செய்வதால் மஹாலக்ஷ்மி ப்ரீதியுடன் செல்வ வளம் சேரும்..

வித்யா தானம் - ஏழைப் பிள்ளையின் படிப்புக்கு உதவுவதால்
மகரிஷிகளின் ஆசி கிட்டும்..

கன்யா தானம் - ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுவதால் சகல தேவதா பிரீதியுடன் சர்வ மங்கலம் உண்டாகும்..

பூமி தானம் செய்வதால் ஈஸ்வர தரிசனம் கிட்டும்..

கிழிந்த துணிகள் உடைந்த பொருட்கள், வீணாகிய தானியங்கள், கெட்டுப் போன உணவுகள் - இவற்றை ஒருபோதும் தானமாகக் கொடுக்கக் கூடாது..

இயன்ற அளவில் தானம் வழங்கப் பழகுவோமாயின் அதுவே தவ வாழ்க்கை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை..

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று..

- " வள்ளுவரு இப்படியும்  தானே சொல்லியிருக்கார்.. நாந்தான் பொய்யே சொல்றதில்லையே.. நான் எதுக்கு தானஞ் செய்யணும்?.. தவம் செய்யணும்?.. " 
-  என்று யாரும் வரலாம்..

ஒற்றைச் சுவையுடன் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த உலக மக்களுக்கு அறுசுவைகளைக் காட்டியதே நமது கலாச்சாரம்..  

இதன்படியும் தான் வாழ்ந்து பார்ப்போமே!..

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!..
(திருமந்திரம்)
-: திருமூலர் :-

சுகம் சௌக்யம் சௌபாக்யம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூன் 27, 2023

ஆனி ஹஸ்தம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 12
செவ்வாய்க்கிழமை

இன்று ஆனி மாதத்தின் ஹஸ்த நட்சத்திரம்..

தஞ்சையம்பதியில் சிறப்பு தெய்வ தரிசனம்




















ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய ப்ராப்தி ரஸ்து

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூன் 26, 2023

காமாட்சி தரிசனம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
 திங்கட்கிழமை

வீட்டிற்கு அருகில் அம்மன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று ஞாயிறன்று காலை நடைபெற்றது..

மூலஸ்தானத்தில் ஸ்ரீ காமாட்சியம்மன்..

ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் சந்நிதிகளுடன்
ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ வீரனார் என தனித்தனி சந்நிதிகள்.. 

குல தெய்வமாகக் கொண்டாடுபவர்களின் சீரிய திருப்பணி.. சிறப்பான குடமுழுக்குடன் அன்னதானமும் நடைபெற்றது..

இயன்றவரை நான் எடுத்த நிகழ்வுகள் இன்றைய பதிவில்..









































மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே...
-: அபிராமிபட்டர் :-

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***