நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 12, 2019

வாழ்க வராஹி

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்தகோடி!...


அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் ஒன்றுதான் - ஸ்ரீவராஹி.

அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே!..
எனினும் -  அமாவாசையை அடுத்த ஒன்பது நாட்களும் சிறப்பானவை
என்று ஒரு திருக்குறிப்பு உண்டு...

அந்த வகையில்  -
ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் - சிறப்பானவை. 

ஆனால் - நாம் இல்லத்தில் கொண்டாடுவது சாரதா நவராத்திரியைத் தான்.

இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது.

இந்த ஆஷாட நவராத்திரியின் நாயகி - ஸ்ரீ வராஹி!..
அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் ஸ்ரீவராஹி..

தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள்.
வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியாகத் திகழும் வராஹி - 
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்தில் இருந்து தோன்றியவள்..  

சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி.
அதனாலேயே - பச்சைப் பசுமைக்கு அதிபதியானவள்..    

ஆதியில் இருந்தே ஆதாரத் தொழிலாக விளங்குவது விவசாயம் தான்... 
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்பார் வள்ளுவப் பெருமான்!..

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?.. - என்றார் கவியரசர்..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதார தெய்வம்!..  

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம்..
உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும்
சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  -

ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனப்படும்  -
ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு
சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும்
சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரிய கோயிலில் தான் -
ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு -
இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது
அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக
நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான நாட்களில்
ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - ஸ்ரீ வராஹிக்கு உரிய நாள்.

வேளாண்மைக்கு உரியதான ஏர்
தொழிலுக்கு உரியதான உலக்கை
ஆகிய இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின்
திருக்கரங்களில் விளங்குகின்றன!..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் உண்டு.  
ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளின் தலைவி இவளே!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி.

ஸ்ரீவராஹியின் துணை கொண்டே -   குமரி முதல் நர்மதை வரை அரும்பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம். 

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..


இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பக்தருக்கெல்லாம் உற்றதுணையாய் வருபவள் ஸ்ரீ வராஹி!..

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி மற்றும் மல்லிகை, முல்லை இவற்றால் அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம்.

தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!.

தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!.

வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

சங்கு, சக்கரம், ஏர், உலக்கை (முசலம்), அங்குசம், பாசம் தாங்கிய திருக் கரங்களுடன் திகழும் ஸ்ரீ வராஹி அபயமும் வரதமும் அருள்பவள்.. 

(ஈனவராகம் = ஈனவர் ஆகம்.. இழிந்தவர் தேகம்)

ஆறு குளங்களை அழித்தல், காடு மலைகளை ஒழித்தல்,
ஊர் சொத்தைக் கொள்ளையடித்தல், மங்கையரை மானபங்கம் செய்தல்
முதலான இழி குணம் மிக்க ஈனர்களின் தேகத்தினை 
இடித்து நசுக்குவதற்கு உலக்கையைத் தாங்கியிருக்கின்றாளாம் வராஹி...

தங்கள் துன்பங்கள் தீர வேண்டும்!.. 
என்று தியானித்து உணர்பவர் தம் உள்ளங்களில்
என்றென்றும் ஓங்கி ஒளியாக விளங்குகின்றாள்!..
- என்பது திருமூலரின் திருவாக்கு!..


''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''
என்று புகழ்பவர் - அபிராமபட்டர்!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..
அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
ஆனி மாத அமாவாசைக்கு முதல் நாள் (1/7) ஸ்ரீ மஹாகணபதி ஹோமத்துடன் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது..


விழா நாட்களின் காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

காலையில் மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..
தொடர்ந்து மதியப் பொழுதில் - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.

மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை,
கலை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவாறு நிகழ்ந்துள்ளன..


இத்திருவிழாவில் - 
இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், சந்தனம் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்பட்டாள்...

அடுத்தடுத்த நாட்களில்  -
தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும்,
பசு வெண்ணெயினாலும் அலங்காரம் கொண்டு திகழ்ந்தாள்.



கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொண்ட
வராஹி அன்னைக்கு நேற்று (11/7 ஆனி 26 தசமி) காலையில் பூச்சொரிதல்!..

மாலைப் பொழுதில் - கோலாகலமாக
நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய முழக்கங்களுடன் -
அலங்கார ரதத்தில் எழுந்தருளி - ராஜவீதிகளில் பவனி கண்டருளினாள். 


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.

இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 


என் அன்பு மகளின் திருமண வைபவத்தை நடத்திக் கொடுத்தவள் - இவளே..

அவ்வப்போது ஸ்ரீ வராஹி அம்மனுக்கு புதுப்பட்டு சமர்ப்பித்து,
அபிஷேக அலங்கார ஆராதனை - என, நன்றிக்கடன் செலுத்தி நிற்கின்றோம்..

அம்பிகைக்கு செலுத்தும் நன்றிக்கடன் இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றா!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் விருப்பம்!..

இயன்ற போதிலெல்லாம், வீட்டில் - நெல் அல்லது பச்சைப்பயறு கொண்டு கோலமிட்டு, நெய் விளக்கேற்றி வைத்து,

அதிக இனிப்புடன் கூடிய (பாயாசம்,கேசரி, ஜிலேபி போன்ற) பட்சணங்களை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வழித்துணை ஆகவும் வருவாள்!..
யான் பெற்ற பேற்றினை அனைவரும் பெறுங்கள்!..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வராஹி
வாழ்க.. வாழ்க!..
* * *

22 கருத்துகள்:

  1. காலை வணக்கம். ஆடிப்பட்டம் தேடி விதைக்க அருள்புரியும் வராஹி அம்மன் அருள் பெற வந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஷாட நவராத்திரி தகவலும், வராஹி அம்மன் பெருமையும் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. வராஹியின் சிறப்பை மிக அழகாயும் விளக்கமாயும் சொல்லி விட்டீர்கள்.. படங்களுடன் கூடிய இந்தப் பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. தஞ்சைக்கோயில் வராஹி பலருக்கும் குலதெய்வம். அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      அன்னை வாராஹி நல்லோர் அனைவரையும் காத்தருள்வாளாக.. மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. வராஹி அம்மனின் சிறப்பும், படங்களும் வெகு சிறப்பு. அது போல நவராத்திரி பற்றியும் அறிந்து கொண்டேன். உங்கள் பதிவு செம அண்ணா. ஆனால் இதெல்லாம் என் தம்மாத்துண்டு மூளைக்குள்ள பதியுமோ?!!ஏறினாலும் மறந்துவிடும்.. ஹிஹி ஆகையால் டோட்டல் சரண்டர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      அன்னை வாராஹி மனது வைத்தால் ஆகாததும் உண்டோ..
      நல்லோர் அனைவரையும் காத்தருள்வாளாக..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பழைய பதிவுகளும் பார்க்கிறேன் அண்ணா கொஞ்சம் மெதுவாகத்தான் வர முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நல்லோர் அனைவரையும் அன்னை காத்தருள்வாளாக..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. வெள்ளிக்கிழமை வராஹியின் தரிசனம் மனது மகிழ்ச்சியில்.
    முன்பு அடிக்கடி கிடைத்தது மாயவரத்தில் இருக்கும் போது.
    தஞ்சை கோவிலுக்கு அடிக்கடி வந்தோம், வராஹி தரிசனம் பெற்றொம்.
    இப்போது வர இயலாத நிலையில் உங்கள் தளம் மூலம் தரிசனம் ஆச்சு.

    தண்ணீர் பஞ்சத்தை போக்கி எங்கும் பசுமை, வளமையை தர வேண்டும் அன்னை.
    ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் போகிறது.
    சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களில் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மழை வேண்டும்.
    மழை தருவாய் வராஹி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      அன்னை வராஹி அருளால் வறட்சி நீங்கட்டும் வளமே பெருகட்டும்..
      நல்லோர் அனைவரையும் காத்தருள்வாளாக..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. வராஹி - போருக்குள்ள தெய்வம் அல்லவா? போருக்கு முன்னால் பெரிய விழா எடுத்துவிட்டுத்தானே போருக்குச் செல்வார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      போருக்கான தெய்வம் எனப்பட்டதால் போருக்கு முன் நிச்சயம் விழா எடுத்திருப்பார்கள்....

      நலமே நிறைக..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. ஆதார தெய்வமாவது விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அன்பின் ஜி
    ஸ்ரீ வராஹி அம்மன் கோவில் உத்திரகோசமங்கையிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. இனிய காலை வணக்கம்.

    தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மன் பார்த்து வணங்கியதுண்டு. வடக்கில் இன்றைக்கும் இரண்டு நவராத்த்ரிகள் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. வராகி பற்றி அறியாதன அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஸ்ரீ வராகி அம்மன் பெருமைகளை தங்களின் சிறப்பான பதிவின் மூலம் அறிந்தேன் ...

    படங்கள் அனைத்தும் வெகு அழகு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்...
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..