நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 28, 2017

நெடுவாசல் காப்போம்..



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும்
இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் போராட்டம் பன்னிரண்டு நாட்களைக் கடந்திருக்கின்றது..

எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஊருக்குள் வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

நெடுவாசல் கிராமத்தில் பூமிக்குக் கீழாக இயற்கை எரிவாயு மிகுந்திருப்பதைக் கண்டறிந்து அதனை எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது..

காவிரியின் கடைமடைப் பகுதியானது புதுக்கோட்டை..

இம்மாவட்டத்தில் வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் 
நெடுவாசலில் - இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் -

நீர் வளம் நிலவளம் பாதிக்கப்பட்டு வேளாண்மை முற்றிலும் அழிந்து போகும்.. 
எனவே இத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது!.. - என, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டத்தை தடுப்பதற்காக அந்தக் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

நெடுவாசலில் எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த ONGC அலுவலர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.. 

இது தொடர்பாக நெடுவாசல் கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ONGC மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த எவரும் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலின் எல்லையிலும், வயல் வெளிகளிலும் கருப்புக் கொடிகளை கட்டியுள்ளனர். 

மேலும், தாய் மண்ணைக் காப்பதற்குப் போராடும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு அளித்து தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் நெடுவாசலில் கூடியுள்ளனர்..



சில ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் வண்டல் நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவைப் பெருமளவில் உறிஞ்சி எடுப்பதற்கு பாறை வாயு (Shell Gas)எனப் பெயருடன் வந்தார்கள்.. 

நாகை மாவட்டத்தில் நரிமணம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், ஆதிச்சபுரம், கமலாபுரம், கோயில் களப்பால், கூத்தாநல்லூர், மாத்தூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில்

எரிவாயுத் துளைகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் -

மிகப் பெரிய அளவில் பகாசுரத் தனமாக வந்ததும் 
மக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

இதனால் அந்தத் திட்டம் புகையாய்ப் போனது..

இப்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் எனும் பெயருடன் 
மீண்டும் அதே திட்டம் திரும்பி வந்திருக்கின்றது..

இந்நிலையில் -

Facebookல் வந்த செய்தி - இதோ!..

எரிவாயுவுக்காக -
துர்க்மேனிஸ்தானில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்
சோவியத் ரஷ்யா தோண்டிய துளை விபரீதத்தில் முடிந்தது...

விளைவு -

பெருந்தீ மூண்டெழுந்தது..

தங்கள் முயற்சி தோல்வியடைந்ததும் -
அப்படியே போட்டுவிட்டு ரஷ்யர்கள் ஓடிப் போனார்கள்..

இந்த சம்பவம் நடந்த வருடம் 1971.

இன்று வரை அப்பெருந்தீயை அணைக்க முடியவில்லை..

இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது..

அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்ற அந்தப் பெருந்துளைக்கு - 
நரகத்தின் கதவு என்று பெயரிட்டிருக்கின்றார்கள்..



In The Hot, Expansive Karakum Desert In Turkmenistan, Near The 350 -Person Village Of Derweze, Is A Hole 230 Feet Wide That Has Been On Fire For Over 40 Years.

Locals Know The Crater As “The Gates Of Hell.”

Its Glow Can Be Seen For Miles Around.

The Gates Of Hell Were Created In 1971 When A Soviet Drilling Rig Accidentally Punched Into A Massive Underground Natural Gas Cavern, Causing The Ground To Collapse And The Entire Drilling Rig To Fall In. 

Having Punctured A Pocket Of Gas, Poisonous Fumes Began Leaking At An Alarming Rate. To Head Off A Potential Environmental Catastrophe, The Soviets Set The Hole Alight. The Crater Hasn’t Stopped Burning Since. 

The Soviet Drilling Rig Is Believed To Still Be Down There Somewhere, On The Other Side Of The “Gates Of Hell”.. 


Thanks to 
Mr. Ramachandran., Kovai..
Mr. Vairavan., Dvn..




In 1971, Soviet Geologists Were Drilling For Oil When They Accidentally Set Up A Rig Over An Enormous Cavern Of Natural Gas. 

The Rig Punched Through The Earth And The Desert Floor Collapsed, Taking The Rig With It.

The Newly-Formed Crater Was Now Leaking Methane Gas, So The Soviets Decided To Set The Cavern Ablaze And Let The Gas Burn Itself Off. Big Mistake. Over 40 Years Later, The Crater Is Still Burning.

Thanks to 
Motherboard.Vice.com



நெடுவாசலைத் தேடிவருபவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினாலும் இயற்கை நலம் காக்க விழையும் பல்வேறு அமைப்பினர் அவர்களுடன் கை கோர்த்துள்ளனர்.

விளைநிலங்களை கையகப்படுத்தி அவற்றில் எரிவாயுவிற்காகத் துளையிடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதே முதன்மையான  கோரிக்கையாக இருக்கின்றது..

இத்திட்டத்தினால் பல்லாயிரக்கான உழவர்கள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும்..

இயற்கையும் வாழ்வாதாரமும் முற்றாகச் சிதைந்து போகும்..

இயற்கையை அழித்து வாழ்வாதாரத்தைக் கெடுத்து மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்..


இயற்கை எரிவாயு
தேவையான ஒன்றாக இருக்கலாம்..

ஆனால்,
கண்ணை விற்று சித்திரம் வாங்கினால்
நியாயம் என்றாகுமா?..

மண்ணையும் மக்களையும் 
கண்ணெனக் காப்பது அரசின் கடமை..

இயற்கை வாழ்க..
என்றென்றும் வாழ்க!..

வாழ்க நலம்..
***

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

ஸ்ரீ மஹா சிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி..

மாசி மாதத்தின் தேய்பிறை பிரதோஷ நாள்..

இத்துடன் மஹாசிவராத்திரி புண்ய காலமும் கூடி இருக்கின்றது..

மாசி மாதத்தின் திரயோதசியும் சதுர்த்தசியும் இணைந்து வருகின்றன..


இன்றிரவு அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நிகழ்வுறுகின்றன..

முதல் கால பூஜையை ஸ்ரீ நான்முகனும்
இரண்டாம் கால பூஜையை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மூன்றாம் கால பூஜையை ஸ்ரீ பராசக்தி அம்பிகையும்
நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் சித்தர்களும் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இந்த நான்கு காலங்களிலும் ஈ எறும்பு முதற்கொண்டு மனிதர் வரை எண்ணாயிரங்கோடி ஜீவராசிகளும் வழிபட்டு உய்வடைவதாக ஆன்றோர் வாக்கு..

முதல் கால பூஜை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக நிகழும்..

இரண்டாம் கால பூஜை மாலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் கால பூஜை மாலை நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து பின்னிரவு மூன்று மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது (ஒன்றரை மணி) -
லிங்கோத்பவ காலம் என்று குறிக்கப்படுகின்றது..

இவ்வேளையில் தான் ஈசன் எம்பெருமான் அடிமுடி அறியவொண்ணா
அனல் மலையாகத் தோன்றினன் என்பது திருக்குறிப்பு..

நான்காம் கால பூஜை பின்னிரவு மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிக்குள்ளாக நிகழும்..


நான்கு கால பூஜை நேரங்களிலும் 
சிறப்பான அபிஷேக அலங்கார ஆராதனைகள் குறிப்பிடப்படுகின்றன..

சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்பல.. ஆனாலும்,
நேரிய நினைவுகள் நிறைந்திருந்தால் நெஞ்சகமே கோயிலாகின்றது..

எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்ததால் ஆணவமுற்ற நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

கீழே மோதியதால் - தலை ஆயிரம் பிளவுகளாகச் சிதறிப் போனது..

தானுற்ற பழியினின்று நீங்குதற்காக -

முதற்காலத்தில் திருக்குடந்தை
இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம்
மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம்
நான்காம் காலத்தில் திருநாகைப்பட்டினம்

- எனும் திருத்தலங்களில் நாகராஜன் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

ஆணவம் நீங்கப் பெற்று ஈசனைச் சரணடைதல்..
இதுவே சிவராத்திரியின் மகத்தான தத்துவம்..

இந்நிலைக்கு 
எல்லாம் வல்ல சிவம் நம்மையும் உய்விக்குமாக!..
 ***

இன்றைய பதிவில்
ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிய 
போற்றித் திருத்தாண்டகம்..

ஆறாம் திருமுறை
முப்பத்திரண்டாவது திருப்பதிகம்



கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மணியே போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (01)

வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக் குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (02)



மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலை வேலேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (03)


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை உடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (04)



நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (05)

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்னியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (06)




வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொன்னே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (07)

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (08)



பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (09)

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளும்
சிரநெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (10)

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், பிப்ரவரி 20, 2017

கேள்வியின் நாயகன்..

மடப்பட்டி சமஸ்தானத்தின் அதிபதி!...



அவர் வந்து இவர்களுள் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்..

அதற்காகக் காத்திருக்கின்றார்கள் - இவர்கள்..

இவர்கள் என்றால் - அந்த சமஸ்தானத்தின் குடிமகன்கள்...

நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு!..

- என்று ஊரெங்கும் பறையறிவிக்கப்பட்டதால், அதை நம்பி வந்தவர்கள்..

சமஸ்தானத்தில் வேலை - என்று, நூற்றுக் கணக்கில் திரண்டு வந்தவர்களுக்கு பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன..

அவற்றுள் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவியவர்களைத் தவிர்த்து வெற்றி வாகை சூடியவர்கள் நால்வர்!..

இந்த நால்வரும் எல்லா போட்டிகளிலும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்ததால் கீழ்நிலை வேலையாட்களின் மண்டை காய்ந்து விட்டது..

யாரைத் தேர்ந்தெடுப்பது!.. - என்று..

கடைசியில்,

நமக்கெதற்கு வம்பு.. அங்கே கொண்டு போய் நிறுத்தி விடுவோம்.. 
யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!.. 

- என்று, இங்கே கொண்டு வந்து விட்டார்கள்...

சமஸ்தானாதிபதிக்கு ஏன் - இவர்களுள் ஒருவன்?..

ஆலோசனை சொல்லத் தான்!..

அப்படியானால் - 
பெரியவர்கள் யாரும் இல்லையா - அந்த சமஸ்தானத்தில்!...

உண்மையில் இவன் அவனே அல்லன்..

பழைய அதிபதியின் அடைப்பைக்காரன்...

வெற்றிலையில் நறுமணப் பாக்கு வைத்து - 
பதமாக வாசனைச் சுண்ணாம்பு தடவி 
தாம்பூலமாக மடித்துக் கொடுத்தவன்..

சரி.. பழைய அதிபதி என்ன ஆனார்?..

அவருக்குக் காலம் வந்தது.. போய்ச் சேர்ந்து விட்டார்..

ஏன்?.. ராஜ வைத்தியம் பார்க்கவில்லையா?..

பார்த்தார்கள்... பழங்கிழடான வைத்தியன் ஒருவனைக் கொண்டு!..

அந்த வைத்தியனோ - ஒன்றும் புரியாமல்
சூரணம் குளிகை இளகியம் கஷாயம் - என,
எதை எதையோ கலந்து கொடுத்தான்..

ஒன்றும் பயனில்லை..

சமஸ்தானாதிபதியின் உயிர்க் குருவி - விட்டால் போதும்!.. 
- என்று ஓடிப் போய்விட்டது...

அடுத்த வாரிசு என்று யாரும் இல்லாததால் -

யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து புதிய வாரிசைத் தேடலாம்!.. - என்றார்கள், சிலர்..

அதெல்லாம் வேண்டாம்!.. யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து அதை கொடுமைப் படுத்துகின்றார்கள்.. என்று,  எவனாவது கொடியைத் தூக்கிக் கொண்டு வருவான்!.. அதனால், 

அதனால்!?..

அதனால், இப்போது முதல் எல்லாம் நானே!..

நீங்களா!?..

ஏன்!.. எனக்கென்ன குறைச்சல்?..

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..

வெற்றிலை மடித்த கையென்று எண்ண வேண்டாம்!..
வேல் கம்பையும் ஏந்தும்!..

கொட்டைப் பாக்கு எடுத்த கையென்று நினைக்க வேண்டாம்!..
கோடாலியையும் தூக்கும்!..

சுண்ணாம்பு தடவிய கையென்று கருத வேண்டாம்!..
சுளுக்கியையும் எடுக்கும்!..

புதிய அதிபதியானவன் உறுமினான்...

அதற்குப் பின் - அங்கிருந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை...

தலை தப்பிக்க வேண்டும்.. தம்பிரானே!.. 

அனைவரும் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள்...

அப்படிப்பட்ட அதிபதிக்குத் தான் ஆலோசகன் தேவைப்பட்டான்..

அதன் முடிவில் தான் - இதோ இங்கே நான்கு பேர் காத்திருக்கின்றார்கள்..

அதோ.. கட்டியக்காரன் கத்திக் கொண்டு வருகின்றான்..

வந்தாயிற்று.. உடனடியாக நேர்முகம் ஆரம்பமானது..

நால்வரையும் கண்களால் அளவெடுத்தான் புதிய அதிபதி..



ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன்.. அதற்கு உறுதியாக இறுதியாக ஒரே ஒரு பதிலைத் தான் சொல்ல வேண்டும்!.. விடை சரியாக இருந்தால் உள்ளே!.. இல்லையேல்!..

அப்போதே தொண்டை காய்ந்து விட்டது நால்வருக்கும்...

டிங்!.. - முதல் மணி அடிக்கப்பட்டது..

மூன்றும் நான்கும் எத்தனை?..

முதலாமவன் சொன்னான்..

ஏழு!..

ம்ஹூம்!..

டிங்!.. - இரண்டாவது மணி..

மூன்றும் நான்கும் எத்தனை?..

ஆறு!..

ம்ஹூம்!..

டிங்!.. - மூன்றாவது மணி..

மூன்றும் நான்கும் எத்தனை?..

ஐந்து!..

ம்ஹூம்!..

டிங்!.. - நான்காவது மணி..

கடுப்பான அதிபதி கத்தினான்..

அடேய்.. உனக்காவது தெரியுமா?.. மூன்றும் நான்கும் எத்தனை?..



அரசே!.. தாங்கள் என்ன நினைக்கின்றீர்களோ.. அதுவே விடை!..

ஆஹா!.. நீயே அறிவாளி.. நீயே ஆலோசகன்!..

ஆங்கிருந்தோர் அனைவரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்..

இந்த மூவரும்!?..

வெளியே விரட்டி அடி!..

நல்லவேளை.. அடித்து விரட்டாமல் விட்டார்களே.. அந்த வரைக்கும் சரி!..

உயிர் தப்பிய மூவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்..
* * *

மூன்றும் நான்கும் எத்தனை?..

இந்த கருத்துக்குச் சொந்தக்காரர் 
எனதுயிர் நண்பர் இஸ்மாயில் அவர்கள்..
அவர் இலங்கையைச் சேர்ந்தவர்..
இஸ்மாயில் அவர்கள் இப்போது இல்லை..

அவர் தமக்கு இந்தப் பதிவு
சமர்ப்பணம்.. 
***

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

நல்வாழ்த்துகள்..

மகிழ்ச்சியாக இருக்கின்றது...

எனும் சிறப்பான தளத்தில் 
செம்மையான பதிவுகளை வழங்கி வருகின்ற -

மதிப்புக்குரிய திரு ஹரிணி அவர்களுக்கு
குறள் நெறிச் செல்வர் 
எனும் விருது வழங்கப்பட்டிருக்கின்றது..


சிறப்புடைய விருது மேலும் சிறப்புடையதாகி இருக்கின்றது..

நேற்று மாலை தஞ்சையில் நடந்த -
உலகத் திருக்குறள் பேரவையின் 
நாற்பத்து மூன்றாவது ஆண்டு விழாவின் போது 
திரு ஹரிணி அவர்கள் 
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்..

இவ்விருது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது 
திருக்கரங்களால் வழங்கப்பட்டிருக்கின்றது..

இந்தச் செய்தியினை -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள் 
தனது FB  பக்கத்தில் பதிவு செய்திருந்தார்..

விடியற்காலையில் இச்செய்தியினைக் கண்டதுமே 
மனதில் மகிழ்ச்சி ததும்பியது..


இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் 
திரு கரந்தை JK அவர்களைத் தொடர்பு கொண்டு 
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்..

மேலதிக தகவல்கள் திரு கரந்தை JK அவர்களுடைய 
தளத்தில் வெளியாகும்..

பதினைந்து நாட்களாகவே எனக்கு உடல் நிலை சரியில்லை..

தலைவலியும் காய்ச்சலும் விட்டு விட்டு வருகின்றன...
தற்போது இங்குள்ள குளிர் காற்று ஒத்துக் கொள்ளவில்லை..

பதிவுகளில் மும்முரமாக இயங்குதற்கு 
சற்றே சிரமமாக இருக்கின்றது..

ஆயினும்,
அன்பு நண்பருக்கு அளிக்கப்பட்ட விருது மகிழ்ச்சியை 
அள்ளித் தந்திருக்கின்றது...

அந்த மகிழ்ச்சியுடன் தான் இன்றைய பதிவு..


தனக்கென்று ஒரு முத்திரையுடன்
தமிழ்ப்பணி ஆற்றி வரும் திரு ஹரிணி அவர்கள் 
மேலும் பற்பல சிறப்புகளை எய்திட வேண்டும் என்று 
மனமார வாழ்த்துகின்றேன்..



வாழ்க நலம்..
வாழ்க பல்லாண்டு..
***

சனி, பிப்ரவரி 11, 2017

ஊட்டுவதெல்லாம்...

மனம் வலிக்கின்றது..



ஹாசினி எனும் ஏழு வயதுடைய குழந்தையை
இருபத்திரண்டு வயதுடைய ஈனப் பிறவி ஒன்று 
சிதைத்துக் கொன்று
தீயிட்டு எரித்திருக்கின்றது

நேற்று இரவு தான் அந்த செய்தியை அறிய நேர்ந்தது..

இப்படியும் செய்யக் கூடுமோ?...

இளம் பிஞ்சின் கதறலைக் கேட்டும் 
கலங்கித் துடிக்காத செவிப்பறை குறையோ?..

இளம் பிஞ்சின் கண்ணீரைக் கண்டும் 
கண்ணீர் வடிக்காத விழி வெறுங்குழியோ?..

இளம் பிஞ்சின் அவலத்தைக் கண்டும் 
துன்பத்தில் துடிக்காத இதயமும் கருங்கல்லோ?..

அட.. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டே!..

அது கூட இல்லாமல் -
இதயம் - இறுகிய சதைப் பிண்டமாய்ப் போனதோ!..

பெற்ற வயிறெல்லாம் பற்றித் துடிக்கின்றதே..

இளகித் துடிக்கும் இதயம் என்ற ஒன்றில்லாத 
இழிபிறவி ஒன்றும் இந்த வையகத்தில் இருந்துள்ளதே!..

எப்படியடா மனம் வந்தது?..

மடியிருத்தி ஊட்டுவதெல்லாம் பாலாகுமா!..
மாதகன் உனக்கு எது ஊட்டப்பட்டதோ?..

பள்ளி பயின்றதெல்லாம் பண்பாகுமா?..
நீயடைந்த கல்வி உனக்கு எதை ஊட்டியதோ?..

உன்னை மகன் என்று பெற்றதும்
நீ கல்வி என்று கற்றதும்

இப்படியோர் இழிசெயல் நிகழ்வதற்காகவா?...

இரக்கமில்லா இழிபிறவியின் இதயம் 
ஈக்களுக்கும் புழுக்களுக்கும் இரையாகித் தொலையட்டும்!..


மகளை இழந்த பெற்றோர் 
தம் துயரைக் காலம் மற்றுவதாக!..

ஹாசினி எனும் அரும்பின் ஆன்மா 
சாந்தியடையட்டும்...


***

வியாழன், பிப்ரவரி 09, 2017

தைப்பூச நன்னாள்..

சிவகுமரனாகிய திருமுருகனுக்கு மிகவும் உகந்த நாள்..

இந்நாளினைக் கிடைத்தற்கரிய நன்னாளாகக் கொண்டு,
விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும்
முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

thanjavur14
அருள்மிகு தண்டாயுதபாணி, பழனி
தமிழகத்தின் பழனியம்பதியில் தைப் பூசம் பத்து நாள் திருவிழா..

பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு - என, ஆயிரம் ஆயிரமாய் -  
மயில் காவடி, மச்சக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி,
பால் காவடி, பன்னீர் காவடிகள் -  சமர்ப்பிக்கப்படுகின்றன.. 

தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வந்து - பழனி முருகனைத் தரிசனம் தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.   


சிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - 
சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தைப்பூச நன்நாளின் பகல் பொழுதில் - 
சிவபெருமான் அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.


வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில்  சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். 

வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து  
தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம்  நிகழ்வுறும்.

thanjavur14
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி
தஞ்சை - கரந்தையில் உள்ள 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் 

தைப் பூச தினத்தன்று மாலை,
அருள்மிகு  வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,
அருள்திரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் 
திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.

thanjavur14
அருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை
இலங்கையிலும், சிங்கப்பூரிலும் வெகுகோலாகலமாக தைப் பூசம் நிகழ்கின்றது..



நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதை காணலாம்.  



வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா - நல்ல
வடிவேலின் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!..

- என்றுரைப்பார் கவியரசர்..

மலேசியாவில் 
பத்துமலை மற்றும் தண்ணீர்மலை  முருகன் திருக்கோயில்களிலும் 
வெகு சிறப்பாக தைப் பூசப் பெருவிழா நடைபெறுகிறது. 

தைப்பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.

லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது..

ஸ்ரீ சிங்கார வேலவன்.. சிக்கல்
மிகத் தொன்மையானது முருக வழிபாடாகும்..

அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

அதனாலேயே,
வழித்துணை வருவான் வடிவேலவனே!.. - என்றானது வாழ்க்கைப் பயணம்..

வில்லேந்திய வேலன் - திருஐயாறு
வேலுண்டு வினையில்லை.. 
மயிலுண்டு பயமில்லை..
குகனுண்டு குறைவில்லை மனமே!..


நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!.. (5)
- வள்ளலார் ஸ்வாமிகள் -

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்!..
***