நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 27, 2024

அன்னகூடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 11  
சனிக்கிழமை

விட்டல விட்டல
ஜெய் ஜெய் விட்டல..


வந்தவாசியை அடுத்துள்ள தென் நாங்கூர் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்க க்ஷேத்திரத்தின் சந்நிதியில் ஆஷாட ஏகாதசி அன்று நடந்த ஸ்ரீ அன்னகூட வைபவம்..


விட்டல விட்டல 
பாண்டுரங்கா
விட்டல விட்டல 
பாண்டுரங்கா

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஜூலை 26, 2024

ஆடி வெள்ளி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 10   
இரண்டாம் வெள்ளி


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும்அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. 69
-: அபிராமி பட்டர் :-

தரிசனம்
ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..










 நன்றி
தஞ்சையின் பெருமை.


ஸ்ரீ வடபத்ரகாளி
ஸ்ரீ பூமாலை வைத்ய நாதர் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூலை 25, 2024

நலங்கு மாவு 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
வியாழக்கிழமை


மலர்ந்த முகமே 
வாழ்க்கையின் இன்பம்

1) தாமரை (இதழ்கள்)
தெய்வீக மூலிகை..

2) சந்தனம் 
 மிக உயர்ந்த நறுமணப் பொருள்..

3) ரோஜா மொட்டு 
சருமத்திற்குப் பொலிவு..

4) கஸ்தூரி மஞ்சள் 
 அரிப்பு, தேமலை நீக்குகின்றது..

5)  மஞ்சள் கிழங்கு
சிறந்த கிருமி நாசினி..
மங்கையரின் தோலில் முடி வளர்ச்சியைத் தடுக்கின்றது..

6) வசம்பு 
நோய்த் தடுப்பு, கிருமி நாசினி..

7) கடலைப் பருப்பு 
தோல் மினுமினுப்புக்கு உகந்தது..

8) பாசிப் பருப்பு 
தோலின் கருமை (கருந்தேமல்) நீக்குவது..

9) சீயக்காய் 
அரிப்பு, சொறி நீங்கும்.. 

10) வெட்டி வேர் 
வியர்வையினால் உண்டாகின்ற  அரிப்பிற்கு நிவாரணம்..

11) நன்னாரி வேர் 
வியர்வை நாற்றம் தீரும்..

12) கோரைக் கிழங்கு 
உடற்பொலிவு உண்டாகும்..

13) பூலாங்கிழங்கு
முகப்பரு குறையும்... இதைத் தனியாக அரைத்துப் பூசினால்
பெண்களின் சருமத்தில் தேவையற்ற முடிகள் நீங்கிப் பொலிவு உண்டாகும்..

14) ஆவாரம்பூ
தோலின் பாதுகாப்பு.. 

15) வெந்தயம்
வியர்வை வாடை நீங்கும்.. தோலுக்கு மினுமினுப்பு ஏற்படும்..

16) பூவந்திக்கொட்டை
நுரை பெருக்கி.. கேச பாதுகாப்பு..

17) எலுமிச்சைத் தோல்
இதில் இருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்தி தசைச் சுருக்கங்களை குறைக்கின்றது..

18) புதினா இலை 
முகத்தின்  திசுக்களுக்குப் பொலிவூட்டுகின்றது.. 

பூவந்திக்கொட்டையின் தோலை  சீயக்காயுடன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து  அரைத்து  தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகும். இளநரை ஏற்படாது.. முடி உதிராது.. பொடுகுப் பிரச்னை தீரும்.

மலர்களுள் தெய்வீகமானது தாமரை.. இதனை விலை கொடுத்து வாங்கினாலும் நாம் நேரிடையாக
பயன்படுத்தக் கூடாது.. கோயிகளில் இருந்து நிர்மால்யமாகவே பெற வேண்டும்..

இப்படிப் பெறப்பட்ட தாமரை, சண்பகப் பூக்களோடு அல்லது பூக்களின் இதழ்களோடு மல்லிகை முல்லை மருக்கொழுந்து இவற்றைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவுவதாலும் குளிப்பதாலும் உடல் இயற்கையாகவே நறுமணம் அடைகின்றது.. புத்துணர்ச்சி பெறுகின்றது..

குளிக்கும் முன்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடம்பில் பூசி குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் வைத்திருந்து குளிக்க வேண்டும்..

சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது..

பொதுவாக வெயில் காலத்தில் வியர்வையும் அரிப்பும்  பிரச்னையாக உள்ளது. 

இந்தப் பிரச்னைக்கு,   செயற்கை வாசனைப் பொருட்கள் உகந்தவை அல்ல... 

கை கால் இடுக்குகளில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் போது, 
சிலருக்கு -  கட்டிகள், கொப்புளங்கள் உருவாகி அதனால் புதிய தொந்தரவு ஆரம்பித்து விடும். 

நலங்கு மாவை உடலில்  தேய்த்துக் குளிப்பதால், வியர்வையின் துர்வாடையையும் நோய்க் கிருமிகளையும் அகற்றலாம்.. 

நலங்கு மாவினை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. 

அழகு நிலையங்களுக்கு சென்று, ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை விட,  
அதிக விலையும் ரசாயனமும் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை   பயன்படுத்துவதை விட 

முன்னோர்கள் காட்டிய வழியில்,  மூலிகைப் பொருட்களை கொண்டு நாமே தயாரித்த நலங்கு மாவு சிறந்தது.. 

அழகு மற்றும் ஆரோக்கியம் காக்கப்படும் என்பது உறுதி..
ஃஃ

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூலை 24, 2024

நலங்கு மாவு 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 8 
புதன் கிழமை


நமது பாரம்பரியங்களுள் ஒன்று நலங்கு மாவு..

இயற்கையின் மூலிகைப் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் செய்கின்றது தான்  நலங்கு மாவு..

மாவு எனப்பட்டாலும் இது உண்மையில் மூலிகைப் பொடி..

நலங்கு மாவுக் குளியலால்  வியர்வை நாற்றம் நீங்கும் . நலங்கு மாவினால்  எவ்வித தீமையும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயிரம்  காலத்திற்கும் மேலாக நமது நாட்டில் பயன்பாட்டில் இருந்த பாரம்பரியத்தை நாம் -  நமது மூடத்தனம் பிறத்தியாரது ஏமாற்று வேலை இவற்றால் இழந்தோம்...

ரசாயனச் செறிவுடைய இன்றைய பொருட்கள்
என்றைக்கும் நன்மையைத் தந்ததில்லை..

மேலும் ரசாயனச் செறிவுகளை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கும் என்பது குறித்து பல ஆய்வுகள்.. 

வீட்டில் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் நலங்கு மாவினை  நாமே  நமக்காகத் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில்!..


தேவையான பொருட்கள் :
1) தாமரை இதழ்கள்
2) சந்தனம் 100 gr
3) கஸ்தூரி மஞ்சள் 100 gr
4) கிழங்கு மஞ்சள் 100 gr
5) வசம்பு 50 gr
6) கடலைப் பருப்பு 50 gr
7) பாசிப் பருப்பு 50 gr
8) ரோஜா மொட்டு 50 gr
9) சீயக்காய் 50 gr
10) வெட்டி வேர் 50 gr
11) நன்னாரி வேர் 50 gr
12) கோரைக் கிழங்கு 50 gr
13) பூலாங்கிழங்கு 50 gr
14) ஆவாரம்பூ 50 gr
15) வெந்தயம் 50 gr
16) பூவந்திக்கொட்டை 50 gr

17) எலுமிச்சைத் தோல் 50 gr
18) புதினா இலை 50 gr

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையவை..

எலுமிச்சைத் தோல் புதினா இலை இரண்டையும் வீட்டிலேயே சேகரித்துக் கொள்ளலாம்..

மற்றவை அனைத்தையும் நல்ல வெயிலில் உலர்த்தி அரவை இயந்திரத்தில் அரைத்தெடுத்து இறுக்கமான கலத்தில் வைத்துக் கொண்டு 
ஒவ்வொரு நாளும் -  குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் நீரில் குழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது..

இவை அனைத்தும் நமக்கானவை.. நம்முடையவை..

சிரமம் பாராமல் இதை இரண்டு விதங்களில் அரைத்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது..

என்னவெனில்,
இங்கு சொல்லப்பட்டுள்ள பதினெட்டுப் பொருட்களும் 
பெண்களுக்கு உகந்தவை..
(இவை பற்றிய குறிப்புகள் அடுத்த பதிவில்..)

ஆண்களுக்கான குளியல் பொடி எனில் -
1) கஸ்தூரி மஞ்சள் 
2) கிழங்குமஞ்சள் 
3) பூலாங்கிழங்கு ஆகியவற்றை மட்டும் தவிர்த்து விடவும்..

ஏனெனில் - 
மஞ்சளின் (1,2) பளபளப்பு  மேனியில் படியும்.. 

பூலாங்கிழங்கினால் (3)
தோலில் முடி வளர்ச்சி தடைப்பட்டு மினுமினுப்பு ஏற்படும்..

தேவையா ஆண்களுக்கு?..

வாழ்க நலம்!...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!..
-: கவியரசர் :-
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூலை 23, 2024

கரிசாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 26
புதன்கிழமை


கரிசலாங்கண்ணி..

தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் கரிசாலை, கையாந்தரை
என்பனவும் செல்லப்பெயர்கள்..

பிரிங்கராஜ் என்று வடநாட்டில் பெயர்..
(நன்றி : விக்கி)

ஈர நிலத்தில் விளைகின்ற மூலிகை..

வயல் வரப்புகளிலும் குளக்கரைகளிலும் தளதள என்று அடர் பச்சை நிறத்தில் மண்டி வளர்கின்ற அற்புதம்..

மஞ்சள் வெள்ளை எனப் பூக்கின்ற இரு வகைகள்.. கிழக்கு ஆசிய நாடுகளில் வேறு சில ரகங்களும் இருக்கின்றனவாம்..

காயகல்ப மூலிகையான
கரிசலாங்கண்ணி சற்றே கசப்புச் சுவை உடையது..


சிறு பருப்புடன் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை முதலான பல்வேறு நோய்கள் குணமாவதாக சித்த வைத்தியத்தில் சிறப்பு..

தகுந்த சித்த மருத்துவரிடத்தில் ஆலோசனை பெறுவது அவசியம்..
 

வெள்ளைக் கரிசலாங்கண்ணியை தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது வழக்கம்..

இலையை உலர்த்திப் பொடியாக்கிப் பல் துலக்குவதில் தொடங்கி மது, புகையிலை இவற்றில் இருந்து மீள்வது வரைக்கும் கரிசாலாங்கண்ணி கை கொடுக்கின்றது..


இதனாலேயே அருட்பிரகாச வள்ளலார் ஸ்வாமிகள் கரிசாலாங்கண்ணியை தெய்வீக மூலிகை என்று புகழ்ந்துரைத்தார்..


ரத்தச் சோகை, இளநரை, பார்வைக் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள், ரத்த அழுத்தம் என, அனைத்திற்கும் கரிசாலாங்கண்ணி பயனாகின்றது.. 

மஞ்சள் வெள்ளை இரண்டிலுமே மருத்துவ குணங்கள் இருந்தாலும், மஞ்சள் கரிசலாங்கண்ணியே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது..
( மருத்துவக் குறிப்புகள் நன்றி : விக்கி )


கரிசலாங்கண்ணித் தைலத்தினால் கபாலச் சூடு குறைகின்றது.. இதனால் நீரிழிவு முதலான பற்பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கின்றது...

இதனால், மார்க்கெட்டிங் வாலாக்களுக்கு என்ன பிரயோசனம்?..

அதனால் தான் நமது கவனத்தைச் சிதற அடிப்பது!..


கரிசாலாங்கண்ணித்
தைலம் தயாரிக்கின்ற முறைகள்..

1)
கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதை 200 மிலி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி எடுத்து - எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்துக் கொண்டால் போதும்.. கூந்தல் வளர்ச்சி பெறும். முடி உதிராது.. பொடுகுகள் ஏற்படாது..

2)
கரிசலாங்கண்ணி இலைகளைக் கழுவி விட்டு மெல்லியதாக நறுக்கி 200 மிலி சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வாணலியில் மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் சுட வைக்கவும்..

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து 
விட்டு, எண்ணெயை ஆற வைக்கவும். 

ஆறியதும் வடிகட்டி -
தூய்மையான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். 
சில நாட்களுக்கு வெயிலில் காய வைத்து, அதன் பின், எண்ணெயைப்  பயன்படுத்தவும்..

கரிசலாங்கண்ணியின் ஊட்டச் சத்துக்கள் முழுதுமாக தேங்காயெண்ணெயுடன் கலந்திருக்கும்..

அவ்வப்போது இதே போலத் தைலம் தயாரித்து தினமும்
பயன்படுத்துவது நல்லது.. 

நம்மைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு
வெட்டிச் செலவு மிச்சம்..

ஆனால், 

ஹேர் பாலுக்கு டிரை செய்றேன் நானும் ஜின் ஜினக்கா ஷாம்பூ!.. -

என்ற, 
அல்ப பெருமை டமில் குமரிகளுக்குக் கிடைக்காதே!..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 22, 2024

நீராடல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 6
திங்கட்கிழமை



எண்ணெய்க் குளியல்

நாளுக்கு இருமுறை
வாரத்திற்கு இருமுறை
பட்சத்திற்கு இருமுறை
வருடத்திற்கு இருமுறை 

- என்ற பழங்கணக்கில்
வாரத்திற்கு இருமுறை என்று எண்ணெய்க் குளியலை வகுத்துள்ளது  - 
பழந்தமிழ் சித்த மருத்துவம். 

கோடையில் வாரம் இருமுறை என்றால் மழைக் காலத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும் - என்றும்  சொல்லி வைத்தனர் ஆன்றோர்..

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் கண்டிப்பாக
எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும் அந்நாட்களில்...

இன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே  இல்லாமல் போய்விட்டது.. 

தீபாவளி எண்ணெய்க் குளியல் மட்டும் தான்..

எங்கள் வீட்டிலும் தீவளிக்குத் தீவளி தான்..

எண்ணெய்க் குளியலுக்கு  உகந்தது - நல்லெண்ணெய்..

கேரளத்தில் தேங்காய் எண்ணெய்க் குளியல் பிரதானம் என்று அறிந்திருக்கின்றேன்.. 

இன்று போல தொ.கா. நிகழ்ச்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில்  அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
எதிர்ப்புற வீடுகளும்,  பக்கத்து வீடுகளுமே உற்ற துணை..

விளம்பரங்களில் கும்மியடிப்பவர்கள் எவரும் நடு வீட்டுக்குள் வந்து 
பெரிய பெரிய அறிவுரை ஏதும் சொல்ல வேண்டிய அவசியம் - அப்போது இல்லாதிருந்தது..

பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுரையின் படி சிலர் -  மூலிகைகளைக் கலந்து சுட வைத்துத் தைலங்கள் தயாரித்து குளியலில்  பயன்படுத்திக் கொள்வர்.. 

எண்ணெய் வழி மருத்துவம் கேரளத்தில் பிரசித்தமானது..

இன்றைக்கு மீண்டும் எண்ணெய்க் குளியல் முன்னெடுக்கப்பட்டால்  
எண்ணெயில் இட்டுக் காய்ச்சுவதற்கு
பிரியாணி மசாலாப் பொடி தான் சிறந்தது!.. 
அதுவும் நாங்க தான் உங்களுக்காக தயாரிக்கிறோம்!.. ன்னு
விளம்பரத்திலும்   யூட்டீப்பிலும் கதறிக் 
கொண்டிருப்பார்கள்!.

நல்லவேளை.. தப்பித்தோம்!..

எண்ணெய்க் குளியலின் போது
முதல் துளியை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்து விட்டு வலது உள்ளங்கையில் எண்ணெய் எடுத்து உச்சந்தலையில் அழுத்தமாக தேய்த்துக் கொள்வதும் தொடர்ந்து உந்திக் குழியில் தடவிக் கொள்வதும் மரபு..

அதன் பிறகே உடல் முழுக்க எண்ணெய் தடவிக் கொள்வர்.. 

உள்ளங்காலில்  எண்ணெய் தடவிக் கொள்வது அவசியம்..

ஆண்கள் வீட்டின் உள்ளிருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வது கூடாது..

இடக்கையால் எண்ணெய் எடுப்பதோ தடவிக் கொள்வதோ கூடாது.. அது அமங்கலத்தைக் குறிப்பது..

எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளத்திற்குச் செல்லக் கூடாது.. 
எண்ணெய் தேய்த்துக் கொண்டு வீதியில் செல்வது அபசகுனம்..

உடல் முழுக்க நல்லெண்ணெய் வாசம் கமழ்ந்திருக்க - ஒரு நாழிகை வெயில் சார்ந்த நிழலில் இருந்து விட்டு கிணற்றடியில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல்...

திருமணம் நடந்த மறுநாள் காலையில் மாப்பிள்ளையை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து மோதிரம் அணிவிப்பது சில சமூகங்களில் வழக்கம்.. 

எண்ணெய்க் குளியலால் சிலருக்கு பிரச்னைகளும்  வந்து விடுகின்றன.. அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு..

குளியலின் போது 
சீயக்காயே சிறந்தது!

ரசாயன நுரைகளைத் தவிர்த்து விட்டு சீயக்காய்  குளியலே சிறந்தது..

சாதாரணமாக
உடலுக்கு ஆரோக்கியம் தருபவை சீயக்காய்த் தூள் நலங்கு மாவு போன்றவையே.. ரசாயன நுரைப்புகள் அல்ல...

உடல் அழுக்கும் கிருமிகளும் நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்..

எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, பெண்கள் கூந்தலுக்கு சாம்பிராணி தூபம் (புகை) இட்டுக் கொள்வது வழக்கம்.. 


கூடலில் - 
செண்பகப் பாண்டியன் - பூங்குழலியின் கூடலில் - 


கொங்கு தேர் வாழ்க்கை வடிவத்தில்
நக்கீரரின் விதி வந்து விளையாடியது இப்படியான நேரத்தில் தான்!..

தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை அகற்றி நறுமணம் ஊட்டும்.

ஆனால், இப்போது எல்லாம் கலப்படம் என்ற நிலையில் நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சாம்பிராணியாக பார்த்து வாங்கி தூபம் இட்டுக் கொள்வது நல்லது.. 

நல்ல சாம்பிராணியாக கிடைக்காத பட்சத்தில் நாமே தூபப் பொடி தயாரித்துக் கொள்ள வேண்டியது தான்..

சூரியன் உதித்ததில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்திடல் வேண்டும்.. ஒன்பது மணிக்குப் பிறகு எண்ணெய்க் குளியல் கூடாது.. நடுப்பகலில்
அந்தியில் இரவில் கூடவே கூடாது..

ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அன்று மட்டுமே உதயாதி நாழிகைக்கு முன் எண்ணெய்க் குளியலுக்கு அனுமதி (தீபாவளி)..

எண்ணெய்க் குளியலால்
உடலில் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்...

முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், எண்ணெய்த் தேய்ப்பு  செய்து குளிப்பது நல்லது.

குளிர்ச்சியான எந்த உணவையும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று மதியம் சோறும் மிளகு ரசமும்  தான் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயினும்,
எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளின் மதிய உணவுக்குள்  
கோழியும் ஆடும் மற்றதும் எப்படி
உள்ளே புகுந்தன என்பது தெரிய வில்லை..

புலால் உணவுகளைக் கூடுமானவரை எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று
உண்ண வேண்டாம்...

இங்கே நம்முடைய கபாலச் சூடு உடல் சூடு - குறையாதபடிக்கு  நுரைப்பி விளம்பரங்கள் கரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கின்றன..

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய எண்ணெய்க் குளியல் நமக்கே நமக்கான பாரம்பரியம் என்பதை மறவாது இருப்போம்..
புறந்தூய்மை நீரால் அமையும்..

சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூலை 21, 2024

தேங்காய்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 5  
ஞாயிற்றுக்கிழமை


இயற்கை நமக்கு வழங்கியுள்ள கொடைகளில் ஒன்று தேங்காய்... 

வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் மகத்தான பங்கு தேங்காய்க்கு..

மகத்துவம் மிக்கது தேங்காய்.. 

அதனால் தான் ஒற்றைத் தேங்காயை 
விநாயகப் பெருமானிடம் - சூறை - என்று கொடுத்து விட்டு ஓராயிரம் நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றோம்..

விடியற்காலையில் இதைத் தட்டச்சு செய்கின்றபோது தொலைக்காட்சியில்  விநாயகரைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்..

அன்றைக்கு தெங்கு என்ற தலைப்பில் நமது தளத்தில் ஒரு பதிவு.. அங்கே எபியில் சிறுகதை ஒன்று..  

சகோதரி கீதா அவர்கள் இரண்டையும் இணைத்து ' தேங்காய் மிட்டாய் ஒன்றும் இல்லையா!.. ' - என்று  கேட்டிருந்தார்... 

அவரது அன்பிற்காக இந்தப் பதிவு..

மகிழ்ச்சி.. நன்றி..

1) தேங்காய்ப் பால் 


தேங்காய்ப் பால் பிழிவதற்கு
அரைத் தேங்காயாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்..

அதென்ன அரைத் தேங்காய்?..

முற்றிய தேங்காய் என்பது எண்ணெய் திரள்கின்ற நிலை.. ஆகவே தான் அரைத் தேங்காய்.. 

கடையில் கேட்டால் இந்த மாதிரி எடுத்துத் தருவார்களா?...

உங்கள் அதிர்ஷ்டம்!..

தேங்காயை உடைத்துத் துருவி வெதுவெதுப்பான நீர் விட்டு இரண்டு முறையாக பிழிந்து எடுத்துக் கொள்வதே  முதல் நிலை.. தரமான பால்..


வாரம் இரு முறை தேங்காய்ப் பாலுடன் கருப்பட்டி சேர்த்து அருந்துவது மிக மிக நல்லது..

கூடுதல் இனிப்பு சேர்க்காமல் அப்படியே அருந்துவதும் சிறப்பு..

வைட்டமின் C, வைட்டமின் E, B1, B3, B5, B6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்... இவை எல்லாம் தேங்காய்ப் பாலில் நிறைந்துள்ளன..

ஆனாலும் நவீன மருத்துவம் தேங்காயிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றது..
ஃஃஃ

2) தேங்காய் மிட்டாய் 


தேவையானவை :
பழுப்பு சர்க்கரை 150 gr
தேங்காய் ஒரு மூடி 
முந்திரி 10
ஏலக்காய் 3
நெய் தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவலை சற்றே வதக்கிக் கொள்ள வெண்டும்.

மறுபடியும்  வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ள வெண்டும்.

சர்க்கரையை அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். 

தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

கலவை கெட்டி ஆனவுடன் இறக்கி, நெய் தடவிய தட்டில்  ஊற்றி ஆறிய பின்னர் தேவைக்கேற்ப துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..  


எவ்வித ரசாயனமும் இல்லாத
தேங்காய் மிட்டாய்..
ஃஃஃ

3) தேங்காய் கடலை சட்னி

தேவையானவை :
தேங்காய் ஒரு மூடி
வறுத்த நிலக்கடலை 150 gr
சின்ன வெங்காயம் 10
மிளகு ஒரு tsp

தாளிப்பதற்கு :
கடுகு சிறிதளவு
சீரகம் சிறிதளவு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக :

தேங்காய் ஒரு மூடியைத் துருவிக் கொள்ளவும்

சின்ன வெங்காயத்தை உரித்துக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

மிளகை வறுத்துப் போட்டு தேங்காய்த் துருவலுடன் கடலையைச் சேர்த்து அதிக தண்ணீர் விடாமல் தளர்வாக அரைத்துக் கொள்ளவும்..

இருப்புச் சட்டியில் கடலெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து உடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி தேங்காய் விழுதைப் போட்டு ஒரு சுழற்று சுழற்றி இறக்கவும்..


ஆரோக்கியமான
தேங்காய் கடலைச் சட்னி..
ஃஃஃ

4) தேங்காய் சாதம்

பாசுமதி அல்லது சீரகச் சம்பா அரிசியில் நாலு பேருக்கான அளவில் பக்குவமாக பொலபொல என்று சோறு வடித்துக் கொள்ள வேண்டும்..

இந்தப் பக்கம் ஒரு மூடி தேங்காயில் பாதியளவு துருவி வைத்துக் கொள்ளவும்...

இருப்புச் சட்டியில் 
மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை முந்திரிப் பருப்பு தாளித்து -


அத்துடன், எடுத்து வைத்திருக்கின்ற சோற்றையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து பக்குவமாகக் கிளறிக் கொண்டால் அருமையான தேங்காய் சாதம்...
ஃஃஃ

குறும்பை, இளநீர், தேங்காய், நெற்று, கொப்பரை - என, பல நிலைகளைக் கொண்டது தேங்காய்.. 

இளநீர் - தனது வளர்நிலையில் திரட்சி அடையாமல் இருந்து விட்டால் அதுதான் ஒல்லி எனப்படும்..

வளர்ந்த - வாழ்ந்த தடங்களுடன் நம் முன்னே சாட்சியாகத் திகழ்வது தென்னை... 

தென்னையில் - முதல் பாளை முகங்காட்டுகின்ற போதில் இளங்கன்றுக்குப் பட்டு வஸ்த்ரம் சாற்றி மஞ்சள் சந்தனத்துடன் நிவேதனம் சமர்ப்பித்து வழிபடுவர் - பட்டுக்கோட்டை வட்டாரத்தில்!... நான் தரிசித்திருக்கின்றேன்.

பிள்ளை எனப் பெயர் பெற்ற 
தென்னை நமக்குத் தருகின்ற நன்மைகள் பலப்பல!..
பாடங்களும் பலப்பல!..


தென்னம் பாளை பூஜைகளில் வைத்து வழிபடுவதற்குரியது..

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணம் இருக்கு...

ஆளை மயக்கும் 
பாளைச் சிரிப்பில்.. - என்றெல்லாம் கவிஞர்களால்  புகழப்பட்ட சிறப்பினை உடையது..

தென்னையைப் போற்றுவோம்!..
தென்னையைப் போற்றுவோம்!..

காளை யாகி வரையெடுத்தான் தன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தியை முதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத்தை மறந்து என்நினைக்கேனே.. 7/57/9
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஜூலை 20, 2024

சமுத்ர ஆரத்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
சனிக்கிழமை

சமுத்ர ஆரத்தி


புரி (பூரி) கடற்கரையில் நிகழ்ந்த சமுத்ர ஆரத்தி..


சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாகாரம் ககன சதுர்ஷம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்..
-: த்யான ஸ்லோகம் :-
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய 
***

வெள்ளி, ஜூலை 19, 2024

ஆடி வெள்ளி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 3  
முதல் வெள்ளிக்கிழமை

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ... தனதான


அமுத மூறுசொ லாகிய தோகையர்
     பொருளு ளாரையெ னாணையு னாணையெ
          னருகு வீடிது தானதில் வாருமெ ... னுரைகூறும்

அசடு மாதர்க்கு வாதுசொல் கேடிகள்
     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ... னருள்தாராய்

குமரி காளிவ ராகிம கேசுரி
     கவுரி மோடிசு ராரிநி ராபரி
          கொடிய சூலிசு டாரணி யாமளி ... மகமாயி

குறளு ரூபமு ராரிச கோதரி
     யுலக தாரிஉதாரிப ராபரி
          குருப ராரிவி காரிந மோகரி ... அபிராமி

சமர நீலிபு ராரித னாயகி
     மலைகு மாரிக பாலிந னாரணி
          சலில மாரிசி வாயம னோகரி ... பரையோகி

சவுரி வீரிமு நீர்விட போஜனி
     திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
          சகல வேதமு மாயின தாயுமை ... யருள்பாலா

திமித மாடுசு ராரிநி சாசரர்
     முடிக டோறுக டாவியி டேயொரு
          சிலப சாசுகு ணாலிநி ணாமுண ... விடும்வேலா

திருவு லாவுசொ ணேசர ணாமலை
     முகிலு லாவுவி மானந வோநிலை
          சிகர மீதுகு லாவியு லாவிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

இத்திருப்பாடலில்
அம்பிகையின் அருட்பெயர்களை
அழகு ததும்பிட சொல்லிச் செல்கின்றார் 
அருணகிரிநாதர்..


குமரியாய்த் திகழ்பவள்
காளி என்றும் வராகி என்றும்
 மகேஸ்வரி என்றும்
கௌரி என்றும் துர்க்கை என்றும்
சுராரி தேவர்களின் பக்கம் நிற்பவள்
நிராபரி பொய்யிலி

கொடிய சூலி  சூலத்தினை உடையவள்
சுடாரணி ஒளி மயமானவள்
யாமளி (சியாமளி) பச்சை நிறம் உடையவள்
மகமாயி மகமாயி ஆனவள்

 குறளு ரூப முராரி சகோதரி
வாமனனாக வந்த மாலவனின் சகோதரி
உலகதாரி உலகத்தைத் தரித்துப்  புரப்பவள்..
உதாரி தயாள குணம் உடையவள்..

பராபரி முதன்மையானவள்
குரு பராரி குருவாகிய ஈசனுடன் இருப்பவள்
விகாரி வேறுபட்டுத் திகழ்பவள்
நமோகரி வணங்கப்படுபவள்
அபிராமி அழகு மிக்கவள்

சமர நீலி நீல நிறத்துடன் போர்க் குணம் மிக்கவள்
புராரி தன் நாயகி 
திரிபுரம் எரித்த ஈசனின் நாயகி
 மலை குமாரி இமவானின் புதல்வி
கபாலி கபாலத்தை ஏந்தியவள்

நன் நாரணி நற்குண  நாராயணி
சலில மாரி மழை தருகின்ற மேகம் ஆனவள்
சிவாய மனோகரி சிவ பெருமானின் மனதில் திகழ்பவள்
பரை பராசக்தி

யோகி யோகீஸ்வரி
சவுரி வலிமை உடையவள்
வீரி வீரம் உடையவள்
முநீர் விட போஜனி 
கடலில் எழுந்த ஆலகால 
விஷத்தை அருந்தியவள்

திகிரி மேவு கையாளி 
 திருக்கரத்தில்
சக்கரம் ஏந்தியவள்
செய்யாள் மஹா லக்ஷ்மி (எனவும்)
 
ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள்பாலா   அனைத்து வேதமுமாய் நிறைந்து வாணியாய் விளங்குகின்ற  உமா தேவி ஈன்றருளிய பாலனே..

பெருஞ்சத்தத்தோடு தேவர்களுடன் போராடிய
 அசுரரின் தலைகளில் 
ஆயுதங்களைச் செலுத்தி 

அங்கு கூடிய பேய்கள்  ஆரவாரத்துடன் 
மாமிசங்களைத் தின்று கூத்தாடும்படி வேலை எய்தவனே..

மங்கலம் நிறைந்த சோணாசலேஸ்வரது திரு அண்ணாமலையில் 

மேகம் உலாவுகின்ற
கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து
அதன் சிகரத்தில்
திகழ்கின்ற பெருமாளே...

ஊறி வருகின்ற அமுதம் போல மனதை மயக்குகின்ற சொற்களுடன் -  " என் வீடு அருகில் தான் அங்கே வாரும்.. " என்றபடி தெருவில் 
உலாவுகின்ற பெண்களின் மாயை என்மீது படாமலும் நான் கெடாமலும் நினது அருளைத் தந்தருள்வாயாக!..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***