நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 30, 2022

ஓம் சக்தி 4

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ வீரமாகாளியம்மன் வைகாசித்
திருவிழாவின் சிகரமாக நேற்று காலை 9:00 மணியளவில் பால்குடங்கள் புறப்பட்டு கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் எழுந்தருளி ஆராதனை உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு மதியம் ஒரு மணியளவில் கோயிலை வந்தடைந்தன..

































வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் நூற்றுக் கணக்கான அன்பர்கள் பாலாபிஷேக தரிசனம் செய்தனர்.. மகா தீப ஆராதனைக்குப் பின் அம்பாள் பிரசாதமாக கஞ்சி வார்க்கப்பட்டது.. பொங்கலும் புளியோதரையும் நீர்மோரும் ஏக அமர்க்களம்..  இடையில் அனைவருக்கும் ரஸ்னா வழங்கப்பட்டது..




சீர்வரிசை
மாலை 6:30 மணியளவில் கிராம மக்கள் சீர் எடுத்து வந்தனர்..






மூலஸ்தானத்தில் அம்பாள் சந்தனக் காப்பில் திகழ்ந்திருந்தாள்..
உற்சவத் திருமேனியாள்
சீரும் சிறப்புமாக ஊஞ்சலில் கோலம் கொண்டு அருள் பாலித்தாள்...

காலையில் நான் கோயிலிலேயே இருக்க வேண்டியதாகி விட்டதால்  குளக்கரையில் இருந்து
பால்குடங்கள் புறப்பட்ட நேரத்தில் பதிவு செய்ய முடியவில்லை..

 ஊஞ்சல் வைபவம் நடந்த நேரத்தில் ஊஞ்சலுக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களுக்கு ஊடாக நடந்து சென்று படம் எடுக்க இயலவில்லை..  

மற்றபடி திருநீறு கேட்போருக்கும் வாக்கு கேட்போருக்கும் நலம் கூறிக் கொண்டிருந்ததால் ஊஞ்சல் வைபவத்தையும் முழுமையாக பதிவு செய்ய இயலவில்லை..


இயன்றவரை காட்சிகளைப் பதிவில் வைத்துள்ளேன்..

இரவு 10:30 மணியளவில் ஆரத்தியுடன் வைபவத்தை இனிதே நிறைவேற்றிக் கொண்டாள் 
ஸ்ரீ வீரமாகாளியம்மன்..

வாழ்வும் அவளே
வழியும் அவளே..
அவளே நிதியாய்
அவளே கதியாய்!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

ஞாயிறு, மே 29, 2022

ஓம் சக்தி 3

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று சனிக்கிழமை மாலை - காளியம்மனின்
உற்சவ திருமேனிக்கு சகல திரவியங்களுடன் அபிஷேகம் செய்து வைக்கும்படி ஆக்ஞை.. 

அபிஷேக வேளையிலேயே அலை அலையாய் நிலை கொள்ளாத நிலையில் அருள் வந்து இறங்கி விடும்.. அபிஷேகம் நிறைவு பெற்றதும் புதுச்சேலையும் பூமாலையும் சாற்றி - பூசாரியார் மற்றவற்றை முன்னெடுக்க அடுக்கு தீப ஆராதனையும் தொடர்ந்து ஸ்ரீவிநாயகர், நாகர்,  வேம்பு, மதுரை வீரன்,கருப்ப ஸ்வாமி, மூலஸ்தானம்  - என,  மலர் தூவி போற்றி வழிபாடு.. பஞ்ச தீப ஆராதனையுடன் விபூதி குங்குமம் வழங்கும் வேளையில் ஆங்காங்கே ஆவேசம் வந்து ஆடுபவர்களை ஆதரிக்க வேண்டும்.. 


இந்நிலையில் சிலரைக் கூப்பிட்டு வாக்கு சொல்வதும் குறையிரந்து நிற்பவர்களுக்கு பதில் கூறுவதுமாக அனைத்தையும் அன்னையின் அருளுடன் இனிதே செய்தாயிற்று..

அன்பர்களுக்கு மிளகுப் பொங்கலும் கதம்ப சாதமும் நிலக்கடலை சுண்டலும் வழங்கினோம்..


அன்பர்கள் அனைவரும்  பூக்களைத் தூவி   அம்பிகையை வழிபடும்படிக்கு செய்தாயிற்று.. 

மக்களுக்கும் மகிழ்ச்சி.. ..
அம்பிகைக்கும்.ஆனந்தம்..


இந்நிலையில் தனிப்பட்டு எந்தப் படங்களையும் என்னால் பதிவு செய்ய இயல வில்லை..

இருப்பினும் ஒரு சில படங்களைப் பதிவில் தந்துள்ளேன்..

அம்பாளின் பரிபூரண நல்லாசிகளுக்குப் பிரார்த்தனை..

ஆதியும் நீயே அந்தமும் நீயே
அருள் தரும் தாயே காளீஸ்வரி
நீதியும் நீயே ஜோதியும் நீயே
சர்வ காரணி காளீஸ்வரி..
பகை அது விலகிட
வருவாயே..
பிணி அது தொலைந்திட
அருள்வாயே..
பாசமும் நேசமும் 
பரிவுடன் ஓங்கிட
திருவிழி காட்டி 
திருவருள் கூட்டி
தினம் தினம் நல்லருள்
பொழிவாயே!..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி
ஓம்
***

சனி, மே 28, 2022

ஓம் சக்தி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
*
வியாழக்கிழமையன்று
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் யாக பூஜையுடன் தொடங்கிய வைகாசித் திருவிழாவில் -

நேற்று வைகாசி 13 (27/5) வெள்ளிக் கிழமை  இரவு 7:30 மணியளவில
ஸ்ரீ வீரமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா எழுந்தருளிய காட்சிகள் இன்றைய பதிவில்..
















முன்னிரவு 2:00 மணியளவில் வீதியுலா நிறைவு பெற்று அம்பாள் கோயிலுக்குத் திரும்பினாள்..




கற்பூர ஆரத்தியுடன் திருஷ்டி கழிப்பு நடந்தது..



மிளகுப் பொங்கல் நிவேதனம் செய்யப்பெற்றது..  அனைவருக்கும் தேநீரும் வழங்கப் பெற்றது..
*
பொங்கு வினை மாய்த்திடவே
காளி வந்தாள்
செங்கதிராய் செழுமதியாய்
காளி வந்தாள்
தங்க முகத் தாமரையாய்
காளி வந்தாள்
எங்கும் மங்கலமே தங்கிடவே
காளி வந்தாள்..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***