வாவரன்..
ஸ்ரீ பூத நாதன் - பால மணிகண்டனாக பூமிக்கு வந்தபோது உற்ற துணையாக -
காவலனாக திருக்கயிலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பூத கணம்..
ஆனால்,
இது இன்றைக்கு வேறு விதம்..
பிற்கால கேரளத்தில் கொள்ளையிடுவதற்காக பாரசீகத்திலிருந்து கடல் வழியே வந்தவர் வாவர்.. மாயா ஜாலங்கள் அறிந்தவர்..
அவரது தாக்குதலை சமாளிக்க முடியாத பந்தளப் படைக்கு உதவுவதற்கு ஐயப்பன் மூலஸ்தானத்தில் இருந்து மானிட வடிவம் தாங்கி வந்து வாவரின் மாயா ஜாலத்தை முறியடித்து மக்களைக் காத்தருளினார்..
தோல்வியுற்ற வாவர் மனம் வருந்தி பாலனாக வந்திருக்கும் தாங்கள் யார் என்று கேட்க, ஐயப்பன்
தனது மெய்யுருவை வாவருக்கு மட்டும் காட்டியருளினார்..
அதைக் கண்டு மயங்கி விழுந்த வாவருக்கு மூன்று நாட்கள் ஆகியதாம் சுய நினைவு திரும்புவதற்கு ..
இந்த விஷயத்தைக் கேள்வியுற்ற மன்னர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாவரனுடன் மாயப்போர் புரிந்த இளைஞனை விசாரிக்க மன்னனுக்குத் தன்னுரு காட்டி சபரி மலைத் திருமேனியில் ஒன்றினார்..
அதன் பின் கொள்ளையடிப்பதைக் கைவிட்டு விட்டு அற வழியில் திரும்பிய வாவரும் ஐயப்பன் மீது அன்பு கொண்டு மரியாதை செலுத்தி எருமேலியில் தங்கி - மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வாழ்ந்து முடிந்தார்..
இதைத் தான் ஐயப்பனும் வாவரும் ஒன்று என்றாக்கி விட்டார்கள்.. வாவர் மசூதிக்குச் செல்லாமல் மலையேறக் கூடாது என்று கொண்டு வந்து விட்டார்கள்..
ஐயப்ப அவதாரமே மகிஷியை அழிப்பதற்குத் தான்..
அந்த சம்பவம் பல யுகங்களுக்கு முன்பு..
யுகாந்திரங்களுக்கு முந்தைய நிகழ்விற்குள் பிற்காலத்திய வாவர் எங்கிருந்து வந்தார் என்பது புரியவில்லை..
மகிஷி கேட்டிருந்தபடிக்கு ஸ்ரீ ஹரி ஹர மூர்த்திகளின் ஜோதி ஸ்வரூவத் திருமேனிகளில் இருந்து ஜோதிப் பிழம்பாகத் தோன்றியவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா..
அவர் குழந்தையாய்த் தோன்றிய சில நிமிடங்களிலேயே பன்னிரண்டு வயதினை அடைந்தார்.. பூத நாதனாகப் பட்டம் சூட்டப் பெற்றது அவருக்கு..
அதன்பின் அண்டப்பிரபஞ்சமும் கைக்கு வந்த நிலையில் மகிஷி சம்ஹாரம்..
மகிஷி வதமானது -
பந்தள மன்னன் தனக்கு மகன் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டதால் மீண்டும் பம்பைக் கரையில் அவதரித்து பன்னிரண்டு ஆண்டுகள் வளர்ந்து புலிப்பால் என்ற நாடகத்துக்காக வனத்தினுள் சென்ற போது அங்கிருந்த முனிவர்களுக்காக மீண்டும் நடத்திக் காட்டப்பட்ட சம்பவம்..
இப்போதும் இதனுள் வாவர் வரவில்லை..
பின்னொரு சமயம் எருமேலி பகுதி வணிகர்களிடம் வழிப்பறி செய்வதும் கொள்ளையிடுவதும் காட்டுக்குள் ஓடி உடும் பாறைக் கோட்டையில்
ஒளிந்து கொள்வதுமாக
இருந்த உதயணன் என்ற கொள்ளைக் காரனையும் அவனது கூட்டத்தார்களை அடக்குவதற்காக வந்த அவதார மூர்த்தியின் வழிபாடுதான் இப்போது நாம் மேற்கொள்கின்ற நடை முறைகள்..
எருமேலியில் இருந்து
உதயணனைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் புறப்பட்டபோது வீரர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடிய நிகழ்வே பேட்டை துள்ளல்..
இங்கே வில்லும் அம்பும் கொண்டு வேடுவராக நின்ற திருக்கோலத்தில் சாஸ்தாவாகிய ஐயப்பன்..
இந்த கிராத சாஸ்தா கோயிலுக்குப் பக்கத்தில் தான் ஆதியில் வந்த சிவகணம் வாவரனின் கோட்டம் இருந்திருக்கின்றது..
ஏதோ ஒரு கலவரத்தின் போது
வாவரன் கோஷ்டம்
சேதப்படுத்தப்பட்டது..
வாவரனின் விக்ரகம் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அங்கிருந்தே பக்தர்களுக்கு ஆசி நல்குவதாகவும் நம்பப்படுகின்றது..
வாவரன் கோட்டம் மாற்றப்பட்ட - பிறகே வாவர் மசூதி இவை பேசப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது..
எருமேலியில் பேட்டை துள்ளிய மணிகண்டன் வழிநடையில் அந்தந்த இடங்களின் ஆதி மகாத்மியத்தைச் சொல்லியபடியே
அழுதை நதியைக் கடந்து மேலே சென்று காட்டுக்குள் உடும் பாறைக் கோட்டையில் உதயணனைக் கண்டு பிடித்து வெற்றி கொள்கின்றான்..
பின்னும் படையினருடன் கரி மலை, பம்பை நதி இவற்றைக் கடந்து
நீலிமலையில் ஏறும்போது அங்கே ஒரு ஆல மரத்தின் அடியில்
தனது ஆயுதங்களைக் களைகின்றான் மணிகண்ட மூர்த்தி..
அந்த இடமே இன்று சரங்குத்தி..
கூட வந்தவர்களையும் ஆயுதங்களைக் களைந்து விடும்படிச் சொல்ல அனைவரும் வியப்புற்று, ஏன்!.. - என்று கேட்க தன் உருவம் காட்டியபடி சபரி பீடத்தில் இருந்த ஆதி விக்ரஹத்துடன் ஒளியாக ஒன்றி விடுகின்றான் மணிகண்ட ஸ்வாமி..
இதையறிந்த மன்னர் ஆதியில் அகத்திய மகரிஷி வகுத்துக் கொடுத்திருந்த விரத முறைகளைப் புதுப்பித்துக் கொண்டு மலைக்கு வந்து தரிசனம் செய்கின்றார்..
ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் ஜோதி ஸ்வரூபனாக தரிசனம் அளிக்கின்றார்.
ஸ்ரீ ஹரிஹர புத்திர அவதாரம் ஆதியில் மகிஷியை அழித்த பிறகு,
புலிப்பாலுக்காக
பந்தளனின் பிள்ளையாக வளர்ந்தது ஒரு முறையும், மாயா ஜால வாவரை மடக்குவதற்காக ஒரு முறையும் கொள்ளையன் உதயணன் அழிவுக்காக ஒரு முறையும் நிகழ்ந்திருப்பதாக அறிய முடிகின்றது..
இதையெல்லாம் ஒன்றாகக் கொண்டு இன்றைய வழிபாடு..
ஐயப்பனின் விரத முறைகளை ஸ்ரீ அகத்திய முனிவர் வகுத்துக் கொடுத்ததாகவும்
வியாச மகரிஷி எழுதிய பிரம்மாண்ட புராணத்தில் ஐயப்ப சரிதம் சொல்லப்பட்டு இருப்பதாகவும்
திரு. அரவிந்த சுப்ரமணியம் கூறுகின்றார்..
அந்நிய அடக்கு முறையினால் தான் வாவரன் என்பது வாவர் வழிபாடு என்ற நடைமுறையானது என்பதும் சிலரது கருத்து..
ஸ்ரீ ஹரிஹர புத்திர அவதாரத்தின் தொன்மையை உனர்ந்து கொண்டு விட்டால் மற்றதெல்லாம் சாதாரண விஷயம்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvYCk2B6uxXy9PMjH07qpmkwQu95wQzTXfzlrGbTYTohIiF2-xtDPqKwWWET5ObWfPii7H2tXYkw_FdSGl2nXV_1dWhNrpGJorJkXI9H6_ZVIZDpJwgM433wk1t3LXzEDsS6DLviRfZomN9YdPscEIAsRtuqFQe-Mno18FDIe9gyN_wyO0kDuPVkFY/w400-h270/Screenshot_20221122-200327_Chrome.jpg) |
சந்நிதானம் |
மகிஷி வதத்தினால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள்
சஹஸ்ராரம், பிரம்மரந்திரம் இவற்றுக்கு மேலாக துவாதசாந்த நிலையில் ஐயப்பனை வைத்து பூஜித்து மெய்யுருவைக் கண்டு வணங்கினர்..
இதுவே இன்றைய பொன்னம்பல மேடு என்று கொண்டாடப்படுவது..
மனித சரீரத்தில் சஹஸ்ராரம் எனப்படுவது மூளையின் உச்சி.. பிரம்மரந்திரம் எனப்படுவது சிசுவின் உச்சிக் குழி..
வளர்ந்த மனிதனின் தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் துவாதசாந்தம்..
தலைக்கு மேலாக கைகூப்பி வணங்கும்போது துவாதசாந்தத்தை ஸ்பரிசிப்பதாக ஆன்மார்த்த உணர்வு தோன்றும் அந்நிலையில் கண்களில் நீர் கசியும்..
இதையே திருவாசகம்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்..
என்றும்
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க!.. என்றும் பாடிப் பரவசம் ஆகின்றது..
தஞ்சை தட்சிண மேருவில் பிரம்மரந்திரம் பேசப்படுகின்றது..
சபரி மாமலையில் ஐயப்பனின் யதாஸ்தானம் தான் சஹஸ்ராரம்.
மேலே உள்ள பொன்னம்பல மேடு தான் துவாத சாந்தப் பெருவெளி..
ஆனால்,
அன்றைக்கு தேவர்கள் ஐயனை இருத்தி வழிபட்ட பொன்னம்பலம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை..
அதனை ஒவ்வொரு பக்தனும் தன்னுள் உணர்வதே ஐயப்ப வழிபாடு..
ஒவ்வொரு பக்தனுக்கும் அவனுள் உணர்த்துவதே ஐயப்ப ஸ்வாமியின் அருள்....
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***