நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 29, 2018

இடராழி நீங்குக 3

இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை...

புண்ணியங்கள் சேர்கின்ற நாள்... 
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...

அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...

அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..

இந்நாளில் 
ஸ்ரீபேயாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்கள்.. 

ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர்., (மயிலாடுதுறைக்கு அருகில்) 
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)

மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்துழாய் மார்பன் சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. (2284)

ஸ்ரீஆராவமுதன் - திருக்குடந்தை 
நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டுறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நங்கண்.. (2289)

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்.. (2299)

ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி., 
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.. (2305)

இவையவன் கோயில் இரணியன தாகம்
அவைசெய் தரியுருவம் ஆனான் செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்.. (2312)

ஸ்ரீ திருமலையப்பன் - திருமலை., 
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப் பூணாரம்
திகழும் திருமார்வன் தான்.. (2318)

இறையாய் நிலனாகி எந்திசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்.. (2320)

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்., (மன்னார்குடிக்கு அருகில்) 
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயும் ஆவான் பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்தென் நெஞ்சே புரி.. (2325)

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலங்கைக் கொண்டான் முயன்று.. (2333)
* * *

ஸ்ரீ செல்வநாராயணப் பெருமாள்.,
Melukote - Mandia -Dt., Karnataka
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

புதன், செப்டம்பர் 26, 2018

ஆடல் காணீரோ..

ஒவ்வொரு வருடமும்
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தப்பெறும் அபிஷேகங்கள் ஆறு...

மார்கழித் திருஆதிரை, சித்திரைத் திருஓணம், ஆனி உத்திரம்
- ஆகிய நட்சத்திர நாட்களில் மூன்று அபிஷேகங்கள்..

ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களின்
வளர்பிறைச் சதுர்த்தசி நாட்களில் மூன்று அபிஷேகங்கள்..

ஆக, ஆறு அபிஷேகங்கள்...

அந்த வகையில்
கடந்த புரட்டாசி சதுர்த்தசி நாளன்று சகல சிவாலயங்களிலும்
ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் சிவகாமவல்லி அம்பிகைக்கும்
அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன...

அந்த கோலாகல திருக்காட்சிகள் - இன்றைய பதிவில்...

அத்துடன், கடந்த சனிப் பிரதோஷத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில் நிகழ்ந்த திருக்காட்சிகளும் இடம் பெறுகின்றன..

திருக்கோயில்களில் நிகழ்வுற்ற
வைபவங்களின் படங்களை வழங்கியோர்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்...

அவர்தமக்கு மனமார்ந்த நன்றி...

தஞ்சை பெரிய கோயிலில்
பிரதோஷ நாளின் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமி 
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் மறக்கேன்
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார் விலங்கல்செய் நாடகசாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை ராசராசேச்சரத்து இவர்க்கே...(9/16/8)
-: கருவூரார் :-

ஸ்ரீ பெரியநாயகி அம்மன் 
ஸ்ரீ வராஹி அம்மன் 
ஸ்ரீ சிவ ஷண்முக மூர்த்தி 
முத்தங்கி தரிசனம்
புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன்
அருள்தரும் ஆடல் வல்லானின் 
அலங்காரம்

திருத்தலங்கள் தோறும் திகழ்கின்ற
சிவாலயங்களில் விளங்கும் நடராஜ சபை அனைத்தும்
திருச்சிற்றம்பலம் என்றே புகழப்படும்..

திருத்தலங்கள் தோறும் தரிசித்து வணங்கிய
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
தில்லைச் சிற்றம்பலத்தினைத் தரிசித்த வேளையில்
அருளிச் செய்த திருப்பாடல்களைப் பொதுவாகக் கொண்டு
பல்வேறு திருத்தலங்களில் திகழும்
நடராஜ சபைகளைப் போற்றி
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றேன்..

அருள்திரு அண்ணாமலை நாதன் 
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே 
துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி ஆடுமாறே.. (4/22/1)

ஸ்ரீ உண்ணாமுலையாள்
திருஅண்ணாமலை
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி ஆடுமாறே.. (4/22/2)

ஸ்ரீ கயிலாயநாதன்
ஐயன்பேட்டை - காஞ்சிபுரம்.
ஸ்ரீசிவகாமசுந்தரி
ஐயன்பேட்டை -  காஞ்சிபுரம்.
பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாகம் ஆகிச்
செய்யெரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம் பலத்தே
கையெரி வீசி நின்று கனலெரி ஆடுமாறே.. (4/22/4)

ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர்
திருச்சோற்றுத்துறை - தஞ்சாவூர்.
ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர்
திருச்சோற்றுத்துறை - தஞ்சாவூர்.
 
ஸ்ரீ செம்பொற்சோதியான்
திருஐயாறு - தஞ்சாவூர்.
 
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற
அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.. (4/23/1)

ஸ்ரீ அக்னியேஸ்வரர்
திருக்கஞ்சனூர் - தஞ்சாவூர் (Dt).
ஸ்ரீ அபிமுகேசர் - திருக்குடந்தை
கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளிபங்கா
ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடையசோதீ
திருத்தமாந் தில்லைதன்னுள் திகழ்ந்தசிற் றம்பலத்தே
நிருத்தம் நான் காணவேண்டி நேர்பட வந்தவாறே.. (4/23/2)

ஸ்ரீ நாகேஸ்வரர் - திருக்குடந்தை 
ஸ்ரீ கோனேரிராஜபுரம் - தஞ்சை (Dt) 
கண்டவா திரிந்துநாளுங் கருத்தினால் நின்றன்பாதம்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன்குறிப் பினாலே
வண்டுபண் பாடுஞ்சோலை மல்குசிற் றம்பலத்தே
எண்டிசை யோரும்ஏத்த இறைவநீ ஆடுமாறே.. (4/23/5)

திருக்குற்றாலநாதன் - குற்றாலம் - நெல்லை.
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐயநீஅருளிச் செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகந் தன்னில் மிக்கமல்கு சிற்றம்பலத்தே
பையநின் ஆடல் காண்பான் பரமநான் வந்தவாறே.. (4/23/7)
-: திருநாவுக்கரசர் :-
* * *
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், செப்டம்பர் 24, 2018

காக்கைக்குச் சோறு

கண்ணே... கனியமுதே.. கட்டிக் கரும்பே!..

ஏன்?.. என்ன ஆச்சு இப்போ?.. 
காலையிலயே புராணம் பாடுறீங்க!?..

கவலை ஏன்?.. கலக்கம் ஏன்?..
கறுத்திருக்கின்றதே உன் முகம்!..
கலங்குகின்றதே என் மனம்!..
ஏன்?.. ஏன்?.. ஏன்?..

பொறந்ததுல இருந்து எம் மூஞ்சி கறுப்பாத்தானே இருக்கு!..
இன்னைக்கு என்ன புதுசா ஆராய்ச்சி!...


இல்லே... நாளைக்கு மகாளய பட்சம் ஆரம்பமாகுது...
முனியாண்டி விலாஸ் ஐட்டத்துக்கெல்லாம் பஞ்சம் வந்துடுமே.. ந்னு...

என்னைக்காவது முனீஸ்வரன் இறங்கி வந்து
எனக்கு ஆடு கொடு... கோழி கொடு...ன்னு கேட்டுருக்காரா!...

தெரியாது!?..

அப்புறம் எதுக்கு அவரு பேரைச் சொல்லிக்கிட்டு அலையிறீங்க!..

சும்மா.. நாக்கு ருசி!...

இந்த மனுசப் பதர்களைப் போலவே நீங்களும் ஆயிட்டீங்க!...

என்னது?... மனுசப் பதர்களா!...
அவங்க நமக்கு அன்னம் பாலிக்கிறவங்க!...

ஆகா... அன்னம் பாலிக்கிறவங்க!..
சும்மாவா பாலிக்கிறாங்க அன்னம்?...
அவங்க பாவ மூட்டை கரையணும்..ன்னு பாலிக்கிறாங்க!...

இருந்தாலும் பாலிக்கிறாங்க இல்லே!...

அவங்க பாலிக்கிறதைத் தின்னுட்டு
நமக்குத் தான் பாவத்துக்கு மேல பாவம் ஏறிப் போச்சு...

என்ன செல்லம் இப்படிச் சொல்றே!...
ஜிலேபி, வடை, பாயாசம், அப்பளம் - 
இதெல்லாம் இந்த சென்மத்தில நமக்குக் கெடைக்குமா?..

ம்ம்... நம்ம மேல பிரியப்பட்டு வெக்கிறாங்க...ன்னா
நாம குடியிருக்கிற மரத்தை எல்லாம் ஏன் வெட்டுறாங்களாம்!...

கூட்டை இழந்து குஞ்சு எல்லாம் இழந்து
நாம பட்ட கஷ்டம் உங்களுக்கு மறந்துடுச்சா?...

மறக்கலை தான்!... இருந்தாலும்...

இருந்தாலும்.. ந்னு ஏன் இழுக்கிறீங்க?...
அடுத்த ஒரு ஜீவனோட கூட்டை அழிச்சுட்டு
நாம மட்டும் எப்படி நல்லா குடுத்தனம் பண்ணமுடியும்... ந்னு
நெனைச்சுப் பார்க்காத மனுசன் ஒரு மனுசனா!...

இவனுங்களால அழிஞ்ச
ஆலமரம் எத்தனை?.. அரச மரம் எத்தனை?..
வேல மரம் எத்தனை?..  வேங்கை மரம் எத்தனை?..
புங்க மரம் எத்தனை?..  புளிய மரம் எத்தனை?..
மா மரம் எத்தனை?.. மருத மரம் எத்தனை?..


ஆகா.. கவிதை எல்லாம் பாடுறீயே!..

சும்மா இருங்க... வயத்தெரிச்சலைக் கெளப்பாம!...
நாம பாட்டுக்கு ஒளிவு மறைவா கூட்டைக் கட்டிக்கிட்டோம்..
கொஞ்சிக்கிட்டோம்!.. குலாவிக்கிட்டோம்!..
எல்லாத்தையும் கெடுத்துப் போட்டது இந்த மனுசனுங்க தானே!...

எவனோ வெட்டித் தள்ளினான்.. எவனோ அள்ளிக் கட்டினான்!..
அதுக்காக எல்லாரையும் திட்டுறதா?...


இதுல ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்கா இல்லையா?..
மரத்தை வெட்டிட்டுப் போட்ட ரோட்டுல இவனும் போறானா இல்லையா?..

அதுக்காக ரோடு போடக்கூடாது... ங்கிறயா?...

ரோடு போடு!.. யாரும் வேணாம்...ன்னு சொல்லலை!..
வாய்க்கால் வரப்பை அழிக்காதே.. வயக்காட்டை ஒழிக்காதே...
மண்ணுக்கு வரம் - மரம்... ன்னாங்க... 
அந்த மரத்தை எல்லாம் அழிக்காதே...

மனுசனுக்கு மட்டும் தான் மரம் சொந்தமா?..
மத்த ஜீவராசிக்கெல்லாம் மரம் சொந்தம் இல்லையா?..

தங்கம்... நமக்கெதுக்கு இந்த அரசியல்?..
வா... அந்தப் பக்கமா போய் வேற ஏதாவது பேசுவோம்!...

அரசியல் இல்லை.. இதான் வாழ்க்கை முறை...

முறையோ.. நுரையோ.. நமக்கு எதுக்கு அதெல்லாம்?..

உங்க அப்பன் பாட்டன் வெச்ச மரத்தை என்ன வேணாலும் செஞ்சுக்க..
ஊர் பொது மரத்தை ஏன் வீணா வெட்டிச் சாய்க்கிறே!.. கேட்கிறது தப்பா!...

செல்லம்... நமக்கு எதுக்கு ஊர் வம்பு?..
இந்த மரம்... இல்லேன்னா... அந்த மரம்!..

இன்னுங் கொஞ்ச நேரத்தில கா..கா.. ந்னு
யாராவது சோத்தை வெச்சுக்கிட்டு கத்துவாங்க...
எறங்கிப் போனோமா..  ரெண்டு வாய் தின்னோமா..
நாலு முட்டையப் போட்டோமா..  குஞ்சு பொரிச்சோமா!.. ந்னு இருக்கணும்...

அந்த முட்டையும் தான் திருடித் திங்க வந்துடுறானுங்க!..

சரி.. விடு... முட்டைங்க தானே!.. போனாப் போகுது!..
வேற எங்கேயும் திருடுனா கையக் காலை ஒடைச்சுடுவாங்க!..

இவனுங்களுக்கு மட்டும் பிதுர் சாபம் எல்லாம் தீரணும்..
இவனுங்க புள்ளை குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்!..

ஆனா -
நாம மட்டும் கூடு இல்லாம குஞ்சு இல்லாம சாவணும்!..
நல்லா பேசுறீங்களே நீங்களும் ஞாயம்!...

குஞ்சு குளுவான் எல்லாத்தையும் இழந்துட்டு
நான் படுற பாடு எனக்குத் தானே தெரியும்!..

சரி.. சரி.. விடு.. மனசைத் தேத்திக்க!...
எனக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா!...

எவனோ சொன்னானாம்.. காக்கா எல்லாம் பித்ருக்கள்..
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட மறு உருவம்...ன்னு...

அப்படியே அது உண்மை...ன்னா
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட
குடும்பத்தை அழிக்கலாமா?..

அப்படியே எல்லாத்தையும் அழிச்சிப் போட்டுட்டு
அவங்க கிட்டயே கையேந்தி நிக்கலாமா..
எங்கள நல்லா வையிங்க... ன்னு!?..

கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாங்களா?..

நல்ல நாளும் அதுவுமா -
ஏதோ ஒரு ஜீவனுக்கு ஒரு கை சோறு!.. ன்னா சரி...

பாவம் தீரணுமா!.. காக்காய்க்கு வை...
பணம் காசு சேரணுமா.. காக்காய்க்கு வை...

அப்புறம் காக்கா கூட்டுக்கே வேட்டு வை!..

ஸ்ரீராம்.... ன்னு ஒரு அண்ணாச்சி காக்கா பாட்டு வெளியிட்டாரே...
பரிகாரம்.... ன்னா என்ன வேணாலும் செய்வானுங்க.... ன்னு!...

மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..

ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..



காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் என்றால்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..

இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப் 
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..

அப்படி... ன்னு...

அது.. தஞ்சாவூரு அண்ணாச்சி எழுதுனது ஆச்சே!..

ஆரு எழுதுனா.. என்னா?..
அந்தப் பாட்டு வெளியிட்டது ஸ்ரீராம்... அண்ணாச்சி தானே!...

சரி... அதுக்கு என்னா....ன்றே இப்போ!?...

அந்த மாதிரி -
இவங்களுக்கு வேணும்..ன்னா கூப்புடுவாங்களாம்!..
இல்லேன்னா.. வெரட்டுவாங்களாம்!...

அன்னைக்கு டீக்கடை பந்தல்ல உட்கார்ந்திருந்தப்ப பேசிக்கிட்டாங்க...

என்னா.... ன்னு!?...

இருக்கிற பரிகாரம் எல்லாம் செஞ்சு செஞ்சு அலுத்துப் போச்சாம்...
அதனால வர்ற வருசத்தில இருந்து - ஒரு காக்கா ஜோடிக்கு
வேட்டி சேலை எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம்!...

செஞ்சாலும் செய்வானுங்க!...
இருந்தாலும் அதெல்லாம் எதுக்குங்கறேன்?...

இருக்கிற மரம் மட்டைகளைக் காப்பாத்துனா
அது புண்ணியம் இல்லையா!...
ஆறு குளத்தை அழிக்காம இருந்தா
அது புண்ணியம் இல்லையா!... 

பரிகாரச் சோறு யாரு கேட்டா!?...
இந்த வருசம் மாளய பட்சத்துக்கு கீழே இறங்கவே மாட்டேன்!..

தங்கம்... அப்படியெல்லாம் சொல்லக்கக்கூடாது...

அன்னத்தில பின்னம் இல்லை...
அன்னம் அது சொர்ணம்...
அன்னம் சிவலிங்க ஸ்வரூபம்!..  -
அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க!...

மனுசங்க என்ன பாவம் செஞ்சாலும் என்ன பழி சொன்னாலும்
அதெல்லாம் தீர்றதுக்கு நம்ம கிட்ட கையேந்தி நிக்கிறாங்க...

அதுவே நமக்குப் பெருமை தானே!...

இவங்க நமக்கு சோறு வைக்கலே...ன்னா 
நாம என்ன வருத்தப்படவா போறோம்!?...

அவங்க வைக்கிற சோற்றை -
நாம திங்கலேன்னா தான்
மனங்கலங்கி மதி மயங்கி தடுமாறுறாங்க!...

கன்னங்கரேல்...ன்னு பொறந்தாலும்
நாம என்னைக்குமே மேல தான்!...

பளபள.... ன்னு இருந்தாலும் 
நம்ம கிட்டே கையேந்தி நிக்கிற 
மனுசனுங்க என்னைக்குமே கீழ தான்!..

அங்கே பாரு... இலையில சோற்றை வெச்சுக்கிட்டு
குடும்பமே - கா... கா... ன்னு கத்திக்கிட்டு நிக்குது!...

நாம கீழே இறங்கி ஒரு வாய் எடுத்தா 
அவங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா!..

நாமளும் அவங்களை மாதிரி வக்கிரமா இருக்கக் கூடாது...
வா... கீழே போய் ரெண்டு வாய் சாப்பிடுவோம்!..
அப்பளம் எல்லாம் வெச்சிருக்காங்கடா!...
வா.... செல்லம்... எம் பேச்சைக் கேளு..

பாவம் தீருதோ.. புண்ணியம் சேருதோ!..
படைச்சவனுக்குத் தான் அதெல்லாம் தெரியும்!..

நீ.. வா... நாமளும் சந்தோசமா இருப்போம்..
பிறத்தியாருக்கும் சந்தோசத்தைக் கொடுப்போம்!...

ஏதோ நீங்க இவ்வளவு தூரம் சொல்றிங்களே...ன்னு தான்!..
சரி... வாங்க... போய் ஒரு வாய் சாப்பிட்டுட்டு
நல்லா இருங்க மக்களா... ன்னு வாழ்த்திட்டு வருவோம்!.. 
***


அந்தக் காக்கைகள் 
கீழ் நோக்கிப் பறந்து இறங்கியதும்
அங்கே காத்துக் கிடந்தவர்களின் 
முகமெல்லாம் மலர்ச்சி... மகிழ்ச்சி...

அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும்
உலகின் எல்லா உயிர்களுக்கும் ஆகட்டும்..

மகாளய பட்சம் - நாளை முதல்..
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

சனி, செப்டம்பர் 22, 2018

இடராழி நீங்குக 2


இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை...

புண்ணியங்கள் சேர்கின்ற நாள்... 
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...

அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...

அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..



இன்றைய பதிவில் -
திருமலையில் நடந்த பிரம்மோத்சவத்தின் சில காட்சிகள்..

வழங்கியோர் - திருமலை திருப்பதி தேவஸ்தானம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

இந்நாளில் 
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்கள்...


அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.. (2182)

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வாராம் மாதோ - வழுவின்றி
நாரணன்தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்.. (2201)




அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.. (2203)

தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.. (2204)



அவன் கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் - அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத
சீற்றத்தீ யாவானும் சென்று.. (2205)


மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் - எனைப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய்ப் பிளந்த மகன்.. (2209)



பிரானென்று நாளும் பெரும்புலரி என்றும்
குராநல் செழும்போது கொண்டு - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.. (2212)



துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால் - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை.. (2214)
* * *
வேங்கடவன் பொற்பாதம்
போற்றி.. போற்றி..

ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ