அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும் புனிதம்..
அசுரர் நலத்தைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
அக இருள் தன்னை அகல்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..
வஞ்சகர் வலிமை தீர்க்கின்ற
வாட் படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடியாய்ப் பேரோசையிடும்
உடுக்கை அதுவும் நலந்தானா..
கொஞ்சு தமிழ்ப் படை ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன் பாசம் காபாலம்
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..
பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..
அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..
அம்மா உந்தன் அருள் விழிகள்
ஆறுதலைத் தான் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அல்லல் தனையே ஓட்டாதா..
அம்மா உந்தன் புன்னகையும்
அருள் எனும் நெறியைக் கூட்டாதா
அண்டி வருகின்ற எந்தன் மனம்
இறும்பூதெய்திடத் தேற்றாதா
அம்மா உந்தன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டம் உறுகின்ற என் அகத்தில்
வருகிற கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறையும் கேட்காதா
எந்தன் மகனே என்றே உந்தன்
செவ்விதழ் தானும் மலராதா..
தஞ்சை சோழ மண்டலத்தில்
தங்கப் பொலிவாய் ஆனவளே..
சஞ்சலப் பிணியைத் தீர்த்தருளும்
சமயபுரத்து சங்கரியே..
பத்திரகாளி என்றெழுந்து
பகைதனை விரட்டும் அம்பிகையே..
அருளினைச் சுரக்கும் கோமதியே
ஆதி எனும் சிவ நாயகியே..
முத்துப் பேச்சி என்றே வந்து
முந்தை வினையறப் பேசிடம்மா..
இன்னல் தீர்த்து என் மனதில்
இசக்கி என்றே இருந்திடம்மா..
எங்கும் பிணியைத் தீர்க்கின்ற
பீடுடை தேவி பிடாரியம்மா..
பீடைதனையே பிய்த்தெறிந்து
பெருந்துணையாய் நீ வாருமம்மா...
அம்மா உந்தன் திருவடிகள்
அடைக்கலம் என்றே ஆகாதா...
திருவடி மலரின் அடிமலராய்
எந்தன் சொல்லும் ஆகாதா!..
ஃஃஃ