நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 26, 2019

சூறாவளி


நாந்தாண்டா ரவுடி!...

நானுந்தான்டா ரவுடி!..

நீ தான் கீழே விழுந்துட்டியே!..

அது வேற இருக்குதோ!..
சரி..சரி... யாரும் பார்க்கலை...
எழுந்திரிச்சு நடையக் கட்டுவோம்!...


எங்கெங்கும் நலம் விளைக..
ஃஃஃ

வியாழன், நவம்பர் 21, 2019

ஒரு காலத்திலே..

இன்றைய பதிவில்
முத்தான நகைச்சுவையும் இனிய காணொளி ஒன்றும்..

ரெட்டை வால் ரெங்குடு - ஆனந்த விகடன் 
இனியும் இதுபோல் வாய்க்குமா !..

- என்று ஒவ்வொருவரையும் மயங்க வைக்கும் காணொளி -
கண்களையும் கலங்க வைக்கும்...

FB ல் கிடைத்தது இந்தக் காணொளி..
இதனை உருவாக்கியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..


மாற்றங்கள் இயல்புதான்..

ஆனாலும்
இன்றைய நவீனங்களால்
நாம் எய்தப் பெற்றது வரமா!... சாபமா?..
தெரியவில்லை...


வாழ்க நலம்.. 
ஃஃஃ
...

திங்கள், நவம்பர் 18, 2019

அன்பின் வழியது..

இன்றைய பதிவில் ஒரு காட்சியும் காணொளியும்..

இவை Fb ல் வந்தவையாகும்..


இவற்றைக் காண்பவர் மனம் நிச்சயமாக நெகிழும்...




ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.. (0033)
-: திருக்குறள் :-

வாழ்க நலம் 
ஃஃஃ

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஓங்கி வரும் சரணத்திலே

இன்று கார்த்திகையின் முதல் நாள்..

நல்லோர் அனைவருக்கும் தெரியும் இன்றைய நாளின் சிறப்பு...


மானுடம் தாங்கி வந்த மகத்தான ஜோதி
மணிகண்டன் புகழ்ச் சேவடி மக்களைக் காக்கட்டும்...

தன்னை எதிர்த்தோரையும் இடர்ப்படுத்தியோரையும்
இன்முகத்துடன் அரவணைத்துக் கொண்டவன் மணிகண்டன்...

அல்லலுற்று அரற்றித் திரியும் உயிர்கட்கு
ஐயனாக அப்பனாக நிற்கின்ற அருட்செல்வன்..

மணிகண்டப் பெருமானின் திவ்ய சரித்திரத்துள்
மானுடம் காக்க வந்த திருக்குறளின் பாக்கள்
பலவற்றைக் காணலாம்!.. 

மணிகண்டன் வழி கொண்டு வையகம் வாழட்டும்...  
மணிகண்டன் வழி கண்டு வளமெலாம் சேரட்டும்...


நெஞ்சங் கவர்ந்த
இப்பாடலை இயற்றியவர் திரு K. சோமு..

இசை கூட்டிப் பாடியவர் திரு. K. வீரமணி..
*****

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்.. 
நீங்காத மனை செல்வம் நிலையான புகழ் தேகம் 
தாங்கி வரும் இருமுடிக்கு தக்கபடி தந்திடுவான்

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்..

 நெய் மணக்கும் மேனியப்பா நிம்மதிக்குத் தோணியப்பா
கை மணக்கும் வாய் மணக்கும் கனதனம் மணக்குமப்பா
ள்ளமே அவன் கோயில் கண்களே அவன் வாசல்
வள்ளல் மணிகண்டனப்பா.. வழிவேலன் தம்பியப்பா!...

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்..

கற்பூர ஜோதி மலை காந்த மலை சபரி மலை
நற்பதம் நாடி வரும் ஞானியர்தம் தியான மலை
பொற்பதம் மேடையிலே பூரணனின் காட்சியிலே
அற்புதங்கள் கோடியப்பா.. ஐயப்பா சரணம் அப்பா!..


ஐயப்பா சரணம் அப்பா!.. 


ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
ஃஃஃ

புதன், நவம்பர் 13, 2019

சிறுகதைகள்

பொது வெளியில் எங்கள் பிளாக் தளத்தில் எனது இருபத்தைந்தாவது சிறுகதை நேற்று வெளியாகியிருக்கிறது..

பரிவை குமார் அவர்களது தளத்தில் என்னைப் பற்றி அறிந்து கொண்ட 
அன்பின் திரு ஸ்ரீராம் அவர்கள் என்னை அழைத்து அளித்த ஊக்கத்தின் விளைவே இத்தனையும்...

அன்பின் திரு ஸ்ரீராம் அவர்களுக்கும்
எங்கள் பிளாக் தளத்திற்கும் முதற்கண் நன்றி..

நாற்பது வருடங்களுக்குப் பிறகு எழுதிய
முதல் சிறுகதை - பாக்கியம்...

அந்தக் கதை வெளியாவதற்குள்
நம்ம ஏரியா தளத்தில் அப்பாவின் மகள் வெளியானது...

எனினும் எங்கள் பிளாக்கில் தொடர்ந்து வெளியானவைகளைக் கொண்டு
இருபத்தைந்தாவது கதை என்று அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்... 

2017 நம்ம ஏரியா

1 ஜூலை 2017
1) அப்பாவின் மகள்

3 அக்டோபர்



2017 எங்கள் பிளாக்

15 ஆகஸ்ட் 2017 
1)  பாக்கியம்

17 அக்டோபர் 2017 
2) ராமனைத் தேடிய சீதை

2018 எங்கள் பிளாக்

13 மார்ச் 2018 
3) மாநிறம்

24 ஏப்ரல்
4) மூங்கில் பாலம்

24 ஜூலை
5) வேர்கள்

7 ஆகஸ்ட்
6) பிராயச்சித்தம்

16 அக்டோபர்
7) சாம்பலீஷ் 


23 அக்டோபர்
8) தேன்மொழி கூல்ட்ரிங்ஸ்

1 நவம்பர்
9) அம்மா காத்திருக்கிறாள் - 1

2 நவம்பர்
10) அம்மா காத்திருக்கிறாள் - 2

20 நவம்பர்
11) அன்புள்ள பாஸ்


2019 எங்கள் பிளாக்

15 ஜனவரி
12) மனசோட பேசும் மண்ணோட வாசம்

19 மார்ச்
13) டிபன் பாக்ஸ்

21 மே
14) மறுபடியும் அம்மா

18 ஜூன்
15) மனசுக்குள்ளே மகிழம்பூ

2 ஜூலை
16) தாகம்

23 ஜூலை
17) சுற்றுலா வைபோகமே

27 ஆகஸ்ட்
18) களத்து மேட்டுக் காவலன் 1

3 செப்டம்பர்
19) களத்து மேட்டுக் காவலன் 2

10 செப்டம்பர்
20) களத்து மேட்டுக் காவலன் 3

8 அக்டோபர்
21) நான் - நாகன் என்கிற..

15 அக்டோபர்
22) நான் கல்பனா

22 அக்டோபர்
23) விளக்கு வைச்ச நேரத்தில

5 நவம்பர்
24) காளியண்ணன்

11 நவம்பர்
25) பிரசாதம்



இவையத்தனையும் அன்புள்ளங்கொண்ட தங்களால் ஆயிற்று..

இங்கே கண்டிப்பாக பன்னிரண்டு மணி நேரம்
வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை..

மாலை ஐந்தரை மணியளவில் அறைக்குத் திரும்பும்போது
பெரும்பாலும் இணையம் செயலற்று இருக்கும்..

அதனுடன் போராடித் தான் பதிவுகளை வெளியிடுகின்றேன்..


ஒவ்வொரு கதையைப் பற்றியும் குறிப்பு சொல்லலாம்...
ஏதோ இன்றைக்கு இணையம் சற்று கிடைத்துள்ளது...

குறுகிய நேரத்துக்குள் பதிவை எழுதிட வேண்டும்..
எனவே வேறொரு சமயத்தில் பேசலாம்

தஞ்சையம்பதியில் ஆயிரத்து நானூறு பதிவுகளைக் கடந்திருக்கிறேன்...
அதைக் கூட கவனத்தில் கொள்ள இயலவில்லை...

பல சமயங்களில் பதிவுக்கு வந்து கருத்துரை வழங்கும்
நல்ல உள்ளங்களுக்கு பதில் உரைக்க இயலாதவனாக இருக்கிறேன்..

இருந்தும் எனது தளத்தின் பதிவுகளுக்கும்
எங்கள் பிளாக்கில் வெளியாகும் சிறுகதைகளுக்கும்
தாங்கள் அனைவரும் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும்
மறக்க இயலாதவை...

அவற்றாலேயே நான் நித்தமும் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்...

இவ்வேளையில் அன்பின் நண்பர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்..


வாழ்க நலம்..
ஃஃஃ

செவ்வாய், நவம்பர் 12, 2019

சிவ தரிசனம்

இன்று ஐப்பசி நிறைநிலா நாள்..

சகல் சிவாலயங்களிலும்
சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படும் நாள்..

இந்த நன்னாளில் சிந்திக்கவும் வந்திக்கவுமாக
திருக்கோடிகா எனும் திருத்தலம்...

காவிரிக்கு வடகரை என்று பகுக்கப்பட்டிருக்கும் இத்திருத்தலம்
இன்றைக்கு திருகோடிக்காவல் என்று வழங்கப்படுகின்றது...

கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் செல்லும் வழியில் உள்ளது இத்திருத்தலம்..

பதிவிலுள்ள படங்களை வழங்கியவர்கள்
உழவாரம் - சிவனடியார் திருக்கூட்டம்..

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருத்தலம் 
திருகோடிகா



இறைவன் - ஸ்ரீ கோடீசர், குழகர்
அம்பிகை - ஸ்ரீதிரிபுரசுந்தரி


தலவிருட்சம் - பிரம்பு
தீர்த்தம் - காவிரி

ஞானசம்பந்தப் பெருமானும்
அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகம் அருளியுள்ளனர்..

இங்கே பதிவிலுள்ளது
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருத்தாண்டகம்..

ஆறாம் திருமுறை
எண்பத்தொன்றாவது திருப்பதிகம்..


கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே..

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர் திருமூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுதம் ஆனான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

மற்றாருந் தன்னொப்பார் இல்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றாடு அரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நிற்பான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூர் ஒற்றியாவுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்ச த்துள் நீங்காத எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

ஸ்ரீ திரிபுரசுந்தரி
கோவிந்த ரூபிணியாக திருக்காட்சி
(புரட்டாசி 2018)
படமாடு பன்னகக் கச்சை அசைத்தான் கண்டாய்
பராய்த் துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...
ஃஃஃ

இத்திருப்பதிகத்தில் திருவூர்கள் பலவற்றையும் கூறிச் செல்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்...

சிறப்புடைய இத்திருப்பதிகத்தில் எட்டுத் திருப்பாடல்களே கிடைத்துள்ளன... ஏனையவை சிதைந்து விட்டன... 

பற்றற்றார் பற்றவன் - பரமன்!.. - எனும் திருவாக்கு சிந்திக்கத்தக்கது...

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, நவம்பர் 10, 2019

மண் கொண்ட மாட்சி

அத்தனை பெருமையும் மயிலாடுதுறைக்கே!..

அன்னை தவம் செய்து ஐயனை அணைந்த திருத்தலங்கள் பற்பல!..

அவற்றுள்ளும் சிறப்பானவை - அம்பிகை மயிலாக உருக்கொண்டு வழிபட்ட திருமயிலையும், திருமயிலாடுதுறையும்!..

அதிலும் திருமயிலாடுதுறையில் தான் -
ஐயன் தானும் மயில் வடிவாகி அம்பிகையுடன் நடமாடிக் களித்தனன்.

ஐயன் - அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தியதனாலேயே - 
திருத்தலம் மயிலாடுதுறை என்றாகியது.

மேலும் சிறப்புறும் வண்ணம் - கங்கை தன் மனதில் கொண்ட மாசுகள் நீங்கப் பெற்ற திருத்தலம்.

துலா மாதம் எனும் ஐப்பசி மாதம்..

இம்மாதம் முழுதும் பின்னையும் கார்த்திகை முதல் நாள் வரைக்கும், கங்கை - தான் புனிதம் ஆவதற்காகத் தென்னகத்தின் பொற்பாவை காவிரியுடன் கலந்திருக்கின்றதாக ஐதீகம்....

அந்த - வைபவம் தான் என்ன!..


திருக்கயிலாய மாமலை!.. 

முப்பத்துமுக்கோடி தேவர்களும் மகரிஷிகளும்
வித்யாதரர்களும் யட்சர்களும் மற்றும் சகல ஜீவராசிகளும் கூடி நின்று - ஐயனையும் அம்பிகையையும் போற்றி வணங்கி அவர்தம் பெருமைகளைப்  புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த புண்ணிய வேளை!..

சிவபெருமானின் ஜடாபாரத்தினுள் சிக்கிக் கிடக்கும் கங்கைக்கு மகிழ்ச்சி!..

தன்னை முன்னிட்டல்லவோ - ஈசனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர்!..
பூவுலக மக்களின் பாவச்சுமைகளை நான் நீக்காவிடில் - யாரால் அதனைச் சுமக்க இயலும்!?..

என் பெருமையை அறிந்த அதனால் தானே
பெருமானும் என்னைத் தன் தலையின் மீது தாங்குகின்றார்!..

இப்படியான - 
கங்கையின் எண்ணத்தை உணர்ந்த அம்பிகை அதிர்ந்தாள்..

எம்பெருமான் புன்னகைத்தார்..

அந்த அளவில் கங்கையின் மங்கலங்கள் மாசடைந்தன. 
பொன் மஞ்சள் எனத் திகழ்ந்த திருமேனி - ஒளி குன்றியது. 
கங்கையின் தேஜஸ் அவளை விட்டு அகன்றது...

கூடியிருந்த பெருங்கூட்டம் திகைத்து நிற்கையில் - 

அங்கே - அவலமான வடிவத்துடன் கங்கை தோன்றினாள்..

கங்கையின் கண்களில் பிரவாகமாக கண்ணீர்...

ஐயனே!. என்னைக் காத்தருளுங்கள்!.. என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்!..

சற்று முன் - ஐயனின் சிரசில் இருப்பதாக அகந்தை கொண்டு ஆர்ப்பரித்தவள் - சில விநாடிப் பொழுதில் அநாதரவாக ஐயனின் திருவடிகளில் கிடந்தாள்..

அம்பிகை ஆதரவு கொண்டு கங்கையைத் தேற்றினாள்...

ஸ்ரீ அபயாம்பிகை
தேவி.. என்னை மன்னித்தருளுங்கள்..
தமது கருணையின்றி இந்தப் பூவுலகில் நிலைத்த செல்வம் என்பதேது.. அகந்தையின் வசப்பட்டு அவலம் எய்தினேன்.. அதனால் ஐயனின் ஜடாமகுடத்திலிருந்து வீழ்ந்தேன்.. பிராயச்சித்தம் அருள்க.. தேவி!.. 

- என கண்ணீர் உகுத்தாள்...

அகத்திய மகரிஷி ஆறுதலாகப் பேசினார்...

கங்கா தேவி!.. பரந்தாமனால் புகழப் பெற்றவள் நீ..  மக்களுக்கு சேவை செய்பவர்களுள் முதன்மையானவள் நீ.. மக்கள் பணி செய்வோர்க்கு ஆணவமும் இறுமாப்பும் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடம்!.. உன் பிழையினை நீ உணர்ந்தாய். இதுவே உனக்குப் பொன்னான வேளை. கலங்க வேண்டாம்!.. 

எல்லாம் வல்ல சிவம் இனிதே புன்னகைத்தது...

காவிரியை அறிவாயா நீ!.. அகத்தியனின் உருவங்கண்டு எள்ளி நகையாடிய பிழையால் -  அவள் காலகாலத்துக்கும் கமண்டலத்துக்குள் சிறைபட்டுக் கிடந்தாள். கணேசன் காகத்தின் வடிவங்கொண்டு அவளை மீட்க வேண்டியதாயிற்று. அந்தக் காவிரி உனக்கு நலம் அளிப்பாள்..

அது எவ்விதம் என்பதை தேவரீர் விளக்கம் செய்தருள வேண்டும்!..

அனைவரும் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்...

ஈசன் எம்பெருமான் அதிகார நந்திதேவனை திருநோக்கம் செய்தருளினார்.

நந்தியம்பெருமான் விளக்கம் தரலானார்...

ஒரு சமயம் - ஐயன் வேதத்திற்குப் பொருள் கூறியபோது சற்றே கவனக் குறைவிற்கு ஆளான அம்பிகை சிவபெருமானைப் பிரிந்து மயிலாக மாறி காவிரியின் தென் கரையில் சிவபூஜை புரிந்தார்...


காலம் கனிந்த வேளையில் ஐயனும் மயில் வடிவங்கொண்டு அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தி அருளினார். அதனாலேயே மயிலாடுதுறை என - திருப்பெயர் கொண்டது திருத்தலம்...

ஐயனும் அம்பிகையும் திருநடனம் நிகழ்த்திய அவ்வேளையில் - காவிரியாள் செய்து கொண்ட பிரார்த்தனை ஒன்றுண்டு!..

நந்தியம்பெருமான் சற்றே நிறுத்தினார்...

அதற்கு மேல் ஐயன் அருளுரைத்தார்...

காலக் கணக்கில் ஏழாவது - துலா மாதம். அனைத்தும் சமன் செய்யப்படும் மாதம். துலா மாதம் நெருங்கும் இவ்வேளையில் தென் திசைக் காவிரியுடன் கலந்திருப்பாயாக!.. அங்கே நீ நலம் பெறுவாய்!..

அவ்வண்ணமே - ஈசனின் திருவாக்கினைத் தலைமேற்கொண்டு, கங்கை தென் திசைக்கு விரைந்தாள்....


அந்த விடியற்காலைப் பொழுதில் தன்னை நோக்கி  வந்த கங்கையைக் கண்டு பரவசமானாள் - காவிரி!.. 

வருக.. வருக.. சகோதரி!.. - என வாஞ்சையுடன் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டாள். 

ஒருவர் முகம் மற்றவர் கண்ணீரால் நனைந்தது.

கங்கையின் மனம் அன்னத்தின் தூவி (மெல்லிறகு) போலானது..

தங்காய்!.. திசை தொழும் திருமகள் நீ!..
உன்னால் நான் நலம் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் கங்கை.

சகோதரி!.. தேடி வந்த திருமகள் நீ!..
உன்னால் நான் புகழ் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் காவிரி.

நீரொடு நீர் கலக்க -
நிர்மலமான அன்பு எங்கும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

இனிமேல் என்னை விட்டு தாங்கள் பிரியக்கூடாது!.. - என்றாள் காவிரி.

அன்புத் தங்கையே!.. வற்றாத நதியாகிய நான், வாழும் கலையினை உன்னிடம் பயில வந்துள்ளேன்.. ஐயன் சிவபெருமான் எனக்கு விதித்தபடி துலா மாதம் முழுதும் உன்னுடன் இருப்பேன். உன்னுடைய பிரவாகத்தில் கலந்து நானும் பெரும் பேறடைவேன்!.. - என மகிழ்ந்தாள் கங்கை.

நான் என்ன அறிவேன் சகோதரி!.. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பெரியோர் என்னைப் பாராட்டினர். ஆயினும், சிறுமதியோர் சிறையில் நானும் சிக்கிக் கொள்கின்றேன். மணற்கொள்ளையினால் என் வழி படுகுழியாகின்றது. அதனால் வயல் வெளிகள் பாழாகின்றன. நீரலைக் கரங்களை நீட்டி விளையாடிய நாட்கள் எல்லாம் தொலைந்து போயின. 

நான் கட்டிக் காத்த களஞ்சியங்கள் கண் முன்னே கட்டிடங்களாகி விட்டன. செல்லும் வ்ழியெல்லாம் எனக்கு நிழல் கொடுத்த விருட்சங்களும் வீழ்த்தப் பட்டன.. வெறிச்சோடிக் கிடக்கின்றன நெடுங்கரைகள்.. எனினும் மட மதியினராகிய மக்கள் மீது கோபம் கொள்வதில்லை. அவர்கள் திருந்தும் காலம் விரைவில் வரும். 


ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளிலும் ஊற்றுப் பெருக்கால் ஊர் காத்து வந்தேன். கெடுமதியோர் ஊற்று நீரையும் உருக்குலைத்து விட்டனர். ஊர் கொண்ட ஈசன் தான் இதற்கொரு வழி கூற வேண்டும்!..


- காவிரி தன் குறைகளைக் கங்கையிடம் கூறினாள்..

என்ன செய்வது தங்காய்!..
பேர் கொண்ட பேரழகு பெண்ணாக இருந்தாலும் சரி..
பெண் கொண்ட பேர் கொண்டு நதியாக இருந்தாலும் சரி..
நிம்மதி என்பது ஏது இவ்வையகத்தில்?... 

என்குறையும் இவ்விதமே!..
பவித்ரமான என்னைப் பாழ்படுத்தியே பரவசம் அடைகின்றனர்...
பாவிகளின் செய்கையால் நானும் உன்னைப் போலவே பரிதவித்து நிற்கின்றேன்.. பரமன் ஒருவனே நமக்குப் பாதுகாப்பு!..

கங்கையும் காவிரியும் கூடிக்களித்து
ஒருவர் அன்பினில் ஒருவர் மகிழ்ந்தனர்..

கங்கையின் பழி தீரும் நாளும் வந்தது...

கோபுர தரிசனம்
அந்த இளங்காலைப் பொழுதினில் முப்பத்து முக்கோடித் தேவரும் கூடி இருந்த வேளையில் - ஐயனும் அம்பிகையும் ப்ரத்யட்சமாகினர்!..

அதுவும் - மயில் வடிவங்கொண்டு ஆனந்த நடனம் புரிந்தனர்...

அதற்காகக் காத்துக் கிடந்த காவிரி
ஆனந்தக் கண்ணீருடன் கைகூப்பி நின்றாள்...

கங்கையின் கண்களிலும் ஆனந்த வெள்ளம் கரை புரண்டது...

கன்னியர் இருவருக்கும் மஞ்சளும் தந்தாள்..
மலர்களும் தந்தாள் - மங்கல மங்கையாகிய அபயாம்பிகை!..

அம்மையப்பனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர் அனைவரும்...

துலா தீர்த்தவாரி
காவிரியும் அவளுடன் கலந்து நிற்கும் கங்கையும் -
துலா மாதம் எனும் புண்ணிய ஐப்பசியின் அனைத்து நாட்களிலும்
இந்தத் தீர்த்தத் துறையில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்த்து -
நல்லோர் தம் வாழ்வுக்குத் துணையிருப்பீர்களாக!.. 

- என்று வரமளித்த மயூரநாதர் -

கங்கையை நோக்கி - திருக்கயிலைக்கு ஏகும்படி பணித்தார்.

காவிரியைப் பிரிய மனம் இல்லாத கங்கை கலங்கினாள்..

ஸ்வாமி.. பொன்னியையும் அவளால் வளமுற்ற
இந்த மண்ணையும் பிரிவதற்கு மனம் இல்லை...
ஆயினும் தங்கள் ஆணையை சிரமேற்கொள்ளும் வேளையில்
ஆண்டு தோறும் துலா மாதத்தில் - காவிரியுடன் கூடிக் களிக்கும்படியான வரத்தினைத் தாங்கள் நல்க வேண்டும்!.. 

வரங்கேட்டு நின்றாள் - கங்கை.

அஞ்சொலாள் அம்பிகையும் மயூரநாதரும் புன்னகைத்தனர்.

கங்கை கேட்ட வண்ணமே வரம் அருளினர்.

கலங்கிய கண்களுடன் காவிரியிடம் விடை பெற்றுக் கொண்டாள் கங்கை.

கண்களைத் துடைத்துக் கொண்டு - தானும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் கங்கையினும் புனிதமாய காவிரி!..

அம்மையும் அப்பனும் அன்று அருளியபடியே - ஆண்டு தோறும் துலா மாதமாகிய ஐப்பசியில் -

கங்கை தென்னகத்திற்கு ஓடி வந்து காவிரியுடன் கலந்து இன்புறுகின்றனள்.

இந்த வைபவம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வரபிரசாதம்!..

ஆயினும்,

கண் கண்ட காட்சியாக காவிரியும் கங்கையும் கலந்திட வேண்டும்!..
மண் கொண்ட மாட்சியாய் மங்கலம் எங்கும் நிறைந்திட வேண்டும்!..


ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிய பதிவு இது..
புதிதொன்றை எழுதுதற்கு ஏதுவான சூழல் இல்லை - இவ்விடத்தில்..

கங்கையும் காவிரியும் மன்னித்தருள்வார்களாக!...

வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 

வளர் நலம் சிறக்க பாரதம் செழிக்க
வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
* * *