நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

வாழ்க சகோதரம்!..

நேற்று ஆவணி மாத பௌர்ணமி..

வருடந்தோறும் இந்நாள் ரக்‌ஷா பந்தன் எனும் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது..

குறிப்பாக - பெண்களால் கொண்டாடப்படுவது ரக்‌ஷா பந்தன்..

பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு
ராக்கி எனும் மங்கலக் கயிற்றினை கையில் அணிவிப்பதே ரக்‌ஷா பந்தன்..

அதேசமயம் அன்புடன் பழகுபவர்களையும் சகோதரர்களாகக் கொண்டு-

அவர்களுக்கும் அணிவிக்கப்படுவது - ரக்‌ஷா பந்தன்..


சகோதரியின் அன்பும் வாழ்த்தும் சகோதரனுக்கு உரியதாக -
சகோதரனின் அன்பும் பாதுகாப்பும் சகோதரிக்கு உரியதாக ஆகின்றன..

ஒரு பெண் அணிவிக்கும் ராக்கியை ஏற்றுக் கொள்ளும் ஆடவன் -
அந்தக் கணத்திலிருந்து அந்தப் பெண்ணுக்கு சகோதரனாகின்றான்..

அவளுடன் பிறந்த சகோதரனைப் போல - அவளது பாதுகாப்பிற்கும் நலத்திற்கும் உற்ற துணையிருக்கக் கடமைப்பட்டவனாகின்றான்..

ராக்கி கட்டப்பட்டதும் - அந்தப் பெண்ணுக்கு பாதுகாவலாக இருப்பதாக உறுதி கூறி வாழ்த்தி இனிப்புகளுடன் பரிசுப் பொருட்களை வழங்குவது சம்பிரதாயம்


இந்த ரக்‌ஷா பந்தன் வைபவத்திற்காக சொல்லப்படும் புராதன சம்பவம் -இதோ!..

அரசியல் சூழ்ச்சியால் அனைத்தையும் இழந்து நின்றனர் - பாண்டவர்கள்..

அடுத்த சிறுபொழுதில் நகரை விட்டு நீங்க வேண்டும் - வன வாசத்திற்காக!..

சித்தப்பா - விதுரன் முன்நிற்கின்றார். அருகில் ஸ்ரீகிருஷ்ணன்!..

மூத்தவனாகிய தர்மபுத்திரன் - சூதாடத் துணிந்த வேளையில் ஸ்ரீகிருஷ்ணனை நினைக்கவில்லை என்பது பெருங்குறை..

அதை நினைவில் கொண்டாள் - துருபதனின் குலவிளக்கு திரௌபதி..

இனிவரும் நாட்களில் நாங்கள் உன்னை மறந்தாலும் நீ எங்களை மறவாதிரு!..

- என்று சொல்லியபடி - ஸ்ரீ கிருஷ்ணனின் கையில் தனது முந்தானையைக் கிழித்துக் கட்டினாள்..

ஸ்ரீகிருஷ்ணன் புன்னகைத்தான்..

அதன் பலனாக - பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட துன்பங்களை -
பரந்தாமனின் துணையுடன் கடந்ததாக பாரதம் கூறுகின்றது..

அதை நினைவு கூர்வதே - ரக்‌ஷா பந்தன் எனும் வைபவம்..


முகத்தை மூடிக்கொண்டு, நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அராபியர்கள் -
பொன் பொருளைக் கவர்ந்ததுடன் - பெண்களையும் கவர்ந்தனர்...

எதிர்த்துப் போர் புரிந்த வீரர்களையும் மற்ற ஆடவர்களையும் மூர்க்கத்துடன் கொன்று குவித்து விட்டு -

நிர்க்கதியாக நின்ற பெண்கள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளை -
வரலாற்றின் பல பக்கங்கள் இன்றளவும் பேசிக் கொண்டிருக்கின்றன..

அப்படிப்பட்ட அசாதாரணமான வேளைகளில் - அபலைப் பெண்களை
ஓரளவுக்காவது காத்து நின்றது ரக்‌ஷா பந்தன்!..

ரக்‌ஷா பந்தன் - வழக்கமான உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நேற்று கொண்டாடப்பட்டிருக்கின்றது..


அண்ணன் தங்கை, அக்கா தம்பி - பாசம் என்பது காலங்களைக் கடந்து நிற்பது..

திருநாவுக்கரசர் நமக்குக் கிடைத்ததற்குக் காரணம் - திலகவதியாரின் பாசம்!..

விண்ணுயர்ந்து விளங்கும் பெரிய கோயிலைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன்!..

மும்முடிச்சோழன் என்பது ராஜராஜனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று..

அத்தகைய புகழ் கொண்ட சோழ மாமன்னன் - 
சகோதரி குந்தவை நாச்சியாரின் அன்பினில் கட்டுண்டு கிடந்தான்!..

அதனால் அல்லவோ -
தனது மகளுக்கு - குந்தவை எனப் பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தான்!..


முன்பெல்லாம் - தமிழகம் முழுதும் கேட்டிருக்கும் குரல் - அண்ணே!..

இப்போதெல்லாம் அப்படியில்லை..

திரைப்படங்கள் சிலவற்றில் -
இந்த வார்த்தையும் சிதைத்துச் சீரழித்துப் போட்டார்கள் - கதை எழுதிய சிலர்.

ஆயினும், காலத்தினால் வெல்ல முடியாதது சகோதர பாசம்!..

அத்தகைய அன்பின் நிலையை -

கண்ணின் மணியாக மணியின் 
நிழலாக கலந்து பிறந்தோமடா!..
இந்த மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா..
உறவை பிரிக்க முடியாதடா!..

- என்று, கன்னித் தமிழ் கொண்டு சிறப்பித்தார் - கவியரசர் கண்ணதாசன்.


இதோ - இந்தக் காணொளியை சற்று முன் -  Facebook -ல் கண்டேன்..

இந்தக் காணொளிதான் இந்தப் பதிவுக்கு அடிப்படை..

நீங்களும் காணுங்கள்!..


சில விநாடிகளிலேயே - கண்கள் கசிந்து கண்ணீர் பெருகி வழிந்தது..

அன்பின் நெஞ்சங்கள் கொண்ட பாசத்திற்கு கண்ணீரே காணிக்கையாகின்றது..

மனிதனை மனிதனாக்கும் நாட்களுள் ரக்‌ஷா பந்தன நாளும் ஒன்று!..


அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு 
ரக்‌ஷா பந்தன் என்பது - நூல்வேலி!..

மெல்லிய நூலிழைகளைக் கையில் கட்டுவது கூட, ஒரு சம்பிரதாயத்திற்குத் தான்!..

ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் - எல்லா விதத்திலும் -
பெண்களைக் காத்து நிற்கக் கடமைப்பட்டவர்கள்..

தமிழினத்தின் தனிப்பெரும் சிறப்புடைய வார்த்தை - 

அம்மா!..

அம்மா - எனும் சொல்லைக் கொண்டுதான் அனைத்துப் பெண்களையும் அழைத்தார்கள்..

இன்றும், அதுவே தமிழரின் நெறியாக பல குடும்பங்களில் - பல ஊர்களில் விளங்குகின்றது.. 

அன்பினால் வார்த்தெடுக்கப்பட்ட நெஞ்சங்கள் அந்த நெறியினை மீறுவதே இல்லை..

ஐந்தறிவு என பகுக்கப்பட்ட யானையே 
ஒரு சிறிய அங்குசத்திற்கு அடங்குகின்றது. 
கட்டுப்பட்டு நிற்கின்றது..

ஆறறிவு என ஆர்ப்பரிக்கும் மனிதன் 
அன்பெனும் நூலுக்கு அடங்க மாட்டானா!.. 
கட்டுப்பட மாட்டானா!..

ஆண்மை கட்டுப்படவேண்டும்..
பெண்மை காக்கப்படவேண்டும்..

என்றென்றும் போற்றப்படவேண்டும்!..

வாழ்க நலம்!.. 
* * *  

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

திரு ஓணம்

இது நூறாவது யாகம்.. அதுவும் அஸ்வமேத யாகம்!..

எவ்விதக் குறைவுமின்றி நிகழ்ந்து -
வேள்வித் தீயில் - பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு விட்டால் -

திவ்ய பலன் வேண்டி யாகத்தை நடத்தியவனை எவரும் வெல்ல முடியாது..

யாகத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் - அசுர குரு சுக்ராச்சார்யார்..

அவரின் எதிரே தன் மனைவியுடன் அமர்ந்திருப்பவன் - மாவலி சக்ரவர்த்தி..

வெற்றி பெறப்போகும் களிப்பில் - மாவலியின் கண்கள் மின்னின..

சக்ரவர்த்தியாகிய மாவலி - ஸ்ரீ பக்த பிரகலாதனின் பேரன்..

இப்படி நூறாவது யாகத்தை நடத்துதற்கும் ஸ்ரீநரசிம்ஹ அவதாரத்திற்கு மூல காரணனும் ஆன ப்ரகலாதனின் வம்சத்தில் பிறப்பதற்குமான புண்ணியம் எது?..

சிவாலயத்தின் தீபச்சுடர் தனைத் தூண்டி விட்டது தான்!..


ஆதியில் ஒரு எலி..

திருமறைக்காடு எனும் தலத்தின் திருக்கோயிலினுள் சுற்றித் திரிந்திருந்தது. ..

அந்த எலிக்கு வேலை - நாளும் சிவாலயத்தின் திருவிளக்குகளில் ஊறிக் கிடக்கும் நெய்யினைச் சுவைப்பது தான்!..

ஒரு நாள் இரவு. அர்த்த ஜாமம் முடிந்து - திருநடை அடைக்கப்பட்டு விட்டது..

யாருமற்ற அந்தப் பொழுதில் வழக்கம் போல எலி கருவறையுள் நுழைந்தது..

திருவிளக்கில் நிறைய நெய் இருந்தாலும் - தூண்டுவாரில்லாததால் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது..

நிறைந்திருந்த நெய்யைக் கண்டதும் எலிக்குக் கொள்ளை ஆனந்தம்..

அவசரமாக நாவினை நீட்டி சுவைக்க முற்பட்டபோது - எதிர்பாராத விதமாக தீபச்சுடரில் மூக்கினைச் சுட்டுக் கொண்டது..

மூக்கின் நுனியில் - சுரீர்!.. - எனச் சுட்டதும் பதறித் துடித்தது.

அந்த வேளையில் நிகழ்ந்த பதற்றத்தால் - கருகிக்கொண்டிருந்த சுடர் தூண்டப் பெற்றது. மூலத்தானத்தினுள் ஒளி பரவியது..

அதே வேளையில் பஞ்ச வாத்யங்களின் ஒலி கேட்ட எலி அதிர்ந்து நின்றது..

தான் காண்பது கனவா.. நனவா!.. என்று.. தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

நிஜம் தான்!.. தன் எதிரில் காட்சியளிப்பது  - ஸ்ரீபரமேஸ்வர சிவம் தான்!..


கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

திருக்கோயிலின் தீபத்தினைத் தூண்டிவிட்ட புண்ணியத்திற்காக - ஈசன் - அந்த எலியினை வாழ்த்தி மறைந்தார். 

ஈசன் விதித்தபடி - தன்னுடலை நீத்தது - எலி.. 

அசுர குலத்தில் ஸ்ரீபக்த ப்ரகலாதனின் வழித்தோன்றலாகப் பிறந்தது..

இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - பாடி மகிழ்கின்றார்.

இப்படி - எலியானது சிவபுண்ணியம் பெற்ற திருமறைக்காடு - இன்றைக்கு வேதாரண்யம் என வழங்கப்படுகின்றது..

காசியப முனிவருக்கு - திதி என்றும் அதிதி என்றும் இரு மனைவியர்..

காலமல்லாத காலத்தில் கணவருடன் கூடி - திதி பெற்ற பிள்ளைகளே அசுரர்கள்...

வானுலக நிர்வாகத்தை தங்களுடைய சகோதரர்களாகிய சுரர்களிடமிருந்து பெறுவதில் நிகழ்வதே தேவாசுர யுத்தங்கள்...

கடுந்தவங்களினால் வல்லமையைப் பெற்று வானுலகைக் கைப்பற்றுவதும் - தமது மடைமையினால் தேவர்களிடமே அதை இழப்பதும் வாடிக்கையானது..

குலகுருவான சுக்ராச்சார்யார் எவ்வளவு கூறியும் கேட்பாரில்லை..

இந்த சூழ்நிலையில் அசுர குலத்தில் வந்து தோன்றிய மாவலியை - வழி நடத்தினார் சுக்ராச்சார்யார்..

மாவலிக்கு மூவுலகையும் தன் கைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது..

அசுரப்படைகளுடன் சென்று தேவலோகத்தைத் தாக்கினான்.. 

கடுமையான அந்த யுத்தம் - இந்திரனுக்குச் சாதகமாக முடிந்தது.

இதன் பின் - மீண்டும் பலம் பெற்றான்.. எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் - பெரியதொரு யாகத்தை நடத்தி - ஆயுதங்களுடன் கூடிய பொன் ரதத்தினைப் பெற்றான். 

அந்த  ரதத்துடன் - மீண்டும் தேவலோகத்தை முற்றுகையிட - தேவர்கள் இந்திரன் தலைமையில் - வெற்றிகரமாகத் தோற்று - ஓடிப் போயினர்..

அசுர வேந்தன் அணுக முடியாத மறைவிடத்தில் தங்கிக் கொண்டு  - தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனையின்படி, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சரண் அடைந்தனர்.

அசுர வேந்தனின் ஆளுகைக்குள் அமராவதி வந்தது. மாவலி ஆசைப்பட்டபடி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். 

தவிர,  மகரிஷிகளையும் மற்றவர்களையும்  மதித்து அவர்களுக்கு எல்லா வசதிகளையும்  குறைவின்றி செய்து கொடுத்தான்.

இதற்கிடையே - தன் மைந்தர்கள் நாடிழந்து வாடுவதனால் வருந்திய அதிதி கணவராகிய  காசியப முனிவரிடம் முறையிட்டு வருந்தினாள். 

அவரோ பரந்தாமனைத் தியானிக்கப் பணித்தார்.
அதன்படி அதிதி - ஸ்ரீ ஹரிபரந்தாமனைத் தியானித்தாள்..

ஸ்ரீ ஹரிபரந்தாமன் - அவளுடைய கர்ப்பத்தில் - தான் உதிப்பதாக வரமளித்தார்.


அதன்படியே, காசியபர் - அதிதி தம்பதியர்க்கு, அருந்தவ புத்ரனாக -

ஆவணி சுக்ல பட்சம், திருவோண நட்சத்திரத்தில் - உச்சிப் பொழுதில் - கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சங்கு சக்ரதாரியாக அவதரித்து அவர்கள் மடியில் பாலனாகத் தவழ்ந்தார்.

பெருமானுக்கு வாமனன் எனும் திருப்பெயர் சூட்டப்பட்டது.

மகரிஷிகள் வாமனனுக்கு உபநயனம் செய்து அட்சரம் பயிற்றுவித்தனர்.

தகவல் அறிந்து மகிழ்ச்சியுற்ற தேவர்கள் ஓடோடி வந்து வணங்கினர்..
பெருமானின் திருவருளையும் வேண்டி நின்றனர்.

நிகரற்ற பேரும் புகழும் பெற்று வாமனன் வளர்ந்து  வந்த வேளையில் -

அமராவதி கையில் இருந்து நழுவாமல் இருக்கும்படிக்கு - நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்யுமாறு பலி சக்ரவர்த்திக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்படி - மாவலி செய்யத் தொடங்கியதே - அஸ்வமேத யாகம் .


மாவலியிடம் - மூவுலகையும் கவர்ந்து கொண்டதன்றி வேறு குற்றம் ஒன்றும் காணப்பட வில்லை.

எனவே,  வையம் உள்ளளவும் புகழுடன் இருக்கும்படி  - மாவலிக்கு அருள் புரியத் திருஉளங்கொண்டார் பெருமான்.

மாவலி அஸ்வமேத யாகம் நடத்தும் யாக சாலைக்குச் சென்றார். 

ஸ்வாமியின் தேஜஸைக் கண்டு பிரமித்து மயங்கினர் அனைவரும். 

வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த மாவலி, 

ஐயனே!.. தாங்கள் வேண்டுவது யாது!.. - எனக் கேட்டான்..

நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!. அதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவையில்லை!.. - என்று திருவாய் மலர்ந்தார்.

மாவலி - மகிழ்ந்தாலும் சற்றே வருந்தினான்..

ஸ்வாமி!.. பச்சிளம் பாலகனாகிய தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. அதிலே தங்களுக்கு என்ன கிடைத்து விடும்?.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!.. விரும்பியதைத் தருவதற்கு சித்தமாக உள்ளேன்!..''

- என்று கூறினான் - பணிவுடன்..

பெருமானோ - ''.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..''  - என்றார்.

அதன்படி - பாலகன் கேட்டதைத் தானம் தருவதற்கு ஆயத்தமானான் - மாவலி.

மூன்றடி மட்டும் போதும் - என வந்திருப்பவன் யார்?..

- என, சுக்ராச்சார்யார் - தனது மூளையைக் குடைந்ததில் - தானம் கேட்டு வந்திருப்பவனின் சுயரூபம் அகக்கண்ணில் வெளிப்பட்டு நின்றது..

திடுக்கிட்ட சுக்ராச்சார்யார் - தானம் வழங்கப்படும் வேளையில்,

 ''..வந்திருப்பவன் மாயவன்!.. அவன் கேட்டபடி வழங்காதே!..'' - என்றார்.

அசுர வேந்தன் மாவலியோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ - தகவு இல் வெள்ளி!..
கொடுப்பது விலக்கு கொடியோய்!.. உனது சுற்றம் 
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..
(கம்பராமாயணம்)

- என்று மறுமொழி கூறி நின்றான்.

தன் பேச்சைக் கேட்காமல் - கிண்டியிலிருந்து நீரை வார்த்து - தானம் செய்கையில் மனம் பொறாத சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி, கிண்டியினுள் விழுந்து நீர் வழியை அடைத்தார்.

அதை உணர்ந்த பெருமான் தர்ப்பையினால் கிளற, நீர் வழியை அடைத்த சுக்ராச்சார்யார் ஒரு விழியை இழந்தார். விழியினை இழந்த சுக்ராச்சார்யார் விலகி ஓடினார்..

ஆக, நீர் வழியினை அடைப்பவர்களுக்கு என்ன நேரும் என்று அன்றே சொல்லப்பட்டிருக்கின்றது!..

தடை நீக்கப்பட்டதும், பெருகி வழிந்த நீரை வார்த்து -  அசுரவேந்தன் தானம் கொடுத்ததும் வாமனன் - த்ரிவிக்ரமனான வளர்ந்து ஓரடியால் உலகினையும்  மறு அடியால் விண்ணையும் அளந்தார்.


மூன்றாவது அடிக்கு இடம் இல்லை!.. மீண்டும் வாமனத் திருக்கோலம் பூண்ட பெருமான் - ''..மூன்றாவது அடியை எங்கே வைப்பது?..'' என்றார்.

வந்திருப்பவன் ''பரந்தாமனே!..'' - என்பதைப் பரிபூரணமாகக் கண்ட பலிச் சக்ரவர்த்தி,

 ''..பெருமானே!.. என்னையே தருகின்றேன். இதோ என்தலை மேல் தங்களின் திருவடியை வைத்து மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள்!..'' - என்று சிரம் தாழ்த்தி நின்றான்.

அப்போது ஸ்ரீப்ரகலாதர் வானிடையே தோன்றி தன் பேரனை வாழ்த்தினார்.

நான்முகனும் மற்ற மகரிஷிகளும் சுற்றி நின்று வாழ்த்தினர்..

ஹரிபரந்தாமனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு புன்னகையுடன் திருவருள் புரிந்தார்.

''..தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, அதைக் கேளாமல், தன் வாக்கு தவறாமல் தானத்தை வழங்கினான். யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த பலி சக்ரவர்த்தியே அடுத்த மன்வந்த்ரத்தின் இந்திரன்!..''

- என வாழ்த்தி யாகத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றும்படிக் கூறினார். 
அதன்படி யாகமும் நிறைவேறியது.

பெருமான் - அசுர வேந்தனிடம்,  வேண்டும் வரம் யாதெனக் கேட்க -

''..ஆண்டுக்கு ஒரு முறை என் மக்களை நான் வந்து சந்திக்கும்படியாக வரம் தருக!..'' - என வேண்டிக் கொண்டான். அவ்வண்ணமே வரமும் பெற்றான்.

அதன்பின் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் அருளாணைப்படி, பாதாள லோகத்துக்கு அதிபதியாகினான் - மாபலிச் சக்ரவர்த்தி.

இப்படி நிகழ்ந்த வாமன அவதாரத்தினை,

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!..
(கந்தர் அலங்காரம்) 

- என, மாமனையும் மருகனையும் - அருணகிரிநாதர் வர்ணிக்கின்றார்.


தமிழகத்தில் குறிப்பாக - திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்வுறும்.

இருபத்தேழு நட்சத்திரங்களுள் சிவபெருமானுக்கு உரிய ஆதிரை, மஹா விஷ்ணுவுக்கு உரிய ஓணம் இவை இரண்டு மட்டுமே ''திரு'' எனும் அடை மொழியுடன் கூடியவை.

திருவோணத் திருநாளுடன் மங்கலகரமான வரலக்ஷ்மி விரதமும் சேர்ந்து இன்றைய நாள் (28/8) பெருஞ்சிறப்பினை உடையதாகத் திகழ்கின்றது..


அருகில், 

கேரளத்தில் - திருவோணக் கொண்டாட்டங்கள் மிகப் பிரசித்தமானவை.

பரசுராம க்ஷேத்ரம் எனும் கேரளம் - மகாபலியின் ஆளுகைக்குள் இருந்ததாக ஐதீகம்.

மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்த பெருமானுக்கு மூன்றாவது அடியாக தன்னையே தந்தபோது - ஆண்டு தோறும் ஒருநாள் என் மக்களைச் சந்திக்க வரம் அருள வேண்டும்!..  என, வரம் பெற்றதனால் - 


திருஓணத்தின் போது மாவலி சக்ரவர்த்தி பூவுலகுக்கு வருவதாகக் கொண்டு -

அவரை வரவேற்கும் விதமாக ஆவணியின் - அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் - என, பத்து நாள் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


தங்களைக் காண வருகை தரும் சக்ரவர்த்தியை வரவேற்று, வீதிகள் தோறும் இல்லங்கள் தோறும் பல வண்ண மலர்களால் கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகு செய்கின்றனர். 

இல்லங்களில் பெரியவர்கள் அனைவருக்கும் நல்லாசி வழங்குவதுடன்,
ஓண சத்யா எனும் சிறப்பான விருந்து உபசரிப்பிலும் மகிழ்கின்றனர்.. 



ஓணத் திருநாளை முன்னிட்டு கேரளம் முழுதும் சகல திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி நடை திறக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடக்கன்றன..

எல்லாம் சரிதான்!.. 
மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
(கம்பராமாயணம்)

தான் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு - திருமகள் பாதசேவை செய்ய -  மீண்டும் பள்ளி கொண்டாராம் எம்பெருமாள்!..
* * *

இந்த வாமன மூர்த்தியைத் தானே - 

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!.. - என,  கோதை ஆண்டாள் - கொஞ்சு தமிழில் கூறினாள்.
* * *

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு..

அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்!..

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!..
ஓம் ஹரி ஓம் 
* * *

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

இது எந்த வகை..

நண்பனா!.. எதிரியா?..

இதற்கும் அதற்கும் நட்பா!.. பகைமையா?..

எதுவாக இருந்தாலும் சரி..

நண்பனாக இருந்தால் - அன்பும் நட்பும் இனிமையும் தொடரட்டும்!..

இல்லையெனில் -

அன்பின் அர்ப்பணிப்பு - அடிவயிற்றில் ஆனந்தமாக நிறையட்டும்!..







பச்சைப் பாம்பினைப் பற்றிக் கொண்டிருக்கும் தவளை!..

இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவிலுள்ள உயிரியல் பூங்காவில் நிகழ்ந்திருக்கின்றது..

ஃபஹ்மி என்பவர் - இந்த அரிய காட்சிகளைப் படமெடுத்து பகிந்துள்ளார்..

பாம்பைக் கண்டு தவளை பயந்தோடாமல் - பொறுமையாக அதன் மீதே ஏறி - வேறு கிளைக்குத் தாவிச் சென்றதாக -

இந்தப் படங்களை வெளியிட்டுள்ள தினமணி கூறுகின்றது..

இது - தினசரி நிகழ்வாகக் கூட இருக்கலாம்..

புராணங்களிலும் இலக்கியங்களிலும் காட்டப்பெறும் நிறைஅமைதியின் ஒரு கூறாகக் கொள்ளலாம்..

பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் 
பகைவன் கூட நண்பனே!..

- என்றார் கவியரசர்..

பாம்பின் முகத்தில் உக்ரமோ கோபமோ தெரியவில்லை..

தவளையின் முகத்திலும் பயமோ கலக்கமோ தெரியவில்லை..

பசுமை நிறைந்த நினைவுகளுடன், பாடித் திரியும் பறவைகளைப் போல -

இந்தப் பாம்பும் தவளையும் பழகிக் கிடக்கலாம் - என்றே எண்ணுகின்றது மனம்..

அழகிய காட்சியினைப் படங்களாக்கிய - திரு. ஃபஹ்மி அவர்களுக்கு நன்றி..

அவற்றை வெளியிட்டு சிறப்பித்த தினமணிக்கு நன்றி..

நட்பும் நலமும் 
வாழ்க எந்நாளும்!..
* * * 

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

வாரியார் ஸ்வாமிகள்

1906 ஆகஸ்ட் மாதம் இருபத்தைந்தாம் நாள்.,

காங்கேய நல்லூரில் -

மல்லைய தாசர் - கனகவல்லி அம்மையார் எனும் திவ்ய தம்பதியர்க்குத் திருக்குமரனாகத் தோன்றியவர் -

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்..


இயற்பெயர் - கிருபானந்த வாரி - என்பதாகும்..

மூன்றாம் வயதில் எழுத்தறிவு தொடங்கியது..

தந்தையாரே குருவாக இருந்து உபதேசித்தார்..

ஐந்து வயதில் ஏடுகளை வாசிக்கத் தொடங்கிய ஸ்வாமிகள் தமது எட்டாம் வயதில் வெண்பா பாடினார்..

பன்னிரண்டு வயதிற்குள்ளாக - பன்னீராயிரம் திருப்பாடல்களை -
திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் நீதி நூல்களில் இருந்து மனனம் செய்திருந்தார்..

இசையுடன் உபன்யாசங்கள் செய்யத் தொடங்கியபோது ஸ்வாமிகளின் வயது - பத்தொன்பது..

நடமாடும் தமிழ்க்கடலாக விளங்கினார் ஸ்வாமிகள்..


ஆன்மீகத் தென்றலாகத் தவழ்ந்த ஸ்வாமிகளை -
குமார வயலூர் முருகன் ஆட்கொண்டு அருளினன்..

தமிழகத்தில் - பழுதுபட்டிருந்த பலநூறு திருக்கோயில்கள் - ஸ்வாமிகளால் திருப்பணி கண்டு பொலிந்தன..

ஸ்வாமிகள் தங்கள் ஊருக்கு வரமாட்டாரா?.. - என ஏங்கித் தவித்தனர் மக்கள்..

குளிர்ந்த முகத்துடன் - புன்னகை தவழ -
ஸ்வாமிகள் நிகழ்த்திய உபன்யாசங்கள் ஆயிரக்கணக்கில்!..

அவரது அருளுரை கேட்டு நல்வழியில் திரும்பியவர்கள் பல்லாயிரம் பேர்!..

பல ஊர்களிலும் தொடர்சொற்பொழிவுகள் நிகழ்த்தும் போது -

அக்கம் பக்கமுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து -
ஸ்வாமிகள் அருளிய தேனமுதத் தமிழ் விருந்தில் மயங்கிக் கிடந்தனர்.

அன்பு கொண்ட மக்கள் - அருள்மொழி அரசு என்றும் திருமுருக வாரியார் ஸ்வாமிகள் என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது - வடநாட்டிலுள்ள திருத்தலங்களிலும் ஸ்வாமிகள் உபன்யாசங்கள் நிகழ்த்தியுள்ளார்..

இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் பலநாடுகளிலும் பயணம் செய்து ஆன்மீகப் பயிர் வளர்த்தவர் ஸ்வாமிகள்..


இலக்கியப் பேருரைகளின் போது -
சங்க இலக்கியங்கள், திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மற்றுமுள்ள நீதி நூல்களில் இருந்தெல்லாம் மேற்கோள் காட்டி மக்களை நல்வழிப்படுத்திய பெருமை ஸ்வாமிகளுக்கு உண்டு..




ஸ்வாமிகள் வாழுங்காலத்திலேயே -

வயலூர் திருக்கோயிலின் கோபுரத்தில் - ஸ்வாமிகளின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டது..

பலமுறை ஸ்வாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுள்ளேன் என்பது எளியேன் பெற்ற பேறு..

* * *

ஸ்வாமிகள் அருளிய பொன்மொழிகள் பல நூறு..

அவற்றிலிருந்து - சிந்தனைக்குச் சில!..

பால் வாங்கும் போதும் துணி வாங்கும் போதும் அளந்து வாங்குவதைப் போல - யாரிடம் பழகினாலும் அளந்து பழக வேண்டும்..

தீப்பந்தத்தைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல் நோக்கி விளங்குவது போல - உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த எவராலும் இயலாது..

தூய உணவை உண்ணும் போது தூய எண்ணங்கள் உருவாகின்றன. எனவே - சமைக்கும்போது தூய எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்..

பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்தல் கூடாது.. அதேபோல நமது குற்றத்தையும் மறைக்கக் கூடாது..


குடும்பம் பசுமையான மரத்தைப் போன்றது.. 
அதில் மனைவியே வேர்.. கணவன் அடிமரம்.. பிள்ளைகள் கிளைகள்.. 
அன்பு இலைகள்.. கருணை மலர்கள். 
அந்த மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள்... 
 பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஏனைய உயிர்களுக்கும் 
மரங்கள் நிழல் தருவதைப் போல - 
குடும்பத்தால் மற்றவர்களும் பயன்பெற வேண்டும்..

ஸ்வாமிகளின் அவதார நாளாகிய இன்று -
அவரது திருவடிகளைச் சிந்திப்பதில் கொள்வதில் மனம் மகிழ்கின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *  

சனி, ஆகஸ்ட் 22, 2015

வாழ்க சென்னை

பாரதம் எனும் புண்ணிய பூமிக்குள் -

பொருட்களை வாங்கவும் விற்கவும் என நுழைந்த மேலைத் தேசத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் - வெள்ளையர்கள்..

ஏலக்காய், மிளகு, கிராம்பு, சந்தனம், யானைத் தந்தம் - என்ற நினைப்பில் வந்தவர்கள் -

கதவுகளற்ற களஞ்சியத்தைக் கண்டு மலைத்து நின்றனர்!..


உனக்கு எனக்கு - என அவர்களுக்குள்ளேயே - அடிதடி வெட்டு குத்து!..

எல்லாம் இனிதாக நிறைவேறிய பின் -

1639ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் இருபத்திரண்டாம் நாள்!..

அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாற்றில் ஒரு பொன்னாள்..

தென்னகத்தில் ஒரு சிறு நிலப்பகுதியை வாங்கினர்..

கொடுத்தவர் - விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சந்திரகிரி சிற்றரசரின் ஆளுகைக்குட்பட்ட வந்தவாசி வெங்கடாத்ரி நாயக்கர் மற்றும் அவரது சகோதரர்..

பெற்றுக் கொண்டவர்கள் - கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ ஹோகன் ஆகியோர்.

நாடு பிடிப்பதற்கென்று வணிகம் எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடல் வழியே வந்த வெள்ளையர்களுக்கு கடலை ஒட்டியிருந்த அந்த இடம் மிகவும் பிடித்துப் போனது..

தங்கள் கனவு இவ்வளவு விரைவாக நிறைவேறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை..

எனவே அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..

தங்களுக்கான இடத்தில் - தங்கள் வசதிக்கெனவும் வணிகப் பொருட்களைப் பத்திரமாக வைக்கவும் - பாதுகாப்பான அரண் ஒன்றை வடிவமைத்தனர்..

அதற்கான முதல் கல் - 1640 ஆம் ஆண்டு மார்ச் முதல் நாளில் ஊன்றப்பட்டது..

இந்த இடத்தைக் கொடுத்தவர் விதித்திருந்த நிபந்தனையின்படி - அவரது தந்தையின் பெயரே சூட்டப்பட்டது..

அது -

சென்னப்பட்டினம்..

வெங்கடாத்ரி நாயக்கரின் தந்தையின் பெயர் - சென்னப்ப நாயக்கர்..

அவர் நினைவாகவே - அந்தப் பெயர்..

சென்னப்பட்டினம் என்று புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டாலும் -

அதற்கு முன்னரே - திருமயிலை, திருஅல்லிக்கேணி, திருஒற்றியூர், திருவான்மியூர் - எனும் புராதான கிராமங்கள் அங்கிருந்தன..

அவையெல்லாம், பின்னாளில் - சென்னை எனும் மாநகருக்குள் சங்கமமாகி விட்டன..

ஆக -

இன்று சென்னைக்கு 376 வயது..

St. ஜார்ஜ் கோட்டை - 1753


சென்ட்ரல் - 1963
சென்னை - 1688ல் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது..

வெள்ளையர் உருவாக்கிய இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு சென்னையில் அமைந்தது..

சென்னைக்காக போர்ச்சுகீசியர்களும் பிரெஞ்சு நாட்டவரும் அவ்வப்போது ஆங்கிலேயருடன் மோதினர்..

அதற்கெல்லாம் - தனது சாதுரியமான நடவடிக்கைகளால் முற்றுப் புள்ளி வைத்தவன் ராபர்ட் கிளைவ்..

ராபர்ட் கிளைவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தளமாக விளங்கியது சென்னை.

1746ல் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்குள் சென்ற சென்னையை - 1749ல் மீண்டும் கைப்பற்றினர் ஆங்கிலேயர்..

அத்துடன் பிரெஞ்சுக்காரர்களையும் தெற்கே விரட்டி விட்டனர். 

அதன் பின் சென்னை தனித்துவமாக பெரும் வளர்ச்சியைக் கண்டது..





தென்னகத்தின் முதலாவது ரயில் நிலையம் - ராயபுரம்.

பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய நான்கு மாகாணங்களுள் சென்னையும் ஒன்று..

தென்னகத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தில் சென்னையின் பங்கு மிக மிகச் சிறப்பானது..

சென்னைப்பட்டினம் என்பது சென்னை என விகாரமாகச் சுருங்கியது. 

ஊடாக - ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றே எழுதப்பட்டது..

இதைக் கொண்டே - பாரதத்தின் வடக்கு -
செந்தமிழர்களை மதராஸி என்று அடையாளம் காட்டுகின்றது..

இங்கே வளைகுடா பகுதிகளில், கேரளத்தவர் - நம் முதுகுக்குப் பின்னே - பாண்டி என்று பரிகசிப்பதைப் போலவே, 

பல் விளக்காத வடக்கத்திய பன்னாடைகள் - மதராஸி என -  தமிழர்களைக் குறிப்பிடுகின்றன.. 

இந்த அவலம் இன்னமும் தொடர்வதில் வருத்தம்தான் மேலிடுகின்றது..

இந்த மெட்ராஸ் என்பதற்கு முத்துராசா என்றொரு அடை மொழியைக் குறிப்பிடுவாரும் உண்டு..

மதராஸாக்கள் இருந்ததனால் மதராஸ் என்பாரும் உண்டு.. 

அப்படியானால் ஏனைய பகுதிகளில் மதராஸாக்கள் இருக்கவில்லையா?.. - என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது..

ஆகவே - அவரவர் நோக்கில் ஆனை என்பதாக ஆகிவிட்டது..


மயிலாப்பூர் 1970
திருவல்லிக்கேணி 1981
1996 முதல் சென்னை என்றே ஆங்கிலத்திலும் குறிக்க வேண்டும் என்பது அரசு உத்தரவாகியது..

வரலாற்றறிஞர் தாலமி காலத்தில் - மயிலார்ப.. எனக் குறிக்கப்பட்டது - இன்றைய மயிலாப்பூர்..

இன்றும் சென்னை சர்வதேச துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கி வருகின்றது..


உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை உடையது சென்னை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பர்.. அதிலும் குறிப்பாக -

இந்த காலகட்டத்தில் - சென்னை என்பதில் வியப்பு ஏதும் இல்லை..

அதன்படி - சென்னைப் பெருநகரில் - தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத், வங்கம், பஞ்சாப் - மாநிலங்களின் மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர்..

சென்னைக்காக - அண்டை மாநிலமான ஆந்திரா போர்க்கொடியுடன் போராடிய நாட்களும் மறக்க இயலாதவை..





இன்றைய சென்னைப் பெருநகர் - சிறப்பான போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளுடன் - அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக விளங்குகின்றது..

ஆனால் - இன்றும் குடிநீர் பிரச்னையாகவே உள்ளது..

ஆண்டு தோறும் - பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும் - 
சென்னையைத் தேடி - திரண்டு வந்து குடியேறும் மக்களால் 
வயல் வெளிகளும் குளங்களும் ஏரிகளும் காணாமல் போயின..

சிறப்பித்துச் சொல்லக் கூடிய செய்திகள் நிறைய இருப்பதைப் போலவே -

வருத்தத்திற்குரிய செய்திகளும் நிறையவே உள்ளன..

அவைகளை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே -

வைக்கலாலே கன்னுக்குட்டி!.. மாடு எப்ப போட்டது?..
கக்கத்தில தூக்கி வைத்தும் கத்தலையே!.. என்னது?..

- என்று வைக்கோல் கன்றினைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவியரசர் தனது ஆதங்கத்தை திரைப்பாடலில் கொட்டியிருப்பார்..

நான் முதன்முதலில் சென்னையைக் கண்டது - 1981 ஜூலை மாதத்தில்!..




மாநிலத்தின் பிற பகுதி மக்கள் பலருக்கும் - சென்னையைப் பற்றி தனிப்பட்ட வகையில் ஏதாவதொரு குறை இருக்கும்..

பொதுவாகச் சொல்வது - ஏமாற்றி விடுவார்கள்!.. - என்று..

பலமுறை சென்னைக்கு வந்திருக்கின்றேன்..

அப்படி ஏதும் எனக்கு நேர்ந்தது இல்லை..

ஆனாலும் செய்தி ஊடகங்களில் இன்று வரை காண்பதும் கேட்பதும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவைகளாகத் தான் இருக்கின்றன..

சென்னையின் ஏரி குளங்களைத் திருடிச் சென்றவர்கள் யாராக இருக்கும்?..

அதற்கெல்லாம் - மறுபக்கங்கள் இருக்கின்றன.. 

விவாதித்து அறிய வேண்டாமல் வெளிப்படையாகவே விளங்குகின்றன..

புராதன தமிழகத்தின் - இன்றைய சிறப்புறு தலைநகராக விளங்குவது சென்னை!..

சென்னை - பொல்லாங்குகள் நீங்கிய புத்துருவம் பெறவேண்டும்!..

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக சீர்பெற்றுத் திகழ வேண்டும்..
மக்களும் அதற்கான வழிதனில் நடக்க வேண்டும்!..

வாழ்க சென்னை!..
* * *