நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 28, 2019

நமோ நாராயணாய 2

பொழுது விடியும் நேரம்.. ப்ரம்ஹ முகூர்த்தம்...

என்றும் பதினாறாகத் திகழும் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் ஆஸ்ரமம்...


மகரிஷி நித்ய கர்மானுஷ்டானங்களுடன் சிந்தையை ஒருமுகப்படுத்தி தியானத்திலிருந்தார். மங்கலகரமான சகுனங்கள் தென்பட்டன...

தியானத்திலிருந்து மீண்டு கரங்கூப்பி வணங்கியவராக -
நிகழ இருப்பது யாது!?.. என சிந்தித்தபடி எழுந்தார்...

சற்று தொலைவில் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்தாள் -
அன்புக்கு உரிய நில மாமகள்!..

அவளுடன் - குயில்களும் குருவிகளும் மான்களும் மயில்களும் அன்னங்களும் அன்றில்களும் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்க -

நந்தவனத்தில் அங்குமிங்குமாக வண்ணத்துப் பூச்சிகளும்
தும்பிகளும் அலைந்து கொண்டிருந்தன.

சற்றைக்கெல்லாம் - சூர்யோதயம்... பொழுது புலர்ந்தது...

செங்கதிர்ச் செல்வன் உதித்தெழுந்தான்... 

கீழ்த்திசையைக் கவனித்துக் கொண்டிருந்த முனிவர் - ஆங்கே மற்றோர் சூர்யோதயத்தையும் கண்டார். விந்தையிலும் விந்தை... 

செந்நிற வானத்திலிருந்து செங்கதிர்ச் செல்வன் இறங்கி வந்தாற்போல - விவரிக்க இயலாத வண்ணம் பேரழகு கொண்டவராக ஒரு துறவி.

தனது ஆஸ்ரமத்தினை நோக்கி வருவதைக் கண்டு அதிசயித்தார்.

ஆனாலும் நடுத்தர வயதை வெகு நாட்களுக்கு முன்னரே கடந்ததைப் போன்றதொரு தோற்றம்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடிக்கு தேஜஸ்!.. யாராக இருக்கக் கூடும்!?..

காலங்களைக் கடந்து வாழும் சிரஞ்சீவியான மார்க்கண்டேயர்
- ஒரு கணம் திகைத்து உள்முகமாகத் தியானித்தார்.

இதய கமலத்தில் வந்திருப்பது யாரெனத் தெரிந்தது.


காலங்களைக் கடந்த காரணன்!.. பரிபூரணன்!.. அவனே நாரணன்!..
- எனக் கண்டுணர்ந்து மெய் சிலிர்த்தார்.

ஓ!.. உரியதைத் தேடி உரிமையுடன் வந்திருக்கின்றான் - உடையவன்!.. இன்றைக்கு என்ன திருவிளையாடலோ!.. ஆகட்டும்.. ஸ்வாமி.. ஆகட்டும்!.. அலகிலா விளையாட்டுடையவர் தாங்கள்!..
உமக்கே என்றும் நாங்கள் அடைக்கலம்!..
- என்று சிந்தை செய்தவாறு எழுந்து நின்று வரவேற்றார்.

வரவேண்டும்.. வரவேண்டும்!.. தங்கள் வருகையினால் ஏழையின் குடில் விளங்கிற்று!..

- என்று கைகூப்பி முகமன் கூறினார் மார்க்கண்டேயர்.

ஆசனம் அளித்தார். அன்பு ததும்பும் முகத்துடன் அருகிருந்து உபசரித்தார்.

கதிர் மதியம் போல் திருமுகமும்
கண் நிறைந்த புன்னகையுமாகத் திகழ்ந்த துறவி -

நீரும் அருகில் அமரும் !..  - என்றார்.

நேச விசாரணைகளுக்குப் பிறகு - 

ஸ்வாமி.. வயதான காலத்தில் ஏன் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு!?.. ஓரிடத்தில் தாம் ஓய்வெடுத்து இருக்கலாகாதா?..
- என்றார் மார்க்கண்டேயர்.

நின்றும் இருந்தும் கிடந்தும் பார்த்து விட்டேன்... அவரவர்க்கும் ஆயிரமாயிரம் பிரச்னைகள். அத்தனைக்கும் நான் தான் நடந்து தீர்க்க வேண்டியதாக இருக்கின்றது. நிம்மதியாக இருக்க யார் விடுகின்றார்கள்?.. 

ஊரெல்லாம் நெருக்கியடித்துக் கொண்டிருக்க உனக்கென்ன நித்திரை என்று ஒருவர் வந்து உதைத்தார். அன்றைக்கு வந்தது வினை.. அஷ்ட லக்ஷ்மி என்பார்கள். அதனுடன் ஒன்று அதிகமாக நவநிதி என்று அருகிருந்தும் எல்லாம் எனை விட்டுப் போயின. ஏழையாகி நின்றேன். 

புற்றுக்குள் ஒடுங்கிக் கிடந்தேன். கல் கொண்டு எறிந்தான் ஒருவன். மாதரசி ஒருத்தி வந்து மருந்திட்டாள். அதன் பின்னும் ஒருவன் நாடியில் அடிக்க - இன்று வரை அது அடையாளமாகி விட்டது. அன்று வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி!.. முடியவில்லை ஐயா.. முடியவில்லை!..
தலைக்கு மேல் வெள்ளம் என்பார்களே!..

அது சிவபெருமானுக்கு அல்லவா!.. - மார்க்கண்டேயர் குறுக்கிட்டார்.

இருக்கட்டுமே!. கடைசியில் அவருக்குக் கிடைத்ததென்ன?.
கடலில் விளைந்த நஞ்சு தானே!.. அதைப் போலத்தான் நமக்கும்!..
வட்டிக்கு வாங்கி வைபவம் செய்தேன்... ஆனாலும்
வாசற்படிக்கு இந்தப் பக்கம் உடைந்த சட்டியில் தான் தயிர் சோறு!..

அடடா.. மிகவும் கஷ்டந்தான்!.. உமக்கு காலாகாலத்தில்
கல்யாணம் குடும்பம் என்று ஆகியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?..
- மார்க்கண்டேயர் மிகவும் வருத்தப்பட்டார்.

அடித்து விளையாடி வீரம் காட்டி நின்றாலும் கடைசியில் கிடைத்தது கானக வாசம் தான்!.. அது கிடக்கட்டும். இவ்விடம் உமக்கு நல்ல யோகம் போல.. மனைவி மக்களோடு சுகமான ஆஸ்ரமவாசி!..

ஸ்வாமி!.. அடியேன் ப்ரம்மச்சாரி!..
அங்கே விளையாடுபவள் என் வளர்ப்பு மகள்!..

அப்படியா!?.. - ஆதி மூலன் அதிசயித்தான்...
அவனிடமே கதை சொன்னார் மார்க்கண்டேயர்..


அவள் - எனது நந்தவனத்தில் கிடைத்தவள். நில மாமகள் எனப் பெயர்..
துளசிச் செடிகளுக்கிடையே  கிடந்ததனால் துளசி என்று செல்லம்.. 

ஒரு சமயம் கோளரி மாதவனைக் கும்பிட்டு நின்றபோது -
உனது மணக்கோலம் காண வேண்டும் என வேண்டிக் கொண்டேன்...
கார்முகில் வண்ணனும்  - காலம் கனியும் காத்திரு!.. என்றான். 

ஆயிற்று பல காலம். அதன் பின் இந்தப் பெண் கிடைத்தாள்...
இவளது அவதார நட்க்ஷத்திரத்தைக் கணித்த போது -
இவளைக் கைப்பிடிக்க - கைத்தடியுடன் மாதவப் பெரியவர் ஒருவர் வருவார்.. அவரையே - இவள் மணமுடிப்பாள்!.. - என்று தெரிந்தது. 

ஆயினும் ஸ்வாமி.. வயதான ஒருவருக்கு - கிழவருக்கு -
இந்த இளங்கன்னியை எப்படி மணம் முடித்துக் கொடுப்பது?..
நீங்களே இதற்கொரு நியாயம் கூறுங்கள்!..

நியாயந்தானே!.. எங்கே உங்கள் மகளை வரச்சொல்லுங்கள்!..
நான் அவள் முகலட்சணம் எப்படி என்று பார்க்கின்றேன்!..

முக லட்சணமா!?.. பிற ஆடவர் முன் அவள் வருவதில்லையே!..

இருக்கலாம் .. ஆனாலும், இந்தக் காலத்தில் நல்ல மணவாளன் கிடைத்தால் - உடன் முடித்து விடவேண்டியது தான். கலியுகம் கெட்டுக் கிடக்கின்றது!.. ஏன்.. என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் நல்லமணவாளன் இல்லையா!.

நல்ல மணவாளனா?.. நீரா!.. அது சரி!..
அழகிய மணவாளன் தான்!.. ஆனாலும் நீர் பழுத்த பழம் ஆயிற்றே!.. 

- மார்க்கண்டேயர் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

பழுத்த பழம்!.. காலங்களை வென்ற கனி!..
அக்காரக்கனி ஆயிற்றே நான்!.. அறியீரோ நீர்!..

ஏதேது.. விட்டால் - உம் பெண்ணைக் கொடு!..
-  என்று என்னைக் கேட்பீர் போலிருக்கின்றதே!..

கேட்பதேது!.. மார்க்கண்டேயனின் மகளை மணமுடிக்க வேண்டும் என்று - விருப்புற்றுத் தானே  இவ்விடம் யான் வந்தேன்!..

அவள் சிறியவள்!..

இல்லை.. அவள் இனியவள்!..

அவள் உலகம் அறியாதவள் - ஸ்வாமி!..

என் உலகமே அவள் தான் - ஐயா!..

அவளுக்கு ஒழுங்காக சமைக்கக் கூடத் தெரியாது!..

தெரிந்தவரைக்கும் அவள் சமைக்கட்டும்..
தேவையெனில் நான் உதவுகிறேன்..

அவள் வரகு எடுத்து கஞ்சி வைக்க முனைந்தால்
நான் வழுதுணங்காய் வதக்கித் தருகிறேன்!...

அவள் எள்ளோதரை செய்ய முயன்றால்
நான் எள் உதிர்த்துத் தருகிறேன்!..

காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டதல்லவோ இன்பம்!..
இதெல்லாம் உமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!..
நீர் தான் முற்றும் துறந்தவராயிற்றே!..

பெரியீர் பேசுவதெல்லாம் சரிதான்!.. 
தெரிந்தவரைக்கும் சமைக்கட்டும் என்று தாங்கள் இதமாகச் சொன்னாலும்  -  உலைப் பானைக்குள் உப்பு போடக்கூடத் தெரியாது அவளுக்கு!..
ஆகையால் இதெல்லாம் சரிப்பட்டு வராது!.. விட்டு விடும்!..

விட்டு விடுவதா?.. அதெல்லாம் முடியாது!.. உமது மகள் உப்பு போடாமல் சமைத்தாலும் அதுவே எமக்கு உகப்பு!.. அதுவும் நல்லது தான் பாருங்கள்.. வயதான காலத்தில் உப்பு சர்க்கரை எல்லாம் குறைக்கச் சொல்லும் போது
உப்பு போடத் தெரியாததெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை!.. நீர் பெண்ணை வரச்சொல்லும்!..

இன்றைக்கு இப்படிச் சொல்வீர்.. நாளைக்கு இவள் ஒரு பாரம் என்று -
நீர் நினைத்து விட்டால்?..

பார்த்தீரா!.. மறுபடியும் நழுவுகின்றீர்.. அவளை என் மூக்கு நுனியில் வைத்துத் தாங்கியிருக்கின்றேன் தெரியுமா!.. இனியும் அவளை விட்டுப் பிரியாமல் நெஞ்சில் வைத்துத் தாங்குவேன்... நீர் பெண்ணை வரச்சொல்லும்!..

இதென்ன பிரச்னையாகி விட்டது!?..
ஐயா.. கடுங்கிழவர் உமது வயதெங்கே?..
இளங்கன்னி அவளுடைய வயதெங்கே?..

- மார்க்கண்டேயர் பிடி கொடுக்கவில்லை

எல்லாம் ஆயிற்று. இப்போது வயது உமக்கொரு பிரச்னையா!..
நான் தோன்றியபோதே தானும் தோன்றியவள்.. இயற்கை எனும் இளைய கன்னி!.. எனக்கெனப் பிறந்தவள்.. இறக்கை கட்டித் திரிந்தவள்!.. அவளே தான் இவள்!.. இவளே தான் அவள்!... நீர் முதலில் பெண்ணை வரச்சொல்லும்!..

பெரியீர்.. இந்த வயதிலும் உமக்கு எல்லாம் சந்தோஷந்தான்.. சங்கீதம் தான்!.. ஆனாலும் என் பெண் என்ன சொல்வாளோ - என்று எனக்கு கலக்கமாக இருக்கின்றது.. நரை திரை காஷாயம் - இப்படியொரு மணவாளனையா எனக்குப் பார்த்தீர்கள்.. தந்தையே!.. -  என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் கூறுவேன்!.. வாரணம் ஆயிரம் சூழ வலம் வருவான் என்று அவள் கனவு கண்டிருக்கக் கூடுமல்லவா!..

மார்க்கண்டேயரே.. பெண்ணைக் கண்ணில் காட்ட மறுக்கின்றீர்..
நீராகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்.. நீர் பெற்ற மகளாக இருந்து
அவளுக்கு ஒரு நல்லநேரம் நெருங்கி வரும்போது இப்படித் தான் கூறுவீரோ!?..

நான் பெற்ற மகள் எனில் நிச்சயம் இவ்வாறு கூற மாட்டேன்!..
இவளோ எனது வளர்ப்பு மகள்!.. 
பாச மலரே.. அன்பில் விளைந்த வாச மலரே!.. என்று
வாஞ்சையுடன் வளர்த்திருக்கிறேன்..

நந்தவனத்தில் எடுத்தான்.. வளர்த்தான்.. நாள் வந்ததும்
நரைகண்ட கிழவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்..
இவன் பெற்ற பெண்ணாக இருந்தால் செய்வானோ இவ்விதம்!.. 
- என்று பிறர் சொல்லும் சொல்லுக்கு இடம் தரமாட்டேன்!.

கோலக் குமரனுக்கு அன்றி
கோலூன்றும் கிழவனுக்கு என் மகளைத் தரவே மாட்டேன்!..
இதை நானென்ன சொல்வது என் மகளே சொல்வாள்!.. துளசி.. மகளே!..  

- என்று மார்க்கண்டேயர் அழைக்கவும்,

என்னைக் கண்ட பிறகுமா - இப்படிக் கூறுவீர்!..
- என்று மாயவன் புன்னகை பூக்கவும்,

அப்பா.. அழைத்தீர்களா!..
- என்று நிலமாமகள் ஓடி வரவும் சரியாக இருந்தது.

ஆயிரங்கோடி சூரியன் போல -
அனந்தன் ஆராஅமுதன் அருட்கோலம் காட்டி நிற்க -
நில மாமகள்  - தன் மணாளனைக் கண்ட மாத்திரத்தில் கண் சிவந்து நின்றாள்..


கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகி வழிந்தது - மார்க்கண்டேயருக்கு!..

பரம்பொருளே!.. இந்தத் திருக் கோலத்தினை காண்பதற்குத் தானே - இத்தனை காலம் காத்துக் கிடந்தேன்.. உனது வாத்ஸல்யம் அறிய வேண்டி அல்லவோ உன்னுடன் வாதம் செய்தேன்.. குறை பொறுத்தருள்க பெருமானே!....

நிலமாமகளின் கைத்தலம் பற்றி கல்யாணத் திருக்கோலம் காட்டியருளல் வேண்டும்!..

மகரிஷி!.. தாம் எமது அன்புக்குரிய மாமனார் அல்லவா!.. தம்முடன் சற்று விளையாட  நானும் ஆவல் கொண்டேன்!.. வருந்தற்க!.. முன்பு ஒரு சமயம் பூமாதேவி தானும் எமது திருமார்பினில் வாசம் செய்யும் வரம் கேட்டாள். அதன்படி - எனது மணக்கோலத்தினைத் தரிசிக்க விரும்பி நின்ற உமக்கு மகளாகத் தோன்றி வளர்ந்தாள். காலம் கனிந்தது. உமக்கு நல்லருள் புரியவே வந்தோம்!..

ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒளிவளர் விளக்கே!.. ஒப்பிலியப்பா!.. போற்றி!.. நின் மனையாளை நின் கரத்திலே கொடுத்தேன்!.. தாயே!.. பூமாதேவி!.. வாராது வந்த வைடூரியமே!.. மகளாய் வந்த மாணிக்கமே!.. மனம் கொண்டு நின்ற மரகதமே!.. தந்தையென்று தருக்குற்று இருந்தாலும் என்னைத் தள்ளத் தகாது தங்கமே!..

புன்னகைத்தாள் பூமாதேவி!..

அன்பினுக்கு இலக்கணம் என் தந்தை!.. தமக்கு ஏது குறை!.. அன்பும் தர்மமும் தழைத்திருந்த இந்த தலத்தில் பெருமானைக் கண்டு இன்புறும் எவர்க்கும் ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் மிகுத்து ஓங்கும்!.. மேன்மையுற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வர்!.. தாம் மனம் களிக்கும்படி ஸ்வாமியும் நானும் எக்காலமும் இங்கேயே விளங்குவோம்!.. மங்கலம் உண்டாகட்டும்!..

- என வரமழை பொழிந்தாள்..

ஐப்பசி மாதம் திரு ஓண நன்நாளில் - பெருமானுக்கு பூமாதேவியை கன்யா தானம் செய்து கொடுத்து - மங்காப்புகழ் கொண்டார் மார்க்கண்டேய மகரிஷி!..

உப்பிலா அமுதும் உவப்பு!.. என வந்த அமுதன் ஒப்பிலியப்பனாக நின்றான்.

ஆராஅமுதனை ஆரத் தழுவி அவன் திருமார்பினில்  பொருந்திய பூமாதேவி - எங்கும் துளசி எனப் பொலிந்து  வளர்ந்தாள். 

நாளும் பொழுதும் புண்ணியனின் திருமார்பு அகலாத திருத்துழாய் எனப் பேருவகை கொண்டாள் பூமாதேவி!.. 

உலகமும் ஆனந்தக் களி கொண்டது!.. 

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை
 சீர் மல்கு ஒப்பிலியப்பன் தரிசனம்.


திருத்தலம் - திருவிண்ணகரம்
(ஒப்பிலியப்பன் திருக்கோயில்)

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங்கு உறைவார்க்குக் கோயில் போல் வண்டு 
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். (2342)
-: பேயாழ்வார் :-

மூல மூர்த்தி - ஸ்ரீஒப்பிலியப்பன்
தாயார் - ஸ்ரீபூமாதேவி
தலவிருட்சம் - துளசி
தீர்த்தம் - அஹோராத்ர தீர்த்தம் 
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

விமானம் - சுத்தானந்த விமானம்.
ப்ரத்யட்க்ஷம் - மார்க்கண்டேயர், கருடன், காவேரி..
மங்களாசாசனம் - பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்...

தலப்பெருமை.

திருப்பாற்கடல் கிடந்த பெருமான் - ஸ்ரீ பூமாதேவியை அவள் விருப்பப்படி - திருத்துழாய் என ஏற்றுக் கொண்ட திருத்தலம்... 

உப்பிடுவதற்கு அறியாள் எனினும் உகந்தவள் எனக்கு!.. என்று அணைந்த திருத்தலம்.. பெருமாள் உப்பில்லா நிவேத்யம் கண்டருளும் திருத்தலம்... 

மார்க்கண்டேய மகரிஷிக்கு மணவாளத் திருக்கோலம் காட்டியருளிய திருத்தலம்... 

மூலஸ்தானத்தில் பெருமானின் வலப்புறம் ஸ்ரீ பூமாதேவியும்
இடப்புறம் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியும் விளங்குகின்றனர்...


கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில்
ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயிலுக்கு வெகு அருகாமையில்
ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.


நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமானென்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே..(3473)
-: நம்மாழ்வார் :-

ஓம்
ஹரி ஓம்
நமோ நாராயணாய
* * *

சனி, செப்டம்பர் 21, 2019

நமோ நாராயணாய 1

நவகோள்களில் ஒன்றான - புதனுக்கு அதிபதி ஸ்ரீமன்நாராயணன்!..

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமேனி வண்ணம் - பச்சை..

பெருமானின் திருமேனி நீல நிறம் - எனக் குறிக்கப்பட்டாலும் ,
ஆழ்வார்கள் கண்டு ஆராதித்தது - பச்சை வண்ணமாகவும் .. என்பது திருக்குறிப்பு..

பச்சை மாமலைபோல் மேனி!.. - என்று ஆழ்வார் அகமகிழ்ன்றார்..

தூரத்துப் பச்சையும் நீலமும் கருப்பும் - ஒரே நிலையில் பொலிபவை.. 

புதனுக்கு உகந்த நிறமும் - பச்சை..

புதனின் வீடு - கன்னி!..

இந்த கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பது புரட்டாசி மாதத்தில்...

அதனாலேயே - புரட்டாசி மாதம் தனியானதொரு மகத்துவம் பெறுகின்றது.

புரட்டாசியின் - புதன் கிழமைகளும் சனிக் கிழமைகளும் -
ஸ்ரீமந்நாராயணனை - ஏக மூர்த்தியாகக் கொண்டு தொழுவோர்க்கு உகந்தவை..


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும்நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்றதாயினுமாயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்..
(956) 
-: திருமங்கையாழ்வார் :-

இத்தகைய புண்ணிய புரட்டாசி
இவ்வருடம் கடந்த புதன்கிழமை பிறந்திருக்கின்றது..

பாரம்பர்யமான பழக்கவழக்கமுடையோர் -
புரட்டாசி முழுதும் திருவேங்கடமுடையவனை நினைந்து விரதங்களை ஏற்பர்..

அதிலும் மாதத்தின் சனிக்கிழமைகளில் விசேஷமாக இருக்கும்..

பெரும்பாலும் மூன்றாவது அல்லது கடைசி சனிக்கிழமைகளில் பக்திப் பரவசத்துடன் நாம பாராயணம் செய்து பெரிய அளவில் தளிகையிட்டு பெருமாளைச் சரணடைந்து நிற்பர்...

ஸ்ரீபத்மாவதித் தாயார்
புரட்டாசி விரதமேற்கும் அனைவருமே -
பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தங்களது தகுதிக்கு ஏற்ப
தளிகையிட்டு வேங்கடேசப் பெருமாளைத் துதிப்பர்..

இந்த மாதம் முழுதுமே -
இல்லார்க்கும் எளியார்க்கும் உதவுதலே நோக்கம்...
யாரும் பசித்திருக்கப் பார்த்திருக்க மாட்டார்கள்...

அன்னமிடல் - எனும் அறச்செயலைக் கைவிடாது காப்பர்..

நாம் கைவிடாத அறச்செயலானது நம்மையும் கைவிடாது!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

புரட்டாசி மாதம் முழுதுமே திருவேங்கடத்தில் விசேஷம் தான்..


குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்
நிலந்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே..(1031)
-: திருமங்கையாழ்வார் :-



கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கடமாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-


நீரார்க்கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே.. (1040)
-: திருமங்கையாழ்வார் :-


மஹாளய புண்ய காலத்தில் புரட்டாசி மாத அமாவாசை வரையிலும்
இயன்ற அளவுக்கு தான தர்மங்கள் செய்வது ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஐதீகம்...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

அற்றார் அழிபசி காண்பான் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.. (0226)

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..
வாழ்க வளம் வளர்க நலம்!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

வியாழன், செப்டம்பர் 19, 2019

அழகு.. அழகு.. 8

அழகெல்லாம் அணில்களே!..

அணிலையும் அதன் ஆட்டத்தையும் ஓட்டத்தையும்
ரசிப்பது அலாதியான சுகம்... சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை..

தோட்டங்களில் பூனையையோ பாம்பையோ கண்டு விட்டால்
பெரும் பதற்றத்துக்குள்ளாகி மற்ற சிற்றுயிர்களுக்கு எச்சரிக்கை
செய்வதில் வல்லவை....

அணில்களோடு இன்றைய பதிவு...

சீக்கிரமா வேற கட்சிக்குத் தாவிடணும்!.. 
இதோ... தாவப் போறேன்!... ஏன்னா...
தலை கீழாத் தொங்குனாலும் இந்தக் கட்சியில
தலைவர் பதவி மட்டும் கிடைக்காதாம்!...
 
நீ அந்தப் பக்கம்!.. 
நான் இந்தப் பக்கம்!..
என் மரம்.. என்காடு.. ன்னு
நாங்க மட்டும் சொல்லக் கூடாதாம்!..
மரத்தை எல்லாம் வெட்டிட்டா
ஏழை பாழைங்க எங்கே போய் இருக்கிறது?..
ஒரே காடு.. ஒரே கார்டு.. அதெல்லாம் இல்லையா?.. 
ஆதார் கார்டுல மூஞ்சி வேற மாதிரி இருக்குதாமா!.. 
அடே... அது ஐயாவோட கேமரா.. ஒன்னும் பண்ணிடாதே!.. 
என்னது!.. புதன் கிழமையானா கேள்வி கேக்கணுமா?...
கொஞ்சமா சிரிக்கணும்..ன்னு சொன்னாங்க!.. 
புறப்பட்டுட்டீங்களா!.. சரி.. மறுபடியும் வாங்க!..
அணிற்பிள்ளைகளை அழகாகப்
படம் பிடித்து வலையேற்றிய 
கலைஞர்களுக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..

படங்கள் FB ல் வந்தவை..

அழகு.. அழகு.. 7 முந்தைய பதிவின்
இணைப்பு - இங்கே!..

எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
அழகே அழகு..

வாழ்க நலம் 
ஃஃஃ

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

கொடை விழா

கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில்
இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்...

வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு
திருக்கோயில் வளாகம் வண்ண விளக்குகளுடன் ஜகஜோதியாக இருந்தது..


நாகஸ்வர மேளங்களும் செண்டை வாத்தியங்களும் முழங்கிக் கொண்டிருந்தன...

கோயிலின் முன்புறத்தில் கணியான் கூத்து நடந்து கொண்டிருந்தது..


இரவு ஒன்பது மணியளவில் உவரியின் குடியிருப்புகளிலிருந்து
மஞ்சள் பெட்டி சீர்வரிசைகள் வாண வேடிக்கை களேபரத்துடன் வரத் தொடங்கின...

பத்து வயதுடைய சிறுமிகளின் மீது அருள் கொண்டு இறங்கி
அன்னை பேச்சியம்மன் ஆடிக் களித்தாள்...

நள்ளிரவில் மகா தீப ஆராதனையுடன் சாமி வரவழைத்து
பூங்கரகம் எடுத்தனர்...

ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்கு இரண்டு பூங்கரகங்கள்..
ஸ்ரீ பேச்சியம்மனுக்கு அக்னிக் கொப்பரை...

ஆக இரண்டு குருக்கள் பூங்கரகங்களையும்
மற்றொருவர் அக்னிக் கொப்பரையையும் எடுத்துக் கொள்ள
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனும் ஸ்ரீ பேச்சியம்மனும் ஊர் சுற்றி வந்தனர்..

ஸ்ரீ மாடசாமி ஆவேசம் வந்து இறங்கி பந்தம் எடுத்துக் கொண்டு
திருக்கோயிலைச் சுற்றி வருவதுடன் சரி...

திருக்கோயில் எல்லையைத் தாண்டுவதில்லை...

கொடை விழாவில் எடுக்கப்பட்ட ஒருசில படங்கள்
இன்றைய பதிவில்!...









ஸ்ரீ மாடஸ்வாமி - ஸ்ரீ பேச்சியம்மன் - ஸ்ரீ இசக்கியம்மன் 
ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் 
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் 



விடியல் மூன்று மணியளவில்
ஊர்வலம் சென்ற சாமிகள் கோயிலுக்குத் திரும்பின...

எங்கள் தலைக்கட்டுக்கு உரிய குருக்கள் தான்
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்குப் பூங்கரகம் எடுத்தவர்...

கோயிலில் காத்துக் கிடந்த எங்களை அழைத்து
மாலையிட்டு திருநீறு பூசி நல்வாக்கு சொல்லியது சாமி..

அடுத்த சிறிது நேரத்தில் கல்யாண விருந்து போன்ற
படைப்புச்சோறு பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது..

புதன் கிழமை காலையில் குளித்து விட்டு மீண்டும் தரிசனம் செய்து
பழ வகைகளுடன் புது வஸ்திரம் சமர்ப்பித்தோம்...

திருநீறு சந்தனப் பிரசாதங்களுடன் பொங்கலும் வழங்கினார்கள்...


மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு
திசையன்விளை வழியாக நெல்லைக்குச் சென்று,

அங்கிருந்து Intercity Express ல் பயணித்து
இரவு எட்டு மணியளவில் திருச்சியை அடைந்து
9:30 மணிக்கு பாசஞ்சர் வழி வீட்டுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்தோம்...

மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டு
மீண்டும் திருச்சிக்குச் சென்று அங்கிருந்து Vaigai Super Fast மூலமாக சென்னைக்கு வந்து மும்பை வழியே வெள்ளிக்கிழமை (30/8) காலையில் குவைத்துக்கு நலமுடன் திரும்பினேன்...

மலை போல வந்த துன்பம்
பனி போல நீங்கியது..
அனைத்திற்கும் அவனே சாட்சி...
அவன் தாள் வணங்குதற்கு
அவனே அருள் செய்தான்..

வாழ்க நலம்..
ஃஃஃ