நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 30, 2025

அட்சயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
புதன்கிழமை

அட்சய திருதியை
நல்வாழ்த்துகள்


செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
    செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
    செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய 
    செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-


இந்நாளில் குறைந்த பட்சமாக பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உதவுவோம்..


பொன்னும்  பொருளும் இறையருளால்  குவியும்...

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஏப்ரல் 29, 2025

நுங்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை


பனம்பழம்..

நுங்கு பனம்பழத்தின் மற்றொரு பெயர்.
இயற்கையின் அருகொடைகளுள் ஒன்று.. 

தேவாரத்தில் பனம்பழம் என்றே பயின்று வருகின்றது..

நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது...

வெயிலால் ஏற்படும் வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற தோல் நோய்களுக்கு நுங்கு மிகச்சிறந்த நிவாரணம்... 

நுங்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. 

நுங்கின் துவர்ப்பான தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, எனவே தோலுடன் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது. 

பதநீரைப் போலவே எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...

ஒரு பழம் என்பது மூன்று பழங்களின் கூட்டமைவு.. ஒரு பூத்திரள் கனி வகையைச் சேர்ந்தது.. 

பனம்பழம் முற்றி இறுகியதும் அதனுள்ளிருந்து புதிய கன்று முளை வருகின்றது..

புதிய கன்று பனங்கிழங்கு எனப்படுகின்றது..


பதநீர்,  நுங்கினைப் போலவே    பனங்கிழங்கும் எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...

இந்த வருடம் திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் பனங்கிழங்கு மாவு விற்கக் கண்டோம்... 

நெல்லை சந்திப்பில் இருந்த பனைப் பொருள் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையத்தில் ஒன்று மட்டும் வாங்கினோம்.. நன்றாகவே இருக்கின்றது..

திருப்பனந்தாள் திருப்பனையூர்
மேலப்பெரும்பள்ளம்
 இன்னும் சில, சிவ ஆலயங்களின் தல விருட்சம் - பனை..

இங்கே சிறை காத்த ஐயனார் கோயிலில் பனையடி வீரனார்...

மதுரைக்குச் செல்லும் வழியில் பொற்பனையான் சாமி

தெற்கே பனையடி மாடசாமி., பனையடி கருப்பசாமி என்றெல்லாம் 
மக்களின்  காவல் தெய்வங்கள்...

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், ஏப்ரல் 28, 2025

பதநீர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை


அன்பின் ஸ்ரீராம் அவர்களது விருப்பத்திற்காக பதநீர் நுங்கு பற்றிய பதிவுகள்..

பதநீர் என்பது பனையின் பூம்பாளை நுனியை பதமாக சீவி விட்டால் அதிலிருந்து வடிகின்ற இனிப்புச் சுவையுடைய நீராகும்..

மாலைப் பொழுதில் பூம்பாளையை சீவித் தட்டி விட்டு மெலிதாக  சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தைக் கட்டி விட்டு
இரவு நேரத்தில்
 கலயத்தில் சேகரமாகின்ற நீரை விடியற்காலையில் வடித்தெடுத்து சூரிய உதயத்திற்கு முன்பாக அருந்த வேண்டும்...

இது தான் பதநீர்..

நெற்றி மட்டத்துக்கு மேல் சூரியன் எழுந்த பிறகு பதநீர் குடிப்பதற்கு சிவனே என்று இருக்கலாம்..

திருச்செந்தூரில் விடியற்காலை பதநீர் கிடைக்கும்..

கோடையில் மட்டுமே
கிடைக்கக்கூடிய அற்புதம் பதநீர்..

உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊட்டம் தருவது பதநீர்..

எலும்புத் தேய்மானம் மற்றும்  தொடர்புடைய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது பதநீர்..

உடலுக்கு குளிர்ச்சி அளித்து, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பைத் தடுக்கின்றது பதநீர்..

பதநீர் உடலுக்கு நன்மை அளித்து, பல நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது என்று நமது முன்னோர் சொல்லி வைத்ததையே -

பதநீரில் புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன என்று விக்கி சொல்கின்றது... 

பதநீருக்கு Palm Water என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது...

Palm என்றால் அவ்விடத்தில் உள்ளங்கை..
இவ்விடத்தில் பனை.. 

இதற்கு மேல் வெள்ளையன் தான் நமக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தான் - என்று இங்கே சொல்வார்கள்..


பனையின் துணைப் பொருட்கள் சிறப்புடையவை..
பனையின் பெருமையை அளவிட முடியாது..

பனை மரங்கள் சமீப காலங்களில் சாலை நலனை முன்னிட்டு தாமே முன் வந்து தியாகம் செய்து கொண்டன..

மேலும்
 தம்மை வளர்த்தவர்களது பணத் தேவைக்காக  மிகக் குறைந்த தொகைக்கு விலையாகி  செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகி விட்டன...

தென்  மாவட்டங்களில் பனையை வாழ்வாதாரமாகக் கொண்ட மரபினோர் மட்டுமே சில ஆயிரங்கள் என்ற அளவில் பனை மரங்களைப் பராமரிக்கின்றனர்..

இதர மாவட்டங்களில் பனை சற்றேறக்குறைய அழிந்து விட்டது..

இத்தனைக்கும் பனை தமிழ் நாட்டின் மரபு சார்ந்த மரம்...
 
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஏப்ரல் 27, 2025

பனை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
ஞாயிற்றுக்கிழமை

அன்பின் ஸ்ரீராம் அவர்கள் விருப்பத்திற்காக இந்தப் பதிவும் அடுத்து சில பதிவுகளும்..



தமிழுக்கும்  தமிழ் மண்ணிற்கும் தன்னையே தந்த மரம் எனில் அது கற்பகத் தரு எனப்படும் பனை மரம் ஆகும்..

பனை ஓலைகள் வழியாகத் தான்  காலங்களையும்
கடல்களையும் கடந்து நிலைத்திருக்கின்றது - தமிழ்..

வலம்புரத் திருப்பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளால் பல முறை புகழப்பட்டிருக்கின்ற மரம்..
 
பனைமரம் உண்ணுகின்ற வகைக்கு வழங்குவதோடு
மிகுந்த அளவில் உறைவிடப் பொருள்களையும் வழங்குகின்றது. 

உணவுப் பொருள்களில் 
பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, பனை வெல்லம், , பனங்கற்கண்டு,  எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. 

பனங்கிழங்கு இயற்கையின் அற்புதம்..

பனை மட்டைகள்
ஓலைகள்
பனந்தும்பு எனும் கயிறுவகைகள், சப்பைகள் என்றாகின்றன..

பனையின்  ஓலைகளில் இருந்து விசிறி  கூடை மற்றும் ஓலைப் பொருள்கள்,  ஆகியன பனையிலிருந்து பெறப்படும் கொடைகளாகும்.. 

வறண்ட நிலத்தில் வளர்ந்தாலும் பனையானது தனது சல்லி வேர்களுக்குக் கீழே நீரை ஈர்த்து தக்க வைத்துக் கொள்கின்ற இயல்பின் உடையது...

இதனாலேயே பனை மரத்தடியில் சிறு செடிகள் தழைத்து பனையின் இளங்கன்றும் முளைத்திருக்கும்..


ஆய்வுகளின் படி ஒரு பனை மரமானது ஓராண்டில்  சராசரியாக நூற்றைம்பது லிட்டர் பதநீர் தருகின்றதாகவும் அதிலிருந்து இருபத்தைந்து கிலோ பனை வெல்லம் பெற முடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது..

2016  கணக்கெடுப்பின் படி
தமிழ் நாட்டில் மட்டும் ஐந்து கோடி பனை மரங்கள். இவற்றுள் 50 சதவீத மரங்கள் 
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் 
மாவட்டங்களில்..

இடையாத்தி பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் பனை மரங்கள் மிகுந்துள்ளன..

தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை.. 

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத் தொழில் விளங்குகின்றது..

இயற்கையின் கொடைகளில் பனையும் முருங்கையுமே ரசாயனங்களில் இருந்து தப்பித்து இருக்கின்றன..

முருங்கை வருடத்திற்கு இருமுறை பலன் தருகின்றது.. பனையோ ஒருமுறை தான்..

தென் மாவட்டங்களில் பனங்காட்டுக்குள் இருக்கின்ற மாடசாமி கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டில் படையலிடப்படும் அன்னம் பொழுது விடிந்ததும் படைப்பு சோறாக வழங்கப்படும்...

எவ்விதப் பாகுபாடும் இன்றி பனை மட்டைகளிலும் பனை ஓலைப் பெட்டிகளிலும் மக்கள் வாங்கிச் செல்வர்...

நாங்களும் அவ்விதம் வாங்கி இருக்கின்றோம்..


தென் மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஐந்தரை லடசம் பேருக்கு வாழ்வளிக்கின்றது பனை..

இருப்பினும் பெரும்பாலான பனைத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் தான் வாழ்கின்றார்கள்.. 

காரணம் - 
கோடையில் மட்டுமே பலன் தருகின்றது பனை...

அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு 
பனையடி சாஸ்தாவும் ஒற்றைப் பனை மாடசாமியும் தான் வழி காட்ட வேண்டும்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, ஏப்ரல் 26, 2025

இராமேச்சுரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
சனிக்கிழமை

இன்று
இராமாயணக் காட்சிகள்

ஞான சம்பந்தப் பெருமான் அருளிய
தேவாரத் திருப்பதிகம் 


தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.. 3/10/2


சீதா தேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னன் இராவணனின்  மாலை சூடிய  பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி அவனை வீழ்த்திய பழி நீங்குமாறு கணையைச் செலுத்திய வில்லை உடைய  இராம பிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினையானது அழிந்தே போகும்..


அணையலை சூழ் கடல் அன்றடைத்து வழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி என்றுமி ருந்தகோ யில் இரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே..6


அலை கடலில்  அணையைக் கட்டி கடலைக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இறைவன் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம்.. தனக்கு ஒப்பாக எவருமில்லாத அப்பெருமானின்   திருவடிகளில் தூமலர் தூவித்
 துதித்து வணங்குபவர்களின் துன்பம் நீங்குமே..


ஸ்ரீ ராம ராம
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஏப்ரல் 25, 2025

நற்றுணை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
வெள்ளிக்கிழமை


தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மத நால்வாய்
ஐங்கரன் தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற் பாதத்தில் நன்கு..


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
மணி மிடறும் மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
இலங்கு கர தலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்
புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடை மேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்கசல 
சுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை
செக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்திராம் புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்தரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமிபுகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமிபட்டர் :-

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஏப்ரல் 24, 2025

பஞ்ச பூதம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
வியாழக்கிழமை


பஞ்ச பூதத் திருத்தலங்களின்
திருப்பாடல்கள்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை


மண்
திருக்கச்சி ஏகம்பம்

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி எங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான் காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண்
மலர்தூவி நினைந்தெழுவார் உள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.. 6/64/2


நீர்
திரு ஆனைக்கா

முற்றாத வெண் திங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டு இமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே..6/63/3


அக்னி
திருஅண்ணாமலை

பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணியணா மலை யுளானே
தொண்டனேன் உன்னை யல்லால் சொல்லுமா சொல்லி லேனே.. 4/63/2


வாயு
திருக்காளத்தி

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவன் என்கண்ணு ளானே.. 6/8/3


ஆகாயம்
தில்லைத் திருச்சிற்றம்பலம்

கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/2
திருச்சிற்றம்பலம்

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஏப்ரல் 23, 2025

சதயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை சதயம்
புதன்கிழமை

அப்பர் ஸ்வாமிகள் குருபூஜை


நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தங்கடன் அடியனைத் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே..

- என்று சமுதாயச் சிந்தையுடன் பணியுடன் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர்..

அப்பர் என்று ஞானசம்பந்தப் பெருமானால் அழைக்கப்பட்டவர்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த திருப்பதிகங்கள் நான்காயிரத்து தொள்ளாயிரம் (4900).. 

இவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை முன்னூற்று பன்னிரண்டு மட்டுமே..

இவை - சைவத் திருமுறைகளுள் நான்கு ஐந்து ஆறாம் திருமுறைகளாகத் திகழ்கின்றன..

தாண்டகம் எனும் அமைப்பில் அவர் பாடியருளி -  நமக்குக் கிடைத்திருப்பவை தொண்ணூற்று ஒன்பது
திருத்தாண்டகங்கள்..

அவற்றிலிருந்து சில திருப்பாடல்கள்...


அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
 அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
 திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
 கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  6/1/1  

எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.  6/5/1 

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற 
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆ லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 6/19/ 8 

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே. 6/23/ 1 


ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.  6/34/1 


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/1 

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைத்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6/43/1 

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பந் களைகி ன்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6/44/ 1 

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் 
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  6/54/8 

செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6/60/ 2 


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  6/55/1..
திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஏப்ரல் 22, 2025

கொழுப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 9  
செவ்வாய்க்கிழமை


Typical edible fats are beef tallow, pork lard, goose or duck fat. 

Those beef tallows have different properties because of their different fatty acid composition.

Tallow is fat from cattle, and it is used in wax paper, crayons, margarine, paints, rubber, lubricants, candles, soaps, lipsticks, shaving creams and other cosmetics..

Many studies have shown that animal fat oils can increase total cholesterol levels in the blood, which will be detrimental to health..

உண்பதற்கு ஏற்ற கொழுப்புகளும் அதன் வகைகளும் பயன்பாடுகளும் விக்கியில் சொல்லப்பட்டிருக்கின்றது..

ஐரோப்பிய நாடுகளில் 1992/94  களில் Mad Cow என்ற நோய் பரவி லட்சக்கணக்கான மாடுகள் அழிக்கப்பட்டன.

ஏன் நோய் வந்தது?...

அதிக இறைச்சி கொழுப்பிற்காக கொழுப்பு கலக்கப்பட்ட தீவனங்கள் கொடுக்கப்பட்டதால்... - என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது... 

அந்தக் காலத்திலேயே விஷப் பரிட்சை...

மேலை நாட்டின் தொழில் நுட்பமும் உணவுப் பழக்க வழக்கமும்  தனி.. அவற்றை ஆராய வேண்டியதில்லை..

ஆனால்,
Milk fat என்பதும் Animal fat என்பதும் வேறு வேறானவை..

திவ்ய தேசத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நெய்யிலும் Animal fat என்பது இன்றைய தொழில் நுட்பம்..

Edible Fats
Is Edible Oil have smells..

Refining and Deodorization:

Refined cooking oils are often processed to remove strong odors and improve their flavor. 

This process, called deodorization, uses steam distillation under high temperature and vacuum conditions to remove odor - producing substances. 

Can remove Natural Odors in Natural oils?..

Yes, certain natural oils, particularly essential oils, can effectively remove or neutralize natural odors, thanks to their antibacterial and antifungal properties. 

ஆகவே எண்ணெயில் இருக்கின்ற இயற்கையான  - மணத்தை நிறத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக நீக்க முடியும் என்கின்றது கூகுள்..

அப்படியெனில் எண்ணெயில்
புதிய  மணத்தை ஏற்றவும் முடியும்!..  என்று ஆகின்றது...

இந்த இடத்தில் தான் பற்பல வித்தைகள் காட்டப்படுகின்றன..

எனவே, நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்..

நமது நலம்
நமது கையில்..

நல்ல செய்திகளைச் சொல்வதும் 
முப்பத்திரண்டு அறங்களில் ஒன்று

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், ஏப்ரல் 21, 2025

நறுமணத் தேநீர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
திங்கட்கிழமை

இன்று தேநீர் பெரும்பாலான குடும்பங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது..


தேநீர் அருந்துவதில் பல்வேறு கருத்து கள் இருப்பினும்    விருந்தினர்க்காக 
வீட்டில் தேநீர் தயாரிப்பதும் உபசரிப்பதும் அன்பின் வெளிப்பாடு என்று ஆகி விட்டது..

வீட்டில் தேநீர் அருந்துவதை விட  வெளியில்  அருந்துவதையே வாழ்க்கை யாகக் கொண்டவர் பலர்..

அது கிடக்கட்டும்..

போகின்ற வழியெல்லாம் டீக்கடைகள்..  நூறு நூறு  கடைகளிலும் நூறு  விதமான ருசி..

ஒரே நிறுவனத்தின்  தேயிலைத் தூள் கூட கடைக்குக் கடை வேறு வேறு சுவையில் - இது தாண்டா தேநீர்!.. - என்று..

தேநீருக்குப் பெரிய வரலாறே இருக்கின்றது.. இருந்தாலும் - ரயில் நிலைய நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீரைப் பற்றி  சொல்லியாக வேண்டும்..

தமிழகத்து ரயில்வே சந்திப்புகளில் உணவின் தரம் எப்படியோ தெரியாது..

ஆனால் - அங்கே
தற்காலத்தில் 
 நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீர் தனித்துவமானது.. அதைப்பற்றி உயர்த்திப் பேசுவதற்கு ஏதும் இல்லை என்பதே பெரும் சிறப்பு..

சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஜங்ஷன் நான்காவது நடைமேடையில் வைத்து வடையும் டீயும் வாங்கிச்  சாப்பிட்ட பிறகு இனியொரு முறை
ரயில்வே ஜங்ஷனில் 
 இப்படியான தவறு செய்வதில்லை - என்ற மன உறுதியுடன் இருக்கின்றேன்..
 
சரி.. 
நமக்காக நல்ல தேநீர் அதுவும் நறுமணத் தேநீர்  தயாரிப்பது எப்படி?..

எல்லாருக்கும் தெரியும் என்றாலும் நமக்குப் பொழுது போக வேண்டுமே.. அதற்காகத் தான் இந்தப் பதிவு..

இதோ நறுமணத் தேநீருக்கான பொடி செய்முறைக் குறிப்பு :


சுக்கு 100 g
ஏலக்காய் 50 g
மிளகு 25 g
சுருள் பட்டை 25 g  (Cassia) 
கிராம்பு 25 g
பெருஞ்சீரகம் 25 g
புதினா இலைகள் 10
(சிறிய இலைகள் எனில் 15)

புதினா இலைகள் வெயிலில் சருகாகக் காய்ந்தால் மட்டுமே நல்லது.. 
அப்படி சருகாகக் காய்வதற்கு சூழல் இல்லை எனில் புதினாவை விட்டு விடலாம்..

ஆக, இதர பொருட்களை
வெயிலில் நன்றாக உலர வைத்து (மழைக் காலம் எனில் இளஞ்சூட்டில் ஒரு நிமிடம் வறுத்துக் கொள்வது நல்லது) மிக்ஸியில் மிருதுவாக அரைத்து உலர்ந்த கலனில் சேகரித்துக் கொள்ளவும்.. 

ஒரு லிட்டர் பாலில்  ஐந்து குவளை தேநீர் உத்தமம்.. 
ஆறு குவளை தேநீர் என்பது உயர்தரம்.. 

இது பாலுடன் நீரைக் கலக்காமல் தேநீர் தயாரிப்பதற்கான கணக்கீடு..

டீக்கடையின் கை வரிசைக்கெல்லாம் வேறு வேறு கணக்குகள்...

ஒரு கோப்பைத் தேநீர் என்பது சுமார் 150 /180 மிலி .

பாலில் முதல் கொதி வந்ததும்  (கோப்பை ஒன்றிற்கு என்ற கணக்கில்)
தரமான டீத் தூள் 2 கிராமும் மசாலாத் தூள் 2 கிராமும் தேவையான அளவு சீனியும் சேர்த்து இரண்டு நிமிடங்கள்  கொதிக்க விட்டு அதிலிருந்து நறுமணம் பரவியதும் வடிகட்டி எடுத்தால் ஆரோக்கியமான சுவையான நறுமணத் தேநீர்  தயார்... 

இனிப்புக்காக சீனியைத் தேடாமல் பாரம்பர்ய சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது..

இது தான் நமது கைப்பக்குவம்..  

இதில்  - வேறு சில மூலிகைகளை வேறு வேறு வேலைகளுக்காகச் சேர்க்கின்ற வழிமுறையும் இருக்கின்றது.. 

அது மனதிற்கும் உடம்பிற்கும்  நல்லதல்ல!..
**
நல்ல தேநீர் என்றென்றும
கிடைக்க வேண்டும்

முருகா முருகா
முருகா முருகா
***

ஞாயிறு, ஏப்ரல் 20, 2025

கோடை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7 
ஞாயிற்றுக்கிழமை


புத்தாண்டின் முதல் ஞாயிறு..

சூரிய பகவானின் கோயிலைப் பற்றி சிறியதொரு சுருள் காணொளி..





கோடை ஆரம்பம் ஆகி விட்டது...

இக்காலத்தில் நா வறட்சி பொது..

இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சாறு ஆகிய இயற்கை பானங்கள அருந்தலாம்.. 


தர்பூசணி பழமும் முலாம் பழமும்  கவனத்தில் கொள்ளத் தக்கவை.. 

இவற்றினோடு பானகம் எனும் அருமருந்தையும் அவ்வப்போது   அருந்தலாம்.

புளியைத் தண்ணீரில்  கரைத்துக் கொண்டு
அல்லது எலுமிச்சம் பழத்தை நறுக்கி தண்ணீரில்  பிழிந்து கருப்பட்டியை அதனோடு நன்கு கலக்க வேண்டும். இக் கரைசலை வேறொரு பாத்திரத்தில்  வடிகட்ட வேண்டும். சுக்குப் பொடியும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். இதுவே பானகம்..

இந்தப் பானகம் மிகவும் உயர்வானது..

கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும்.

பழரசங்களை விட மிகவும் நல்லது  பானகம்.

இரும்புச்சத்து அமினோ அமிலங்கள் பனை வெல்லத்தில் இருந்து அபரிமிதமாகக் கிடைக்கின்றன..

இவற்றால்
 உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்..

தயாரிப்பதும் எளிது.

கோடையில் செய்வதற்கான அறச் செயல்கள் பல உள்ளன...

குளிர்ந்த நீர், நீர் மோர், பானகம் வழங்குதல்....

ஏழைகளில் சிலருக்காவது ஓலை விசிறி, செருப்பு , குடை 
வழங்குதல்...

மணலைக் குவித்து வைத்து அதன் மீது புதிய பானை ஒன்றில் தண்ணீர் வைத்து விட்டால் அது மிகப் பெரிய அறம்..

இயன்றவரை 
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வழங்கி செடி கொடி மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டால் பெரிய புண்ணியம்..
 
மோர் வழங்குவது எனில் வீட்டிலேயே தயாரித்து வழங்கவும்..

அப்படி இயலாது என்றால் - 
நல்ல தயாரிப்பாகப்  பார்த்து வாங்கி வழங்கவும்...

சில தயாரிப்புகள் எல்லாருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.. 

ஒரு இளநீர்  ஐம்பது அறுபது ரூபாய் என்றாகி விட்டது.. உப்புச் சுவை எனில் ஒன்றும் செய்ய இயலாது..
 

எது எப்படியோ, , தேவையான அளவு நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும்.. வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்..

செயற்கை நிறமிகள் இரசாயனங்கள் இவற்றுடன் காற்று அடைக்கப்பட்டவைகளிடம் எச்சரிக்கை தேவை..

செயற்கை பானங்களைத் தயாரித்தவர்களும் விற்பனை செய்தவர்களும்  ஆதாயம் அடைந்திருக்க - அவற்றை வாங்கிக் குடித்தவர்களுக்கு வியாதியும் வேதனையும் தான் மிச்சம்.

கோடை முடியும் வரை கவனமாக இருங்கள் ...

வாழ்க நலம்
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**