நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
புதன்கிழமை
உத்திரச்சேர்த்தி
பாகம் 1
2014 ல் வெளியான
பதிவு இது...
அன்பின் நெல்லை அவர்களுக்காக மீண்டும்!..
அன்றைய தினம் - பங்குனி மாதத்தின் ஆயில்யம்!..
சோழ வளநாட்டின் உறையூருக்கு உலகளந்த நாயகன் வருகின்றான்!..
அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...
இருக்காதா பின்னே!..
கமலவல்லியின் காதல் மணாளன், காவிரியின் கரை கடந்து வருகின்றான்..
இதைத் தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!. -
அதுவும் கமல வல்லியின் பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...
பரிசா... அது எதற்கு?..
அவனே ஒரு பரிசு .. அவன் வருகையே பெரும் பரிசு!...
வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என, மின்னுகின்ற வாழை மரங்கள் - தோரணங்கள் கட்டியாகி விட்டது!..
வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் .போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது.
நம்ம வீட்டுக்கே மாப்பிள்ளை வருகின்றார் - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!..
ஸ்ரீரங்கத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் - அம்மா மண்டபம் வழியாக காவிரியைக் கடந்து, உறையூரை நெருங்கி வருகிறார்.
வருகிறார்.. வருகிறார்.. இதோ வந்து விட்டார்!.. வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..
" வாங்க.. மாப்பிள்ள!.. வாங்க!..''
- என்று சிறப்பான வரவேற்பு. ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!..
ஸ்ரீரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, ஊருக்குள் வருகின்றான்..
வழி மாறிப் பாய்ந்த வெள்ளம் போலப் பிரவாகித்திருக்கும் மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது..
ஆயிற்று.. ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!..
கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். அன்னம் போல தாயார் வருகிறாள்.. கண்கள் கசிகின்றன காதலால்,
''..நலம்.. நலமறிய ஆவல்..'' என, ஏககாலத்தில் விழிகளால் அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும்..
அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவி - கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ... நாணம் தடுக்கின்றது!.. பிள்ளைகளின் முன்பாகவா!..
ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆனந்தம். அத்துடன் ஆதங்கம்..
''..என்ன இது!.. இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!..''
''.. குறை ஒன்றுமில்லை!.. கோவலர்தம் பொற்கொடியே!.. கொடியேற்றம் ஆனதிலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் வலியாக அல்லவா இருக்கின்றது - குண்டுங்குழியுமாக!.. அன்றைக்குக்கூட வழி நடையாய் ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!.. ''
- என்ற ஸ்வாமியை, கமலவல்லி மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து - வரவேற்றாள்.
மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து - இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்..
மாதவனின் கழுத்திலிருந்த மாலையை மதுசூதனக் காமினி கமலவல்லி அணிந்து கொள்கிறாள். அவள் கழுத்திலிருந்த மாலையை அணிந்து கொண்டு அரங்கன் ஆனந்திக்கின்றான்.
யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில், விரலிலிருந்த கணையாழியைத் தன் அன்பின் அடையாளமாக அணிவிக்கின்றான் அரங்கன்..
'' இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட.. '' - கமலவல்லி இப்படி ஆனந்திக்க,
'' உன் பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?...'' - என்று ஐயன் குதுகலிக்க,
பொழுது போய்க் கொண்டிருந்தது.
கண்டு கொள்!.. - எனக் கண்டு கொண்டதால் மனம் நிறைந்தது. உண்டு கொள்!.. - என உவந்ததால் உயிரும் இனித்தது.
இரவாகி விட்டது. இப்போது - மணி பத்தரைக்கு மேல்!..
தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.
''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி... போய் வரவா!..''
''.. ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!..''
கமலவல்லி மூலஸ்தானத்திற்குத் திரும்ப - ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!..
அதற்கு முன்னரே, அரங்கன் இருப்பது உறையூரில் என்று - தூபம் இடப்பட்டு விட்டது - அரங்கநாயகி சந்நிதியில்!..
எங்கு செல்வது!.. - அழகிய மணவாளனின் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்!..
நேராக கண்ணாடி மண்டம் .. அதுதான் சரி.. அங்கே ஓய்வு!..
அதன்பிறகு, வையாளியில் ஆரோகணித்து - சித்திரை வீதியில் சுற்றிக் களித்திருந்த போது , எதிர் வந்து நின்றது - உத்திரம்!..
ஆஹா!.. அரங்க நாயகியின் திருநட்சத்திரம்!.. அவளைக் காண வேண்டுமே!..
இப்படி நினைத்தாலும் - அவள் காண வேண்டுமே - என்பது தான் பிரதான நோக்கம்!..
ஓடோடி வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!.
கைவிரலில் இருந்ததே!..
எங்கே அது?...
தொடரும்
ஓம் ஹரி ஓம்
***


