நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
புதன்கிழமை
நாளாய போகாமே
நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங்
கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன்
கோளிலி எம் பெருமானே.. 1/62/1
-: திருஞானசம்பந்தர் :-
பக்தியின் வழியை சத்புத்திர மார்க்கம், சக மார்க்கம், தாச மார்க்கம், குரு மார்க்கம் என வகுத்து அதில்
ஒன்பது நிலைகளை வகுத்து வைத்துள்ளனர் ஆன்றோர்..
எக்காலத்திலும் ஒருவரிடத்தே இறைவனைப் பற்றி பேசுவது பக்தியின் நிலை...
இக்காலத்தில் வலைத் தளங்களில்
ஆலயங்களைப் பற்றி எழுதுவதும் பக்தி நிலை ..
பயன் கருதாது ஆலய சுற்றுலா பயணங்களை அமைப்பதும் பக்தி நிலை..
என்றால்,
நாமாக ஏழை ஒருவரை கோயில் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதும் பக்தி நிலை தான்..
பக்தியின் ஒன்பது நிலைகள்..
1) ஸ்ரவணம்
இறைவனின் கதைகளைக் கேட்டல் (புராணங்கள், பாகவதம் கேட்டல்).
2) கீர்த்தனம்
இறைவனின் புகழைப் பாடுதல் (பஜனை,கீர்த்தனம்,
திருவாசகம் முற்றோதல்)
3) ஸ்மரணம்
இறைவனை எப்போதும் நினைத்திருத்தல் (நாம ஜபம்).
4) சேவகம்
கோயிலுக்கு சேவை செய்தல்.
5) அர்ச்சனம்
இறைவனது வழிபாட்டிற்கு உரிய சாதனங்களை கோயிலுக்கு வழங்குதல்.. விளக்கேற்றுதல்,
மலர் தூவி வழிபடுதல்..
6) வந்தனம்
ஆலய தரிசனம் செய்து இறைவனை வணங்குதல்..
7) தாஸ்யம்
இறைவனுக்கு அடிமையாக தன்னைக் கருதிக் கொண்டு தொண்டு செய்தல்..
8) ஸக்யம்
இறைவனைத் தோழனாகக் கருதி அன்பு செய்தல்..
9) ஆத்மநிவேதனம்
இறைவனை குருவாகக் கொண்டு முழுமையாக இறைவனிடம் சரணடைதல்.
எவரெவர்க்கு எது எது இறைவன் ஆணையோ அதன்படி அவரவர் நடக்க கர்ம வினை தீரட்டும்..
முக்தி நிலை சேரட்டும்..
இறைவன் திருத்தாள் போற்றி...
ஓம் நம சிவாய
***
