நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 20, 2026

செப்பேடுகள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 புதன்கிழமை

ஆனைமங்கலச்
செப்பேடுகள்


கிபி.1004 க்கு முன்.
இன்றைய தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கெடா. அன்றைய கடாரம்.

ஸ்ரீவிஜயம் என்றும் அழைக்கப்பட்டது.

மார விஜயதுங்க வர்மன் என்பவர் கடாரத்தை ஆட்சி செய்தார். இவர் தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் புத்த பெருமானுக்கு ஒரு கோவில் கட்டுகிறார்.
இப்புத்தர் கோவிலுக்கு தனது தந்தையின் நினைவாக சூளாமணி வர்ம விகாரம் என்று பெயர் சூட்டுகிறார்.

கிபி.1005.
மாமன்னர் இராஜராஜன் இக்கோவிலுக்கு நில தானம் அளிக்கிறார். நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள ஆனைமங்கலம் என்னும் கிராமத்தை பள்ளிச்சந்தமாக சூளாமணி விகாரத்திற்கு அளிக்கிறார். 
97 வேலி நிலப்பரப்புடைய இக்கிராமத்தின் வருவாய் முழுவதும் சூளாமணி விகாரத்திற்கு தானமாக உறுதிசெய்து செப்பு பட்டயத்தின் மூலம் எழுத்தாவணமாக உறுதி செய்யப்படுகிறது.

இதுவே ஆனைமங்கலம் செப்பேடாகும்.

செப்பேடு வாசகம்.

"ஒளிபெற்ற பாதபீடத்தை உடையவனுமான இராஜகேசரிவர்மரான இராஜராஜன் தன்னுடைய இருபத்தொன்றாம் ஆட்சியாண்டில் புவிக்குத் திலகம் போன்றதுமான சத்திரியசிகாமணி வளநாடு என்னும் பெருநாட்டில் பட்டினக் கூற்றமான நாகப்பட்டினத்தில் அறிஞர் என்னும் தொகுதிக்கு கதிரவன் போன்றவனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாரத்தின் அதிபதியுமான சைலேந்திர வம்சத்தில் பிறந்த சூளாமணி வர்மனின் மகனான மார விஜயோத்துங்க 
வர்மனால் தன் தந்தையின் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதும் தங்கமலையின் உயர்ந்த பெருமையை தனக்குக் கீழாக்கியதும் மிக அழகானதுமான சூளாமணி விகாரத்தில் வீற்றிருக்கும் புத்தருக்கு அதே பெருநாட்டில் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைக் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான்."

இந்த தானமானது அரசு ஆவணமாக பதிவு செய்யும்முன் இராஜராஜ சோழர் இறைவனடி சேர்ந்தார். இராஜராஜரின் மகனான இராஜேந்திரன் தனது தந்தையின் தானத்தை சாசனம் செய்கிறார்.

செப்பேடு வாசகம்.
"சக்ரவர்த்தியும் பெருவலிமையுடையவனுமான தன் தகப்பன் தெய்வத்தன்மை அடைந்தபிறகு அவனுடைய சிங்காதனத்தில் வீற்றிருக்கும் அவன் மகன் மதுராந்தகன் ( இராஜேந்திரன்)  நிலையான சாசனத்தை செய்தான். எதுவரையில் எல்லா உலகையும் ஆதிசேடன் தாங்குவானோ அதுவரையில் இந்த புத்த விகாரம் வைபத்தோடு இவ்வுலகில் திகழட்டும் நற்குணங்களின் உறைவிடமான கடதேசத்தின் அதிபதி தனக்குப் பிறகு வரும் மன்னர்களைத் தனது இந்த அறத்தைக் காக்கும்படி வேண்டுகிறான் "

அரசனின் திருமுகப்படி பிடிசூழ்தல் வேலைகள் நடைபெற்று எல்லைகள் குறிக்கப்பட்டு வருவாய் கணக்கிடப்பட்டு அனைத்து விபரங்களும் செப்புத் தகட்டில் எழுதப்பட்டு அரசு அதிகாரிகள் கையொப்பமிட்டு அரசு ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது .

இராஜராஜசோழரால் நில தானம் செய்யபட்ட  விவரத்தினைக் கூறுகின்ற ஒரேயொரு செப்பேடு இது மட்டுமேயாகும். புத்தர் கோவிலுக்குத் தானம் கொடுக்கப்பட்ட இச்செப்பேடு ஒன்று மட்டுமே  இராஜராஜ சோழரால் கொடுக்கப்பட்டதாகும்.

செப்பேட்டின் அமைப்பு
இந்த செப்பேட்டில் 21 பட்டைகள் உள்ளன. இவைகள் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கால் அங்குல தடிமனும் உடையவை. இடது ஓரத்தில் ஒரு அங்குல துளையிட்டு 13அங்குல வெளி வட்டமுடைய உருளை வடிவ  செப்பு வளையத்தினால் அனைத்து ஏடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனைமங்கலம் என்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 

தாமரைப்பூ போன்ற கூம்பு வடிவத்தின் மேற்பகுதியில் முகப்பு இலட்சினைஉள்ளது. இலட்சினையில் இராஜேந்திர சோழனின் சாசன சுலோகம் பொறிக்கப்பட்டுள்ளது.


இலச்சினையின் முகப்பில் புலி, இரு மீன்கள், இரு பக்கமும் விளக்குத் தாங்கிகள், இதன் மேல் தீபம், குடை, இருபுறமும் சாமரம், கிடைமட்டமாய் வில், இவைகள் பொறிக்கப்பட்டு 
உள்ளன.

111 வரிகள் கிரந்த எழுத்துக்கள் வடமொழியிலும் 332 வரிகள் தமிழ் எழுத்துக்களிலும் விவரங்கள் உள்ளன.

மற்ற எந்த செப்பேட்டுக்கு இல்லாத ஒரு சிறப்பு இச்செப்பேட்டுக்கு மட்டும் உண்டு.

தமிழ் எழுத்துக்கள் அரக்கு அச்சில் வார்க்கப்பட்டு பிறகு செப்பேட்டில் எழுதியுள்ளார்கள்.  

ஆகவேதான் இச்செப்பேட்டில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளன...

நன்றி
மா.மாரிராஜன் 
fb தரவு
படங்கள் இணைப்பு
தஞ்சையம்பதி

வெல்க பாரதம்
***