நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 18
திங்கட்கிழமை
மங்கல நாள்
அனைவருக்கும்
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.. 1/130/3
சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளுக்குள் நுழைந்து கூரிய அலகுகளால் தமது இறகுகளைக் கோதி - குளிர் நீங்கப் பெற்று பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைதனைத் தேடும் இடம் திரு ஐயாறு - என்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..
திரு ஐயாற்றின் இத்தகைய வளத்திற்குக் காரணம் காவிரி..
அணைகள் திறக்கப்படாததால்
தஞ்சை வள நாட்டின் ஜீவநாடியான காவிரியில் தண்ணீர் இல்லை..
தஞ்சையில் இருந்து திரு ஐயாறு வரைக்கும் உள்ள ஐந்து ஆறுகளும் வானம் பார்த்திருக்கின்றன.
வெண்ணாற்றுப் படுகையில் மட்டும் ஏதோ கொஞ்சம் தண்ணீர்... அதுவும் இன்னும் சில நாட்களில் வற்றிப் போகும்...
பழி பாவங்கள் மிஞ்சிப் போனதால் காவிரி வறண்டு கிடக்கின்றாள்..
ஆற்று நீர் பாசனம் தொடங்கப்படவே இல்லை..
அடுத்த சாகுபடிக்கு முன்னதாக காவிரியாள் தந்த வயல்வெளிகளை வீட்டு மனைகளாக்கி விடவேண்டும் - என, முனைந்திருக்கின்றனர்.
ஆடிப்பெருக்கும் அதனை ஒட்டிய விழாக்களும் விடை இன்றி தவிக்கின்றன...
ஒன்றும் சொல்வதற்கில்லை...
கூடிய விரைவில்
காவிரியாள் தடைகளைக் கடந்து
பொங்கி வருவாளாக..
புது வெள்ளமெனப் பெருகி வருவாளாக..
காவிரிப் பெண்ணே வாழ்க - உன்
காலடி மலர்களும் வாழ்க வாழ்க..
***



