நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
ஞாயிற்றுக்கிழமை
ராகுவும் கேதுவும்
தயாநிதி வீரராகவன்
நன்றி Fb
தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமம்.
அங்கு இளம் விவசாயி ஒருவர்..
மாதவன் என்று பெயர் .
நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, உழைக்கவும் தெம்பு இருக்கு. ஆனால் மூன்று வருஷமாக விளைச்சலே இல்லை.
ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
ஊர் ஜோதிடரிடம் ஓடினான்.
ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார்,
" உனக்கு ராகு தோஷம். ராகு வயலை மறைக்கிறான். 50,000 ரூபாய்க்கு பரிகார பூஜை பண்ணனும்."
மாதவன் வீட்டில் இருந்த கொஞ்ச நகையையும் விற்று பூஜை பண்ணான். மறு வருஷமும் விளைச்சல் இல்லை.
கோபத்துடன் இன்னொரு பெரிய ஜோதிடரிடம் சென்றான்.
அவர் சொன்னார், "இது ராகு இல்லை, கேது.. உன் நிலத்தை கேது பிடிச்சிருக்கு.. இன்னொரு பரிகாரம் பண்ணனும்."
மாதவனுக்கு வெறுத்து போச்சு.
நேராக ஆத்தங்கரையில் உட்கார்ந்திருந்த கோயில் குருக்களிடம் சென்றான். அவர் ஜாதகம் பார்க்க மாட்டார்.. மனுஷங்களை மட்டும் பார்ப்பார்.
மாதவன் கத்தினான்..
"சாமி, என் ஜாதகத்துல என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. ராகுவா, கேதுவா?."
குருக்கள் அவன் ஜாதகத்தை வாங்கினார். ஒரு நிமிஷம் பார்த்தார். அடுத்த நிமிஷம் அதை இரண்டாகக் கிழித்து வாய்க்காலில் வீசி விட்டார்.
மாதவனுக்கு உலகமே இருண்டு போச்சு.
"என்ன சாமி இப்படி பண்ணிட்டீங்க!.."
குருக்கள் சிரித்தார்..
" தோஷம் ஜாதகத்துல இல்ல.. மாதவா... உன் பழக்கத்துல இருக்கு.. மூனு வருஷமா நீ என்ன செய்தாய் ? புதுசு புதுசா விதை வாங்கி விதைச்சு யூடியூப் - ல பார்த்துப் பார்த்து புதுப்புது மருந்தா அடித்தாய்.. ஊர் முழுக்க ஜோதிடரை தேடி அலைந்தாய் .. ஆனா, உனக்கு அடுத்த நிலத்து ராமு என்ன பண்ணான் தெரியுமா? தினமும் காலையில அஞ்சு மணிக்கு வயலுக்கு போறான். மண்ணைப் பார்த்து. வரப்பை சரி செஞ்சான்.. ஒரே பயிரை சாகுபடி பண்ணி பொறுமையா பார்த்துக்கிட்டான்."
"ராகு உன் நிலத்தை மறைக்கலடா.. பொறுமை இல்லாத்தனம் தான் உன் கண்ணை மறைச்சிருக்கு. கேது உன் வயலை பிடிக்கல, நீ யூடியூப் பேச்சை கேட்டுட்டு மாத்தி மாத்தி செஞ்சது தான் உன் வயலை பிடிச்சிருக்கு."
"ஜோதிடம் என்பது வானிலை அறிக்கை மாதிரி. மழை வரும்னு சொன்னா, நீ குடைய எடுத்துட்டு போகணும். மழையை நிறுத்த பூஜை பண்ணக்கூடாது."
மாதவனுக்குப் புரிந்தது.. பரிகாரம் தேடுவதை நிறுத்தினான்.
அடுத்த ஆறு மாதம் ஜோதிடம், யூடியூப் என்று எதையும் பார்க்கவில்லை.
தினமும் வயலில் இருந்தான். மண்ணைப் புரிந்து கொண்டான்.
அந்த வருஷம் கிராமத்திலேயே அதிக விளைச்சல் அவனுக்கு தான் கிடைத்தது.
ஜாதகத்தை கிழித்த குருக்களிடம் ஓடிச் சென்று சொன்னான் -
"சாமி.. ராகு தோஷம் போயிடுச்சு!"
குருக்கள் சொன்னார்..
"ராகு எங்கேயும் போகலடா. அவன் அங்கே தான் இருக்கான். அவன் உனக்கு தோஷத்தை கொடுக்க வரல, புதுசா ஒரு பாடத்தைக் கத்துக் கொடுக்க வந்தான். நீயும் கத்துக்கிட்ட.. அவ்வளவு தான்."
***
