ஓம்
தமிழமுதம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது... (007)
*
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 30
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திருப்பாவையின் சிகரம்..
குன்றிலிட்ட விளக்கு..
ஆண்டாள் அளித்த அமுதம்..
அதனை அப்படியே அள்ளிப்
பருக வேண்டியது தான்...
ஆண்டாள் அரங்கனின்
நல்லருளும்
அமுதத் தமிழின் நற்சுவையும்
நம்மை எல்லாம்
வாழ வைப்பதாக!..
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..
திருப்பாவையின் சிகரம்..
குன்றிலிட்ட விளக்கு..
ஆண்டாள் அளித்த அமுதம்..
அதனை அப்படியே அள்ளிப்
பருக வேண்டியது தான்...
ஆண்டாள் அரங்கனின்
நல்லருளும்
அமுதத் தமிழின் நற்சுவையும்
நம்மை எல்லாம்
வாழ வைப்பதாக!..
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
திருவடிகள் போற்றி!..
*
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந் தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே..
*
தித்திக்கும் திருப்பாசுரம்
இயற்கையின் சீதனம்
பூசணி
மஞ்சள் மற்றும் சாம்பல் என
இரு நிறங்களில்
மனங்கவர்வதோடு
குலம் காப்பது...
நமது மண்ணுக்கே உரியது...
மார்கழி முழுதும்
தமிழ்ப்பாரம்பர்யத்தைப் பறை சாற்றுபவை
பூசணிப் பூக்களே...
அந்தக் காலத்தில்
கிராமம் நகரம் என்றில்லாமல்
மரபு வழி நிற்கும் ஹிந்து மக்கள்
மார்கழிக் கோலத்தின் நடுவில் பூசணிப் பூவை
வைத்து குறிப்பால் உணர்த்துவார்கள்
இந்த வீட்டில் பருவ மங்கை இருக்கின்றாள்
என்பதை...
சமைந்த பெண்களின் முகம் பார்த்தறியாத
காலத்தில் நடைமுறையிலிருந்த
நளினமான நாகரிகம்...
அதன்பின் இருவீட்டாரும்
மனங்கலந்து பேசி விட்டால்
தை - மாசியில் கல்யாண மேளந்தான்!...
இப்படியான
பூசணி நீர்ச்சத்து மிக்கது...
உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பது..
உடற்சூடு அடங்கி விட்டாலே
நோய் நொடிகள் வாராது...
சாம்பல் பூசணி சமையலில்
சிறப்பிடம் பெறுவதைப் போல
கண் திருஷ்டியைத் தீர்ப்பதிலும்
பில்லி சூனியம் முதலான
துஷ்ட திருஷ்டிகளை அகற்றுவதிலும்
சிறப்பிடம் பெறுகிறது...
சமஸ்க்ருதத்தில் பூசணிக்கு
கூஷ்மாண்டம் என்று பெயர்..
யாகசாலைச் சடங்குகளிலும்
ஸ்ரீ பத்ரகாளி பூஜையிலும்
பூசணியின் பங்கு குறிப்பிடத்தக்கது..
ஆனாலும் நம் மக்கள்
திருஷ்டி கழித்தபின்
நடுச்சாலையில் பூசணிக் காயைப்
போட்டுடைப்பது கண்டிக்கத்தக்கது..
மஞ்சள் பூசணியில்
நோய் எதிர்ப்பினைக் கொடுக்கும்
பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதாக
இப்போது கண்டறிந்திருக்கின்றார்கள்..
*
சிவதரிசனம்
தஞ்சபுரி
-: தஞ்சாவூர் :-
-: தஞ்சாவூர் :-
அம்பிகை - ஸ்ரீ ஆனந்தவல்லி
தீர்த்தம் - வெண்ணாறு
அம்பிகை திருவுடைக்கோடியம்மனாக எழுந்து
தஞ்சன் தஞ்சாக்கன் எனும் அசுரர்களை
வதம் செய்தருளியபோது
அஞ்சி நடுங்கிய தேவர்களுக்கு
ஈசன் எம்பெருமான் தஞ்சமளித்தருளிய திருத்தலம்..
ஸ்ரீ பால சாஸ்தா
தேவர்களைக் காப்பாற்றும் பொறுப்பினை
ஏற்றுக் கொண்டதால் இத்தலத்தில்
ஸ்ரீ சிறை காத்த ஐயனார் என்று திருப்பெயர்...
குபேரன் இத்தலத்தில் வழிபாடு செய்துதான்
இராவணனிடம் தான் இழந்த செல்வங்களை
மீண்டும் பெற்றான்..
மேற்கு நோக்கிய திருத்தலம்..
கடன்கள் தீர்வதற்கும்
இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதற்கும்
வழிபட வேண்டிய ஐந்து திருத்தலங்களுள்
முதன்மையானது - தஞ்சபுரி..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருஐயாறு - ஐயம்பேட்டை
செல்லும் பேருந்துகள் எல்லாம்
திருக்கோயிலின் அருகில்
நின்று செல்கின்றன...
![]() |
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை.. |
யாளி நகர் எனப்படும்
தஞ்சை மாமணிக் கோயில்களுள் ஒன்றான
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
அமைந்துள்ளது...
***
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.. (3/22)
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 10 -11
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே... (10)
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே... (11)
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
*
இந்த அளவில்
சிந்திக்கவும் வந்திக்கவும் செய்த
ஈசன் எம்பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி..
***
அன்பின் நண்பர்களுக்கு
வணக்கம்..
மார்கழி முழுதும் தொடர்ந்து வந்து
உற்சாகமும் ஊக்கமும் அளித்த
தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...
தங்களுடைய கருத்துரைகளுக்கு
என்னால் உடனுக்குடன்
பதிலளிக்க இயலவில்லை...
குறைதான்..
இருப்பினும் மனதிற் கொள்ளற்க..
இணைய வேகம் ஒருபுறம் இருக்க
எதிர்பாராத விதமாக இருப்பிடம் மாற்றம் ஆனது..
அத்துடன் வேலை நேரமும் மாற்றம் ஆனது..
எல்லாவற்றையும் கடந்து
மார்கழிப் பதிவுகளை உங்கள் முன்பாக
சமர்ப்பித்து விட்டதில் மகிழ்ச்சி
***
இன்று போகி..
எங்கெங்கும்
புன்மைகள் விலகி
நன்மைகள் பெருகட்டும்..
அனைவருக்கும்
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***