நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அன்பின் வழி..

திரு. அனந்தநாராயணன் அவர்கள் Fb ல் வழங்கிய பதிவு - இது..
திரு. கேஜி கௌதமன் அவர்கள் வழியாக எனக்குக் கிடைத்தது...

மனதைக் கவர்ந்த அந்தப் பதிவு
சற்றே அலங்காரங்களுடன்
நமது தளத்தில்!..
***


போகும் வழியில் ஒரு மின்கம்பம்..

அதில் சிறு காகிதத் துண்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது..

எதற்காக இந்தத் தாள்?.. என்ன அதில் எழுதியிருக்கு!?..

- என்ற ஆர்வத்தில் நானும் அருகில் போய்ப் படித்தேன்...

அந்தக் காகிதத்தில் -

என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை..

இப்படிக்கு அஞ்சலையம்மாள்..

- என்றபடிக்கு விலாசத்துடன் எழுதப்பட்டிருந்தது..

எனக்கும் பொழுது போகவில்லை..

குறுகலான வழி..
எதிர்ப்பட்ட ஒருவரிடம் இந்த விலாசத்தைக் கூறி வழி கேட்டேன்..

இந்த அம்மாவா!.. கொஞ்ச தூரம் போனால் பழைய வீடு ஒன்றிருக்கும்.. அங்கே தான் இந்த அம்மா இருக்காங்க!..

- என்றார்..

அவர் காட்டிய வழியில் நடந்தேன் நான்..

வழி காட்டியவர் பழைய வீடு என்று சொன்னார்..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..

அது கீற்றுக் கொட்டகை..

வெயிலில் தூளாகிப் போயிருந்தது.. மழைத் தூறல் விழுந்தால் தண்ணீரோடு போய் விடும்..

அந்தக் கொட்டகையின் வாசலில் அந்த மூதாட்டி..

எலும்பும் தோலுமாக - குழி விழுந்த கண்களுடன்..

காலடி சத்தம் கேட்டதும் -

யாரப்பா நீ!.. - என்றார்கள்..

அம்மா.. இந்த வழியாக வந்தேன்.. வழியில் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது.. உங்களுடையதாக இருக்கலாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்..

அதைக் கேட்டதும் அந்த மூதாட்டியாரிடமிருந்து விசும்பல்..
ஒட்டி உலர்ந்த கன்னங்களில் கண்ணீர்..

ஏனம்மா அழுகின்றீர்கள்?.. - என்றேன் அதிர்ச்சியுடன்..

தம்பீ.. ரெண்டு நாளா இந்த மாதிரி தான்.. முப்பது முப்பத்தைஞ்சு பேராவது இருப்பாங்க.. 

அம்மா... கீழே இந்தப் பணம் கிடந்தது.. உங்க கிட்ட கொடுத்துட்டுப் போகலாம் ..ன்னு வந்தேன் ..ன்னு சொல்றாங்க..

உண்மையில என்னோட பணம் ஏதும் காணாம போகலை.. அந்தக் கடுதாசியும் நான் எழுதலை.. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுப்பா!..

ஊரார் பணம் எனக்கு எதுக்குடா.. ராசா!..

மறுபடியும் அதிர்ந்தேன்..

பரவாயில்லைம்மா.. நீங்க இதை வெச்சிக்குங்க!..

அவர்கள் கையில் பணத்தைக் கொடுத்ததுடன் தொட்டுக் கும்பிட்டு விட்டு நடந்தேன்..

பின்னாலிருந்து அந்த மூதாட்டியின் குரல் கேட்டது..

தம்பீ.. நீ போறப்போ.. அந்த லைட்டு மரத்துல கட்டியிருக்குற கடுதாசிய கிழிச்சுப் போட்டுடு!.. மறந்துடாதேப்பா!..

ஆகட்டும்.. அம்மா!..

அந்தக் கடிதம் தொங்கிக் கொண்டிருக்கும்
மின் கம்பத்தினைக் கடந்து - நடந்தன என் கால்கள்..

மனதில் பலவிதமான எண்ணங்கள்..

யார் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்கள்?..

அந்தக் கடிதத்தைக் கிழித்து விடுங்கள்..
- என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் சொல்லியிருக்கக் கூடும்..

ஆனால், யாரும் அப்படிச் செய்த மாதிரி தெரியவில்லை..

ஆதரவுக்கு என்று யாரும் இல்லாமல் வாழும் ஓர் உயிருக்கு
அன்பின் இனிய வார்த்தைகளால் உதவி செய்திருக்கிறார் ஒருவர்..

அந்த நல்லவருக்கு மனதால் நன்றி சொல்லிக் கொண்டேன்..

நன்மை செய்யவேண்டும்!.. 
- என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள்..


அண்ணே!..  இந்த விலாசம் எங்கே..ன்னு சொல்ல முடியுமா?.. 
வர்ற வழியில் இந்த ஐம்பது ரூபாய் கிடந்தது.. 
அந்த அம்மா கிட்டே கொடுக்கணும்.. வழி சொல்லுங்களேன்?...

அந்த குறுகலான வழியில் எதிர்ப்பட்டவர் என்னிடம் கேட்டார்...

மனித நேயம் மலர்கின்றது!.. - என்ற மகிழ்ச்சியுடன்
அஞ்சலையம்மாள் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினேன்..

வாழ்க நலம்!..
***

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

வந்துட்டேன்!..

கடந்த செவ்வாய்க்கிழமை முன்னிரவு ..

குறித்த நேரத்தில் -
தஞ்சையிலிருந்து உழவன் விரைவு ரயில் புறப்பட்டது..

அதிகாலையில் சற்றே தாமதத்துடன் - தாம்பரம்..

அங்கிருந்து திரிசூலத்திற்கு மாறி -  இதோ சென்னை விமான நிலையம்..

விமான நிலையத்தினுள் அழகுறும் சிற்பங்கள்




கீழே சிங்காரச் சென்னை
காலை 9.25க்கு வானில் ஏறியது விமானம்..
அபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..



 அபுதாபி - தரையிறங்குவதற்கு முன்பாக
அபுதாபி விமான நிலையத்தில்
அபுதாபி விமான நிலையத்தில் நமது தளம்
Transit Flight ஆனதால் குவைத்திற்கு வந்தபோது இருட்டி விட்டது..

முன்னிரவுப் பொழுதில் -
குடியிருக்கும் வசந்த மாளிகையை நோக்கி விரைந்தால் -

அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டுக் கிடந்தது..

என்ன இது சோதனை!?..

அரே..பாய்.. கட்டிடத்தைக் காலி செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆனால் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை!..

- என்று குரல் வந்தது - அருகிலிருந்த கடைக்குள்ளிருந்து...

குவைத்திலிருந்து ஊருக்குத் திரும்பினால் அவ்வளவு தான்..
இங்கிருப்பவர்களிடம் நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை...

அதனால் இருப்பிடம் மாறிய தகவல் தெரியவில்லை..

ஆனால் -
புதிய இருப்பிடத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும்
பழைய கட்டிடத்தின் முகப்பில் தெரியப்படுத்த வேண்டுமல்லவா!..

அப்படி எதையும் செய்யவில்லை..

அந்த அளவுக்கு அறிவாளிகள் இங்கே!..

திகைத்துப் போனேன்.. எங்கென்று தேடுவது?..

கைபேசி ஆழ்ந்த தூக்க நிலையில்!..

என்ன செய்வது?..

பழைய குடியிருப்பின் அருகில் உணவகம்.. நடத்துபவர் தஞ்சாவூர்க்காரர்..

அங்கே சென்று விசாரிக்க -

அது வெகு தூரம்.. இரவு இங்கே தங்கிக் கொள்ளுங்கள் .. நாளை காலையில் செல்லலாம்!.. - என்றார்கள்..

வேறு வழி ஏதும் இல்லை..

சரி!.. - என்று இசைந்தபோது அதிர்ஷ்டம்..

உடன் வேலை செய்யும் எகிப்து நாட்டுக்காரன் எதிரில் வந்தான்..

நலம் விசாரித்து விட்டு அவனுடன் டாக்ஸியில் பயணம்..

புதிய இருப்பிடத்திற்கு வந்து -

எங்கே எனது பொருட்கள்?.. எது எனது அறை?.. என்று கேட்டால்,

உங்களுக்கு அறை ஒதுக்கவில்லை!.. - என்றான் Camp In-charge..

ஏன்.. டா?.. - மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்...

உங்களுடைய பொருட்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றன.. தற்காலிகமாக நான்காவது தளத்தில் பதினைந்தாவது அறையில் தங்கிக் கொள்ளுங்கள்..

அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...

பொருட்கள் என்ன கதியாகியிருக்கும்!..

மனத்திரையில் காட்சிகள் விரிந்தன..

மறுநாள் காலை..

பழைய இருப்பிடத்திலிருந்த பொருட்கள் (98 %) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன..

ஆனால் -

சமையலறையில் ஒரு மாதத்திற்கு சேர்த்து வைத்திருந்த அரிசி எண்ணெய் முதலான உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் எனக்குக் கிடைக்க வில்லை..

அவற்றின் கதி என்ன என்று தெரியவில்லை...


இவனுங்களுடைய சமையல் ஆகாது.. சமையல் செய்தே ஆகணும்!..

குவைத்தில் இன்னும் வெயில் அடங்கவில்லை..

ருத்துபா எனும் புழுக்கம்..
நீராவிக் குளியல் போன்று இருக்கும்..

அருகிலுள்ள பாஃஹீல் (Fahaheel ) நகருக்குச் சென்று
வெயிலோடு வெயிலாக அலைந்து பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து
அலுப்பு தீர அமர்வதற்குள் மூன்று நாட்களாகி விட்டன..

தட்ப வெப்ப நிலையின் தடுமாற்றத்தினால் -
ஜலதோஷமும் கூடவே காய்ச்சலும் கூட்டு சேர்ந்து கொண்டன...

தற்காலிகமான தங்குமிடம் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது..

என்றாலும் அறையில் முன்பே இருப்பவர்கள்
அறைக்குள் புதிய வரவாக கணினியைக் கண்டதும்
அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ!.. - என்று விழிக்கின்றார்கள்...

இன்று காலையில் தான் கணினியை ஒருங்கிணைத்து பதிவுகளை வாசித்தேன்..

கையில் Galaxy இருந்தாலும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இடவில்லை..

எல்லாம் இனிமேல் தான்..

ஒன்றரை மாதம் .. காற்றில் எழுந்த அன்னத்தின் தூவியாக பறந்து விட்டது..

விடுமுறை நாட்களின் செயல் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது..
அவற்றில் நிறைவேறியவை ஒரு சில மட்டுமே!..

எதிர்பாராத பயணங்கள் அதிகம்..

அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களைச் சந்திக்க தொடர்பு கொண்டேன்..

அப்போது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு பயணம்...
தொலைபேசியில் சில நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது..

ஆனால் அது கூட கிடைக்கவில்லை..

அன்புக்குரிய Dr. பா. ஜம்புலிங்கம் அவர்கள்
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

இருவரும் பொறுத்தருள வேண்டும்..
இரண்டு முறை முயன்றும் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..

என் பிழையே அன்றி வேறெதும் இல்லை...

அது சரி.. ஜி!.. உங்களுக்கென்று அறை ஒதுக்காமல் - தற்காலிக இருப்பிடம் கொடுத்திருக்கின்றார்களே ஏன்?..

கில்லர் ஜி அவர்கள் கேட்பது புரிகின்றது...

அந்த அளவிற்கு அவருக்கு இடைஞ்சல்களைச் செய்திருக்கின்றோம்..
அதனால் கடுப்பாகி - போங்கடா.. போங்க!.. - என்று, புறப்பட்டு விட்டார்..
இனி அவர் வருவதற்கில்லை.. ஊரிலேயே தங்கி விட்டார்!..

என்று, மனப்பால் குடித்திருக்கின்றார்கள்.. என்ன ஒரு வக்கிரம்!..

ஆனால் -

விடாது கருப்பு!.. - என்பது வீணர்களுக்குத் தெரியவில்லை..

அவர்கள் குடித்த பால் செரிக்காமல் போனது -
மீண்டும் என்னைக் கண்ட அதிர்ச்சியில்!..


சொல்லு!.. 
வந்துட்டேன்..ன்னு சொல்லு!..
திரும்பி வந்துட்டேன்..ன்னு சொல்லு!..

தீமைகள் வெருண்டு ஓடட்டும்..
திசைகளில் திருவருள் கூடட்டும்!..

ஓம் சக்தி ஓம்!.. 
*** 

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

தாயாய் தந்தையாய்..

அழகிய சோலையும் நிழலும் குளமும் குளிர்ச்சியுமாக இருந்தது - அந்த கிராமம்..

சரி .. இங்கேயே ராப்பொழுதுக்கு தங்கி விட்டு கோழி கூப்பிட எழுந்து நாகப்பட்டினத்துக்கு நடையைக் கட்டுவோம்!..

- என்று, எண்ணியபடியே பார வண்டியிலிருந்து கீழே குதித்து இறங்கினான் - அவன்..

அவன் ஒரு வியாபாரி..

நாட்டில் ஆங்காங்கே விளையும் பொருட்களை வாங்கி சுத்தம் செய்து எடையிட்டு நாகைத் துறைமுகத்தின் பெரு வணிகர்களிடம் விற்பனை செய்வது வழக்கம்...

அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே இது தான் தொழில்...

நேர்மை தவறியதில்லை.. ஆனாலும் குறும்புத்தனம் அதிகம்..

இன்றைக்கு இவ்வழியே செல்கின்றான்..

வண்டி முழுதும் மூட்டைகள்.. விலையுயர்ந்த ஜாதிக்காய் மூட்டைகள்..

சோழ தேசத்தின் நெடுவழிகளில் எந்தக் காலத்திலும் கள்வர் பயம் இருந்ததில்லை.. எனவே துணைக்கு என்று ஆட்களில்லாமல் பயணம்..

மாலை மயங்குகின்ற வேளை.. இந்த ஊர் மற்றும் சூழல் பிடித்திருந்தது..

வண்டிக் காளைகளை அவிழ்த்து அருகிருந்த குளத்தில் தண்ணீர் காட்டினான்..

வண்டியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்த வாளியினை அவிழ்த்து அதில் பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு மற்றும் பச்சரிசி தவிடு இவற்றைப் பதமாகக் கரைத்து மாடுகளுக்குக் கொடுத்தான்..

பார வண்டியின் இரண்டு மாடுகளும்  பசி தீரக் குடித்தன..

கொஞ்சம் வைக்கோலை உருவி சுருளாகச் சுற்றி மாடுகளின் முதுகு, கழுத்து. திமில் - பகுதியில் நன்றாகத் தேய்த்து விட்டான்..

மாடுகளை சாலையோர மரத்தில் கட்டி விட்டு வைக்கோலை உருவிப் போட்டான்..

களைப்பு நீங்கிய களிப்பில் மாடுகள் வைக்கோலை மேய்ந்த வேளையில் -
அவனும் குளத்தில் இறங்கி நீராடினான்..

நீராடிக் கரையேறியதும் அருகில் இருந்த ஆலயத்தில்  சிவ தரிசனம் செய்தான்...


நாடு செழிக்க வேண்டும்.. நல்ல மழை பெய்ய வேண்டும்.. ஆறு குளம் நிறைந்து நல்ல விளைச்சல் ஆக வேண்டும்.. உழவனும் வணிகனும் ஏனைய மக்களும் நல்லபடியாக வாழ வேண்டும்!..

கயிலாய நாயகி உடனுறை கண்ணாயிர நாதர் சந்நிதியில் மனதார வேண்டிக் கொண்டான்...

நெற்றி நிறைய திருநீற்றினைத் தரித்துக் கொண்டு வெளியே வந்தான்..

வயிற்றுக்குள் பசியெடுத்தது..

கோயிலுக்கு அருகில் அன்ன சத்திரம்..

உள்ளே புகுந்தவனுக்கு  பலவகைக் கூட்டு துவையலுடன் அன்னம் பரிமாறினார்கள்..

வயிறார சாப்பிட்டபின்  -
அன்ன சத்திரத்தின் அறச்செயல்களுக்காக பத்து வராகனை கொடையாக
சந்தோஷமாகக் கொடுத்தான்...

அன்ன சத்திரக் கண்காணிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி..

ஐயா.. தாங்கள் சற்றே ஓய்வெடுங்கள்.. தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பது எங்கள் கடமை..

அவர்களுக்கு நன்றி சொல்லிய வண்ணம் வெளியே வந்தபோது -
பார வண்டியின் அருகில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்..

அச்சிறுவனைப் பார்த்து வணிகன் கேட்டான் -

என்ன வேண்டும் உனக்கு?..

எனக்கு ஒன்றும் வேண்டாம்!..

பிறகு என்ன பார்க்கின்றாய்?..

வண்டி புதியதாக இருக்கிறதே!.. உங்களுடையதா?..

ஆமாம்!..

மாடுகள்?..

என்னுடையதுதான்!..

வண்டியிலுள்ள மூட்டைகள்?..

அவைகளும் என்னுடையது தான்!..

அப்படியானால் எல்லாமே உங்களுடையது தான்!..

ஆமாம்.. எல்லாமே என்னுடையது தான்!..

எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள்?..

எதற்காக இந்தப் பொடியன் குடைகின்றான்!?..

சிந்தனை விரிந்தது வணிகனுக்குள்..

நாகப்பட்டினத்துக்கு!... - பதிலுரைத்தான்..

ஓ!.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது?.. - சிறுவன் கேட்டான்..

வணிகன் அதிர்ந்தான்..

நான் நினைத்தது சரி தான்!.. இவன் ஒற்றன்!.. இவனுக்குக் கடுக்காய் கொடுத்து விட வேண்டியது தான்!..

ஏன் பதிலில்லை.. இந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கின்றது?..

சிறுவன் நகைப்பும் அதட்டலுமாகக் கேட்டான்..

கடுக்காய்!.. கடுக்காய் இருக்கிறது!...

ஓ.. கடுக்காய்!.. இருக்கட்டும்.. இருக்கட்டும்!..

நகைத்த வண்ணம் அச்சிறுவன் அங்கிருந்து அகன்றான்..

வியாபாரிக்கு நிம்மதி.. அந்த நிம்மதியுடனேயே கண்ணயர்ந்தான்..

மறுநாள் அதிகாலையில் சேவல் கூவியது..

ஊரும் துயில் நீங்கி எழுந்தது..

அங்கிருந்து வியாபாரி சுறுசுறுப்புடன் நாகைக்குப் புறப்பட்டான்..

காலை நேரம்.. பரபரப்பான கடைவீதி..

ஜாதிக்காய்.. ஜாதிக்காய்!.. - என்று, கூவிய வண்ணம்
தான் கொண்டு வந்த மூட்டைகளை வண்டியிலிருந்து இறக்கினான்..

பலரும் வந்தார்கள்.. மூட்டைகளை அவிழ்த்துக் காட்டச் சொன்னார்கள்..

 அன்றைய நடப்பு விலையைப் பேசினார்கள்..

நல்லவிலை கிடைக்கும் போலிருக்கிறதே!.. - என்ற ஆவலுடன் மூட்டையைப் பிரித்தான் வியாபாரி ..

ஆச்சர்யத்துடன் அதிர்ந்தான்..

மூட்டையில் இருந்தவை - கடுக்காய்!..

என்னப்பா.. இது ஜாதிக்காய்  என்று சொன்னாய்,, கடுக்காயாக இருக்கின்றது?..

உண்மையாகவே நீ ஜாதிக்காய் தான் கொண்டு வந்தாயா?..

ஜாதிக்காய்க்கும் கடுக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு!...

நாகப்பட்டினத்துக் கடை வீதி வியாபாரியைப் பார்த்துச் சிரித்தது..

பிழை செய்து விட்டேன்.. பெரும் பிழை செய்து விட்டேன்..

அவமானத்தில் குறுகினான் வியாபாரி...

எல்லா மூட்டைகளையும் மீண்டும் வண்டிக்குள் வாரிப் போட்டுக் கொண்டு முதல் நாள் நாள் இரவு தான் தங்கியிருந்த ஊரை நோக்கி விரைந்தான்..

மாலை வேளை..
கோயில் வாசல்.. குளக்கரை.. சந்நிதியை நோக்கியவாறு -

இது உனக்குத் தகுமா?.. நீதியா.. நியாயமா?.. - கூவினான்..

நேற்றைய பொழுதில் இவனைக் கண்டவர்கள் இப்போது கூடி விட்டார்கள்..

வருத்தம் தோய்ந்த அவனது முகத்தைக் கண்டு விசாரித்தார்கள்..

என்ன ஆயிற்று.. மூட்டைக்கு நல்ல விலை தகையவில்லையா?..

அப்படியிருந்தால் தான் பிழையில்லையே.. மூட்டை  எல்லாம் மாறிப் போய் விட்டன..

புரியவில்லையே.. என்ன சொல்கிறீர்கள்!?.. - ஊர்க்காரர்கள் வினவினார்கள்..

ஐயா.. நான் கொண்டு வந்தது ஜாதிக்காய்.. நேற்று இங்கு இருந்தவேளையில் சிறுவன் ஒருவன் வந்து மூட்டையில் என்ன இருக்கின்றது என்று கேட்டான்.. நான் அவனை மதிக்காது கடுக்காய் என்று பொய் சொன்னேன்..  அந்தப் பாவம் - கடைத் தெருவில் மூட்டையைப் பிரித்தபோது எல்லாமே கடுக்காய் ஆகிப் போனது!..

உண்மையாகவா.. இப்படியும் நடக்குமா?.. - ஊர்க்காரர்கள் வியந்தார்கள்...

உண்மைதான் ஐயா.. இதோ பாருங்கள்!..

மூட்டையை அவிழ்த்துக் காட்டினான் வியாபாரி..

ஊர்மக்கள் ஆவலுடன் எட்டிப் பார்க்க - உள்ளே இருந்தவை - ஜாதிக்காய்!..

என்னய்யா.. பொய் சொல்கிறீர்?.. இது ஜாதிக்காய் தானே.. கடுக்காய் என்கிறீர்?.. எங்களைப் பித்தனாக்குகின்றீரா?..

இல்லை ஐயா!.. இல்லை.. நான் தான் பித்தனாகிப் போனேன்.. நாகையில் கடுக்காயாக இருந்ததால் தான் விலை போகவில்லை.. இங்கே வந்ததும்
ஜாதிக்காய் ஆகி விட்டன.. என்ன மாயம் நடந்திருக்கிறதோ தெரியவில்லை..

இறைவா.. எம்பெருமானே!..
அறியாமல் பொய் சொல்லி விட்டேன்.. என் பிழை மன்னித்தருள வேண்டும்!..

எல்லாம் என்னுடையது தான் என்று அகந்தை கொண்டிருந்தேன்..
உருவம் கண்டு எள்ளி நகையாடினேன்.. என்னை மன்னித்தருள வேண்டும்!..

அரற்றினான்.. அழுதான்.. தொழுதான்!..

அவ்வேளையில் மீண்டும் அச்சிறுவன் அனைவரது முன்னிலையிலும் தோன்றினான்..

வணிகனே!.. உன்னை மன்னித்தேன்.. நல்லவனாகிய உனக்குப் பொய்யுரை எதற்கு?.. மனம் திருந்தி நல்வாழ்வு வாழ்வாயாக!..

கருணைக் கடலாகிய கணபதி  - வணிகனை வாழ்த்தி மறைந்தார்..

ஒற்றன் என்றல்லவா நினைத்திருந்தேன்..
ஒற்றைக் கொம்பன் என்று நினைக்கத் தோன்றவில்லையே!..

- வணிகன் தரையில் விழுந்து வணங்கினான்..

தன்னுணர்வு பெற்ற ஊர் மக்கள் விநாயகனைப் போற்றி வணங்கினார்கள்..

வணிகனும் ஜாதிக்காய் மூட்டைகளை சந்தையில் நல்ல விலைக்கு விற்றான்..

கையில் கிடைத்த தொகையைக் கொண்டு அவ்வூரில் அறச் செயல்களைப் புரிந்தான்..

நல்வாழ்வு வாழ்ந்து நற்பேறு எய்தினான்..

கடுக்காய் பிள்ளையார் - திருக்காறாயில்
இவ்வண்ணமாக விநாயகப் பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய தலம் -

திருக்காறாயில்..

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று,,
திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..

இந்தத் திருவிளையாடலின் காரணமாக
இத்தலத்தில் விநாயகருக்கு -
கடுக்காய்ப் பிள்ளையார் என்றே திருப்பெயர்..

திருஆரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் 15 கி.மீ., தொலைவில் உள்ளது - திருக்காறாயில்..

இன்றைக்கு திருக்காரவாசல் என்று வழங்கப்படுகின்றது..


இன்றைக்கு விநாயக சதுர்த்தி..

விநாயக வழிபாடு என்பது மகத்தான தத்துவம்..

உள்ளுணர்ந்து வழிபடுதலே சாலச் சிறந்தது..

ஒரு செயலைச் செய்யும் வல்லமையை நமக்களித்து உறுதுணையாய் நிற்பதனாலேயே - வல்லப கணபதி..


அப்படி வல்லமையுடன் நல்ல செயல் ஒன்றைச் செய்வதற்கான புத்தியையும் அந்த செயலில் வெற்றியையும் அருள்வதனாலேயே -

சித்தி புத்தி கணபதி..

வல்லபை மற்றும் சித்தி புத்தி - எனும் சிறப்புப் பெயர்கள் விநாயகருக்கே உரியன..




தாய் தந்தையரை வலம் வந்து பணிவதே விநாயக தத்துவம்...

இதைத் தான் -

தந்தை தாய்ப் பேண்!,, - என்று மொழிந்தார் ஔவையார்..

இயன்றவரை அவ்வண்ணம் இருப்போர்க்கு
விநாயக மூர்த்தியே - தந்தையாய் தாயாய் இருப்பார் என்பது திண்ணம்..


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்..

வித்தக விநாயக.. விரைகழல் சரணே!..
***

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

இற்றைத் திங்கள்

மானம்பாடி ஸ்ரீ நாகநாதர் திருக்கோயிலின் இன்றைய நிலை:-
தொடர்புடைய பதிவுகள் -

அற்றைத் திங்கள் 1

அற்றைத் திங்கள் 2

***

நான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..

இங்கே இறங்கிக் கேளுங்கள்.. சொல்லுவார்கள்.. பக்கம் தான்!..

விவரம் கூறிய நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..

இன்றைய மானம்பாடியில் -
ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர்

மாதா கோயில்!..

இப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -
நாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில்
மிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்...

பேர்கொண்ட மன்னனால் கட்டப்பட்டு
ஆயிரம் வருடங்களாக அங்கிருக்கும்
சிவன் கோயிலுக்கான பேருந்து நிறுத்துமிடம் -

சோழனின் பெயரால் இல்லை!..
அவன் எழுப்பிய கோயிலின் பெயரால் இல்லை!..

இதுவே மிகப்பெரிய சாட்டையடி..

கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கட்டப்படுவதற்கு முன்பாக
சிவாலயத்துக்கு அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தத்திற்கு என்ன பெயர்?..

அதை எல்லாம் விசாரிக்கும் மனநிலை எனக்கு இல்லை..

எதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..

நாகநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?..

சாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..

அதுதான் கோயில்.. - என்றார்..

அம்பாள் சந்நிதி
கோயில் கோபுரம் எதையும் காணவில்லையே!.. - எனக் கேட்டேன்..

அவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே!..

அதைக் கேட்டதும் மனம் திடுக்கிட்டது.. கண்களில் நீர் திரையிட்டது..

காலமகள் காப்பாற்றித் தந்த கலைச் செல்வங்களைக்
கை நழுவ விட்டோமே.. கை கழுவி விட்டோமே!..

நாம் மன்னிப்புக்கு உரியவர்கள் தானா?..

மனம் பேதலித்தது..

அந்த இடத்திலிருந்து கோயிலை நோக்கி என்னால் நடக்க முடியவில்லை..

கால்கள் தளர்ந்தன..
கால்கள் வலிக்கவில்லை ஆயினும் மனம் வலித்தது..
பரபரப்பான சாலையைக் கவனமாக கடந்தேன்..



இன்றைய நாளில் -
ஸ்ரீ நாகநாதர் கோயில் எனப்படும் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலை நெருங்குவதற்குள் தொண்டையை அடைத்துக் கொண்டது துக்கம்..

மாமன்னன் ராஜேந்திர சோழன் இந்த சிவாலயத்தை எழுப்பும் போது
எப்படியிருந்ததோ இதன் தோற்றம்.. நாம் அறியோம்..

ஆனால், இன்றைக்கு?..

செங்கல் கொண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட நுழைவாயில்..
அதுவும் பாளம் பாளமாக வெடித்திருந்தது..

சாதாரணமான மூங்கில் தட்டிகள் தான் கதவுகளாக இருக்கின்றன..
அவற்றில் பச்சை நிறத்தில் வலை ஒன்று பார்வை மறைப்பாக கட்டப்பட்டிருக்கின்றது..

நான் அங்கே சென்ற நேரத்தில் கோயிலின் முன்பாக சிலர் நின்றிருந்தனர்..

அவர்களுக்குள் வாக்கு வாதம்..

கோயிலுக்கு உள்ளே போகணும்!..

அதெல்லாம் முடியாதுங்க.. எங்களுக்கு வந்த உத்தரவு தான்..

அப்படி..ன்னா அதை காட்டுங்க!..

அதையெல்லாம் உங்க கிட்ட காட்டணும்..ன்னு அவசியமில்லை..
நாங்க இன்னது செய்யணும்..ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?..

நான் சாமி கும்பிடப் போறேன்!...

கோயில் வேலை ஆகிக்கிட்டு இருக்கு..  இப்ப யாரையும் உள்ளே விட முடியாது.. இங்கேயே நின்னு கும்பிட்டுப் போங்க!..

நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த
எனக்குள் கலக்கம்..

இவ்வளவு தூரம் வந்ததற்குப் பயனில்லையோ!.. மனம் பதறியது..

ராஜேந்திர சோழன் எழுப்பிய திருக்கோயில் தரை மட்டமாகக் கிடப்பது
கோயிலின் மதில் ஓரமாக - நின்ற இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது..

தனியார் தொலைக்காட்சியிலிருந்து வந்திருந்தவர்கள் சற்றே அலுப்புடன் நின்றிருந்தார்கள்..

அவ்வழியாக வந்தவரிடம் மைக்கினை நீட்டினார் ஒருவர்..

அவர் பேசுவதற்குத் தடுமாறினார்..

இன்னொருவர் வெளியில் இருந்தபடியே இடிந்து கிடந்த மதிலின் வழியாக கோயிலின் சிதைவுகளை வீடியோ படமாக்கிக் கொண்டிருந்தார்..

அதற்குள் அங்கிருந்த மற்றொருவர் - என்னைப் பார்த்து,

நீங்க யாருங்க?.. - என்றார்...

நான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன்!..

கையில் இருந்த பூச்சரத்தினைக் காட்டினேன்..

அதெல்லாம் பூசை முடிஞ்சி போச்சு.. ஐயரு பூட்டிட்டு போய்ட்டார்!..

கோயிலின் வடக்கு பக்கமாக இருந்த குடிசையைக் கைகாட்டினார்..

அவர் சுட்டிக் காட்டிய குடிசைக்கு தகரம் வேயப்பட்டிருந்தது..
சாதாரண மரச் சட்டங்களால் ஆன கதவு..

அருகில் ஒரு கொட்டகை.. அதுவும் தகரங்களால் அமைக்கப்பட்டிருந்தது..
அதன் மூன்று பக்கமும் அடைப்புகள் இல்லாமல் திறந்து கிடந்தது..

மறுபடி எப்போது வருவார்?..

எப்போ வருவார்,,ன்னு தெரியாதுங்க.. வந்தா தான் உண்டு.. பெரிய ஆபீசர் எல்லாம் வர்றாங்க.. பிரச்னையா இருக்கு..போங்க.. போங்க!...

இதற்கிடையே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் -

யோவ்.. நீ யாரு?.. வர்றவங்கள வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு.. கோயிலு..ன்னா நாலு ஜனம் வரத் தான் செய்வாங்க.. நீ என்ன விரட்டுறது?..

உடனே இவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது.. ஒரே கூச்சல்..

அந்தவேளையில் -

அதோ வர்றாருங்க வாட்ச்மேன்.. அவரைக் கேளுங்க நீங்க!.. - என்றார் ஒருவர்..

அவரிடம் சென்று விவரம் சொல்லிக் கேட்டேன்...

அருகிருந்த பெண்மணியிடம் விக்ரகங்கள் வைக்கப்பட்டிருந்த குடிசையைத் திறந்து விடச் சொன்னார்...

அவருக்கு நன்றி கூறிய நான் -
இங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா?.. - எனக் கேட்டேன்...

அதற்கெல்லாம் இப்போ அனுமதி இல்லைங்க.. பிரச்னை ஆகி விட்டது!.. - என்றார்..

இதற்கு மேல் கேட்பதற்கு  ஏதும் இல்லை..

கோயில் பழுது பட்டிருந்தாலும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தபோது
வந்து தரிசிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட மடமையை எண்ணி வருந்தினேன்..

துக்கம் தொண்டையை அடைத்தது..

அதற்குள் - கோயிலாக இருந்த குடிசை திறக்கப்பட்டது..

பழுதுபட்டிருந்த தலைவாயிலின் -
மூங்கில் கதவுகளைக் கடந்து  கோயிலுக்குள் நடந்தேன்..

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்திலும்
அதற்குப் பின் பல நூறு வருடங்கள் வரையிலும் -
இத்திருக்கோயிலில் என்னவெல்லாம் நடந்திருக்கும்!..

எத்தனை எத்தனை பேரிகைகள்
எத்தனை எத்தனை துந்துபிகள்
எத்தனை எத்தனை முழவுகள்
எத்தனை எத்தனை சங்குகள்..

அவையெல்லாம் எழுப்பிய பேரொலி என் காதுகளில் கேட்டது..

தீபங்கள் ஏற்றியவர் எத்தனை பேர்?..
தேவாரம் இசைத்தவர் எத்தனை பேர்?..
பல்லாண்டு பாடியவர் எத்தனை பேர்?..
பதம் காட்டி ஆடியவர் எத்தனை பேர்?..

செவிகளுக்கு அருகாக ஜதிஸ்வரங்களுடன் திருமுறை இன்னிசை கேட்டது..

திறக்கப்பட்ட தகரக் குடிசையின் உள்ளே -

வெண்கொற்றக் குடையினோடு சூரிய சந்திர பட்டங்களுடன்
ரிஷப வாகனத்தில் தேவியுடன் வலம் எழுந்தருளிய ஸ்ரீ கயிலாய நாதர்
இன்றைக்கு ஏழையினும் ஏழையாய் வீற்றிருந்தார்!..

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மாறாத பேரெழிலுடன்!...

அப்படியே மனம் மடங்கியது.. குரல் வற்றியது.. ஜீவன் ஒடுங்கியது..

ஓலைக்குடிசையின் படல்களைத் திறந்து விட்ட அம்மையாரிடம் பூச்சரங்களை  கற்பூரக் கட்டிகளை ஒப்படைத்தேன்..

பூச்சரத்தினை அம்மையப்பனுக்கு சாத்தி கற்பூர ஆராதனை செய்தார்..

ஏதேதோ நினைவுகள் அலையலையாய் நெஞ்சிற்குள் மூண்டெழுந்தது..
கண்களில் நீர் வழிந்தது.. ஏதோ பிதற்றினேன்..

அந்த அம்மையார் ஆற்றுப்படுத்தினார்...

திருநீற்றினைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்..

சோழன் எழுப்பிய ஆலயம் பிரிக்கப்பட்டுக் கிடந்தது..

பிரித்துக் கிடக்கின்ற கற்களை நான் புகைப்படங்கள் எடுத்து விடாதபடிக்கு - என்னைக் கண்காணித்துக் கொண்டே  ஒருவர் தொடர்ந்து வந்தார்..

சிவாலயம் பிரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகின்றது..
அஸ்திவாரத்திலிருந்து சில அடி உயரத்திற்கு கற்களை அடுக்கி ஏதோ ஒருவகை சிமெண்ட்டினால் பூசி வைத்திருக்கின்றார்கள்..

பிரகாரம் முழுதும் பிரிக்கப்பட்ட கருங்கல் பாளங்கள்..

தெற்கு மேற்கு வடக்கு - என, மூன்று கோட்டங்களிலும் இருந்த
நடராஜர், கணபதி, கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை முதலான திருமேனிகள் -

மூல மூர்த்தி இருக்கும் தகரக் குடிலின் அருகில் -
தகரக் கொட்டகையின் நிழலில் கிடத்தப்பட்டிருக்கின்றன..


மகர தோரணம் முதலான சிற்ப வேலைப்பாடுகளுடைய தூண்களும் கற்களும் கோயில் பரப்பில் ஆங்காங்கே கிடந்தன..

இவற்றுக்கிடையே நான் காண வந்த திரவியம் எங்கே கிடக்கின்றது?..

எதைத் தேடி வந்தேன்!?..

கலைப் பெட்டகம் ஒன்றினைத் தேடி வந்தேன்!..
அதனை விழிகளால் தேடினேன்!.. எங்கே.. எங்கே?..

அதோ.. அதோ.. அந்த இடுக்குக்குள்!..

ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் திகழும் கருங்கற்படைப்பு
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது...

நன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன்
ராஜேந்திர சோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் அரசு அலுவலர்கள்..

இப்படித்தான் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகின்றார்..

ஆனால்,
அந்தக் கலைப்படைப்பில் விளங்குபவர்கள் -

நன்றி - திரு பாலகுமாரன்
ராஜராஜசோழனுடன் அவனுடைய தேவியர் மற்றும் இளவரசன் ராஜேந்திரன்!..

- என்று திருமிகு பாலகுமாரன் கூறுகின்றார்..

எதுவாயினும் காண்பவர்க்குக் கலைவிருந்து..

சரிந்து கிடக்கும் கலைச் செல்வங்களுக்கு இடையே -
அந்தக் கலைச் சிற்பத்தைச் சுட்டிக் காட்டி -
இதை மட்டும் படம் எடுத்துக் கொள்கின்றேன்!.. - என்று மன்றாடினேன்..

ஈவு இரக்கம் காட்டப்படவில்லை...

ஆனால் - கோயில் வளாகத்தின் வெளியே நின்று படங்கள் எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தடையும் சொல்லவில்லை...

அந்த அளவில் கோயிலுக்கு வெளியே நின்று
மதிற்சுவரின் வழியாக எடுக்கப்பட்ட படங்களைத் தான்
இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்!..



கோயில் இப்போது பிரித்துப் போடப்பட்டிருந்தாலும் -

தொடர்ந்து வேலை நடக்கும்.. அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புடன் விளங்கும்.. - என்று சொல்லப்படுகின்றது...

எந்த அளவுக்கு சிறப்பு என்பது தான் கேள்வி!..

தகரக்குடிசைக்குள் -
ஸ்ரீ நாகநாத ஸ்வாமி, சௌந்தர்ய நாயகி அம்பாள் - திருமேனிகளுடன்

விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டீசர், சூரியன் - ஆகிய திருவுருவங்கள் வைக்கப்பட்டிள்ளன..

குடிசைக்கு வெளியே நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்கை - முதலான திருவுருவங்கள் கிடத்தப்பட்டுள்ளன..

ராஜேந்திரன் எழுப்பிய தொன்மையான கருங்கல் கட்டுமானத்தின் ,ஏலாக எழுப்பட்ட செங்கல் விமானம் காலப் போக்கில் பழுதுற்றது,,

அங்கே முளைத்த செடி கொடிகளால் விமானம் பிளவு பட்டது..

அம்பாள் கோயிலும் இப்படியே ஆகியிருக்கின்றது..

ஏனைய சந்நிதிகளான விநாயகர், முருகன், சண்டீசர் - ஆகிய சந்நிதிகள் பல வருடங்களுக்கு முன்பே சிதிலமடைந்து விட்டன..


வருமானம் இல்லாத கோயில் என்று அறநிலையத்துறையும் கண்டு கொள்ளவில்லை..

பழுதான கோயில் என்று மக்களும் கண்டு கொள்ளவில்லை..

அம்பாள் சந்நிதி சிதிலமடைந்திருந்தாலும்
இடிக்கப்படவோ பிரிக்கப்படவோ இல்லை..

விநாயகர், முருகன், சண்டீசர் - சந்நிதிகள் முற்றிலும் சிதிலமாகி உருக்குலைந்த நிலையில் அப்படியே நிற்கின்றன..

ராஜேந்திர சோழன் எழுப்பிய கற்றளி மட்டுமே முற்றாகப் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றது...

சில ஆண்டுகளுக்கு முன்பு
இந்தக் கோயிலைப் பற்றி அறிந்த பின்
வந்து தரிசிக்காமல் காலம் கடத்தி விட்டதற்கு மிகவும் வருந்தினேன்...

கடல் கடந்த நாட்டில் வேலை செய்யும் எனக்கு
ஆண்டுக்கு ஒரு முறை விடுப்பு..

அங்கிருந்து தாய்நாட்டிற்கு வரும்போது
நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களையெல்லாம் -
இங்கே குறுகிய நாட்களுக்குள் நடத்தி விடுவதற்கு முடியவில்லை...

என்ன செய்வது!..
எனக்கென்று கேட்கவும் காணவும் எவையெல்லாம் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ - அவை மட்டுமே!..


கும்பகோணத்திலிருந்து  அணைக்கரை செல்லும் செல்லும் சாலையில் ( இது தான் சென்னை நெடுஞ்சாலை) சோழபுரத்தை அடுத்து உள்ளது மானம்பாடி..

வட மாவட்டங்களின் நகரங்களுக்குச் செல்கின்ற
அரசுப் பேருந்துகள் உள்பட  எவையும் இவ்வூரில் நிற்பதில்லை..

குடந்தையிலிருந்து அணைக்கரை - திருப்பனந்தாள் முதலான சிற்றூர்களுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகள் மட்டுமே மானம்பாடி கோயிலின் அருகே நின்று செல்கின்றன..


மானம்பாடி திருக்கோயிலின் இன்றைய நிலை மிகவும் சோகம்..
மிகுந்த வருத்தமாக இருக்கின்றது...

ஊடக வெளியில் - எதையெல்லாமோ சொல்கின்றார்கள்..
யார் யாரோ - பொங்கியெழுகின்றார்கள்.. ஆர்ப்பரிக்கின்றார்கள்...

எது எப்படியிருந்தாலும் -
கோயிலின் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்..

அதுவும் கவனமாக நடக்க வேண்டும்..

நம் முன்னோர்களின் சிறப்புகளை எல்லாம் சிந்தாமல் சிதறாமல்
அடுத்த தலைமுறையிடம் சேர்க்கவேண்டும்..

அது தான் நல்லோர்களின் நாட்டமாக இருக்கின்றது..

அவ்வண்ணமே நாமும் விரும்புவோம்..
நல்லதே நடக்கட்டும்!..
*** 

புதன், ஆகஸ்ட் 16, 2017

அற்றைத் திங்கள் 2

தொடர்புடைய முதல் பதிவிற்கான இணைப்பு -

அற்றைத் திங்கள் 1

ஸ்ரீராஜேந்திர சோழ மாமன்னன் எழுப்பிய
ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலைத் தரிசிப்பதற்காக
கடந்த  புதன் கிழமை  (09/ ஆகஸ்ட்) மானம்பாடிக்குச் சென்றிருந்தேன்..

விடியற்காலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட நான்
ஏழரை மணியளவில் மானம்பாடி கோயிலில் இருந்தேன்...

அங்கே நடந்தவைகளும் நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்..

அதற்கு முன்பாக -
மானம்பாடி சிவாலயத்தின் இன்றைய நிலையைக் காணும் முன்பாக -
இன்றைய பதிவிலுள்ள படங்களைக் கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்..

இனி ஒருக்காலும் இத்தகைய அழகு கிடைக்காது என்றே தோன்றுகின்றது..


இந்தப் பதிவிலுள்ள படங்கள் அனைத்தும்
தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான
முனைவர் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடைய
தளத்திலிருந்து பெறப்பட்டவை..



திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..

பிக்ஷாடனர்
லிங்கோத்பவர்
பராந்தக சோழர் (907 - 950) இவர் தான் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய அரிஞ்சய சோழரின் தந்தை.. 

இவர்தான் தில்லையம்பலத்திற்குப் பொன் தகடு வேய்ந்தார்..

இவர் தான் -
வீரநாராயணபுர ஏரி - என, பெரிய ஏரியை வெட்டுவித்தார்.. 
அந்த ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையையும் அமைத்தார்..

அந்த வீரநாராயணபுர ஏரிதான் இன்றைக்கு வீராணம் ஏரி..

பராந்தக சோழர்  அமைத்த பெருஞ்சாலைதான் - 
மானம்பாடி நாகநாதர் கோயிலின் வடபுறமாக கோயிலை ஒட்டிவாறு செல்லும் சென்னை நெடுஞ்சாலை!..

பராந்தக சோழரின் காலத்திலேயே இவ்வூர் பெருஞ்சிறப்புற்று விளங்கிற்று..

இன்றைய மானம்பாடியின் ஐயனார் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள் - சோழர்கள்..

கிழக்காசிய பௌத்தர்கள் வருகை தந்த ஊர்களுள் இன்றைய மானம்பாடியும் ஒன்று..



மாமன்னன் ராஜேந்திர சோழனையும் அவனது தேவியரையும்
ஆடவல்லானாகிய நடராஜ மூர்த்திக்கு வலப்புறமும்

மன்னனது ராஜகுருவையும் அரசு அலுவலர்களையும் நடராஜ மூர்த்திக்கு இடப்புறமும் காணலாம்..

இந்த சிற்பங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை..


கோயிலின் அஸ்திவாரத்திலிருந்து மேல்தளம் வரை கருங்கல் கட்டுமானம்..

அதற்கு மேலுள்ள விமானம் செங்கற்கட்டுமானம்..

கோயிலின் தென்புற கோட்டத்தில் பிக்ஷாடனர், நடராஜர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி - திருமேனிகள்..

மேல்புற கோட்டத்தில் அண்ணாமலையாராகிய லிங்கோத்பவர்..

வடபுறத்தில் பிரமன், துர்கை, உமாதேவியுடன் கங்காதரர்..

மகர தோரணங்களில் கண்ணப்ப நாயனார் மற்றும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யானை.. அதனருகே கவரியுடன் சாமரம் வீசும் கன்னி..

இந்த சிற்ப அமைவு காவிரியாள் என்று குறிக்கப்படுகின்றது..

கோயிலின் சுற்றுச் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள்..

அவற்றுள் -

வீரநாராயணபுர இலச்சிக்குடி எனப்பட்ட மானம்பாடியின் வணிகர்கள் தங்களது மன்னனாகிய ராஜேந்திரன் பெயரில் திருக்கோயில் நந்தவனம் அமைத்த செய்தி..

சோழனின் அரண்மனைக் கோயிலில் தேவாரம் பாடிய நாயகன் மறைக்காடன் பதஞ்சலி பிடாரன் - மூன்று நந்தாவிளக்குகளுக்காக அளித்த கொடை..

குலோத்துங்க சோழன் (1088) காலத்தில் கோயிலில் தமிழ்க்கூத்து நிகழ்த்துவதற்காக திருமுதுகுன்றன் என்பவன் நிவந்தம் அளித்த குறிப்பு..

- ஆகியன முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றது..

மேலும் பல கல்வெட்டுகள்கோயிலின் நிர்வாகம் மற்றும்
வழிபாட்டு முறைகளைத் தெரிவிக்கின்றன..

மானம்பாடி கோயிலைப் பற்றிய
மேற்கண்ட சிறுகுறிப்புகள்
திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது
கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை...


திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..
***

கூர்வாள் கொண்டு கொடும் பகை முடித்த
கொற்றவை
பல்வேறு சிறப்புகளுடன் விளங்கிய கோயில் நாளடைவில் பழுதுற்றது...

இந்தக் கோயிலின் பெருஞ்செல்வங்கள் எங்கே போயினவோ?..

தெரியவில்லை..

நந்தாவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்ததெல்லாம் பழங்கதையானது..

கயிலாயமுடையார் திருக்கோயிலில் நித்ய வழிபாட்டு முறைகளும் சிரமத்துக்குள்ளாயின..

சில ஆண்டுகளுக்கு முன்பாக நெடுஞ்சாலைப்  பணிகளுக்காக கோயிலை அகற்ற முற்பட்டபோது தான் இந்தக் கோயில் வெளியுலகிற்கு அறிமுகமானது...

பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததைக் கண்ட
தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது முடிவினைக் கைவிட்டது..

அத்தோடு இந்தக் கோயிலைப் பற்றி அனைவரும் மறந்து விட்டனர்..

அதற்கடுத்து -
இக்கோயிலைப் புதுப்பிப்பதாக எழுந்தது தமிழக அரசின் அறநிலையத்துறை...

பாலாலயம் செய்து விட்டு கோயிலைப் பிரித்தனர்..

அதையடுத்து சில பிரச்னைகள்..

வழக்கம் போல அவைகளும் காற்றில் கரைந்து போயின..

அதற்குப் பின் -
சென்ற வாரத்தில் யுனஸ்கோவின் அறிக்கையால்
மீண்டும் மானம்பாடி கோயில்  பேசப்படும் பொருளாகி இருக்கின்றது..

ஆறாத மனதுடன் நாகநாதர் கோயிலைத்  தரிசிப்பதற்கென்றே தஞ்சையிலிருந்து மானம்பாடிக்குச் சென்றேன்..

அங்கே நடந்தவைகளும் 
நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்...

காலமகள் காப்பாற்றிக் கொடுத்த
கலைச் செல்வங்களை
இப்படியும் காண நேர்ந்ததே!..
மனம் பதறித் துடித்தது..
* * *

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

வந்தேமாதரம்..

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்..
தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்..
வாழ்க பாரதம்.. வெல்க பாரதம்!..

வந்தே மாதரம்!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
ஸூஹாஸினீம் ஸூமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..


வந்தே மாதரம்!.. 

தேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியின் மந்திரம் -  வந்தே மாதரம்!..

ஆங்கிலேய அரசின் அடிமைத் தளையிலிருந்து நாட்டை மீட்டெடுத்த
வீர  முழக்கம் வந்தே மாதரம்!..

வங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1984) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட நிகழ்ச்சி -
1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாடு

இப்பாடலைக் குழுவினருடன் இணைந்து பாடியவர் - ரவீந்த்ரநாத் தாகூர் 

அரசின்  அடக்கு முறையையும் மீறி - பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில்
வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் -  ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி.

இவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள். 

மகான் ஸ்ரீ அரவிந்தர் ஆகஸ்டு 7, 1906 அன்று துவக்கிய நாளிதழின் பெயர் -  வந்தே மாதரம்!.. 

பஞ்சாப் சிங்கம்  லாலா லஜபதி ராய் 1906ல்  லாஹூரில்  ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர்  -  வந்தே மாதரம்!..

1906  மார்ச் மாதம் வங்காள  தேசத்தில் பரிசால் என்ற இடத்தில் நடந்த பரிசால் பரிஷத் ஊர்வலத்தினுள்

ஆங்கிலேய அரசு கூட்டத்தினுள் புகுந்து தடியடி நடத்தியது..

கொடூரமான தாக்குதல்.. தொண்டர்கள் மண்டை உடைபட்டு விழுந்தனர்..  ஊர்வலம் பாதியிலே  நின்று போனது. 

இதற்குக் காரணம்  மக்கள் முழங்கிய  - வந்தே மாதரம்!..


மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல்  கொடி ஒன்றினை வடிவமைத்து  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர். 

அது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.

அந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் -  வந்தே மாதரம்!..

தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 

அக்காலத்தில்  சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது..

வந்தே மாதரம்!.. - என்று முழங்கியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் - 

இன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்!..

( நன்றி - விக்கி பீடியா )


சுதந்திரப் போராட்டத்தில் 
தமது இன்னுயிரை ஈந்த தியாக சீலர்களை 
மனதார நினைந்து வணங்குவோம்!..


அனைவருக்கும் 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..
* * *

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..


தரணியில் தர்மம் தழைக்கட்டும்..
அவனருளால் இந்த வையம் செழிக்கட்டும்..


ஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்..
அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
பதித பாவனம் ஸ்வாமி பக்த சாதகம்..
ஓம்.. ஓம்..


முரளி மோகனம் ஸ்வாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..


நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் ஸ்வாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச சன்னியம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..


சத்ய பங்கஜம் ஸ்வாமி அந்த்ய புஷ்பகம்
சர்வ ரட்சகம் ஸ்வாமி தர்ம தத்துவம்
ராக பந்தனம் ஸ்வாமி ராச லீலகம்
கீத போதகம் ஸ்ரீ க்ருஷ்ண மந்திரம்!..

ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்.. ஓம்.. ஹரி ஓம்..

இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்


வசுதேவ ஸூதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.. 
***