நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 30, 2019

அன்பின் சுடர்

வாழ்க நீ எம்மான்..


வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க .. வாழ்க..
-: மகாகவி :- 



இன்று அண்ணலின் நினைவு நாள்

வாழ்க மகாத்மா..
ஃஃஃ

செவ்வாய், ஜனவரி 29, 2019

கலை விருந்து 2

சென்ற ஆண்டில் தீபாவளிக்கு முன்னதாக
தொடங்கப்பட்ட தொடர் பதிவு...

அடுத்தடுத்த பதிவுகளால்
தூங்கிக் கிடந்தது - இந்த தொடர்...

இனி அவ்வப்போது படங்களுடன் மலரும் என நம்புகிறேன்...

இதன் முதற்பகுதிக்கான இணைப்பு - கலை விருந்து 1

ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ளது - இந்தக் கொன்றை... 

சமீபத்திய கஜா புயலில் சாய்ந்து விட்டது என்றார்கள்...


அழிந்து போன இனமாகிய டைனோசரின் முட்டைகள் 
இப்பூவுலகில் ஆங்காங்கே கிடைக்கின்றன...

அதனால் அதனை நம்புகின்றனர் அனைவரும்...

ஆனால்
அதனையும் மிஞ்சியதாக நமது புராணங்களில் சொல்லப்படுவது யாளி!..

அவை சிங்கமுக யாளி, கஜமுக யாளி என்று இரண்டு வகை..

அப்படியான சிங்கமுக யாளி சிற்பங்கள் எந்தக் கோயிலையும் விட
தஞ்சை பெரிய கோயிலில் அதிகம்...

அதுவும் அந்த யாளியை அடக்கிய வீரர்கள் -
அதன் மீது வெகு சந்தோஷமாகப் பயணம் செய்வது போன்ற சிற்பங்கள்...

மாமன்னனின் சிந்தனை எப்படியெல்லாம் விரிந்து பரந்திருக்கின்றது.. 
- என்பதை நினைக்குபோது புல்லரிக்கின்றது...

யாளியின் மீது வீரர்கள்..
யாளியின் மீது பயணிக்கும் வீரர்களின் சிற்பத்தொகுதியின் ஒரு பகுதி..

கருவறையின் தெற்கு வாசல்.. 
இந்தக் கல்வெட்டுத் தொகுப்பில்
மாமன்னன் ராஜராஜசோழனின் திருப்பெயரைத் தரிசிக்கலாம்!..


இனி வரும் இரண்டு படங்களையும் பெரிதாக்கிப் பாருங்கள்...

மறுமுறை வாய்ப்புக் கிடைக்கும்போது தஞ்சைக்குச் சென்று
பெரிய கோயிலின் கல்வெட்டுகளை மெல்ல வருடி விட்டு
அவற்றில் காதை வைத்துக் கேளுங்களேன்!...



ஸ்ரீசண்டேஸ்வரரின் சந்நிதிக்கு எதிரில்
ராஜராஜ சோழப்பெருந்தகையின் மெய்க்கீர்த்தி உள்ளது என்கின்றனர்..

என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை..

கருவறையின் வடக்கு திருவாசலில் இருந்து முருகனின் திருக்கோயில்..
தஞ்சை பெரிய கோயிலின்
கந்த கோட்டம் காணத் திகட்டாத கலையமுது!...

முருகப்பெருமான் திருக்கோயிலின் எந்த ஒரு பகுதியிலும்
சோழன் எந்த ஒரு எழுத்தையும் பதிக்கவில்லை...

எனவே - இது பிற்கால மன்னர்களின் கைவண்ணம் என்கின்றார்கள்...

ஆனால், உண்மை வேறு...

சொன்னால் சண்டைக்கு வருவார்கள்... நமக்கு எதற்கு ஊர்வம்பு!...

முருகன் கோயிலின் மேற்குக் கோட்டம்..
மேலே உள்ள சிற்பத் தொகுப்பு எளிதில் புரியும்...

பரணில் நின்று கவண் வீசும் வள்ளி நாயகியைத் தேடிக் கொண்டு
வேடனாக விருத்தனாக வந்த முருகன்...

வேங்கை மரமும் தெரியும்..
வேழமுகன் வந்து ஆர்ப்பரிப்பதும் புரியும்...

முருகன் கோயிலின் தெற்குக் கோட்டம்.. 
மேலே உள்ள படத்தில் வலப்புறம் மீனாட்சி அம்மன்..
அவளுக்கு மேலே வலை வீசும் மீனவனாக சிவபெருமான்...

இந்தப்பக்கம் - வளையல் வியாபாரி..
கீழே அதிகார நந்தி..

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தனி  
மேலே, அம்பிகையின் திருவடியைத் - தன் முதுகில் தாங்கும் மகிஷன்..

நிசும்பனின் முதுகெலும்பை முறிக்கும் முண்டகக்கண்ணி..
என்ன ஒரு கலைப்படைப்பு!...

பூமி அழுந்தும்படிக்கு இடக் காலை ஊன்றிய மாகாளி
வலக் காலை எடுத்து வீசி - நிசும்பனை மிதிக்கும்போது
அந்த வேகத்தில் ஆடை ஆபரணங்கள் பின்னோக்கிப் பறக்கின்றதே!...

இந்த ஒரு திருக்காட்சியே போதும்...
இவ்வையகம் சிறப்புடன் வாழ்வதற்கு..

மீண்டும் அடுத்தொரு பதிவில் சந்திப்போம்...
படங்களைப் பற்றிய கருத்துரைகளுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றேன்..

வாழ்க நலம் 
ஃஃஃ

ஞாயிறு, ஜனவரி 27, 2019

விருந்தினர் பக்கம் 03

அன்பின் நெல்லைத்தமிழன் அவர்களின்
பயணக் குறிப்புகள்..
*
புள்ளமங்கை ஆலந்துறை நாதர் கோயில்
(தொடர்ச்சி)
ஃஃஃ

கிபி 900ல் பராந்தக சோழன் இக்கோயிலின் கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் திருப்பணி செய்துள்ளான்.

பராந்தக சோழன், ராஜராஜ சோழனின் கொள்ளுப்பாட்டன்.  பராந்தகன் காலத்தில்தான் பலவித சிற்பங்களோடு கோயில் உருப்பெற்றிருந்திருக்கிறது.

இந்தக் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள துர்க்கை (மஹிஷாசுர மர்த்தனி என்பார்கள்)..



சிலை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. கருங்கல்லில் எருமைத் தலைமீது நின்று சக்கரம் சங்கோடு, வில், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி இரு புறமும் கலைமானும் சிங்கமும் இருக்க, ஒரு வீரன் தன் தலையை கத்தியால் அரிந்து தருவது போலவும், 


இன்னொரு புறம், இன்னொரு வீரன் தன் துடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் சிற்பங்கள் உள்ளன.


இந்தத் துர்க்கை கோலம், திருநாகேச்வரம், பட்டீச்வரம் மற்றும் இந்தக் கோயிலில் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்கிறார்கள்..





கோயிலின் சுற்றுச்சுவரில், நம் முழங்காலுக்கும் கீழான பகுதியில்
சிறு சிறு சிற்பங்கள் நிறைய செதுக்கியுள்ளனர்..

இவை இராமாயண மகாபரதக் காட்சிகள் என்று சொல்கின்றனர்..




ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள முடியாதபோதும் சிற்பங்களின் சிறப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும்..



கோயில் கருவறை கோபுரத்தில் விஷ்ணு நரசிம்ஹ சிற்பங்களும் இருக்கின்றன.. சுமார் அரை மணி நேரம் கோயிலில் இருந்திருப்போம்.. சிற்பங்கள் தந்த உணர்வை எழுத்தில் வடிக்க இயலாது,, எனக்கு முகத் திருப்தியாக அமைந்த கோயில் மற்றும் கலை தரிசனம்..

காரணமில்லாமல் இதற்கு நான் பயணப்பட்டிருக்க முடியாது..
அதனால் தான் இதனை இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது..

கல்வி கற்ற அந்தணர்கள் வாழ்ந்த ஊர்..  என்று, சம்பந்தர் சொல்கிறார்..
அதற்கான தடயம் இருப்பதாகவே தெரியவில்லை..

எல்லா கிராமங்களைப் போல - சாதாரணத் தெருக்களைக் கொண்டிருக்கும் கிராமத்தின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது...


கோயிலில் மண்டபத்தில் ஒரு பாடலை ஒட்டி வைத்திருந்தனர்.. இரவு படுக்கப் போவதற்கு முன்பு சொல்வது நல்லது - என.. 

அந்தப் பாடல் உங்களுக்காக..

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்செழுத்தை 
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே...

பிறகுதான் இந்தப் பாடல் பட்டினத்தார் பாடியது என்று தெரிய வந்தது..
ஏகம்பன் அவனது கோயிலை விட்டுவிட்டு வந்தவர்களையும் பொறுத்தருளட்டும்...

1980 களில் இந்தக் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதைப் பற்றி எழுதியவர்கள் குறிப்பிட்டிருப்பது..

தினமணி நாளிதழில் வெளியாகி கோயிலிலேயே பத்திரிக்கைப் பக்கத்தை வைத்திருக்கிறார்கள்..

மாஞ்சோலையாகத் திகழும் நெடுஞ்சாலை வழியாகப்
பயணப்பட்டு இவ்வூருக்குள் நுழைகிறோம்..
இருமருங்கும் நெல்லும் கரும்புமாக
வயல்வெளிகள் வரவேற்கின்றன..
ஊரைச் சுற்றி எங்கும் குன்றுகள் போல
சிறிதும் பெரிதுமாக மணல்மேடுகள்..
கோயில் ஆற்றின் நடுவே அமைந்துள்ளதோ
என்ற பிரம்மையை உண்டாக்குகின்றன..

ஆனால் நான் சென்றபோது அப்படி வயல்சூழ் இடங்களைப் பார்க்கவில்லை..

கோயிலை விட்டு வெளியில் வரும்போது என்மனதில் தோன்றியவை இரண்டு..

ஒன்று -
எதைத் தேடி நாம் எல்லாரும் நம் ஊரை விட்டு விட்டு வெளி இடங்களுக்குப் புலம் பெயர்ந்தோம்?..

பாடல் பெற்ற திருத்தலங்கள், கோயில்களை விட்டு நாம் விலகி வந்ததன் காரணம் என்ன?..

அதை நாம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா.. இல்லை -
அந்த ஊரை விட்டு விடாமல் அங்கேயே இருக்கின்ற மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா?..

இரண்டாவது -
வெளிநாடுகளில் புகழ்பெற்ற மியூசியங்களுக்குச் சென்றிருக்கிறேன்..
அங்கு இருப்பவை பளிங்கில் வடிக்கப்பட்ட கிரேக்க சிலைகள்.. ஆனால்
நம்மிடம் ஒவ்வொரு ஊரிலும் இருப்பவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 
நம் முன்னோர்கள் தத்தம் கலைத்திறமையால் வடித்த சிற்பங்கள்..

இவைகளின் மதிப்பை நாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

இந்த இடங்களை அரசாங்கம் செலவு செய்து சுத்தப்படுத்தி வைத்தால்
அவை எத்தனை அன்னியச் செலவாணிகளையும் சுற்றுலா வருபவர்களையும் ஈர்க்கும்?...

இன்னும் பல கோயில்களைப் பற்றி வாய்ப்பிருக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்..
***
வெகு சிறப்பாக எழுதியுள்ளார்
அன்பின் திரு. நெ. த., அவர்கள்...

சென்ற வருடம் இத்திருக்கோயிலுக்குச்
சென்றிருந்த போது பூட்டிக் கிடந்தது..

மீண்டும் தரிசனம் செய்ய வாய்ப்பினை
அருள்வான் - இறைவன்....

இனி, பதிவினைப் பற்றி
எனது கருத்து...

இந்த இடங்களை அரசாங்கம் செலவு செய்து
சுத்தப்படுத்தி வைத்தால்..

அதான் சுத்தப்படுத்தி வெச்சுட்டாங்களே!...

கலையழகு மிக்க சிற்பங்கள்
அன்னியச் செலவாணிகளையும் ... ஈர்க்கும்?...

அன்னியச் செலவாணிகளை மட்டுமா!..
அயோக்கியக் களவாணிகளையும் அல்லவா ஈர்க்கின்றது!?...


வாழ்க நலம் 
ஃஃஃ

சனி, ஜனவரி 26, 2019

கத்தாழைக் காடு

அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்..
ஃஃஃ

மீனாச்சி... மீனாச்சி!....

காலையில கடத்தெருவுக்குப் போன ஆம்பள இப்பத்தான் ஊட்டுக்கு வர்றதுன்னா... ஊரு உலகத்துல நீதி எங்கே இருக்கு.. நியாயம் எங்கே இருக்கு?...

ஏ... என்னா நீ அலுத்துக்குற... நான் என்ன வேல வெட்டிக்குப் போகாம ஊரச் சுத்திட்டா வர்றேன்?...

வேல வெட்டிக்குப் போனா.. எல்லாம் சரியாப் போச்சா?... பொங்கலு போயி எத்தன நாளாச்சு?..

வீடு வாசலை அப்பிடி இப்பிடி சுத்தம் செஞ்சு வெக்கலாம்!...

வேலிப் பக்கம் காட்டுக் கத்தாழை மறுபடியும் மொளைச்சி வருது..
அதெல்லாம் புடுங்கிப் போட்டுட்டு நல்லதா நாலு சோத்துக் கத்தாழைய வெச்சி தண்ணி ஊத்தலாம்!...

கோழிக் கூடாரம் எப்பிடிக் கெடக்கு!..  சுத்தம் பண்ணிட்டு சுண்ணாம்பு வாங்கி அடிச்சி நாக பாசாணத்தைக் கரைச்சி தெளிக்கலாம்...

வேலைக்கிப் போயி சம்பளம் வாங்கறது வயித்துப் பாட்டுக்கு...
இந்த மாதிரி எல்லாம் இழுத்துப் போட்டு செய்யிறது வாழ்க்கப் பாட்டுக்கு!...

சரி..சரி.. இப்ப என்னா செய்யணும்...ங்கறே!...

ஒன்னும் செய்ய வேணாம்.. எல்லாம் நானே செஞ்சிட்டேன்...
கத்தாழையப் புடுங்கணும்.. அது மட்டுந்தான் பாக்கி!..

அப்புறம் எதுக்குடி ராசாத்தி... இத்தனை கோவம்!.. இவ்வளவு பேச்சு?...

புருசம் பொண்டாட்டிக்குள்ள கோவமாவது?.. ஒன்னாவது!..
அப்பிடி கோவப்பட்டுக்கிட்டு இருந்தா ஊடு தான் வெளங்குமா?...

மீனாட்சியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே வந்த சிங்காரம்
வாசல் திண்ணையில் உட்கார்ந்தான்...

முத்தண்ணன் மகன் வடை போட்டுருப்பானே!.. ஒன்னும் வாங்கிட்டு வரலையா?...

அவன் பழைய பேப்பர்ல சுத்திக் கொடுத்தான்.. நான் வேணாம்...ன்னுட்டேன்!..

ஏன்!?.. முந்தியும் பழைய பேப்பர்ல தானே சுத்திக் கொடுத்தான்!?..

கொடுத்தான்... இப்போ தான் பிளாஸ்டிக் எல்லாம் ஒழிக்கணும்..ன்னு சொல்லிட்டாங்கள்...ல...

அதால.. அந்த மெழுகுத் தாள் எல்லாம் போயாச்சு... இப்போ பழைய நியூஸ் பேப்பர கையில எடுத்துருக்கானுவோ... அதுலயும் ஏதோ கெமிக்கலு கலந்துருக்குதாம்... அதான் வேணாம்...ன்னு வந்துட்டேன்...

என்.. ராசா.. எவ்வளவு அறிவு!...

பின்ன என்ன வாழ எலைக்கா பஞ்சம்?... முத்து மச்சான் அந்தக் காலத்துல
புரச எலையிலயும் மந்தார எலையிலயும் பலகாரம் பட்சணம் எல்லாம் வெச்சி ஏவாரம் செஞ்சிருக்காரு.. நானே சாப்பிட்டு இருக்கேன்...

இப்போ இவனுங்க என்னடா...ன்னா
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுறானுங்க!..
அந்த எண்ணையப் பார்த்தாலும் கண்றாவியா இருக்கு...
வண்டி மையைக் கரைச்சி ஊத்துன மாதிரி...

மாட்டு வண்டி எல்லாத்தையுந்தான் ஒழிச்சிப் போட்டுட்டாச்சே..
அப்புறம் வண்டி மையிக்கு எங்க போறதாம்!...

சரி.. நீங்க வாங்க.. பச்சக் கடலை அவிச்சு வெச்சிருக்கேன்..
ஒடம்புக்கு நல்லது... புள்ளைங்களுக்கும் புடிக்கும்!..
நாலு கடலய ஒடச்சித் தின்னுட்டு அப்புறமா இஞ்சி டீ குடிக்கலாம்...

ஒரு கிண்ணத்தில் அவித்த கடலையை
அள்ளிக் கொண்டு வந்தாள் - மீனாட்சி ..

நாலு கடலையை கையில் அள்ளிய சிங்காரம்
அவற்றை உரித்து வாயில் போட்டுக் கொண்டே கேட்டான்...

அதென்ன மீனாச்சி.. கடத் தெருவெல்லாம் தோரணம் கட்டுறாங்க...
ஸ்கூலு பக்கமும் கொடி எல்லாம் கட்டி இருந்திச்சு...

அதுவா... நாளைக்கி குடியரசு தினம் இல்லையா.. அதுக்காகத் தான்!...
இதெல்லாம் ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா நாலு எழுத்துப் படிச்சிருந்தா தெரியும்....

ம்... நானும் அஞ்சாங்கிளாஸ் வரைக்குப் படிச்சிருக்கேனே..

ஆமா... பொல்லாத அஞ்சாங்கிளாஸ்...
ஏதோ.. அத்த மவனாச்சே... போனாப் போவுது... ன்னு
எட்டாங்கிளாஸ் படிச்ச நானு உங்களுக்கு வந்து வாக்கப்பட்டேன்!...

ஆகா... நீ படிச்சவ.. நாலுந் தெரிஞ்சவ...  சொல்லு..
குடியரசு தினம் ...னா சொதந்திர கொடியேத்துற நாளு தானே!...

அது வெள்ளக்காரன் கிட்ட அடிமையா கெடந்து விடுதலை ஆன நாளு..

இது அப்பன், மகன், பேரன்.. ன்னு இருந்த வம்சாவளிய மாத்தி
எல்லாருக்கும் சம உரிமை... அப்படின்னு ஆக்குன நாளு...

ஒன்னும் புரியலையே...

அப்பன் ராசா... ன்னு இருந்தா அவன் செத்ததுக்கு அப்புறம்
அவனோட மவன் ராசா..ன்னு ஆட்சிக்கு வருவான்...
இவனுக்கு அப்புறம் இவனோட மவன் வருவான்!...

அது தானே அந்தக்காலத்து நடமுறை...

அதுதான் முடியாட்சி... அதெல்லாத்தையும் ஒழிச்சிட்டு தான் குடியாட்சி... அதாவது  குடியரசு...

அப்போ குடியரசு..ன்னா என்னாதான் அர்த்தம்?...

மக்களாட்சி... ஜனங்க எல்லாம் ஒன்னாக் கூடி அவங்கள்ள ஒருத்தன தேர்ந்தெடுத்து
அவங்கிட்ட ஆட்சி செய்யிற பொறுப்பை ஒப்படைக்கிறது.... இந்த நாட்டு ஜனங்க எல்லாருக்கும் இதுல உரிமை இருக்கு... கடமையுமிருக்கு!.. அப்படி..ன்னு அர்த்தம்!... புரியுதா?..

ஓ... அப்படி... ன்னா... ஏன்.. உங்க அக்கா புருசனோ
எந் தங்கச்சி புருசனோ வார்டு மெம்பரு ஆகலை?...

அதெல்லாம் பணங்காசு உள்ளவங்களுக்குத் தானே!...

ம்.. அப்பிடியும் ஒன்னு இருக்குதோ!...

காசு பணம் வெச்சிருக்குறவங்களுக்குத் தானே
பட்டம் பதவி கவுரவம்.. ந்னு நாம கொடுக்குறோம்...
அட... அது இல்லாட்டியும் பரவாயில்லை..
நரிய நனையாம குளிப்பாட்டணும்...

அப்படிக் குளிப்பாட்டுனவங்க கிட்டதானே
தமிழ்நாட்டைத் தூக்கிக் கொடுத்தோம்!...

ஏ... இதெல்லாம் என்னா பேச்சு?...
சும்மா எதையாவது ஒளறக் கூடாது!...

காமராசர்....ன்னு ஒருத்தர் இருந்தாராம்...
அவர இப்படித்தான் கவுத்து உட்டாங்களாம்!..
எங்கப்பா அடிக்கடி சொல்வாரு!..

அதுக்கு அப்புறம் கவர்மெண்டுக்கு வந்தவங்க எல்லாரும்
லச்சாதிபதி கோடீஸ்வரன்... ன்னு ஆகிட்டாங்களாம்..

ஆகிட்டாங்களாம்.. என்ன?...
நம்ம தேங்காக் கடைக்காரன் வார்டு மெம்பர் ஆனதுக்கு அப்புறம் அவன் ஊட்டு வாசல்..ல எத்தனை எத்தனக் காரு நிக்கிது பாத்தியா!...  

ஆமா... நம்ம பையன ஸ்கூல்..ல சேக்கிறப்போ
என்னா சாதின்னு சர்ட்டிபிகேட் கொடுக்குறதுக்கு
எரநூத்து அம்பது ரூவா கேட்டு வாங்கிக்கலையா!...

கீழே இருக்கிற ஆளுங்களே இப்படி இருந்தா மேல இருக்கிறவங்க எப்படி இருப்பாங்க!.. எங்கே பார்த்தாலும் லஞ்சம் .. பகல் கொள்ளை தான்...

கவர்மெண்டு வேலைக்காரங்க செத்தாக்கா
அவங்க புள்ளைக்கு உடனே வேலை கொடுத்துடுறாங்க...

கட்சித் தலைவரு செத்தாக்கா அவரு மகன் வந்துடறாரு..
நாந்தான் தலைவன்.. என்னைத் தான் தேர்ந்தெடுத்துருக்காங்க....ன்னு சொல்லிக்கிட்டு...

இப்போ அதுக்கும் மேல போயாச்சு...
உசிரோட இருக்குறப்பவே எம்மவன் தான் சின்ன தலைவரு...
எம்பங்காளி தான் துணைத் தலைவரு...
எம்மச்சான் தான் இணைத் தலைவரு... ன்னு இழுத்து உட்டுறானுங்க...

அப்பன் அங்கே மந்திரி.. ன்னா
மகன் இங்கே மந்திரி...

புருசன் மந்திரி.. போலீஸ் கேசு...ல உள்ளே போய்ட்டா பொண்டாட்டி மந்திரி...

அப்பன், மவன், மாமன், மச்சான்.. ன்னு குடும்பமே மந்திரி...

இந்த லெச்சணத்துல மக்களாட்சி... ன்னு பேரு!...

உசுரைக் கொடுத்து ஊரைக் காப்பாத்துனாங்க... அந்தக் காலத்துல...

ஊரை அடிச்சு உலையில போடுறானுங்க இந்தக் காலத்துல... 

இவனுங்க எல்லாம் வாழணும் - ன்னு சத்தம் போடறதிலேயே
ஏழைபாழைங்களுக்கு தொண்டத் தண்ணி வத்திப் போகுது!...

எனம் எனத்தைப் பார்க்கும்... ன்னு சொன்ன மாதிரி
அவனுங்களுக்கு உள்ளேயே எல்லாத்தையும் பங்கு போட்டுக்கிட்டு
ஒங்களுக்காக ஒழைக்கிறோம்.... ன்னு கதை உடுறானுங்க!...   

நாமளுந்தான் வருசம் பூரா கஷ்டப்படுறோம்..
நாலு காசு கையில தங்க மாட்டேங்குது!..

அதுதான் சர்க்கார்...ல எல்லாம் இலவசமா தர்றாங்களே..

அதெல்லாம் ஒழிஞ்சாத் தான் ஊரும் நாடும் உருப்படும்...
ஆனா அதெல்லாம் சுளுவா நடக்கிற காரியம் இல்லை...

அது சரி... இந்த ஸ்கூலு வாத்தியாருங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாமே!.. நாளைக்கு ஸ்கூல்..ல யாரு கொடியேத்துவாங்க!?..

ஏன்.. நீங்க போய் ஏத்திட்டு வாங்களேன்!.. - மீனாட்சி சிரித்தாள்...



ஏன்!... நான் ஏத்தக் கூடாதா?.. எனக்கு அந்த தகுதி இல்லையா?...
நான் என்ன படிச்சவன் மாதிரி ஊரக் கெடுத்தனா.. லஞ்சம் வாங்குனனா.. குடி கெடுத்தனா.. கோயில் சொத்தைக் கொள்ளை அடிச்சனா?... குற்றவாளிக்கும் கொலைகாரனுக்கும் கூட்டாளியா இருந்தனா?...
எதுக்கு நான் ஏத்தக்கூடாது கொடி!?..

வீராவேசம் ஆனான் சிங்காரம்..

ஏத்துங்க... தாராளமா ஏத்துங்க...
உங்களை யாரும் வேண்டாங்கலை...

கடத்தெருவுக்குப் போயி கொடி வாங்கிக்கிட்டு வாங்க!..

நம்ம வீட்டு வாசல்...ல நாமளே ஏத்துவோம்!..

மீசையை முறுக்கியபடி கடைத்தெருவுக்குப் புறப்பட்டான் சிங்காரம்...

நம்ம நாட்டுக் கொடிக்கு அடையாளம் தெரியுமா!...

ஏன் தெரியாது!..
சக்கரம்.. தர்மச் சக்கரம் இருக்குமே நடுவாலே.. அதானே!...

அதே தான்..
நல்ல பெரிய கொடியா பார்த்து வாங்கிக்கிட்டு வாங்க!... 

நம்ம வீட்டு வாசல்..ல நாமளே ஏத்துவோம்!..
புள்ளைங்க ரெண்டு பேரும் சந்தோசப்படுவாங்க!...

- என்றபடி,
எழுந்து நடந்த 
மீனாட்சி தனக்குள் பேசிக் கொண்டாள்...

கத்தாழை..ன்னாவே பயங்கரம்...
சரி.. சோத்துக் கத்தாழை நல்லது..ன்னு பார்த்தா
காட்டுக் கத்தாழையும் சேர்ந்து முளைக்கிது..

ஊர்க் கோடியில முளைச்சித் தொலையாம
வீட்டுப் பக்கத்தில வந்து முளைக்கிது...

இப்படியே விட்டுட்டா கத்தாழைக் காடு ஆயிடும்!..
கட்டு விரியனும் கண்ணாடி விரியனும் தேடி வந்துடும்..
எல்லாத்தையும் பிடுங்கிடணும்... அதான் நல்லது!...
*** 


கற்றாழையும் கட்டு விரியனும் ஆகிய
லஞ்சமும் ஊழலும் ஒழியட்டும்..
குறைவிலாத குடியரசு மலரட்டும்...
மாண்புடன் மக்களாட்சி தழைக்கட்டும்!..

வாழிய பாரத மணித்திருநாடு
ஜய் ஹிந்த்
ஃஃஃ

வெள்ளி, ஜனவரி 25, 2019

பாச வலை..


அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

சென்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து
Store Keeper ஆக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றேன்...

இங்குள்ள கல்வி நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும்
உணவகங்களை நடத்துதற்கான ஒப்பந்தத்தை
நான் வேலை செய்யும் நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது...

அடுத்த வாரம் அல்லது பிப்ரவரியின் முதல் வாரத்தில்
உணவகங்கள் திறக்கப்படலாம்...

அதன்பொருட்டு சரக்கறைகளை ஆயத்தப்படுத்தும் பணி
மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது...

விடியற்காலை ஐந்து மணிக்கு பேருந்து...
திரும்பி வருவதற்கு மூன்று மணி ஆகிவிடுகின்றது...

மாலை நேரத்தில் இணையத்தின் வேகத்தைச் சொல்லிமுடியாது...

ஒவ்வொரு பதிவும்
மிகுந்த போராட்டத்துக்கு இடையில் தான் வெளியாகின்றது...

ஐந்து மணிக்குப் பேருந்து என்றால்
நான்கு மணிக்கு எழுந்தால் தான் சரியாக இருக்கும்..

ஆனால் - மூன்றரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடுகின்றது...

அதிலும் சென்ற வாரம் முழுதும் கடுங்குளிர்...
நேற்றும் இன்றும் கொஞ்சம் குறைவு...

உடல் நலக்குறைவு ஏதும் இல்லை..
ஆயினும் குளிர் காற்றினால் சற்றே சிரமம்...

எனக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டோரை ஒழுங்கு செய்து
கணக்குகளை சரி செய்த நிலையில் -

வேறு ஒரு Store  க்குச் சென்று
அதைச் சில நாட்கள் நடத்துமாறு சொல்லி விட்டார்கள்...

நேற்று ஐம்பது சதவீத பொருட்கள் வந்து சேர்ந்த நிலையில்
அவற்றை ஒழுங்கு செய்து கணக்கில் ஏற்றி விட்டு வந்திருக்கிறேன்..

சிறிய Store தான்...

நேற்று அங்கு எடுக்கப்பட்ட படங்களைப்
இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...

மாணவர்களுக்கான உணவுக்கூடம் 
Chiller அறையிலுள்ள காய்கறிகள்..



Freezer அறையிலுள்ள பொருட்கள்..



இதர உணவுப் பொருட்கள்..







முன்பு Kitchen Supervisor ஆக இருந்தபோது பெரிய பொறுப்புகள் ஏதுமில்லை..

ஆனால் -
தற்போது முன்பை விட அதிக விழிப்புடன் இருக்க வேண்டியதாகிறது...

அதற்கான வல்லமையையும் பாதுகாப்பையும்
தருவதற்கு இறைவன் காத்திருக்கின்றான்...

இந்த வேளையில் -

சென்ற மாதம் - நான் துவண்டிருந்த நிலையில்
தோளுக்குத் தோள் நின்று ஆறுதலும் தேறுதலும் கூறிய
நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி சொல்கின்றேன்..

இந்த வலை அன்பினால் பின்னப்பட்டது.. - என்பது,
மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கின்றது...

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை!..
-: கவிஞர் அ. மருதகாசி :-

நலமே வாழ்க..
ஃஃஃ