நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 06, 2026

சேற்று நண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 ஞாயிற்றுக்கிழமை


சுற்றுப்புறச் சூழலில் கவனம் வைத்திருப்பது ஒரு கலை... 

அது எல்லாருக்கும் கை கூடி வருவதில்லை..

இந்தப் பதிவு எதற்கு என்று ஸ்ரீராம் அவர்களுக்குத் தெரியும்..

தாமிரபரணியுடன் சிற்றாறும் கயத்தாறும் கலக்குமிடமே முக்கூடல்..

இவ்விடத்தில் எழுந்ததே  முக்கூடற்பள்ளு....

இதில் காட்டப்பட்டிருக்கின்ற மழைக் குறிகள்...

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே..

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே..

சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்றடைக்குதே - மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே..

போற்று திருமால் அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே...


ஆற்றில் நாளை வெள்ளம்  வரப்போகின்றது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.

மலையாள  திசையிலிருந்தும், ஈழத் திசையில் இருந்தும் மின்னல்கள்  மின்னுகின்றன.

நேற்றும் இன்றும்  பலத்த காற்று சுழன்றடிக்கிறது.
கிணற்றுத் தண்ணீரில் கிடக்கும் சொறித்தவளைச் சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.

மழையினால் வெள்ளம்  நிரம்பினால் சேற்று நண்டு என்ன ஆகும்? 
அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்றை கொண்டே தன்னுடைய வளையை அடைத்துக் கொள்கிறது.

மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடி பறவைகள் விண்ணில் மகிழ்ச்சியாகப் பாடித் திரிகின்றன.

எல்லோரும் போற்றி வழிபடுகின்ற அழகர் கோயில்  பண்ணைச்  சேரியில் சேர்ந்து வாழ்கின்ற மக்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேறறுப் பாடுவோம், துள்ளித் துள்ளி ஆடுவோம்...

பிறத்தியான் வந்த பிறகு தான் கல்வி கிடைத்தது என்று அடி வருடிகள் சொல்வதற்கு முன்பே நண்டு சேற்றைக்  கொண்டு வளையடைக்கத் தெரிந்து வைத்திருக்கின்றது...

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய வகை...

இதனை இயற்றியவர் யார் என்று தெரிய வில்லை....

 நலம் வாழ்க
***

வெள்ளி, செப்டம்பர் 04, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


மூடிக்கிடந்த கோயில் கதவுகளை திருநாவுக்கரசர் திறக்கவும்
ஞானசம்பந்தப் பெருமான் அடைக்கவும் பாடியருளிய
திருமறைக்காடு தலத்தில் சுந்தரர் பாடியருளிய
திருப்பதிகத் திருப்பாடல்.

யாழைப் பழித்தன்ன மொழி
  மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
  வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடே சென்று
  பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
  உண்ணும் மறைக்காடே... 7/71/1

யாழிசையைப் பழித்த  சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போன்ற சடைமுடியில் பிறை நிலவைச் சூடினவனும் ஆகிய இறைவனே...

உனது இருப்பிடத்தை அறிந்து வழிபட வேண்டின், 

அது, எளிய குரங்குகள் தாழம் புதர்களின் இடுக்கு வழியே, வாழைத் தோட்டத்தின் உள்
நுழைந்து, அங்கே  கனிந்திருக்கின்ற வாழைப் பழங்களைப் பறித்து உண்கின்றதான திருமறைக்காடு அல்லவா!..

இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்


க்ருஷ்ணாய வாசுதேவாய
கோவிந்தாய ஹரி ஓம்

ஓம் சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 01, 2026

நலம் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
செவ்வாய்க்கிழமை


மறுநாள் திங்களன்று காலை திருச்செந்தூரில் இருந்து  புறப்பட்டு பகல் பதினோரு மணியளவில் உவரி கோயிலை வந்தடைந்தோம்...

உச்சிப் போதில் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்கும் ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடஸ்வாமி, ஸ்ரீ இசக்கியம்மன் ஆகிய மூர்த்திகளுக்கும்  பரிவார தேவதைகளுக்கும்
அலங்காரத்துடன் பஞ்ச முக தீப ஆராதனை நடந்தது...

நள்ளிரவு ஒரு மணிக்கும் இவ்வாறே நிகழ்ந்தது...


மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகலில் சாமி அழைப்பு... 

அக்னி சட்டி ஏந்தி வந்த சாமி, எல்லாக் குறைகளையும் தீர்த்து வைக்கிறேனப்பா... என்றது..

இவ்வாறே நள்ளிரவு ஒரு மணிக்கு சாமி அழைத்த போதும் நான் துணைக்கு இருக்கிறேன்.. கவலைப் படாதேப்பா... என்றது...

மறுநாள் புதன்கிழமை உச்சிப் போதில் கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாட்டு..

கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாடி வந்த சாமி - தான் அணிந்திருந்த  மல்லிகை மாலையுடன் குங்குமம் கொடுத்து ஆசி நல்கியது..

இதுவே மகாப்ரசாதம்...

புதன்கிழமை மதியத்துடன் கொடை விழா நிறைவு  பெற்றது..

வியாழனன்று பௌர்ணமி.
நிறை நிலா நாளில் குல தெய்வத்தின் கோயிலில் தங்குவது சிறப்பு என்பதால் அங்கே இரவு தங்கி விட்டு வெள்ளியன்று மாலை தஞ்சைக்குத் திரும்பினோம்...

மூன்று நாட்களும் ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி பக்தர் பேரவையினர் அன்னதான உபசரிப்பு வழங்கினர்..

கடற்கரைக் கோயில் என்பதால் ஒருநாள் சிறிது நேரம் மட்டும் கடல் அருகே நின்றிருந்தேன்...

பதிவிலுள்ள இரண்டு படங்களும் எனது தம்பி எடுத்தவை...

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மகா தீப  அலங்கார ஆராதனைகளைப் படம் எடுக்க இயலவில்லை...

இந்த அளவுக்கு எல்லாம் சிறப்பாக நடந்ததே மகிழ்ச்சி...

வேதனை தருகின்ற 
முழங்கால் வலி விரைவில் சரியாக வேண்டும்...

அன்றைக்கு நினைவின்  பிழையால் விடுபட்டிருந்த தஞ்சை  ஜம்புலிங்கம் ஐயா, கரந்தை ஜெயக்குமார், அன்பின் கில்லர் ஜி, குமார் ஆகியோரையும் இத்தருணத்தில் நினைவில் கொள்கின்றேன்..

2022 ல் திருச்செந்தூரிலும் உவரியிலும் நான் எடுத்த ஒளிப்படங்களை வரும் நாட்களில் மீண்டும் பதிவில்  தருகின்றேன்...

 நலமும் வளமும் 
இறையருளால்
அனைவரது வாழ்விலும்
பொலிவதாக!..
***

திங்கள், ஆகஸ்ட் 31, 2026

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
திங்கட்கிழமை


சென்ற ஞாயிறன்று -  காலை ஏழு மணியளவில் தஞ்சையில் இருந்து 
சாரளபள்ளி -  நாகர்கோயில் அதிவேக விரைவு ரயில் மூலம் மதியம் திருநெல்வேலியை அடைந்து  அங்கிருந்து வ்ண்டி மாறி மதியம் 2:30 மணியளவில் திருச்செந்தூர் கோயிலைச் சென்றடைந்தோம்... 

கைத்தலபேசிகளை ஒப்படைப்பது போன்ற சம்பிரதாயங்களுக்குப் பின் ,
மாலையில் கடலில் இறங்கினோம்... 

என்னால் கடலில் (அலை வேகத்துடன்)  நிற்க முடியவில்லை.. புரோக்ஷணம் செய்து கொண்டேன்... மனைவியும் மகனும் நீராடினர்..

கடலில் நீராடி விட்டு நாழிக் கிணறு தீர்த்தம்... 

தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் விசைத் தெளிப்பு முறை (sprinkler) புதிதாய் அறிமுகம்..

அங்கிருந்து கரையேறி உடை மாற்றிக் கொண்டு ஆதார் அட்டையைக் காட்டி விட்டு மூத்தோர் வரிசையில் நின்றோம்... திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் என்றாலும் கோயிலுக்குள் நெரிசல்  இல்லை..

அடுத்த இருபது நிமிடங்களில் முருகன் அருளால் நெரிசல் இன்றி மணியடி மண்டபத்தில் வைத்து ஸ்வாமி தரிசனம் கிடைத்தது...

மணியடி மண்டபம் என்பது கருவறையின் வாசல்..

ஸ்வாமிக்குத் தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது..

இதனை எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் அவனது திருவருள்..

உள்வலம் வந்து ஸ்ரீ வள்ளி நாச்சியாரையும் ஸ்ரீ தேவ குஞ்சரியையும் தரிசனம்  செய்து கொண்டு வெளித்திருச்சுற்றில்  ஸ்ரீ மகா கணபதியையும் வட புறத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளையும் தரிசனம் செய்து விட்டு கொடிமர நம ஸ்காரம் செய்து கொண்டோம்...

இரவு கோயில் நடை வெளியில் உறக்கம்...

அதிகாலையில் எழுந்து குளித்தபின் மீண்டும் சந்நிதியில் முருக தரிசனம் செய்து - நல்லருள் புரிவாய் முருகா - என்ற வேண்டுதலுடன் உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி கோயில் நோக்கிப் புறப்பட்டோம்...

இந்த வருடமும் வள்ளிக் குகை அடைத்துக் கிடந்தது.. 

மேலும் கோயிலில் இருந்து சற்று தூரம் மூவர் அதிஷ்டான  தரிசனம் செய்வதற்கும் 

ஐயா  வைகுண்டர் கடலில் இருந்து மீண்டு வந்த அவதாரப் பதியை தரிசனம் செய்வதற்கும் - 
முழங்காலைப் பிடித்திருக்கின்ற வலி விடவில்லை...

மிச்சமிருந்த மின்சக்தியைக் கொண்டு ஒரே ஒரு படம் மட்டும் எடுத்தேன்...

ஐயன் அருளால்
அடுத்த ஆண்டு எல்லாம் குறைவற நடக்கும் ... 

கோயிலில் இருந்த இரண்டு நாளும் திருக்கோயிலின் அன்னப்பிரசாதம்...

வேறென்ன வேண்டும்!..

வாழ்க நலம்...

ஸ்ரீ ஷண்முக நாதன
 

   சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

   மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

      வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

         கால் பட்டழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.. 40 
-: கந்தரலங்காரம் :-

 முருகா முருகா
***

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை

திருமறைக்காட்டு மணாளன்

திருமறைக்காட்டில் 
திருநாவுக்கரசரால் திறப்பிக்கப்பட்ட
  திருக்கோயிற் கதவங்கள் அடைத்துக் கொள்ளுமாறு
ஞானசம்பந்தப் பெருமான்
 பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்

சதுரம் மறைதான்
  துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ்
  மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கு இறைவைத்
  தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
  கொள்ளுங் கருத்தாலே... 2/ 37/1

தேன் மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்திருக்கும் திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்கும்படிக்கு வீற்றிருக்கும் பெருமானே!..

உனது திருக்கோயிலின் கதவுகள் முன்னிருந்தவாறே திருக்காப்பு கொள்ளும்படி வினவிய எனக்கு   நல்ல வண்ணம் விடை அருள்வாயாக..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2026

கொடை விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 13
ஞாயிற்றுக்கிழமை
 

நிகழும் ஆவணி மாதத்தின் இரண்டாம்  செவ்வாய்  ( 25/ ஆகஸ்ட் ) அன்று - 
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ள உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் எங்கள் குல தெய்வத்தின்  வருடாந்திரக் கொடை விழா நடைபெற உள்ளது...

இறையருள் துணை கொண்டு இன்று காலை நாங்கள் உவரிக்குச் செல்கின்றோம்...

இவ்வேளையில் பதிவுலகத்தில்  -
 அன்பின் ஜீவி அண்ணா, ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், கௌதம் ஜி, வெங்கட் நாகராஜ், சந்திரசேகர், ஏகாந்தன், வல்லியம்மா, கீதாக்கா, கீதாரங்கன், கோமதி அரசு. பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன், மாதேவி -

ஆகிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்...

திருவிழா நேரம்... மின்சக்தி கொள்கலன் எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை... 

ஒளிப்படங்கள் எடுப்பதற்கு  கைத்தலப்பேசி எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ பார்ப்போம்...

நலம் வாழ்க
***

சனி, ஆகஸ்ட் 22, 2026

தமிழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
சனிக்கிழமை


தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...

தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில்  இல்லை.  

அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற 
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக்  கொடுத்தது தமிழ் மொழியே..

அமுதே தமிழே 
அழகிய மொழியே
எனதுயிரே!..
***

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


 அப்பர் ஸ்வாமிகள்
திருமறைக்காட்டில் அடைத்துக் கிடந்த
திருக்கோயிற் கதவங்கள் திறந்து கொள்ளப் பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்

பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் 
செய்ம்மினே.. 5/10/1

பண் போன்ற மொழி உடையவளாகிய உமாதேவியை ஒருபங்கிற் கொண்டு மண்ணுலகத்தவர் வலம் செய்து வணங்குகின்ற திருமறைக்காட்டில் உறையும் பெருமானே.. 

உமது திருக்கோயிலின் கதவுகள் வேதங்களால் அடைக்கப் பெற்றிருக்கின்றன..

அடியேன் எனது கண்களால் உமது திருக்கோலத்தினைக் கண்டு மகிழுமாறு,  இக்கதவுகளைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக....

ஓம் நம சிவாய
***

வியாழன், ஆகஸ்ட் 20, 2026

அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வியாழக்கிழமை





திருவாசல் தோறும்
அருள் வேதம் ஓத
சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசன் என்று
அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா..
குருநாத சுவாமி
குறமாது நாதா
குமரேசர் என்ற பொருளே
மறவாமல் வெற்றி
மயில் மீதிலேறி
வரவேணும் என்றன் அருகே..
-: அவிநாசிப் பத்து :-

முருகா.. முருகா
***

புதன், ஆகஸ்ட் 19, 2026

அலங்காரம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 2
புதன் கிழமை

சில தினங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு ஊர்க்  கோயிலில் காளியம்மனின் திருமுகத்தை  வராஹியைப் போல 
மாற்றி அலங்கரித்து அதையும் ஒளிப்படம் எடுத்து ஊடகங்களில் பதிவு செய்து பேசு பொருளானது..

இந்நிலையில் இந்த விஷயம்  தொடர்பாக ஈழத்தில் இருந்து கிடைத்திருக்கும் அரிய தகவல்கள் - இன்றைய பதிவில்..

ஸ்ரீ வராஹியம்மன் - தஞ்சை

அகோரசிவம்
உமையரசு
அவர்களது பதிவு..

 நன்றி Fb

மூர்த்திகளை அலங்காரம் பண்ணல்.

ஆன்மாக்களது கன்மத்திற்குத் தக்கவாறு பஞ்ச கிருத்தியத்தைச் செய்தருளும் இறைவன் பல மூர்த்தங்களாகத் தோன்றி, அவர்களுக்குப் போக,  மோக்ஷங்களைக் கொடுத்தருளுகின்றனர்.

அம்மூர்த்தங்களுள் சில சயனிப்பனவும், சில நடப்பனவும், சில நிற்பனவும், சில இருப்பனவுமாக உள்ளன. 

அன்பர்கள் பூசை பண்ணும்போது அம்மூர்த்திகள் சுகாசனமாக இருந்து கொண்டே அப்பூசையை ஏற்கும். 

அம்மூர்த்திகளை ஆலயங்களில் ஆகம முறைப்படி பிரதிட்டை செய்து பூசித்து வருவது தொன்றுதொட்டுள்ள வழக்கமும் விதியுமாம். அம்மூர்த்திகளை முறை தவறாது அலங்கரித்து வழிபடுவது மிக மேலாகிய புண்ணியமாகும்.

நிற்பனவாகிய மூர்த்திகளை நின்ற ரூபமாகவும், இருப்பனவாகிய மூர்த்திகளை அந்த ரூபமாகவும், சயன மூர்த்தியை அந்த ஆகிருதியாகவும் அலங்கரித்து வணங்குதல் வேண்டும். மாறிச் செய்யிற் குற்றமாம். 

மூர்த்தியின் திருமேனியில்  கட்டுதல், மரக்கட்டை உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட கை கால்கள் வைத்து -  கபடமாக அலங்கரித்தல், லீலாபேதமானவோர் விக்கிரகத்தைப் பிறிதொரு லீலாமூர்த்தியாக அலங்கரித்தல், சிவதேகத்தில் விஷ்ணுரூபத்தைக் கற்பித்தல், சந்திரசேகரத் திருமேனியில் நிருத்த ரூபத்தையும், கல்யாண சுந்தாரிடத்தில் நிருத்த ரூபத்தையும் அலங்கரித்தல், உக்கிர மூர்த்தியைச் சாந்த ரூபமாகவும், சாந்த மூர்த்தியை  உக்கிர ரூபமாகவும் அலங்கரித்தல், திருவாசியில்லாதபடி அலங்கரித்தல் முதலிய விபரீத அலங்காரங்கள் செய்யப்படின் விபரீத பலனும் உண்டாம். ஆயுள் குன்றும்; பிரபுக்கள் அரசர் யஜமானர்கள் அங்கஹீனமாவார்கள். அத்தோஷம் நீங்கும் பொருட்டுப் பிராயச்சித்தம் செய்து கொள்க. 

அவ்வத்தேவர்களுக்குரிய வஸ்திரம், யோக்கியமானதும் வாசனைபொருந்தியதுமான புஷ்பமாலை உத்தமமான ஆபரணங்கள் ஆகிய இவைகளால் அலங்கரிக்கத்தக்கது என்று காமிகம் வீரதந்திரம் முதலிய ஆகமங்கள் கூறுகின்றன.

ஆலய அதிகாரிகள் ஆகம சாஸ்திர ஆராய்ச்சியுள்ள சிவாசாரியர்களுடன் கலந்து அக்கிரமமான செயல்களை அகற்றிச் சற்கருமங்களைக் கைக்கொண்டு ஒழுகுவது உத்தமமாகும்.

அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள் எழுதிய மகோற்சவ விளக்கம் எனும் நூலிலிருந்து.

--------*****----------*****---
இவை நிற்க 

இறை திருமேனிகளை அலங்காரம் செய்கின்றவர்கள் தீக்கையுடையவராயிருந்து ஆன்மார்த்த சிவபூசை உடையவராயிருத்தல் வேண்டும்.

இறைவனை மெய் தீண்டி பூசை செய்வதற்கு மட்டுமல்லாமல் இறைவனை அலங்கரிக்கின்ற அலங்காரனாச்சாரியர்களுக்கும் தகுதிப்பாடுகள் அவசியமாகும்.

பலர் அவ்வாறில்லாமல் சைவ ஒழுக்கமும் சமய அறிவுமின்றி வாய்நிறைய வெற்றிலையும் புகையிலையுமாய் இறை திருவுருவங்களை பயபத்தியில்லாமல் சாதாரண ஒப்பனைக் கலைஞராக (Makeup artist) மட்டும் செயற்படுவது மனவருந்தத்தக்கது.

திருச்சிற்றம்பலம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2026

நடை பயணம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


நிகழும் தமிழ் மாதத்தின் (ஆடி 31 )
கடைசி ஞாயிறன்று (16/8/26) தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை  அறு படை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் நடைபயணமாக சென்று தரிசனம் செய்த நிகழ்வில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு நல்ல முறையில் தரிசனம் செய்தோம் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படங்களுடன் பதிவிட்டு சென்ற ஞாயிறன்று முன்னோட்டமும் சொல்லி இருக்கின்றேன்..

காலை ஏழரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் வாசலில்
தரிசனம்... கோயிலின் உள்ளே எல்லாம
 செல்லவில்லை... காலையிலேயே பெருந்திரளான வெளியூர் மக்கள்..

தொடர்ந்து - 
முதலாவதாக வாசல் மேல (அலங்கம்)..


மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயிலில் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. 

இக்கோயிலில் ஆறு படை வீடுகளின் திருமேனிகளும் விளங்குகின்றன...

கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்.. இரண்டு கோயில்களிலும் மகிழ்வான  தரிசனம்...

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி.. 
மேற்கு நோக்கிய கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி ... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஐந்து மணியளவில் இக்கோயிலை அடைந்தோம்... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக் கோலம்.. 

கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இந்த ஆறு கோயில்களில் மேல அலங்கம் கோயிலைத் தவிர்த்து ஏனைய கோயில்கள் அனைத்திலும் திருச்சுற்றில் சிவ சக்தி சந்நிதிகள் குறிப்பிடத்தக்கவை..

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

அங்கே  - 
நடைபயணமாக வந்திருக்கும் பக்தர்களுக்கு திருஷ்டி கழித்து தோஷ நிவர்த்தி செய்யப்படும் என்பது புதிய செய்தி..

நாங்கள் பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயிலுடன் நடைபயணத்தை நிறைவு செய்து கொண்டோம்..

கல்யாணத்  திருக்கோலம் கொண்டு சந்திர பிரபையில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் -
நடைபயணமாக வருகின்ற பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் அரோகரா முழக்கமிட்டு வரவேற்று மகிழ்ந்தனர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்கினர்...

பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயத்தின் சார்பிலும் ராஜராஜ சமய சங்கத்தினர் 
சார்பிலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டது..

விழா ஒருங்கிணைப்பினர்  நவமணி மண்டபத்தில் மதிய உணவு
அளித்தனர்..

நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டேன்..

ஐந்தாவது கோயிலில் 
நடை பயணமாக வந்தோர்க்கு  - 
கேசரி, வடை, பால் என, முருகனடியார்கள் வழங்கி மகிழ்ந்தனர்..

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருந்தது...


கைத்தலபேசியில் மின் சக்தி குறைவானதால் விரிவாக படங்கள் எடுக்க முடியவில்லை.. 

வழியில் மேலராஜ வீதியில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோயில்,  காமாக்ஷி அம்மன் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், கொடி மரத்து மூலை மாரியம்மன், கீழவாசலில் யோக நரசிம்மர் கோயில் வெள்ளைப்  பிள்ளையார் கோயில் என தரிசனம்..

கொங்கணேஸ்வரர் , ஐயன் குள விஸ்வநாதர் , விஜய ராமர் , மூலை ஆஞ்சநேயர், கொடி மரத்து மூலை மாரியம்மன் - கோயில்களில் திருப்பணி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது..

இடையில் குறிச்சித் தெரு முருகன் கோயிலில் ஒருமணி நேர ஓய்வு மட்டுமே...

இந்த அளவில் - 
முழங்கால் வலியுடன் ஏறத்தாழ எட்டு கிமீ தொலைவைக் கடந்ததே அற்புதம்..



நலம் யாவும் முருகன் செயல்..

வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

திங்கள், ஆகஸ்ட் 17, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 32
திங்கள் கிழமை


ஆடி அமாவாசையன்று
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில்
அப்பர் தரிசனக் காட்சி திருவுலா
நடைபெற்றது..




 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சிவாய நம
***

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2026

முருகனருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 31
ஞாயிற்றுக்கிழமை


இன்று ஆடி 31... தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறு. (16/8/26)

இன்றைய தினம்
 தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை   ஆறுபடை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய இருக்கின்றனர் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்  பதிவிட்டுள்ளேன்...

காலை ஆறரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம்...

தொடர்ந்து - 
முதற்கோயில் மேல வாசல்..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்.. வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்..

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்.. 
மேற்கு நோக்கிய 
கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஆறு மணியளவில் இக்கோயிலை அடைவர்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

பாதயாத்திரையாக வருகின்ற 
ஆயிரக்கணக்கான பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்வர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்குவர்.

மூன்று வேளையும் அன்னதான உபசரிப்பு என்பது சிறப்பு... 

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருக்கும்...


வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

சனி, ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 30
சனிக்கிழமை


இன்று சுதந்திர தினம்




இந்நாட்டையும் 
இந்நாட்டின் மக்களையும்
இறைவன்
காத்தருளட்டும்..

ஜெய்ஹிந்த்
வெல்க பாரதம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2026

துணை நீயே


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடிப்பூரம் 
ஐந்தாம்
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த பொன்னாள்..









ஓம் சக்தி ஓம்
***