நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 15, 2026

சமையல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


தினை கூட்டாஞ்சோறு

தேவையானவை

தினை அரிசி - 300 கி

பெரிய வெங்காயம், 
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும் 
நடுத்தரமாக ஒன்று, 

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ், 
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை, 
கொத்தமல்லி தழை சிறிதளவு, 

நல்ல நெய், 
கல் உப்பு - தேவையான அளவு...

செய்முறை: 
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..

வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

அடுத்து - 
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை 
 சற்று நேரம் வைக்கவும்..

இதனை வடித்து விட்டு - 
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...

கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..

வாழ்க நலம்
***

வெள்ளி, ஜூன் 12, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்
தேவாரம்

தலம்
திருப்பேரெயில்

முன்னை யார்மயில்
  ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில்
  தானோர் தலைமகன்
என்னை யாளும்
  இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர்
  பேரெயி லாளரே..  5/16/7
**
ஏ மனமே...
பேரெயில் தலத்துள் திகழ்கின்ற பெருமான்
முன்னே முதற் பொருளாகத் தோன்றியதோடு - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தையாகிய தனிப்பெரும் தலைமகன்..

 என்னையாளுகின்ற இறைவனும் எம்பிரானும் அவரே. முன்னைக்குப் பின் தோன்றிய புதியவரும் அவரே ..

 நன்றி
பன்னிரு திருமுறை
தஞ்சையம்பதி

ஓம் நம சிவாய
***

புதன், ஜூன் 10, 2026

வெண்ணெய்த் தாழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 27 கருட சேவை நடைபெற்றது.. 

மறுநாள் பதினேழு வெண்ணெய்த் தாழி வைபவமும் நடைபெற்றது..


திங்களன்று பதிவில் சொல்லியிருந்தேன்.

வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு நேரில் தரிசிக்கின்ற வாய்ப்பு வாய்க்கவில்லை..

ஊடகங்கள் வழியாகத் தான் நான் தரிசனம் செய்து கொண்டேன்...

அன்பின்  நெல்லை அவர்களது கருத்து - 

எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி...  - என்று..

உண்மை தான்.. நேரில் சென்றிருந்தால் அதிக பட்சம் காட்சிப் பதிவுகளாவது கிடைத்திருக்கும்... 

எல்லாம் அவன் செயல்...
ஆயுள் ஆரோக்கியத்துடன்
 அடுத்த வருடம் பார்க்கலாம்..

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ?.. ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக் கொள்ள) நேரம் கிடைக்குமா?..

என்பதுவும் நெல்லை அவர்களது கேள்வி...

முக்கியமான இடத்தில் நின்று கொண்டால், எல்லா கருட வாகனங்களும் நம்மைக் கடந்து செல்லும் . தரிசிக்கலாம்..

ஒவ்வொன்றையும் தரிசித்து  சடாரி வாங்கிக் கொள்ளலாம் நேரம் கிடைக்கும்.. சற்றே நெரிசல் இருக்கும்...

சாலையில் போக்குவரத்து ஒழுங்கு தான் பிரச்னை..

எல்லாம் வல்ல  கருட வாகனன் நல்வழி காட்டுவான்..

ஓம் ஹரி ஓம்
***

திங்கள், ஜூன் 08, 2026

கருடசேவை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..

உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..

 காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு


ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, ஜூன் 05, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வைகாசி
 வெள்ளிக்கிழமை

உறவினர் இல்லத்தில் அசாதாரணமான சூழ்நிலை.. 
ஒரு வாரத்திற்கு மேல் தங்கும்படியாகி விட்டது...

இனி இயன்ற வரை பதிவுகள்..

நலம் விசாரித்த் அனைவருக்கும்
 நன்றி...
**
இனிய எளிய தேவரப் பாடல்களை
அவ்வப்போது சிந்திப்போம்..


ஞான சம்பந்தர்
தேவாரம்

தலம் 
திருஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1

 சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசி
 வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய   பண்புகள் நிறைந்த பெருமையுடையவர்.  
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டியனின் பட்டத்தரசி. 
நாள்தோறும்
திருத்தொண்டு செய்து  சிவபெருமானை வழிபடும் தன்மையுடையவர்.  

ஓங்கி எரியும் தணலைப் போன்று சிவந்த வண்ணமுடைய சிவபெருமான் உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். 

அத்தகைய பெருமான்  தேவி அங்கயற் கண்ணி உடன் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூன் 04, 2026

வாழ்க...


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி
 வியாழக்கிழமை

நேற்று வெளியாகி இருக்க
வேண்டிய பதிவு..

தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில் பள்ளியில் நான் கண்ட - ஐயன் திருவள்ளுவரது திரு உருவத்தை இன்று மேம்படுத்தப்ட்ட சித்திரமாகப் பார்க்கின்றதில் மகிழ்ச்சி..


திருவள்ளுவரைப் பின்பற்றுவோர்க்கு
எல்லா நாளும் நல்ல நாட்களே...


அறம் பொருள் இன்பம் வீடு எனும்
ஹிந்து தர்மங்களை உள்ளடக்கிய 
திருக்குறளையும்
திருவள்ளுவரையும் நாம் கொண்டாடி வருகின்றோம்..

திருமயிலை அறுபத்து மூவர் உற்சவமே சாட்சி..

திருப்புகழ் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தால் கூட முருகனருள் பெறலாம் என்பார் அருணகிரிநாதர்..

அவ்வண்ணம்
திருக்குறளுக்கும் பொருந்தும்...

வாழ்க வள்ளுவம்
***

செவ்வாய், ஜூன் 02, 2026

சிவமயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி 
செவ்வாய்க்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை


தலம் - திருவலிவலம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5


ஞானசம்பந்தர்
பூர்ணாம்பிகை
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய
***

வியாழன், மே 28, 2026

சப்தஸ்தானம்

 

நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
வியாழக்கிழமை


தஞ்சாவூர் சப்தஸ்தான பெருவிழா 

தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி எனப்படும் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் சப்தஸ்தான திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.. 


ஜூன் 1 அன்று காலையில்
வெட்டி வேர் பல்லக்கில்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி தேவியும்

விசித்திர  கண்ணாடிப் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரருடன் பாலாம்பிகையும் எழுந்தருள ஜூன் 1 ஜூன் 2  ஆகிய நாட்களில்  தஞ்சை வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர், கடகடப்பை, புன்னை நல்லூர், தஞ்சை கீழவாசல் மற்றும்
ராஜ வீதிகள் என
ஏழூர் வீதி வலம்  நடைபெறும்... 

அனைவரும் வருக

ஓம் நம சிவாய
***

திங்கள், மே 25, 2026

புதிது

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
திங்கட்கிழமை


தற்சமயம்
இங்குள்ள சூழலின்
காரணமாக
 நமது தளத்தின் பதிவுகள்  
சில நாட்கள், தாமதம் ஆகலாம்... 

மற்றபடி நலம்...
நலமே வாழ்க..
***

ஞாயிறு, மே 24, 2026

இது எப்படி?

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை

தங்கம் விற்கிற விலையில் இதுக்கு வந்த ஆசை..


 நன்றி fb

நலம் வாழ்க
***

வெள்ளி, மே 22, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளைச்க்கிழமை

திருப்புகழ்
வள்ளிமலை


தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ... கடலீயும்

அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ... தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ... சமனாரும்

எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ... கழல்தாராய்...

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ... குருநாதா

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ... றுறைவோனே

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ... தொடுவோனே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
 
 காணொளியில்
அடியார்கள்
 பாடுவதைக் கேட்டு 
அதன் வழி
கௌமாரத்தில் இருந்து பெறப்பட்ட திருப்பாடல்... 

முருகா முருகா 
முருகா முருகா
***

வியாழன், மே 21, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வியாழக்கிழமை


இன்றொரு காணொளி

வடிவமைத்தோர்க்கு   நன்றி


ஓம் நம சிவாய
***

புதன், மே 20, 2026

செப்பேடுகள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 புதன்கிழமை

ஆனைமங்கலச்
செப்பேடுகள்


கிபி.1004 க்கு முன்.
இன்றைய தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கெடா. அன்றைய கடாரம்.

ஸ்ரீவிஜயம் என்றும் அழைக்கப்பட்டது.

மார விஜயதுங்க வர்மன் என்பவர் கடாரத்தை ஆட்சி செய்தார். இவர் தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் புத்த பெருமானுக்கு ஒரு கோவில் கட்டுகிறார்.
இப்புத்தர் கோவிலுக்கு தனது தந்தையின் நினைவாக சூளாமணி வர்ம விகாரம் என்று பெயர் சூட்டுகிறார்.

கிபி.1005.
மாமன்னர் இராஜராஜன் இக்கோவிலுக்கு நில தானம் அளிக்கிறார். நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள ஆனைமங்கலம் என்னும் கிராமத்தை பள்ளிச்சந்தமாக சூளாமணி விகாரத்திற்கு அளிக்கிறார். 
97 வேலி நிலப்பரப்புடைய இக்கிராமத்தின் வருவாய் முழுவதும் சூளாமணி விகாரத்திற்கு தானமாக உறுதிசெய்து செப்பு பட்டயத்தின் மூலம் எழுத்தாவணமாக உறுதி செய்யப்படுகிறது.

இதுவே ஆனைமங்கலம் செப்பேடாகும்.

செப்பேடு வாசகம்.

"ஒளிபெற்ற பாதபீடத்தை உடையவனுமான இராஜகேசரிவர்மரான இராஜராஜன் தன்னுடைய இருபத்தொன்றாம் ஆட்சியாண்டில் புவிக்குத் திலகம் போன்றதுமான சத்திரியசிகாமணி வளநாடு என்னும் பெருநாட்டில் பட்டினக் கூற்றமான நாகப்பட்டினத்தில் அறிஞர் என்னும் தொகுதிக்கு கதிரவன் போன்றவனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாரத்தின் அதிபதியுமான சைலேந்திர வம்சத்தில் பிறந்த சூளாமணி வர்மனின் மகனான மார விஜயோத்துங்க 
வர்மனால் தன் தந்தையின் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதும் தங்கமலையின் உயர்ந்த பெருமையை தனக்குக் கீழாக்கியதும் மிக அழகானதுமான சூளாமணி விகாரத்தில் வீற்றிருக்கும் புத்தருக்கு அதே பெருநாட்டில் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைக் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான்."

இந்த தானமானது அரசு ஆவணமாக பதிவு செய்யும்முன் இராஜராஜ சோழர் இறைவனடி சேர்ந்தார். இராஜராஜரின் மகனான இராஜேந்திரன் தனது தந்தையின் தானத்தை சாசனம் செய்கிறார்.

செப்பேடு வாசகம்.
"சக்ரவர்த்தியும் பெருவலிமையுடையவனுமான தன் தகப்பன் தெய்வத்தன்மை அடைந்தபிறகு அவனுடைய சிங்காதனத்தில் வீற்றிருக்கும் அவன் மகன் மதுராந்தகன் ( இராஜேந்திரன்)  நிலையான சாசனத்தை செய்தான். எதுவரையில் எல்லா உலகையும் ஆதிசேடன் தாங்குவானோ அதுவரையில் இந்த புத்த விகாரம் வைபத்தோடு இவ்வுலகில் திகழட்டும் நற்குணங்களின் உறைவிடமான கடதேசத்தின் அதிபதி தனக்குப் பிறகு வரும் மன்னர்களைத் தனது இந்த அறத்தைக் காக்கும்படி வேண்டுகிறான் "

அரசனின் திருமுகப்படி பிடிசூழ்தல் வேலைகள் நடைபெற்று எல்லைகள் குறிக்கப்பட்டு வருவாய் கணக்கிடப்பட்டு அனைத்து விபரங்களும் செப்புத் தகட்டில் எழுதப்பட்டு அரசு அதிகாரிகள் கையொப்பமிட்டு அரசு ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது .

இராஜராஜசோழரால் நில தானம் செய்யபட்ட  விவரத்தினைக் கூறுகின்ற ஒரேயொரு செப்பேடு இது மட்டுமேயாகும். புத்தர் கோவிலுக்குத் தானம் கொடுக்கப்பட்ட இச்செப்பேடு ஒன்று மட்டுமே  இராஜராஜ சோழரால் கொடுக்கப்பட்டதாகும்.

செப்பேட்டின் அமைப்பு
இந்த செப்பேட்டில் 21 பட்டைகள் உள்ளன. இவைகள் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கால் அங்குல தடிமனும் உடையவை. இடது ஓரத்தில் ஒரு அங்குல துளையிட்டு 13அங்குல வெளி வட்டமுடைய உருளை வடிவ  செப்பு வளையத்தினால் அனைத்து ஏடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனைமங்கலம் என்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 

தாமரைப்பூ போன்ற கூம்பு வடிவத்தின் மேற்பகுதியில் முகப்பு இலட்சினைஉள்ளது. இலட்சினையில் இராஜேந்திர சோழனின் சாசன சுலோகம் பொறிக்கப்பட்டுள்ளது.


இலச்சினையின் முகப்பில் புலி, இரு மீன்கள், இரு பக்கமும் விளக்குத் தாங்கிகள், இதன் மேல் தீபம், குடை, இருபுறமும் சாமரம், கிடைமட்டமாய் வில், இவைகள் பொறிக்கப்பட்டு 
உள்ளன.

111 வரிகள் கிரந்த எழுத்துக்கள் வடமொழியிலும் 332 வரிகள் தமிழ் எழுத்துக்களிலும் விவரங்கள் உள்ளன.

மற்ற எந்த செப்பேட்டுக்கு இல்லாத ஒரு சிறப்பு இச்செப்பேட்டுக்கு மட்டும் உண்டு.

தமிழ் எழுத்துக்கள் அரக்கு அச்சில் வார்க்கப்பட்டு பிறகு செப்பேட்டில் எழுதியுள்ளார்கள்.  

ஆகவேதான் இச்செப்பேட்டில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளன...

நன்றி
மா.மாரிராஜன் 
fb தரவு
படங்கள் இணைப்பு
தஞ்சையம்பதி

வெல்க பாரதம்
***

செவ்வாய், மே 19, 2026

ஆனைமங்கலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 செவ்வாய்க்கிழமை


ஆனைமங்கலச் செப்பேடுகள்

ஆனைமங்கலம் செப்பேடுகள்  எனப்படுபவை, மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகில் இருக்கும ஆனைமங்கலம் எனும் கிராமத்தின் நிலங்களை, பௌத்த விகாரத்திற்கு தானமாக வழங்கியதை விளக்கும் வரலாற்று சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் ஆகும். 

சோழர்களின் பெருமை, கடல் கடந்த வர்த்தகம் மற்றும் மத சகிப்புத்தன்மை இவற்றைப் பறைசாற்றும் இந்தச் செப்பேடுகள் குறித்த முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன..

 நன்றி விக்கி

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

கடாரத்தை (மலேசியா/இந்தோனேசியா) ஆண்ட ஸ்ரீவிஜயப் பேரரசன் ஸ்ரீமார விஜயதுங்கவர்மன் கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமத்தின் வருவாய் கொடையாக வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட காலம்.
முதலாம் ராஜராஜ சோழனின் இருபத்து ஒன்றாம்  ஆட்சி ஆண்டு (கி.பி. 1010 -1012) 


30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட இவை சோழர்களின் முத்திரையான புலிச் சின்னத்தைக் கொண்டுள்ளன.

தொடக்கப் பகுதிகள் சமஸ்கிருதத்திலும் (சோழர்களின் மரபுவழி), பெரும்பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகள், வரிவிலக்குகள் மற்றும் நிர்வாகக் குறிப்புகள் இந்தச் செப்பேடுகளில்  இடம் பெற்றுள்ளன..

இவை 'லீடன் செப்பேடுகள் ' என்றும் அழைக்கப்படுகின்றன. 

பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் வெளியிடப்பட்ட ' செப்பேடுகளும்' இதற்குள் அடங்கும். 

செப்பேடுகள் இடமாற்றம்.

செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ள -  சூளாமணி விகாரம் 18ஆம் நூற்றாண்டு பிற்பகுதி  வரை நாகப்பட்டினத்தில் இருந்தது என்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் உறுதி செய்யலாம்.

1660 இல் டச்சுப்பயணி Woulter schouten என்பவர் நாகைக்கு விஜயம் செய்து இந்த புத்த விகாரத்தை  சீன பகோட என்று குறிப்பு எழுதியுள்ளார்.

1724 ல் டச்சுப் பாதிரி பிரான்சிஸ் வேலன்டைன் ( Francois valentyn)  என்பவர் இந்த விகாரம் பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.

1846 இல் சர். W. எலியட் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதியுள்ள பயணக்குறிப்பில் இவ்விகாரம் பற்றி குறிப்பிடுகிறார். இந்த பௌத்த விகாரம் நான்கு பக்க கோபுரங்களுடன் மூன்று நிலை கட்டிடமாக இருந்தது. செங்கற்களால் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது - என்று குறிப்பிடுகிறார் எலியட்.

புதுச்சேரியிலிருந்து நாகைக்கு வந்த பிரஞ்சு பாதிரிகளின் தூண்டுதலால்  அப்போதைய ஆங்கில அரசு 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று இந்த  சூடாமணி  விகாரத்தை இடித்துத் தள்ளியது.

இங்கு இருந்த புத்தர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

டச்சு நாட்டின் கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராக இருந்த பிலோரென்ஷியஸ் காம்பெர் (Florentius Camper) என்பவர் நாகப்பட்டினம் புத்தர் விகாரையிலிருந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை தனது சொந்த ஊரான. ஒல்லாந்துக்கு (நெதர்லாந்து) கொண்டு சென்றார். அவரது குடும்பத்தினரிடமிருந்த செப்பேடுகள், அவரது உறவினரான
 H.A. ஹாமேக்கர் (H.A. Hamaker) மூலம் 1862-ஆம் ஆண்டு நெதலார்ந்து லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

அதன்பின் இச்செப்பேடுகள் லெய்டன் செப்பேடுகள் எனப்பட்டன.


இந்திய தூதரகத்தின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, நெதர்லாந்து அரசு இந்த அரிய  செப்பேடுகளை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. 

ஆனைமங்கல செப்பேடுகள்  தமிழர் வரலாற்றின் மாபெரும் பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன...
நன்றி விக்கி
மற்றும்
பல தரவுகள்

பாரதம் வெல்க
***

திங்கள், மே 18, 2026

மீண்ட செல்வம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை 


தாயகம் திரும்புகிறது சோழர் கால செப்பேடு! 

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனைமங்கலம் செப்பேடு பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் Leiden பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

தற்போது,  
நமது பிரதமர் மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய சோழர் கால பொக்கிஷம் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் வரலாறு…
சோழர் பெருமை…
மீண்டும் பாரத  மண்ணில்!.. 


நன்றி fb

ஆனைமங்கல செப்பேடுகளின் விவரம் என்ன?..

நாளைய பதிவில்...

பாரதம் வெல்க
***

ஞாயிறு, மே 17, 2026

சப்த ஸ்தானம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை


இரு வாரங்களுக்கு முன்பு திரு ஐயாறு ஏழூர் பல்லக்கு விழா தொடர்பான பதிவில் ஏனைய தலங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.. 

மனதிற்கு குறையாக இருந்தது...

அதற்கென இப்பதிவு... படங்கள் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்டவை...


திரு ஐயாற்றில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றதும்

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி எழுந்தருளியுள்ள
கண்ணாடிப் பல்லக்கும்

நந்தீசன் சுயசாம்பிகை எழுந்தருளியுள்ள
வெட்டி வேர் பல்லக்கும் திருக்கோயிலில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நகர் வலம் வந்த பின் திருப்பழனம் செல்கின்றன...



அங்கே
ஆபத்சகாயேஸ்வரர்
பெரியநாயகி அம்பாள்  
எதிர்கொள்வர்.. வரவேற்பிற்குப் பிறகு மூன்று பல்லக்குகளும்  அங்கிருந்து காவிரி குடமுருட்டி  ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறைக்கு செல்கின்றன..

அங்கே
ஓதவனேசர் அன்னபூர்ணி எதிர் கொண்டு வரவேற்க நான்கு பல்லக்குகளும்  திரு வேதிகுடிக்குச் செல்லும்..

அங்கே
வேதபுரீஸ்வரர் மங்கையர்க்கரசி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஐந்து பல்லக்குகளும் அங்கிருந்து
 திருக்கண்டியூருக்கு வருகின்றன

இங்கே
வீரட்டானேஸ்வரர்
மங்களநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஆறு பல்லக்குகளும்  திருப்பூந்துருத்திக்கு வருகின்றன

இங்கு
புஷ்பவனேஸ்வரர்
சௌந்தரநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஏழு பல்லக்குகளும்  அங்கிருந்து
திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்திற்கு செல்கின்றன..

தில்லைஸ்தானத்தில்
நெய்யாடியப்பர் பாலாம்பிகை எதிர் கொண்டு வரவேற்க எட்டு பல்லக்குகளும்  குடமுருட்டி, காவிரி ஆறு களைக் கடந்து திரு ஐயாற்றுக்கு வருகின்றன..

திரு ஐயாற்றில் கோலாகல கொண்டாட்டம்...  பதுமை மாலையிட்ட பின் மகா ஆரத்திக்குப் பின் பல்லக்குகள் அந்தந்த கோயில்களுக்குத் திரும்புகின்றன...

திரு நெய்த்தானம் திரு ஐயாறு திருப்பழனம் மூன்று தலங்களும் காவிரியின்  வடகரை.. ஏனைய நான்கும் காவிரியின்  தென்கரைத் தலங்கள்...


ஒவ்வொரு ஊரிலும் வரவேற்பு நிகழ்வுக்கும் பல்லக்குகளை  ஏற்றி இறக்குவதற்கும் நேரம் ஆனாலும் ஈசன் அருளால்
இரண்டு நாட்களில்  ஏழு ஊர்களைச் சுற்றி விட்டு ( ஏறத்தாழ 21 கிமீ)
சப்த ஸ்தான விழா நிறைவிற்கு வருகின்றது..

ஓம் நம சிவாய
***

சனி, மே 16, 2026

திருவீதி உலா

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 சனிக்கிழமை

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா திருவீதி உலா காட்சிகள்.

நன்றி
ஸ்ரீரங்கவிலாசம் fb
















ரங்கா ரங்கா
***