நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 17, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 32
திங்கள் கிழமை


ஆடி அமாவாசையன்று
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில்
அப்பர் தரிசனக் காட்சி திருவுலா
நடைபெற்றது..




 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சிவாய நம
***

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2026

முருகனருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 31
ஞாயிற்றுக்கிழமை


இன்று ஆடி 31... தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறு. (16/8/26)

இன்றைய தினம்
 தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை   ஆறுபடை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய இருக்கின்றனர் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்  பதிவிட்டுள்ளேன்...

காலை ஆறரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம்...

தொடர்ந்து - 
முதற்கோயில் மேல வாசல்..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்.. வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்..

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்.. 
மேற்கு நோக்கிய 
கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஆறு மணியளவில் இக்கோயிலை அடைவர்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

பாதயாத்திரையாக வருகின்ற 
ஆயிரக்கணக்கான பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்வர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்குவர்.

மூன்று வேளையும் அன்னதான உபசரிப்பு என்பது சிறப்பு... 

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருக்கும்...


வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

சனி, ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 30
சனிக்கிழமை


இன்று சுதந்திர தினம்




இந்நாட்டையும் 
இந்நாட்டின் மக்களையும்
இறைவன்
காத்தருளட்டும்..

ஜெய்ஹிந்த்
வெல்க பாரதம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2026

துணை நீயே


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடிப்பூரம் 
ஐந்தாம்
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த பொன்னாள்..









ஓம் சக்தி ஓம்
***

புதன், ஆகஸ்ட் 12, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 27
புதன்கிழமை


இன்று ஆடி அமாவாசை


அப்பர் ஸ்வாமிகள் 
திரு ஐயாற்றில்  கயிலாயக் காட்சி கண்ட நாள்..


கயிலாயக் காட்சி கண்டபோது
ஸ்வாமிகள் பாடித் துதித்த திருப்பதிகத்தில் இருந்து சில பாடல்கள்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்.. 4/3/1

ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 5

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 10

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2026

அந்நாளில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 
செவ்வாய்க்கிழமை


 1919 ல்  ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..

அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
 தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..

இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை  தனியாக இருந்தன.

மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-

வட ஆற்காடு
தென் ஆற்காடு 
தஞ்சாவூர் திருச்சி 
மதுரை ராமநாதபுரம் 
திருநெல்வேலி 
கோவை நீலகிரி 
செங்கல்பட்டு 
சென்ன என்பன..

இன்றைய பதிவில்
அந்நாளைய 
தென்னகத்தின் வரைபடம்.. 
 
நன்றி Fb


வாழ்க நலம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2026

ராகுவும் கேதுவும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 
ஞாயிற்றுக்கிழமை


 ராகுவும் கேதுவும்

தயாநிதி வீரராகவன்

நன்றி Fb

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமம். 

அங்கு இளம் விவசாயி ஒருவர்.. 

மாதவன் என்று பெயர் . 

நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, உழைக்கவும் தெம்பு இருக்கு. ஆனால் மூன்று வருஷமாக விளைச்சலே இல்லை.

ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
ஊர்  ஜோதிடரிடம் ஓடினான். 

ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார், 

" உனக்கு ராகு தோஷம். ராகு வயலை மறைக்கிறான். 50,000 ரூபாய்க்கு பரிகார பூஜை பண்ணனும்."

மாதவன் வீட்டில் இருந்த கொஞ்ச நகையையும் விற்று பூஜை பண்ணான். மறு வருஷமும் விளைச்சல் இல்லை.

கோபத்துடன் இன்னொரு பெரிய ஜோதிடரிடம் சென்றான். 

அவர் சொன்னார், "இது ராகு இல்லை, கேது.. உன் நிலத்தை கேது பிடிச்சிருக்கு.. இன்னொரு பரிகாரம் பண்ணனும்."

மாதவனுக்கு வெறுத்து போச்சு.

நேராக ஆத்தங்கரையில் உட்கார்ந்திருந்த கோயில் குருக்களிடம்  சென்றான். அவர் ஜாதகம் பார்க்க மாட்டார்.. மனுஷங்களை மட்டும் பார்ப்பார்.

மாதவன் கத்தினான்..

"சாமி, என் ஜாதகத்துல என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. ராகுவா, கேதுவா?."

குருக்கள் அவன் ஜாதகத்தை வாங்கினார். ஒரு நிமிஷம் பார்த்தார். அடுத்த நிமிஷம் அதை இரண்டாகக் கிழித்து வாய்க்காலில் வீசி விட்டார்.

மாதவனுக்கு உலகமே இருண்டு போச்சு. 

"என்ன சாமி இப்படி பண்ணிட்டீங்க!.."

குருக்கள் சிரித்தார்..

" தோஷம் ஜாதகத்துல இல்ல.. மாதவா... உன் பழக்கத்துல இருக்கு.. மூனு வருஷமா நீ என்ன செய்தாய் ? புதுசு புதுசா விதை  வாங்கி விதைச்சு யூடியூப் - ல பார்த்துப் பார்த்து புதுப்புது மருந்தா அடித்தாய்.. ஊர் முழுக்க ஜோதிடரை தேடி அலைந்தாய் .. ஆனா, உனக்கு அடுத்த நிலத்து ராமு என்ன பண்ணான் தெரியுமா?  தினமும் காலையில அஞ்சு மணிக்கு வயலுக்கு போறான். மண்ணைப் பார்த்து. வரப்பை சரி செஞ்சான்.. ஒரே பயிரை சாகுபடி பண்ணி பொறுமையா பார்த்துக்கிட்டான்."

"ராகு உன் நிலத்தை மறைக்கலடா.. பொறுமை இல்லாத்தனம் தான் உன் கண்ணை மறைச்சிருக்கு. கேது உன் வயலை பிடிக்கல, நீ யூடியூப் பேச்சை கேட்டுட்டு மாத்தி மாத்தி செஞ்சது தான் உன் வயலை பிடிச்சிருக்கு."

"ஜோதிடம் என்பது வானிலை அறிக்கை மாதிரி. மழை வரும்னு சொன்னா, நீ குடைய எடுத்துட்டு போகணும். மழையை நிறுத்த பூஜை பண்ணக்கூடாது."

மாதவனுக்குப் புரிந்தது.. பரிகாரம் தேடுவதை நிறுத்தினான்.

அடுத்த ஆறு மாதம் ஜோதிடம், யூடியூப் என்று எதையும் பார்க்கவில்லை. 

தினமும் வயலில் இருந்தான். மண்ணைப் புரிந்து கொண்டான்.

அந்த வருஷம்  கிராமத்திலேயே அதிக விளைச்சல் அவனுக்கு தான் கிடைத்தது.

ஜாதகத்தை கிழித்த குருக்களிடம்  ஓடிச் சென்று சொன்னான் -

"சாமி.. ராகு தோஷம் போயிடுச்சு!"

குருக்கள் சொன்னார்..

"ராகு எங்கேயும் போகலடா. அவன் அங்கே தான் இருக்கான். அவன் உனக்கு தோஷத்தை கொடுக்க வரல, புதுசா ஒரு பாடத்தைக் கத்துக்  கொடுக்க வந்தான். நீயும்  கத்துக்கிட்ட.. அவ்வளவு தான்."

***

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2026

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 22
வெள்ளிக்கிழமை

ஆடிக்கிருத்திகை


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ... தனதான


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
***

வியாழன், ஆகஸ்ட் 06, 2026

சங்கொலி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 21
வியாழக்கிழமை


குருஷேத்ர களத்தில் பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு சங்குகள் ஒலித்தன.. 

அந்த ஆறு சங்குகளின் பெயர்கள்.. 

1. பாஞ்சஜன்யம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடையது
வெண்ணிறத்தில் மின்னல் ஒளியுடன் இடி போல  ஒலிக்கும்... இந்த சங்கின் சத்தம் கேட்டாலே அதர்மம் நடுங்கும்..

2. அனந்தவிஜயம் : தருமருடையது
வெளிர் நீல நிறத்தில் அமைதியாக ஒலிக்கும் இது, முடிவில்லாத வெற்றியைக் குறிக்கும்.

3. பௌண்ட்ரம் : 
பீமனுடையது
பார்க்கவே பயங்கரமாக நெருப்பைப் போல ஜொலிக்கின்ற பிரமாண்டமான சங்கு இது. பீமனின் பலத்தை போலவே இதன் சத்தமும் அதிர வைக்கும்.

4. தேவதத்தம் : அர்ஜுனனுடையது
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இது, வெற்றியின் அடையாளம். இதன் ஒலி எதிரிகளுக்கு பயத்தை கொடுக்கும்.

5. சுகோஷம் : நகுலனுடையது
இனிய இசை போல ஒலிக்கின்ற வெள்ளிச் சங்கு. இதன் சத்தம் நல்ல செய்தியைக் கொண்டு வரும்.

6. மணி புஷ்பகம் : சகாதேவனுடையது
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தச் சங்கின் ஒலி, ஞானத்தையும் செல்வத்தையும் குறிக்கும். 

நன்றி
மகாபாரதம் Fb

ஓம் ஹரி ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 03, 2026

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 18
 திங்கட்கிழமை
மங்கல நாள்


அனைவருக்கும்
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..
 

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.. 1/130/3

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளுக்குள் நுழைந்து கூரிய அலகுகளால் தமது இறகுகளைக் கோதி - குளிர் நீங்கப் பெற்று பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைதனைத் தேடும் இடம் திரு ஐயாறு - என்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..

திரு ஐயாற்றின் இத்தகைய வளத்திற்குக் காரணம் காவிரி..

அணைகள் திறக்கப்படாததால் 
தஞ்சை வள நாட்டின் ஜீவநாடியான காவிரியில் தண்ணீர் இல்லை..

தஞ்சையில் இருந்து திரு ஐயாறு வரைக்கும் உள்ள ஐந்து ஆறுகளும் வானம் பார்த்திருக்கின்றன.  
வெண்ணாற்றுப் படுகையில் மட்டும் ஏதோ கொஞ்சம்  தண்ணீர்... அதுவும் இன்னும் சில  நாட்களில் வற்றிப் போகும்...

பழி பாவங்கள் மிஞ்சிப் போனதால் காவிரி வறண்டு கிடக்கின்றாள்.. 

ஆற்று நீர் பாசனம் தொடங்கப்படவே இல்லை.. 

அடுத்த சாகுபடிக்கு முன்னதாக காவிரியாள் தந்த வயல்வெளிகளை வீட்டு மனைகளாக்கி விடவேண்டும் - என, முனைந்திருக்கின்றனர்.

ஆடிப்பெருக்கும் அதனை ஒட்டிய விழாக்களும்  விடை இன்றி தவிக்கின்றன...

ஒன்றும் சொல்வதற்கில்லை...



கூடிய விரைவில் 
காவிரியாள் தடைகளைக் கடந்து 
பொங்கி வருவாளாக..
புது வெள்ளமெனப் பெருகி வருவாளாக..

காவிரிப் பெண்ணே வாழ்க  - உன்
காலடி மலர்களும் வாழ்க வாழ்க..
***

வெள்ளி, ஜூலை 31, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
அப்பர் ஸ்வாமிகள்
அருளிச்செய்த தேவாரம்

தலம்
திரு ஐயாறு


இரப்பவர்க்கு ஈய வைத்தார் 
  ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
  கடு நரகங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் 
  படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்  
ஐயன் ஐயாறனாரே.. 4/38/10

இரந்து நிற்போருக்கு வழங்கும்படியாக
செல்வங்களைத் தந்தவர்..
அப்படி வாரி வழங்குகின்ற மக்களுக்கு நல்லருளும்  புரிந்தவர்..

அஃதன்றி நிறைய பொருளை வைத்துக் கொண்டு ஒளித்து வாழ்பவர்களுக்குக் கொடிய நரகங்களையும் வைத்தவர்.. 

எங்கும் பரவி விளங்குகின்ற  கங்கையைப் படர் சடையின் பாகமாக வைத்ததோடு அரக்கனாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தவராய் விளங்குகின்றார்  ஐயனாகிய ஐயாற்று நாதன்..
*
ஓம் நம சிவாய
***

வெள்ளி, ஜூலை 24, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி
இரண்டாம் வெள்ளி


இன்று
திருஞானசம்பந்தர்
அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

தலம் 
திருக்கோலக்கா

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ.. 1/23/1

மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாய்வதும்
பெண்கள் தம் கரங்களால் குடைந்து நீராடுவதும் ஆன பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் -  

சடைமுடியும்,  பிறையும், திருமேனி முழுதும் திருநீறும் இடையில்  கீள் எனப்படும்  உடையும் கொண்டு விளங்கும் இறைவனின் திருக்கோலம் தான்  என்னவோ?..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

புதன், ஜூலை 22, 2026

சுவாதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடி சுவாதி
 ஸ்ரீ சுந்தரர் குருபூஜை

சுந்தரர் அயிராவணம் எனும் யானையின் மீது ஆரோகணித்து 
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலை சென்றடைந்த நாள்

திரு ஆரூரில் பரவை நாச்சியாரும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரும்
சிவகதி எய்தினர்..


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
    போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
    பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
    எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
    ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1

சுந்தரர் திருவடிகள் போற்றி
பரவையார் திருவடிகள் போற்றி
சங்கிலியார் திருவடிகள் போற்றி
சேரமான் திருவடிகள் போற்றி

சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 17, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
 முதல் வெள்ளி


இன்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
நம சிவாய திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே.. 4/11

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நம சிவாயவே..2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சி வாயவே..3

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே..4

வெந்தநீ றருங்கலம்
  விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
  அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம்
  திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
  நம சிவாயவே.  5

சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும்
  நல்குவான் நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நம சிவாயவே.  6

வீடினார் உலகினில்
  விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
  கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்று
  உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
  நம சிவாயவே.  7

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி உள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.  8

முன்னெறி யாகிய
  முதல்வன் முக்கணன்
தன்னெறியே சர
  ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
  கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
  நம சிவாயவே.  9


மாப்பிணை தழுவிய
  மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
  பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
  நம சிவாயப்பத்து
ஏத்தவல்லார் தமக்கு
  இடுக்க ணில்லையே.  10
திருச்சிற்றம்பலம்

இந்தப் பதிவுக்கு உந்திய
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி

ஓம் சிவாய நம
***