அரங்கநாயகிக்குத் தெரிந்தால்!?..
அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. புதிதாய் கணையாழி ஏதும் இருக்கின்றதா!.. என்று..
இப்போது என்ன செய்வது?...
திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..
அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் -
''..நான் கூட பார்த்தேனே!..''
கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள் - சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.
வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து - அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,
அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' - என்று!..
பழைய காலத்துக் கதவாயிற்றே - என்று கூட பார்க்கவில்லை!..
அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..
உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..
''..இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..''
ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..
''.. ஆஹா.. இவங்க எல்லாம் யார்!..''
''.. பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!.''
''.. ஏன்.. அவங்க வீட்டுப் பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..''
''.. சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...''
அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றார் இவர்!.. என்னிடமா.. தவறு!..''
அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது. உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!.. தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!.. என்ன சொல்கின்றாள்.. ஆர்வமாக உற்றுக் கேட்டான்!..
''அதென்னது?!.. திருத்தோள் எங்கும் சந்தனத் தீற்றலாமே!.. திருநேத்ரங்கள் சிவந்தும் கருங்குழற் கற்றைகள் கலைந்தும் கிடக்கின்றதாமே!..
அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..
உடன் இருக்கும் உளவாளி யார்?..
''..இதெல்லாம் இவ்விடத்தில் யார் சொன்னது?..''
''..யாரும் தனியா வந்து சொல்லணுமாக்கும்?.. அதான் ஊரே பார்த்துப் பார்த்து ரசிக்கின்றதே!..''
''..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?.. நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. ''
''..எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை.. அங்கே - உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..''
''..நறையூரோ.. மறையூரோ!.. உன் உளம் தானே - நான் உவந்துறையும் உறையூர்!..''
''..ஆகா... இந்தக் கள்ளம் எல்லாம் இனியும் வேண்டாம்.. நீர் போய் அங்கேயே இருந்து கொள்ளும்!..''
வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என - அன்பின் விழுது என - அரங்கனின் மேல் வந்து விழுந்தன.
நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது.
பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் வீசியது கூட பரவாயில்லை.. திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!..
கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..
அரங்கன் பரிதவித்துப் போனான்!..
அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது. உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்!.. அவருக்கு மனசு தாங்கவில்லை..
அண்ட பகிரண்டமும் அரங்கனைக் காண வேண்டி அல்லவோ - அரற்றிக் கிடக்கின்றது. அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!..
அரங்கனுக்கா இந்த நிலை!..
விறுவிறு - என நடந்து, பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.
''.. ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!.. கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!.. அவளின்றி நீ இல்லை!.. அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?.. இது நியாயமா?.. அம்மா?.."
ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.
''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?..
கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத் தெரியாதா!..சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால் பழங்கூட உட்கொள்ளாமல், உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்..
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் - உண்ணாமல் உறங்காமல் மயங்கியிருப்பதைப் பார்!..''
இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...
''.. இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலை.. பசிக்கிறது.. ன்னு!.. கணையாழி போனாப் போறது!.. நீங்க வாங்க!..''
நெடுங்கதவு திறந்து கொள்ள, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!... - என, தாள் எல்லாம் தூள் ஆனது!
அரங்கநாயகி சொன்னாள்,
''..இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்யம்!..''