நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 23, 2026

ஸ்ரீ சாஸ்தா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வியாழக்கிழமை

 நன்றி ஐயப்ப மலர்


சிவாலயங்களை நோக்கியுள்ள
ஸ்ரீ சாஸ்தா கோயில்கள்

ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த 
குளத்துப்புழை, 
ஆரியங்காவு, 
அச்சன்கோவில், 
சபரிமலை..
 
இந்த நான்கு சாஸ்தா கோயில்களும் பூகோள ரீதியாக தமிழ்நாட்டில் உள்ள நான்கு சிவாலயங்களை நோக்கி சாந்நித்யம் கொண்டிருப்பது  வியப்புக்குரிய செய்தி.

குளத்துப்புழை பாலகன் 
பாவநாசம் சிவனை நோக்கியும், 

ஆரியங்காவு ஐயன் 
திருக்குற்றால நாதரை நோக்கியும், 

அச்சன்கோயில் அரசு
ஸ்ரீ சங்கர நாராயணரை நோக்கியும், 

சபரிகிரி வாசன் 
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை நோக்கியும் சந்நிதி கொண்டு இருக்கிறார்கள்.

இதில் கூறப்பட்டுள்ள சிவாலயங்கள் பழைமையானவை என்றால்,  அந்த அளவுக்குப்
பழைமையானவை  சாஸ்தாவின் சந்நிதிகள்... 

இது போன்ற பூகோள  அமைப்பு, வேறு எங்கும் காணப்படவில்லை. 

இத்தகைய அமைப்பு என்பது ஆழமான ஆகம, யோக, தத்துவ ரகசியங்களைக் கொண்டது. 

இந்த நான்கு சாஸ்தா கோயில்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு என்பது,  முடிவில் அது  சிவானுபவத்தில் நம்மை லயம் அடையச் செய்யும் பயணமாக அமைகிறது.

மலையாள தேசத்தை ஸ்தாபித்த பரசுராமர் தமது தவத்திற்குக் காவலாக சாஸ்தாவை நான்கு கோவில்களில் ஸ்தாபிக்கிறார் என்று அறிகின்றோம். 

அவை பூமியின் சக்தி கேந்திரங்களாக, சக்தி நாளங்களாக, (energy grid)  அடர்ந்த மலைத் தொடர்களில்  அமைந்துள்ளன. 

மலைத்தொடர் = முதுகெலும்பு
கோவில்கள் = சக்கரங்கள்
நோக்கும் திசை = சக்தி ஓட்டம் 

இந்த அமைப்பு சொல்லும் மிகப் பெரிய ரகசியம் ஐயனின் வழியில் சென்று சிவம் என்ற இலக்கை அடைவது தான்!..

ஐயனின் துளசி மாலை அணிவது, விரதம் மேற்கொள்வது, அன்னதானம் செய்வது, இருமுடி தாங்குவது
மலை ஏற்றம், பதினெட்டாம் படி தரிசனம்,  நெய் அபிஷேக சமர்ப்பணம் மற்றும் சரணாகதி

இவை யாவும் எதைக் குறிக்கின்றன?..


இவை - 
உடல் → மனம் → ஆத்ம சுத்தி ->> தத்துவமசி

- என்பதனைக் குறித்த பயணம்...

அந்த அளவில் பயணம் தொடர்கின்றது...

சரணம் ஐயப்பா
***

புதன், ஏப்ரல் 22, 2026

அநுக்கிரகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன்கிழமை


இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரத்தில் ஒருநாள்  -  

தற்போதைய உடல் நலக் குறைவு சிரமங்களைக் குறித்து மிகவும் வருத்தமுற்று இருந்த போது சித்தர் வழிபாட்டுக் குழுவில் இருந்து வந்த திருப்பாடல்..

ஆலந்தான் உகந்தமுது செய் தானை
ஆதியை அமரர் தொழு தேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..7/61/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஏப்ரல் 21, 2026

முருகா சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை

மனித உடலில்
குருதிக்கு அதிபதி செவ்வாய்..
செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீமுருகப்பெருமான்


வயதானோர் தம் பிரச்னைகளுள் ஒன்று இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவது...

சரி... இதனை எப்படி எதிர் கொள்வது?!..


முருகா காப்பாற்று!... - என்று செவ்வேள் குமரனைச் சரணடைந்து செவ்வாய்க்கிழமை களில் விரதம் இருப்பது...

வாரத்தில் இரண்டு நாட்கள் உணவுடன்
முருங்கைக் கீரை ரசம் அருந்துவது.. 

அத்திப் பழம் சாப்பிடுவது..
இதனுடன் 
சுட வைத்த பால்
பனங்கற்கண்டு  அவரவர் விருப்பம்..

சமையலில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது..

அவ்வப்பொழுது
பேரீச்சம் பழங்கள் தின்பது..

வாரத்தில் இரண்டு நாட்கள்
பீட்ரூட் சாறு அருந்துவது..

வாரத்தில் மூன்று நாட்கள்
முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்வது.

மாதுளம் பழம் கருப்பு திராட்சை இவற்றை அவ்வப்பொழுது சாப்பிடுவது...

இவற்றால் 
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகி பிரச்னை தீர்கின்றது என்பது வைத்தியக் குறிப்புகள்...

தக்க மருத்துவரது ஆலோசனையும் மேற்பார்வையும் அவசியம் தேவை...


(இயற்கை வழி குறிப்புகளில் இருந்து)

வாழ்க நலம்
***

திங்கள், ஏப்ரல் 20, 2026

பொன்மகள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 திங்கட்கிழமை

இன்று
அக்ஷய திருதியை

அன்பின் நல்வாழ்த்துகள்..


தஞ்சையை அடுத்த திருச்சோற்றுத்துறை தலத்தில்
நல்ல உள்ளம் கொண்ட
 ஏழை ஒருவருக்கு
அட்சய பாத்திரம் கிடைத்த நாள்...

வறியோர்க்கு ஒன்றை ஈவதே ஈகை

பொன்மகளே வருக - பொருள்
 கோடியாய்த் தருக..

எளியோர்க்கு
 உதவுவோம்...

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம :
***

சனி, ஏப்ரல் 18, 2026

அநுகூலம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை

இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரம்  - சனிக் கிழமையன்று (4/4) உத்திரச் சேர்த்தி பதிவுகளை ஒழுங்கு செய்து விட்டு - 

(உத்திரச் சேர்த்தி பதிவுகளுக்கு பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம தான்)

 கும்பகோணத்தில் வசிக்கின்ற என் தம்பியிடம் இருந்தும் அபுதாபியில் இருக்கின்ற என் நண்பரிடம் இருந்தும் வந்திருந்த முகமன் படங்களைப் பிரித்தேன்...

இருவரிடம் இருந்தும்
வந்திருந்த ஒரே தகவல்...


இது நல்ல செய்தி!.. 

அநுகூலம் தான்
அநுக்ரகம் தான்

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஏப்ரல் 17, 2026

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
கதிர்காமம்

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ... தனதான

திருமகள் உலாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ... பெருமாளே..
 -: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், ஏப்ரல் 16, 2026

களங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 கிழமை


தமிழ்நாட்டின் தேர்தல் களங்கள்
(மாவட்ட வாரியாக)
 
நன்றி விக்கி
 
சென்னை 16
சேலம் 11

மதுரை 10
கோவை 10
திருவள்ளூர் 10 

திருச்சி 9
கடலூர் 9

தஞ்சாவூர் 8 
திருவண்ணாமலை 8
ஈரோடு 8
திருப்பூர் 8

விருதுநகர் 7
திண்டுக்கல் 7
செங்கல்பட்டு 7
விழுப்புரம் 7 

கன்னியாகுமரி 6
தூத்துக்குடி 6
நாமக்கல் 6
கிருஷ்ணகிரி 6
புதுக்கோட்டை 6

திருநெல்வேலி 5 
தென்காசி 5
வேலூர் 5
தர்மபுரி 5

காஞ்சிபுரம் 4 
திருவாரூர் 4
கரூர் 4
இராமநாதபுரம் 4
சிவகங்கை 4
திருப்பத்தூர் 4
தேனி 4
கள்ளக்குறிச்சி 4
ராணிப்பேட்டை 4

நீலகிரி 3
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 3

அரியலூர் 2
பெரம்பலூர் 2 

தவறாது
வாக்களிப்போம்
***

புதன், ஏப்ரல் 15, 2026

அர்ச்சனை


 நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன்கிழமை


நாளாய போகாமே 
  நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் 
  மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் 
  கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன் 
  கோளிலி எம் பெருமானே.. 1/62/1
-: திருஞானசம்பந்தர் :-

பக்தியின் வழியை  சத்புத்திர மார்க்கம், சக மார்க்கம், தாச மார்க்கம், குரு மார்க்கம் என வகுத்து  அதில்
ஒன்பது நிலைகளை வகுத்து வைத்துள்ளனர் ஆன்றோர்..

எக்காலத்திலும் ஒருவரிடத்தே இறைவனைப் பற்றி பேசுவது பக்தியின் நிலை...

இக்காலத்தில் வலைத் தளங்களில் 
ஆலயங்களைப் பற்றி எழுதுவதும் பக்தி நிலை ..

பயன் கருதாது ஆலய சுற்றுலா  பயணங்களை அமைப்பதும்  பக்தி நிலை..

என்றால்,

நாமாக ஏழை ஒருவரை கோயில் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதும்  பக்தி நிலை தான்..

பக்தியின் ஒன்பது நிலைகள்..

1) ஸ்ரவணம் 
இறைவனின் கதைகளைக் கேட்டல் (புராணங்கள், பாகவதம் கேட்டல்).

2) கீர்த்தனம்
இறைவனின் புகழைப் பாடுதல் (பஜனை,கீர்த்தனம்,
திருவாசகம் முற்றோதல்)

3) ஸ்மரணம் 
இறைவனை எப்போதும் நினைத்திருத்தல் (நாம ஜபம்).

4) சேவகம் 
கோயிலுக்கு  சேவை செய்தல்.

5) அர்ச்சனம் 
இறைவனது வழிபாட்டிற்கு உரிய  சாதனங்களை  கோயிலுக்கு வழங்குதல்.. விளக்கேற்றுதல்,
மலர் தூவி வழிபடுதல்..

6) வந்தனம் 
ஆலய தரிசனம் செய்து இறைவனை வணங்குதல்..

7) தாஸ்யம் 
இறைவனுக்கு அடிமையாக தன்னைக் கருதிக் கொண்டு தொண்டு செய்தல்..

8) ஸக்யம் 
இறைவனைத் தோழனாகக் கருதி அன்பு செய்தல்..

9) ஆத்மநிவேதனம் 
இறைவனை குருவாகக் கொண்டு முழுமையாக இறைவனிடம் சரணடைதல்.

எவரெவர்க்கு எது எது இறைவன் ஆணையோ அதன்படி அவரவர் நடக்க கர்ம வினை தீரட்டும்.. 

முக்தி நிலை சேரட்டும்..

இறைவன் திருத்தாள் போற்றி...

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஏப்ரல் 14, 2026

புது வருடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மங்களகரமான ஸ்ரீ பராபவ

சித்திரை முதல் நாள்
 செவ்வாய்க்கிழமை


அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-


பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!..

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திரு ஐயாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி!...
-: மாணிக்கவாசகர் :-


கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. 894
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-


அனைவருக்கும்
  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய
***

திங்கள், ஏப்ரல் 13, 2026

சமையல்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 திங்கட்கிழமை

இன்று 
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி...


தேவையானவை
சம்பா கோதுமை ரவை 200 கி
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 10
தக்காளிப்பழம் ஒன்று
கேரட் ஒன்று
பீன்ஸ் 10
பச்சைப் பட்டாணி 50
பச்சை மிளகாய் 2
பட்டை சிறியதாக 2 துண்டு
முந்திரி 10
அன்னாசிப்பூ ஒன்று
நெய் தேவைக்கு
மல்லித்தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

குறிப்பு ;-
சம்பா கோதுமை ரவையாக இருப்பதே நல்லது.. பச்சைப் பட்டாணி எனில் பிஞ்சாக உரித்து எடுக்கப்பட்டவை மட்டுமே.. உலர்ந்த பட்டாணியைத் தவிர்க்கவும்..

செய்முறை :

1)
ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்... 

2)
தக்காளியைக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..  பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

3)
சின்ன வெங்காயத்தை உரித்து  -  கழுவிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டாம்..கேரட்  பீன்ஸ் இவற்றைச் சன்னமாக நறுக்கி பட்டாணியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இட்லி தட்டில் வைத்து அவித்துக் கொள்ளவும்...

4)
தேங்காயைத் துருவி கொஞ்சமாகத் தண்ணீர்  விட்டு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்...  (விருப்பம் எனில் திட்டமாக தண்ணீர் விட்டு அரைத்து விழுதாகவும் எடுத்துக் கொள்ளலாம்)...

5)
பாத்திரம் ஒன்றில் - ஒன்றுக்கு மூன்று  (தேங்காய்ப் பால் எனில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு.. தேங்காய் விழுது எனில் ஒன்றுக்கு நான்கு..) என்ற கணக்கில்  - தண்ணீர் ஊற்றி, அதில் அவித்த காய்களுடன் தக்காளியை சற்று வதக்கி
பச்சை மிளகாய், பட்டை, அன்னாசிப்பூ தாளித்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்..

6)
 எல்லாம் அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில் தேங்காய்ப் பாலை ஊற்றி  வறுதெடுத்த  ரவை,  முந்திரியைச் சேர்த்து.,

7)
ரவை கட்டியாகத் திரண்டு விடாமல் சற்று கவனத்துடன் கிளறி விட வேண்டும்..

8)
ரவை நன்றாக வெந்து மலர்ந்ததும், சிறிது நெய் விட்டு மல்லித் தழையைத் தூவி கிளறி விடவும் ..

9)
அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைத்து மிதமான சூட்டில் பரிமாறவும்..

அவ்ளோ தான்..
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி..

வாழ்க நலம்
***

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026

பொக்கிஷம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று சில பொக்கிஷப் படங்கள்



ஜனதா விரைவு ரயில்


மாயூரம் தரங்கம்பாடி வழித்தடம்
 நன்றி மயிலாடுதுறை: ஜங்




தஞ்சை - சேலம் விரைவுப் பேருந்து



சனி, ஏப்ரல் 11, 2026

கோடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 சனிக்கிழமை

இன்னும் சில நாட்களில் சித்திரை... 
 
கோடை வந்து விட்டது....

வாட்டி வதைக்கும் வெயிலில் நாட்களைக் கடந்தாக வேண்டும்... சில ஒழுங்குமுறைகளை மேற்கொண்டு நமது பொழுதையும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்...

வெயிலை வீணாக்காமல் உழைப்பவரும் அலைபவரும் பலர்.. 
அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
தற்காத்துக் கொள்ளல்  வேண்டும். சீரான நிழலை உடன் பேண வேண்டும்...

ஆரோக்கியமானவற்றைப் பருக வேண்டும்... உண்ண வேண்டும்...

இந்த அளவில் இன்றைய பதிவு..


இளநீர் - இயற்கையின் கொடை... உடல் சூட்டைக் குறைத்து நலம் பல சேர்க்கும்... (வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதால் இவற்றின் விலை தாறுமாறாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது..)

பதநீர் /நுங்கு - 
இவையும் இயற்கையின் கொடையே... உடல் உஷ்ணத்தைக் குறைத்து நலம் பல சேர்ப்பவை..

தர்பூசணி  -  நீர்ச் சத்து மிக்கது... உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. முலாம் பழமும் உகந்ததே...

எலுமிச்சை - கனி வர்க்கத்தில் தலை சிறந்தது... உடலுக்குப் பல வகையிலும் சிறந்தது... நாரத்தையும் ஏற்புடையதே... பழத்தைப் பிழிந்து நீருடன் கலந்து பருகுவதே சாலச் சிறந்தது... வேறு கலப்பு எதுவும் வேண்டாம்...


சாத்துக்குடி - எலுமிச்சம் பழத்துக்கு இணையானது... நா வறட்சியைத் தவிர்க்கும். ஆரஞ்சும் இதன் வகையே..

வெள்ளரி - நீர்ச் சத்து மிக்கது.. உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. உப்பு, மிளகாய்த்தூளில் புரட்டித் தின்பதைத் தவிர்க்கவும்..

மோர்
வீட்டில் தயாரிக்கப்படுகின்ற தயிரும் மோரும் தலை சிறந்தவை..
இயற்கையாகத் தயாரிக்கப்படும் இவற்றுக்கு ஈடு இணையில்லை.. 

மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவது, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொட்டுவது,  வற மிளகாயுடன் தாளிதம்  செய்வது போன்ற சேட்டைகளைத் தவிர்ப்பது நலம்...

தண்ணீர் - மண் பானையில் வெட்டி வேர் துணுக்குகளுடன் வைக்கப்பட்ட சுத்தமான நீர் அமுதத்திற்குச் சமம்...

கோடையில் மா, பலா போன்ற பாரம்பரிய பழங்களுடன் இதர பழங்களும் சரியான அளவில் நல்லவையே..

குச்சி ஐஸ்,  கோன் ஐஸ்,  குலுப்பி ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் -  இவற்றோடு கூடிய உடன் பங்காளிகளான  ரோஸ் மில்க், பாதாம் கீர் இவற்றை விட்டு நீங்குவார்  எவரும் இலர்... 

எனவே,
இவற்றைப் பற்றி  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

நான் மேற்படி ஐஸ் விஷயங்களைக் கருத்தில் கொள்வதேயில்லை...

வண்ண மயமான இரசாயனத் திரவங்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

தகுந்த
முன்னேற்பாடுகள் இருப்பின்
கோடையும் இனிதே!.
குதுகலிப்போம்..

வாழ்க நலம்
***

வெள்ளி, ஏப்ரல் 10, 2026

திருப்புகழ்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திருத்தணிகை


தனத்த தத்ததனத் ... 
தனதான
     தனத்த தத்ததனத் ... தனதான

நினைத்த தெத்தனையிற் ... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ... றழியாமற்
     கதித்த நித்தியசித் ... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ... பெரியோனே

செனித்த புத்திரரிற் ... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 
நன்றி முருகன் அடியார்
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், ஏப்ரல் 09, 2026

உத்திரச்சேர்த்தி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வியாழக்கிழமை

உத்திரச்சேர்த்தி
பாகம் 2



எங்கே போயிற்று கணையாழி?.. 

அரங்கநாயகிக்குத் தெரிந்தால்!?.. 

அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. புதிதாய் கணையாழி ஏதும் இருக்கின்றதா!.. என்று..

இப்போது என்ன செய்வது?...

திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..

அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் - 

''..நான் கூட பார்த்தேனே!..''

கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள் - சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து - அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,

அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' - என்று!..

பழைய காலத்துக் கதவாயிற்றே - என்று கூட பார்க்கவில்லை!..

அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!..  அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..

''..இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..'' 

ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..

''.. ஆஹா..  இவங்க எல்லாம் யார்!..''

''.. பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!.''

''.. ஏன்.. அவங்க வீட்டுப்  பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..''

''.. சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...''

அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றார் இவர்!..  என்னிடமா.. தவறு!..''

அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது. உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!.. தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!.. என்ன சொல்கின்றாள்.. ஆர்வமாக உற்றுக் கேட்டான்!..

''அதென்னது?!.. திருத்தோள் எங்கும் சந்தனத் தீற்றலாமே!..   திருநேத்ரங்கள்  சிவந்தும்  கருங்குழற் கற்றைகள் கலைந்தும் கிடக்கின்றதாமே!.. 

அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..

உடன் இருக்கும் உளவாளி யார்?..

''..இதெல்லாம் இவ்விடத்தில் யார்  சொன்னது?..''

''..யாரும் தனியா வந்து சொல்லணுமாக்கும்?.. அதான் ஊரே பார்த்துப்  பார்த்து ரசிக்கின்றதே!..''

''..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?.. நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. ''

''..எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை.. அங்கே - உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..''

''..நறையூரோ.. மறையூரோ!..  உன் உளம் தானே - நான் உவந்துறையும் உறையூர்!..''

''..ஆகா...  இந்தக் கள்ளம் எல்லாம் இனியும் வேண்டாம்.. நீர் போய் அங்கேயே இருந்து கொள்ளும்!..''

வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என -   அன்பின் விழுது என -  அரங்கனின் மேல் வந்து விழுந்தன.

நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது.

பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் வீசியது கூட பரவாயில்லை.. திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!.. 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..

அரங்கன் பரிதவித்துப் போனான்!..

அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது.   உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்!.. அவருக்கு மனசு தாங்கவில்லை..

அண்ட பகிரண்டமும் அரங்கனைக் காண வேண்டி அல்லவோ - அரற்றிக் கிடக்கின்றது. அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!.. 

அரங்கனுக்கா இந்த நிலை!..

விறுவிறு - என நடந்து,  பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

''.. ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!.. கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!.. அவளின்றி நீ இல்லை!.. அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?.. இது நியாயமா?.. அம்மா?.."

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. 

கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத் தெரியாதா!..சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால் பழங்கூட   உட்கொள்ளாமல், உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்.. 

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் உறங்காமல் மயங்கியிருப்பதைப் பார்!..''

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...

''.. இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலை.. பசிக்கிறது.. ன்னு!.. கணையாழி போனாப்  போறது!.. நீங்க வாங்க!..''

நெடுங்கதவு திறந்து கொள்ள, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!... - என, தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கநாயகி  சொன்னாள்,

''..இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்யம்!..''

ஆழ்வார் புன்னகைத்தார்!.
அரங்கநாயகி புன்னகைத்தாள்!.
அரங்கநாதனும் புன்னகைத்தான்!.. 

அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..

அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..

அமிழ்தினும் இனிய அன்பினில் குழைந்த அக்கார அடிசில் நிவேதனமானது..


அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப் பந்தலின் கீழ், '' சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.
* * *

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று -  18 முறை விடிய விடிய திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள்.

திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம்.  திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. மீண்டும் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள்!..

''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..''

பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம். மங்கல மாவிலைத் தோரணங்களாடும் சித்திரை வீதியில் திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பொழிகின்றான்.

மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜஅவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..
* * * 

அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..

அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!.. 

அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!.. 

அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும் அரங்க நாயகி விரலிலும், 
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..
* * * 

பங்குனி உத்திரத்தன்று சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது  நிவேதனம் செய்வது மரபு.

2014 ன் பதிவு இது!.. சில நகாசு வேலைகளுடன் மீண்டும்!..

இப்பதிவைப் பலரும் தத்தமது பக்கங்களில் தத்தமது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்து கொண்டார்களாம்... கருத்துரைக்கு 2020ல் தகவல் வந்திருக்கின்றது...

அடியவர் கூட்டம் வாழ்க..
அரங்க மா நகரும் வாழ்க.. 
அன்னையும் வாழ்க..
அரங்கனும் வாழ்க..
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..
***