நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 01, 2025

தேங்காய்ப் பால்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை


தேங்காய்ப் பால் இல்லாத தமிழ்ச் சமையல் மிகவும் அரிது..

தேங்காய்ப் பால் என்றால் என்ன?.. என்று  கேட்பர் - இன்றைய அந்நிய உணவுப் பிரியர்கள்.. 

இன்றைய தலைமுறையினருக்கு தேங்காய்ப் பாலைப் பற்றித் தெரியுமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்..


சின்ன வயதில் இருந்தே எங்கள் வீட்டில் வாரத்தில் சில நாட்கள் தேங்காய்ப் பால் அருந்துவது வழக்கம்..

தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.. 
நாகரிக வாழ்வில் வாழ்கின்ற
பெரும்பாலானவர்களுக்கு இது ஆகாது என்பது இன்றைய மருத்துவம்..

வயிற்றில் சூட்டினை குறைப்பதிலும்  புண்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் தோல் திசுக்களுக்கும் தோலின் பளபளப்புக்கும் தேங்காய் பால் முக்கிய பங்காற்றுகின்றது என்பது சித்த மருத்துவம்..

இன்று வரை எனக்கு வயிற்றில் வலி போன்ற எதுவும் ஏற்பட்டதே இல்லை.. 

வெறும் வயிற்றில் தேங்காய்ப் பால் அருந்துவதால் செரிமானம் செம்மையாகின்றது, அத்துடன் இதய ஆரோக்கியமும் மேம்படுகின்றது, 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைகின்றது . 

நிறைந்த பல ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது தேங்காய்.. தேங்காய்ப் பாலும் அப்படியே.. 

நவீன உரங்களால் தென்னையும் தேங்காயும் பாதிப்பு எய்தியிருந்தாலும் நவீனத்தைப் புறந்தள்ளி விட்டு இயற்கை எருக்களுடன்  தென்னை விவசாயமும் நடைபெறுகின்றது..


இருப்பினும், தேங்காய்ப் பாலில்  கொழுப்பும்  கலோரிகளும் அதிகம் என்றும் அதிகப்படியான பயன்பாட்டினால் இதய நோய்கள் வரலாம் - என்றும் உடல் எடை அதிகரிக்கலாம் என்றும் இன்றைய
அச்சுறுத்தல்கள்..

உடல் உழைப்பு இல்லாதோருக்கு எல்லாமும் இடையூறுகள் தான்..

எனினும், இதனைக் கவனத்தில் கொள்வது நல்லதே...

தேங்காயும்  துருவலும் பாலும் எண்ணெயும் ஆபத்து மிக்கவை என்று மேலை மருத்துவம் சொல்வதைக் கேட்பதும் அதன்படியே நடப்பதும் அவரவர் விருப்பம்..


கையளவு அவலுடன் தேங்காய்த் துருவல்  சிறிதளவு சேர்த்து தண்ணீர் தெளித்துக் கிளறி செவ்வாழைப் பழம் ஒன்றுடன் சாப்பிட சிறப்பான காலை உணவு .. இனிப்பு அவரவர் தேர்வு..

சமீப காலமாக இது எனது வழக்கத்தில்... 

அதிக உடல் உழைப்பு உடையோருக்கும் அவல் உணவு பொருந்தும்.. 

இன்றைய நாகரிக வாழ்வில் வாரம் ஒரு நாளாவது தேங்காய்ப் பால் அருந்துதல் நல்லது...

தேங்காய்ப் பால் இல்லாத
தமிழ்ச் சமையல் மிகவும் அரிது.. 

தேங்காய்ப் பால் குழம்பில் வற மிளகாயின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பது பொது... மிளகாய்த் தூளை அதிகமாக  சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..

தேங்காய்த் துருவல் பூரணம் (கொழுக்கட்டை), தேங்காய்ப் பால் சோறு, தேங்காய்ப் பால் குழம்பு, ரசம், 
தேங்காய்ப் பால் கலந்த அவியல் - என,  சிறப்புகள்..

அரைத்து விட்ட 
தேங்காய்ப் பால் 
 சாம்பார் என்பது தஞ்சை வட்டாரத்தில் சிறப்பு..

தேங்காய்ப் பால் ஆப்பம், இடியாப்பம் இவற்றையும்
தேங்காய்ப் பாறை, தேங்காய் பால் திரட்டு  ஆகிய இனிப்பு வகைகளையும் மறக்கத் தான் முடியுமா!?..

நமது ஆரோக்கியம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
**

திங்கள், ஆகஸ்ட் 25, 2025

தேங்காய்ச் சட்னி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை

இன்று பாரம்பரிய 
தேங்காய்ச் சட்னி பற்றி சிறு வரைவு..


தேங்காய்த் துருவலுடன் மிளகு ( இன்றைய நடைமுறை பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்)  உப்பு, இவைகளை தேவையான அளவில் சேர்த்து அம்மியிலோ, ஆட்டுரலிலோ பக்குவமாக அரைத்தெடுத்து இரும்பு வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலை  தாளித்து கொத்த மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கினால் அடடா! ... 

இந்நாளில் சிறிதளவு தேங்காய் துருவலுடன் பொட்டுக் கடலை பெருமளவில்  வற மிளகாயைச் சேர்த்து அரைத்து தேங்காய் சட்னி என்று உருட்டுகின்ற உணவகங்கள் இங்கே பெருகி விட்டன... இதில் மிளகாய்ச் சட்னி தனி..

வற மிளகாய் என்றைக்குமே வயிற்றுக்குக் கேடானது என்பதை நினைவில் கொள்க


பொட்டுக் கடலைக்குப் பதிலா  நிலக்கடலை சேர்த்தும் தேங்காய்ச் சட்னி செய்வதுண்டு..


தேங்காய் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது.. 

தாதுக்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக புரதம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமான கால்சியம், இரத்த உற்பத்திக்கு அவசியமான இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள வைட்டமின்கள் B, C ,E  ஆகியவை பொதிந்துள்ளன.. 

தேங்காயில் உள்ள கொழுப்பு சிறப்பு வகை  ஆகும். இது ஆரோக்கியமானது...

ஆனால் சிலருக்கு தேங்காயில் உள்ள கொழுப்பு ஒத்துக் கொள்தில்லை...
நன்றி விக்கி

வாழ்க நலம்..

நமது நலம்
நமது கையில்..

ஓம் சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூலை 21, 2025

கொத்தமல்லி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 5
திங்கட்கிழமை


இன்று கொத்தமல்லி மகாத்மியம்..

கொத்தமல்லி நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளையும்  வாயு பிரச்னைகளையும் குணமாக்கும் தன்மை உடையது..
இது பசியைத் தூண்டுகின்ற மூலிகை.. 

மற்ற விளைபொருள்களைப் போலவே பலவித பூச்சி மருந்துப் பிரயோகங்களுடன் தான் சந்தைக்கு வருகின்றது..

எனவே
கொத்தமல்லி இலையை உப்புத் தண்ணீரில் நன்கு அலசி விட்டு  அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..

வீட்டில் தோட்ட வெளி அல்லது
மாடித் தோட்டம் இருப்பின் நாமே தொட்டிகளில் கொத்த மல்லியை பயிரிட்டுக் கொள்ளலாம்..

இப்படியிருக்க
நம்முடன் சர்வ சாதாரணமாக புழங்குகின்ற கொத்த மல்லித் தழை செய்கின்ற அற்புதங்கள் பற்பல...

அவற்றுள் ஒரு சில..

வெறும் கொத்த மல்லித் தழைச் சாற்றுடன் எலுமிச்சை சாறு உப்பு மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

கொத்தமல்லித் தழைச் சாற்றுடன் மோர் உப்பு கலந்தும் அருந்தலாம்.

கொத்தமல்லிச் சாறு அருந்தும் போது  பசித்த பின்னரே  சாப்பிட வேண்டும்.
 
இப்படித் தொடர்ந்து பருகுவதால் காமாலை போன்ற  நோய்கள் வராமல் தடுக்கப் படுகின்றது..

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறுகின்றன..

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகின்றன..

கல்லீரல் பலப்படுகின்றது...
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

புத்தம் புதிய கொத்த மல்லித் தழையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி விட்டு ஒரு குவளை சுத்தமான நீர் விட்டு சிற்றரவையில் அரைத்துப் பிழிந்து - வடிகட்டி எடுத்தால் கொத்த மல்லிச் சாறு..

பச்சைக் கொத்தமல்லி சட்னி அரைப்பது போலத் தான் இதுவும்...
இதில் பச்சை மிளகாய் அறவே கிடையாது..

இதைத் தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் டீ, காஃபிக்கு பதிலாக இதனை அருந்தலாம்..

பச்சையாக சாறு அருந்துவது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில் இதை விட்டு விடவும்..

இயற்கை நலம் 
பேணுவோம்..

சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூன் 02, 2025

திங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19
திங்கட்கிழமை


இன்று
பொரி அரிசி  தோசை 

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி 200 g
ரவை 200 g
பொட்டுக்கடலை 1000 g
இஞ்சி சிறிதளவு
சீரகம் ஒரு tsp
கல் உப்பு தேவையான அளவு
தயிர் ஒரு tsp
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கொத்தமல்லி  சிறிதளவு
நெய் தேவைக்கு

செய்முறை

முதலில் வாணலி ஒன்றை
மிதமான சூட்டில் வைத்து அரிசியை கருகி விடாமல் பொரித்து ஆறியதும் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. 

அடுத்து பொட்டுக் கடலையையும் இதே போல அரைத்துக் கொள்ளவும்.. 

அடுத்து ரவையை ஓரளவுக்கு சிவக்க  வறுத்துக் கொள்ளவும்..

இஞ்சியை  சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.. 

பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

பாத்திரம் ஒன்றில் அரிசிப் பொரி மாவு பொட்டுக்  கடலை மாவு ரவை,  .இஞ்சி சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

 கரைத்த மாவில்  பொடியாக நறுக்கிய  மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசைகளாக  ஊற்றவும்.
 
ஓரத்தில் சிறிது நெய் விட்டு வேக வைத்து எடுத்தால் பொரி அரிசி தோசை..

 மிளகாய் தாசர்கள் தவிர்த்து மற்றவர்கள் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்வது நலம்.

மொர மொரப்பாக  இருக்குமா?..

அதெல்லாம் உங்கள் கைப்பக்குவம்!..

உங்களது
தேவைக்கேற்ப அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்..

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

சிவாய நம ஓம்
**

திங்கள், மே 26, 2025

பால் கேசரி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
திங்கட்கிழமை

அனைவருக்கும்
நல்வரவு


இன்று பால் கேசரி

தேவையானவை

ரவை  200 கி
பால் 390 மிலி
ரவை ஒரு பங்கு எனில் பால் மூன்று பங்கு
சர்க்கரை  சுவைக்கு ஏற்ப
(அதிக சீனி வேண்டாம்)
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய்  3
குங்குமப்பூ சிறிது
முந்திரி 10 
உலர் திராட்சை 10

செய்முறை :

ஏலக்காயை பொடி செய்து  கொள்ளவும்..
 வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து சற்றே  வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் ரவையை சேர்த்து இளந் தீயில்  வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிறிது பாலுடன் குங்குமப் பூவைக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதி வந்ததும், அதில் ரவையை இட்டு  கிளறவும்.  அத்துடன் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து கிளறி விடவும் .

ரவை நன்கு வெந்ததும், அதில் சீனியைச் சேர்த்து  கிளறி,  தளதள - என வருகின்ற போது, அதில் நெய் சேர்த்துக் கிளறவும்..

அடுத்து அதில் ஏலக்காய் பொடி  வறுத்த முந்திரி மற்றும்  திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான பால்  கேசரி .

இது வழக்கமான  கேசரி தான்.. 
வழக்கமாக சேர்க்கின்ற
தண்ணீருக்குப் பதிலாக பால்..
அவ்வளவே!...

பதிவுகளின் நடைமுறை மாறி இருப்பதால் முதல் பதிவாக பால் கேசரி...

மகிழ்ச்சி.. நன்றி..

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

ஓம் சிவாய நம 
**

திங்கள், மே 19, 2025

மசாலா

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி  
திங்கட்கிழமை


பிரியாணி மசாலா

தேவையானவை :
உலர்ந்த மல்லி - 50 கிராம்
மிளகு - 30 கிராம்
சோம்பு - 20 கிராம்
ஏலக்காய் - 15 
அன்னாசிப் பூ - 5 
பட்டை - 10 துணுக்கு
கிராம்பு - 10 
கசகசா - 10 கிராம்
பிரிஞ்சி இலைகள் - 10 


செய்முறை:

மேற்சொன்ன அனைத்தையும் தனித்தனியே வெயிலில் நன்கு காயவைத்து, மிக்ஸியில் ஒன்றாக இட்டு  அரைத்துக் கொள்ள  (பிரியாணி) கரம் 
மசாலா..

இந்த பொடி ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். 

இதை  அனைத்து வெஜ்., பிரியாணி, 
தக்காளிச் சாதம் மற்றும்
குருமா வகைகளில்  
தேவையான அளவு  சேர்க்கும் போது சுவையும் மணமும் கூடும்... 

இந்த மசாலாப் பொடியில் வர மிளகாய் சேர்க்கப்படவில்லை..

எனவே -
இதனைக் கொண்டு சமைக்கின்ற போது
தேவைக்கு ஏற்ப
காய்களுடன்  பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது சிறப்பு.. 

அதி காரம், 
அதிக காரம் இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல..
ஃஃ

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

வாழ்க நலம்
***

திங்கள், மே 05, 2025

திங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 22
திங்கட்கிழமை

காலிஃப்ளவர் பனீர் கூட்டு 
 

காலிஃப்ளவர் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு உரியது..

காலிஃப்ளவரை பனீருடன் சேர்த்து எளிய செயல்முறையில் குறிப்பு இது..

தேவையானவை :


காலிஃப்ளவர் 250 gr
பனீர் துண்டுகள் 150 gr
தேங்காய் ஒருமூடி
பல்லாரி  வெங்காயம் ஒன்று
புதினாவும்
மல்லித் தழையும் சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 2 Tsp
மஞ்சள் தூள் Tsp 
மிளகுத் தூள் 1 Tsp
ஓமம் Tsp
முந்திரி 10
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :

கடலெண்ணெய் தேவைக்கு
கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு - தங்கள் வழக்கப்படி
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 

செய்முறை :


காலிஃப்ளவர் வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து நன்றாக
அலசிக் கொள்ளவும்..

காலிஃப்ளவரை தனித் தனியாகப் பிரித்து ஆவியில் வேக வைக்கவும்.

தேங்காயைத் துருவி மிளகு ஓமத்துடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்  கொள்ளவும்..

இருப்புச் சட்டியில்
எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பனீர், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.

அவித்து எடுத்த காலிஃப்ளவரை இதனுடன் போட்டு மஞ்சள் தூள், உப்புத் தூள் சேர்த்து காலிஃப்ளவர் உடைந்து விடாதபடி மெதுவாகக் கிளறி விடவும்.

வாணலியில்
 எண்ணெய் விட்டு முந்திரிப் பருப்புகளை சிவக்க வறுக்கவும்.

காலிஃப்ளவருடன் 
 வறுத்த முந்திரி, தேங்காய் விழுது மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  அடுப்பை நிறுத்தி காலிஃப்ளவரை மூடி
வைக்கவும்.. 

இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்..

இதையே பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து மசாலா
குழம்பாகவும் வைக்கலாம்..

கூட்டு ஓரளவுக்கு தளர்வாக இருப்பது - அவசியம்..

சற்று இறுக்கமாக தயாரித்தால் -
Veg., பிரியாணி போன்றவற்றுக்கு துணையாக அமையும்..
**
ஓம் அன்னபூர்ணாயை நம: 

ஞாயிறு, மே 04, 2025

வாசி வாசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21 
ஞாயிற்றுக்கிழமை

விலைவாசி

இந்த விலைப்பட்டியல் வெளியான வருடத்தைக் கவனியுங்கள்.. 

அப்போது தான்
இப்போதுள்ள நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அகம் மகிழலாம்.. ஆனந்தக் கூத்தாடலாம்...

ஒற்றை ரூபாய்க்கு லாட்டரி அடித்த காலம் ஒன்று இருந்தது..

ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா என்றாலும் நூறு பைசா...

ஐம்பது பைசாவிற்குள் கனமான காலைச் சிற்றுண்டி...

அத்தனையும் பொய் புரட்டு இல்லாத ஆரோக்கிய உணவுகள்..

இன்றைக்கு எத்தனையோ விதமான வசதிகள்...

ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை என்று எதுவும் இல்லை..

இன்றைக்கு நடு வீட்டிற்குள் வைர வைடூரிய வணிக விளம்பரங்கள்..

என்றாலும் - 
பணம்  படைத்தவர்க்கே உலகம்..

இருந்தாலும் -
மகிழ்ச்சியடைவோம்..


அன்றைய நடைமுறைக்கு எடை அளவு விவரங்கள் சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன்..

ஒரு உழக்கு - 336 ml 

ஒரு தோலா - 11.7gr
10 தோலா  - 117 gr.

ஒரு பலம் =  35 gr
(எட்டு பலம்  ஒரு சேர்)
வீசை - 1.4 Kgr
(ஐந்து சேர் ஒரு வீசை)
தூக்கு - 1.7 Kg.

ஒரு வீசை = ஆயிரத்து நானூறு கிராம்.

ஒரு ஆழாக்கு 200 gr .
(5 ஆழாக்கு 1 கிலோ)
ஒரு படிக்கு 8 ஆழாக்கு 
(1. 600 Kg)
நன்றி இணையம்
 
வாழ்க்கை வாழ்வதற்கே!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 31, 2025

தக்காளி சூப்

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17 
திங்கட்கிழமை


தக்காளி மிளகு சூப்..

தக்காளிப்பழங்கள் இரண்டு
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
மிளகுப் பொடி 1⁄2   tsp  
சீரகப் பொடி 1⁄2   tsp  
சோள மாவு  1⁄2   tsp  
வெண்ணெய் தேவைக்கு 
மல்லித் தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

செய்முறை

தனியானதொரு பாத்திரத்தில் தக்காளிப் பழங்களை  போட்டு மூழ்கும் அளவுக்கு கொதி நீரை ஊற்றி
சில நிமிடங்கள் கழித்து -

தோலை உரித்துக் கொள்ளவும்..

வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி  - தோலுரித்த தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கிண்ணம் ஒன்றில்  தனியாக வைக்கவும்.. 

50 ml தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொள்ளவும்..

உத்தேசமாக 500 ml 
நீரை அடுப்பில் ஏற்றி அரைத்து வைத்திருக்கின்ற
 தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க  விடவும்.

சோள மாவு கரைத்த
கலவையைக்  கொதிக்கின்ற விழுதுடன் கலக்கவும்.

உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.  வெண்ணெயையும்
சேர்க்கவும்.

நன்கு கொதித்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..

மூன்று பேருக்கானது இது..

வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
மழை குளிருக்கு இதமான தக்காளி  சூப் என்றாலும் எல்லா நாளும் 
உடலுக்கு நலமளிப்பது..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய
**

ஞாயிறு, பிப்ரவரி 23, 2025

பாதாம் பால்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
ஞாயிற்றுக்கிழமை

இன்று பாதாம் பால்


கறந்த பாலாக இருப்பின் நல்லது..


தேவையானவை :

பசும்பால் 750 ml
பாதாம் பருப்பு 150 gr
முந்திரிப் பருப்பு 50 gr
வறுக்கப்பட்ட நிலக்கடலை 50 gr
பனங்கற்கண்டு 150 gr
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
சுத்தமான மஞ்சள் தூள் சிறிது
ஏலக்காய் 3

செய்முறை

வறுபட்ட நிலக்கடலையின் தோலை நீக்கி  விடவும்..
பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து பாதாம் பருப்பு  நிலக்கடலை
இரண்டையும் மிக்ஸியில் இட்டு பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். ஏலக்காயை இடித்து . முந்திரியை நெய்யில் வறுத்து  நொறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த பாதாம் பாலை - பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் பனங்கற்கண்டு,  குங்குமப்பூ, மஞ்சள் தூள் மீதியுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து  சற்றே கொதிக்க விட்டு சுண்டக் காய்ச்சி -  நொறுக்கிய முந்திரியை அதில் தூவி  - அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் 
இதனை  சில்லரில் சற்று நேரம் வைத்து
குளிரூட்டிய பின்   பரிமாறவும். .

இரசாயன வண்ணமாகிய கேசரி பவுடர் வேண்டாம்..


நான்கு பேருக்கானது..
மிக மிக ஆரோக்கியமான பாதாம் பால்..

வேண்டுமெனில் பாலின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம்..

இது மிகவும் திடமானது.. 

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்  அருந்துவது நல்லது..

நமது நலம்
நமது கையில்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

வியாழன், பிப்ரவரி 20, 2025

கதம்ப ரசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 8 
வியாழக்கிழமை

இன்று
கதம்ப ரசம் 
(வெஜ் சூப்)

வேகவைத்த 
துவரம் பருப்பு 3 Tbsp
உருளைக் கிழங்கு ஒன்று
கேரட் ஒன்று
குடை மிளகாய் ஒன்று
முட்டைக்கோஸ் தளிர் இலைகள் 2
வெங்காயக் குருத்து ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
பூண்டு 3 பல்
புதினா இலைகள் 3
மல்லித்தழை சிறிது
வெண்ணெய் அரை tesp
கல் உப்பு சிறிது

பாத்திரம் ஒன்றில்  கேரட்
குடை மிளகாய் பூண்டு
முட்டைக்கோஸ் இலை வெங்காயக் குருத்து தக்காளி
 வெங்காயம் இவைகளைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். 

உருளைக்கிழங்கை நறுக்கிப் போட்டு வெந்ததும் கரண்டியால் ஓரளவுக்கு மசித்து குழைத்து விடவும்..

புதினா, மல்லித் தழை ஆகியவற்றைப்  பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.. 

எல்லாம் வெந்து கொதித்ததும் பருப்பைச் சேர்த்து உப்பு போட்டு நான்கு பேருக்கான  சுடு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

மிளகுத் தூள் வெண்ணெய் சேர்த்து இறக்கி -
சற்று ஆறிய பின்,
அப்படியே அருந்துவதும் அல்லது வடிகட்டி அருந்துவதும் தங்களது விருப்பம்..

வாரத்தில் இருமுறை இப்படி அருந்தலாம்..
**
நமது சமையல்
நலந்தரும் சமையல்

நமது நலம்
நமது கையில்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

புதன், பிப்ரவரி 19, 2025

நாரத்தங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 7
 புதன் கிழமை

இன்று
நாரத்தை ஊறுகாய்


நமது பாரம்பரியம்..

அபிஷேக திரவியங்களுள் இதுவும் ஒன்று.. நாரத்தம் பழச் சாறு அபிஷேகத்தினால் ஜன்ம பாவங்கள் தீர்கின்றன...

நாரத்தம் பழத்தினால்
உடல் சூடு தணிந்து பித்தம் குறையும்..

உப்பில் இட்டு வைப்பதற்கு நாரத்தங்காய்கள் ஏற்றவை.. இது சற்று இனிப்புச் சுவை உடையதால் குறைவான அளவில் உப்பு போடுவதே சிறந்தது..


தேவையானவை :

நார்த்தங்காய் 10
வெந்தயம் 50 கி
கல் உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் ஒரு tsp
மிளகாய் வற்றல் 7
பால் பெருங்காயம் சிறிது 

தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்  தேவைக்கு
கடுகு ஒரு tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :

பால் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர
வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.. 

நார்த்தங்காய்களை கழுவிக் கொள்ளவும்..  

தண்ணீரை தளதள என்று கொதிக்க வைத்து நார்த்தங்காய்கள் மூழ்கும் படிக்கு   ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருந்து ஆறியதும் எடுத்து வெயிலில் உலர வைக்கவும்..

வெந்நீர் ஊற்றப்பட்ட
நாரத்தங்காய்கள் முழுதாக வெந்திருக்காது.. அரை வேக்காட்டில் இருக்கும்.. இந்தக் காய்களை முழுதாக பக்குவப்படுத்துபவன் சூரியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. 

இந்த முறையில் செய்கின்ற போது காய்களின் உள்ளிருக்கும் சாறு வீணாவதில்லை..

மூன்று நாட்களுக்குப் பிறகு 
நார்த்தங்காய்கள் சற்றே சுருங்கி இருக்கும்..

இந்நிலையில்
காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மேலும் இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்...

இனி நாரத்தங்காய் ஊறுகாய் தான்!..

இருப்புச்சட்டி ஒன்றை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் விடாமல் தனித்தனியாக மிளகாய் மற்றும் வெந்தயத்தை சிவக்க வறுத்து -

வறுத்த மிளகாய் வற்றல் வெந்தயம் இவற்றை ஆறியதற்குப் பின் ஒன்றாக மிக்ஸியில்  அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

சுத்தமான ஜாடியில்
நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் அளவான கல் உப்பு சேர்த்து, வறுத்து அரைத்த மிளகாய்ப் பொடி பெருங்காயப் பொடியையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்..

ஒரு வாணலியில் தளர எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து - 

கடுகு பொரிந்ததும்,   நாரத்தை துண்டுகளைச் சேர்த்துக் கிளறி அப்படியே இறக்கி வைக்கவும்.

சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.

ஜாடி அல்லது பாட்டிலில் நிரப்பப்பட்ட நார்த்தங்காய்த் துண்டுகளைத் தினமும் இரண்டு முறை - மரக் கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.. 

ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலாக  நிற்க  வேண்டும் என்பது முக்கியம்..

இந்த வகைக்கு நாரத்தங்காய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானவை - கல் உப்பும் நல்லெண்ணெயும்..

இந்த ஊறுகாய் பயன்படுத்துவதைப்  பொறுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக வரும்..
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய நம ஓம்
***

திங்கள், பிப்ரவரி 17, 2025

நூல்கோல் குழம்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 5
திங்கட்கிழமை


நூல்கோல் குழம்பு..
 
முதலில் குழம்பிற்கான  மசாலாப் பொடி :



தேவையான பொருட்கள்:
மல்லி  100 gr
மிளகு  2 Tbsp
சீரகம் 2 tsp
சோம்பு 2 tsp
அரிசி மாவு  ஒரு tsp
ஏலக்காய் 5 
மஞ்சள் தூள்  ஒரு tsp
பட்டை சிறு துண்டு
கசகசா  ஒரு tsp
பிரிஞ்சி இலை 2
அன்னாசிப் பூ ஒன்று

அரிசி மாவு  மஞ்சள் தூள் இரண்டும் தவிர்த்த ஏனையவற்றை வெயிலில்  நன்றாக உலர்த்தி மிக்ஸியில் அரைத்து அரிசி மாவு  மஞ்சள் இவற்றைக் கலந்து காற்று புகாத கலனில் வைத்துக் கொள்வது நல்லது..

இந்த மசாலாப் பொடி தான் குழம்பிற்கு..


இனி குழம்பு வைப்பது எப்படி எனப் பார்க்கலாம்..

நூல்கோல் (நடுத்தரமாக) 2
பல்லாரி வெங்காயம் 2
தக்காளிப்பழம் ஒன்று
பச்சை மிளகாய் 3
தேங்காய் ஒருமூடி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 10 பற்கள்
முந்திரிப் பருப்பு 15 
குழம்பு மசாலாத் தூள் ஒரு Tbs
கடலை மாவு அரை Tbs 
கசகசா அரை Tbs 
சோம்பு அரை Tbs
கிராம்பு  இரண்டு 

இஞ்சி பூண்டு 
விழுது ஒரு Tbsp
மஞ்சள் தூள் அரை tsp
குழம்பு மசாலா  ஒரு Tbsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
மல்லித்தழை, சிறிதளவு புதினா இலைகள் 5/9

தாளிப்பதற்கு :
சோம்பு அரை tsp
பட்டை சிறிது
கிராம்பு  2
ஏலக்காய் 2
அன்னாசிப்பூ ஒன்று

சூரியகாந்தி எண்ணெய் தேவைக்கு
கல் உப்பு தேவைக்கு

முதலில் மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காயைத் துருவிப் போட்டு அதனுடன்
முந்திரிப் பருப்பு,  கசகசா,  சோம்பு, கிராம்பு இஞ்சி பூண்டு 
ஆகியவற்றைச்
சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக  அரைத்துக் கொள்ளுங்கள்..

அடுத்து நூல்கோலை சுத்தம் செய்து தேவைக்கேற்ற மாதிரி நறுக்கிக் கொள்ளவும்..

இத்துடன்,   வெங்காயத்தையும் சன்னமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்..

அடுத்ததாக வாணலி ஒன்றில் 4 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய், அன்னாசிப் பூ, கறிவேப்பிலை  தாளித்துக் கொள்ளுங்கள். 

இத்துடன், 
நூல்கோலையும் 
சன்னமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

நூல்கோல்,
வெங்காயம் வதங்கியதும்,  தக்காளிப் பழத்தை  நறுக்கிப் போட்டு  வதக்கவும் , 

அடுத்ததாக பச்சை மிளகாயைக் நெடுக்காகக் கீறிப்  போட்டு வதக்க வேண்டும். 

தக்காளி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மல்லித் தூள் , மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஒரு ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்..

இறுதியாக வேறொரு வாணலியில் சிறிதளவு மல்லித் தழை, சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த இடத்தில் நாம் 1 ஸ்பூன் அளவு கடலை மாவை, ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் தளர்ச்சியாகக் கரைத்து வாணலியில் சேர்க்க வேண்டும்.
கடலை மாவு சேர்த்த இந்த கலவையானது  கொதித்ததும்  அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச்  சேர்த்து தேவையான அளவு சுடு நீரை விட்டு, ஒரு கொதி வந்ததும் 
குழம்பில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா நூல்கோல் வெந்து விட்டதா?.. - என்று  பார்த்து,  மிதமான சூட்டில் சற்று நேரம் 
கொதிக்க வைத்தால்,  தரமான குழம்பு தயார். 

இறுதியாக மல்லித் தழை புதினா இலைகளைத் தூவி இறக்கி பரிமாற வேண்டியதுதான். 

நாமே நமக்காகத் தயாரித்த நூல்கோல் குழம்பு..

நமது கவனத்தில் தயாரிக்கப்பட்ட
மசாலா ,  கடலை மாவு இவற்றால் நூறு சதவீதம் ஆரோக்கியம் தான்.. 

இவற்றுடன்
முந்திரிப் பருப்பு   சேர்த்துச் செய்வதால் தான் குழம்பின் தரத்திற்குச் சொல்ல  வேண்டியதில்லை...

நூல்கோலில் வைட்டமின் A ,C, E மாங்கனீஸ், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன.

இதில் நிறைந்துள்ள  வைட்டமின்  K  இதயத்தில் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்