நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 22, 2025

பாயசம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

பாயசம்
(நாலு வகை)


பாயஸான்ன ப்ரியாயை நம

தேவியின் அஷ்டோத்திர நாமங்களில் ஒன்று.

1/ ஷெமாய் பாயசம்
(சேமியா பாயசம்)

தேவையான பொருட்கள்:
சேமியா  200 gr
பால்  500 ml
சர்க்கரை  150 gr
நெய் 2 Tb sp
முந்திரி 150 gr
திராட்சை 50 gr
ஏலக்காய் 5

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி
முந்திரி, திராட்சையை  வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

சேமியாவையும்  வறுத்துக் கொண்டு. பாலில் கொதிக்க விடவும்.

முதல் கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்
 ஏலக்காய் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
அவ்வளவு தான்!..

வங்கத்து ஷெமாய் தான் நம்ம ஊரில் சேமியா..


2/ குறுநொய் பாயசம்
(குறுணைப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 50 gr
ஜவ்வரிசி 25 gr
பசும் பால்  ½ ltr
சர்க்கரை 100 gr
ஏலக்காய் தூள்  சிறிதளவு
நெய்  1 Tb sp
முந்திரி, திராட்சை விருப்பமான அளவு

செய்முறை
பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.
பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
 குறுநொய் பாயசம் தயார்

விருப்பத்திற்கு ஏற்ப, இதனை
 சிறு தானிய பாயசமாக மாற்றிக் கொள்வது உங்கஎ திறமை..

3/ தேங்காய்ப் பால் பாயசம் 

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 150 gr
வெல்லம் 150 gr

தேங்காய்ப்பால்  முதல் நிலை
100 ml
தேங்காய்ப்பால் இரண்டாம்  நிலை  150 ml
ஏலக்காய்த் தூள் சிறிது
நெய் 1Tb sp
முந்திரி திராட்சை 

செய்முறை
அரிசியை சற்று ஊற வைத்து அலசிக் கொள்ளவும்..

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
 
அரிசியுடன் இரண்டாம் நிலை
தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், முதல் நிலை தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். ஏலக்காய், முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.
நெய் வாசத்துடன்  தேங்காய்ப் பால் பாயசம்
 
பாயசம் இறுக்கமாக இருந்தால் சற்று தளதளப்பாக வைத்துக் கொள்வது உங்கள்
திறமை

4/ சிறு பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 450 gr
வெல்லம் 200 gr
தேங்காய்ப் பால்  250 ml
ஏலக்காய்த் தூள் ¼ tsp
நெய் 2 Tb sp
முந்திரி 100 gr
திராட்சை  50 gr
தேவையான அளவு

செய்முறை :
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

பாசிப் பருப்பை சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்து சரியான அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

பக்குவமாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இதனுடன் ஊற்றி
  மிதமான சூட்டில் வைத்து சற்றே நீர் வற்றும் போது தேங்காய் பால் சேர்க்கவும்.

'தள தள ' என கொதித்து வருகின்ற போது
 வறுத்த முந்திரி, திராட்சை
ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்..

நிவேதனமாக சமர்ப்பிக்க ஏற்ற பாரம்பரிய பாயசம்..

சர்க்கரை என்றால் பாரம்பரியம் தான்.. சீனி அல்ல...

இனிப்பு என்றால் 
மகிழ்ச்சி.. இருப்பினும் அளவில் கவனம் தேவை..

நமது பாயசம்  இயற்கை  உணவுகளில் ஒன்று.

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம
**

திங்கள், அக்டோபர் 13, 2025

நிவேதனம் 4

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
 தயிர் சாதம்

குழைய வடித்த பச்சரிசி சாதத்தில் 
சரியான அளவு உப்பு சேர்த்து சிறிய கேரட் சிறு துண்டு இஞ்சி இவற்றை மெலிதாக நறுக்கிப் போட்டு
தேவைக்கேற்ப
புத்தம் புதிய தயிரையும் சிறிது வெண்ணெயையும் சேர்த்துக் கிளறி கடலெண்ணெயில் - கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலையோடு
தாளிதம் செய்து மீண்டும் கிளறி விட்டால் நறுமணம் கமழும் தயிர் சாதம் ...

தயிர் எப்படி!?..

தயிர் சாதத்தை
தளதள என்று செய்வது வழக்கம்.. கொஞ்சம் இறுக்கமாகவும்  செய்து கொள்ளலாம்..

வீட்டில் உறையூற்றப் பெற்ற தயிரோ இரசாயனத் தயிரோ 
அவரவர் விருப்பம்..

தயிரை அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்..

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், அக்டோபர் 06, 2025

நிவேதனம் 3

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
மூன்றாம் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
புளியோதரை

தேவையான பொருட்கள்:

புளி, நல்லெண்ணெய்,
உலர்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை வேர்க்கடலை, பெருங்காயம், 
கறிவேப்பிலை, கல் உப்பு -

ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -

வாணலியை சூடாக்கி,  நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -

குழைந்து விடாமல் 
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -

பாரம்பரிய புளியோதரை...

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 29, 2025

நிவேதனம் 2

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில்
மிளகுப் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 300 gr
பாசி பருப்பு  150 gr
மிளகு  2 tsp 
இஞ்சி  சிறு துண்டு 
நெய்  தேவையான அளவு 
சீரகம்  1 tbsp
முந்திரிப் பருப்பு 15
பெருங்காயத்தூள் சிறிது
கறிவேப்பிலை இரண்டு இணுக்குகள்
 
செய்முறை

இளஞ்சூட்டில் நெய்  விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்..

வசதியான பாத்திரம் ஒன்றில் பச்சரிசி,  பாசிப்பருப்பு  இரண்டையும் நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே குழையும்படி வேக வைத்துக் கொள்ளவும்...

தாளிப்பு கரண்டியில் தரமான நெய் விட்டு சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, முந்திரிப் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து -

செய்து வைத்திருக்கும் பொங்கலுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கிளறி விடவும்..

தேவையெனில் பொங்கலில் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.  

பாரம்பரிய மிளகுப் பொங்கல்..

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 22, 2025

நிவேதனம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
முதல் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

எனினும் கண்டதும் கொண்டதும் இனி வரவிருக்கின்ற திங்கள்
பதிவுகளில்..

சர்க்கரைப் பொங்கல் 

தேவையான பொருள்கள்

பச்சரிசி 
வெல்லம்
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு 100 gr
உலர் திராட்சை 100 gr
ஏலக்காய்  5 
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை 

பச்சரிசியை நன்றாக அலசி விட்டு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
 
அடுத்து வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு. 

வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

வெல்லம் கரைந்து கொதித்த பிறகு  தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

வெல்லம் சுத்தமாக இருப்பின் பாகாக ஆக்கிக் கொள்ளவும். 

பச்சரிசி வெந்து குழைந்து வருகின்ற பக்குவத்தில்   சாதத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறி. ஏலக்காயைத் தூளாக்கி  சேர்க்கவும்.

சுத்தமான வாணலியில் தரமான நெய் விட்டு முந்திரிப் பருப்பு  உலர் திராட்சை இவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தேவையெனில்  மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்..

பாரம்பரிய
சர்க்கரை பொங்கல் .

ஒரு பங்கு - 
கொதிக்கின்ற பாலைச்  சேர்த்தும் 
சிலர் செய்வர்.

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 01, 2025

தேங்காய்ப் பால்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை


தேங்காய்ப் பால் இல்லாத தமிழ்ச் சமையல் மிகவும் அரிது..

தேங்காய்ப் பால் என்றால் என்ன?.. என்று  கேட்பர் - இன்றைய அந்நிய உணவுப் பிரியர்கள்.. 

இன்றைய தலைமுறையினருக்கு தேங்காய்ப் பாலைப் பற்றித் தெரியுமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்..


சின்ன வயதில் இருந்தே எங்கள் வீட்டில் வாரத்தில் சில நாட்கள் தேங்காய்ப் பால் அருந்துவது வழக்கம்..

தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.. 
நாகரிக வாழ்வில் வாழ்கின்ற
பெரும்பாலானவர்களுக்கு இது ஆகாது என்பது இன்றைய மருத்துவம்..

வயிற்றில் சூட்டினை குறைப்பதிலும்  புண்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் தோல் திசுக்களுக்கும் தோலின் பளபளப்புக்கும் தேங்காய் பால் முக்கிய பங்காற்றுகின்றது என்பது சித்த மருத்துவம்..

இன்று வரை எனக்கு வயிற்றில் வலி போன்ற எதுவும் ஏற்பட்டதே இல்லை.. 

வெறும் வயிற்றில் தேங்காய்ப் பால் அருந்துவதால் செரிமானம் செம்மையாகின்றது, அத்துடன் இதய ஆரோக்கியமும் மேம்படுகின்றது, 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைகின்றது . 

நிறைந்த பல ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது தேங்காய்.. தேங்காய்ப் பாலும் அப்படியே.. 

நவீன உரங்களால் தென்னையும் தேங்காயும் பாதிப்பு எய்தியிருந்தாலும் நவீனத்தைப் புறந்தள்ளி விட்டு இயற்கை எருக்களுடன்  தென்னை விவசாயமும் நடைபெறுகின்றது..


இருப்பினும், தேங்காய்ப் பாலில்  கொழுப்பும்  கலோரிகளும் அதிகம் என்றும் அதிகப்படியான பயன்பாட்டினால் இதய நோய்கள் வரலாம் - என்றும் உடல் எடை அதிகரிக்கலாம் என்றும் இன்றைய
அச்சுறுத்தல்கள்..

உடல் உழைப்பு இல்லாதோருக்கு எல்லாமும் இடையூறுகள் தான்..

எனினும், இதனைக் கவனத்தில் கொள்வது நல்லதே...

தேங்காயும்  துருவலும் பாலும் எண்ணெயும் ஆபத்து மிக்கவை என்று மேலை மருத்துவம் சொல்வதைக் கேட்பதும் அதன்படியே நடப்பதும் அவரவர் விருப்பம்..


கையளவு அவலுடன் தேங்காய்த் துருவல்  சிறிதளவு சேர்த்து தண்ணீர் தெளித்துக் கிளறி செவ்வாழைப் பழம் ஒன்றுடன் சாப்பிட சிறப்பான காலை உணவு .. இனிப்பு அவரவர் தேர்வு..

சமீப காலமாக இது எனது வழக்கத்தில்... 

அதிக உடல் உழைப்பு உடையோருக்கும் அவல் உணவு பொருந்தும்.. 

இன்றைய நாகரிக வாழ்வில் வாரம் ஒரு நாளாவது தேங்காய்ப் பால் அருந்துதல் நல்லது...

தேங்காய்ப் பால் இல்லாத
தமிழ்ச் சமையல் மிகவும் அரிது.. 

தேங்காய்ப் பால் குழம்பில் வற மிளகாயின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பது பொது... மிளகாய்த் தூளை அதிகமாக  சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..

தேங்காய்த் துருவல் பூரணம் (கொழுக்கட்டை), தேங்காய்ப் பால் சோறு, தேங்காய்ப் பால் குழம்பு, ரசம், 
தேங்காய்ப் பால் கலந்த அவியல் - என,  சிறப்புகள்..

அரைத்து விட்ட 
தேங்காய்ப் பால் 
 சாம்பார் என்பது தஞ்சை வட்டாரத்தில் சிறப்பு..

தேங்காய்ப் பால் ஆப்பம், இடியாப்பம் இவற்றையும்
தேங்காய்ப் பாறை, தேங்காய் பால் திரட்டு  ஆகிய இனிப்பு வகைகளையும் மறக்கத் தான் முடியுமா!?..

நமது ஆரோக்கியம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
**

திங்கள், ஆகஸ்ட் 25, 2025

தேங்காய்ச் சட்னி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை

இன்று பாரம்பரிய 
தேங்காய்ச் சட்னி பற்றி சிறு வரைவு..


தேங்காய்த் துருவலுடன் மிளகு ( இன்றைய நடைமுறை பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்)  உப்பு, இவைகளை தேவையான அளவில் சேர்த்து அம்மியிலோ, ஆட்டுரலிலோ பக்குவமாக அரைத்தெடுத்து இரும்பு வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலை  தாளித்து கொத்த மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கினால் அடடா! ... 

இந்நாளில் சிறிதளவு தேங்காய் துருவலுடன் பொட்டுக் கடலை பெருமளவில்  வற மிளகாயைச் சேர்த்து அரைத்து தேங்காய் சட்னி என்று உருட்டுகின்ற உணவகங்கள் இங்கே பெருகி விட்டன... இதில் மிளகாய்ச் சட்னி தனி..

வற மிளகாய் என்றைக்குமே வயிற்றுக்குக் கேடானது என்பதை நினைவில் கொள்க


பொட்டுக் கடலைக்குப் பதிலா  நிலக்கடலை சேர்த்தும் தேங்காய்ச் சட்னி செய்வதுண்டு..


தேங்காய் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது.. 

தாதுக்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக புரதம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமான கால்சியம், இரத்த உற்பத்திக்கு அவசியமான இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள வைட்டமின்கள் B, C ,E  ஆகியவை பொதிந்துள்ளன.. 

தேங்காயில் உள்ள கொழுப்பு சிறப்பு வகை  ஆகும். இது ஆரோக்கியமானது...

ஆனால் சிலருக்கு தேங்காயில் உள்ள கொழுப்பு ஒத்துக் கொள்தில்லை...
நன்றி விக்கி

வாழ்க நலம்..

நமது நலம்
நமது கையில்..

ஓம் சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூலை 21, 2025

கொத்தமல்லி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 5
திங்கட்கிழமை


இன்று கொத்தமல்லி மகாத்மியம்..

கொத்தமல்லி நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளையும்  வாயு பிரச்னைகளையும் குணமாக்கும் தன்மை உடையது..
இது பசியைத் தூண்டுகின்ற மூலிகை.. 

மற்ற விளைபொருள்களைப் போலவே பலவித பூச்சி மருந்துப் பிரயோகங்களுடன் தான் சந்தைக்கு வருகின்றது..

எனவே
கொத்தமல்லி இலையை உப்புத் தண்ணீரில் நன்கு அலசி விட்டு  அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..

வீட்டில் தோட்ட வெளி அல்லது
மாடித் தோட்டம் இருப்பின் நாமே தொட்டிகளில் கொத்த மல்லியை பயிரிட்டுக் கொள்ளலாம்..

இப்படியிருக்க
நம்முடன் சர்வ சாதாரணமாக புழங்குகின்ற கொத்த மல்லித் தழை செய்கின்ற அற்புதங்கள் பற்பல...

அவற்றுள் ஒரு சில..

வெறும் கொத்த மல்லித் தழைச் சாற்றுடன் எலுமிச்சை சாறு உப்பு மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

கொத்தமல்லித் தழைச் சாற்றுடன் மோர் உப்பு கலந்தும் அருந்தலாம்.

கொத்தமல்லிச் சாறு அருந்தும் போது  பசித்த பின்னரே  சாப்பிட வேண்டும்.
 
இப்படித் தொடர்ந்து பருகுவதால் காமாலை போன்ற  நோய்கள் வராமல் தடுக்கப் படுகின்றது..

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறுகின்றன..

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்னைகளும் குணமாகின்றன..

கல்லீரல் பலப்படுகின்றது...
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

புத்தம் புதிய கொத்த மல்லித் தழையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி விட்டு ஒரு குவளை சுத்தமான நீர் விட்டு சிற்றரவையில் அரைத்துப் பிழிந்து - வடிகட்டி எடுத்தால் கொத்த மல்லிச் சாறு..

பச்சைக் கொத்தமல்லி சட்னி அரைப்பது போலத் தான் இதுவும்...
இதில் பச்சை மிளகாய் அறவே கிடையாது..

இதைத் தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் டீ, காஃபிக்கு பதிலாக இதனை அருந்தலாம்..

பச்சையாக சாறு அருந்துவது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனில் இதை விட்டு விடவும்..

இயற்கை நலம் 
பேணுவோம்..

சிவாய நம ஓம்
**

திங்கள், ஜூன் 02, 2025

திங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19
திங்கட்கிழமை


இன்று
பொரி அரிசி  தோசை 

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி 200 g
ரவை 200 g
பொட்டுக்கடலை 1000 g
இஞ்சி சிறிதளவு
சீரகம் ஒரு tsp
கல் உப்பு தேவையான அளவு
தயிர் ஒரு tsp
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கொத்தமல்லி  சிறிதளவு
நெய் தேவைக்கு

செய்முறை

முதலில் வாணலி ஒன்றை
மிதமான சூட்டில் வைத்து அரிசியை கருகி விடாமல் பொரித்து ஆறியதும் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. 

அடுத்து பொட்டுக் கடலையையும் இதே போல அரைத்துக் கொள்ளவும்.. 

அடுத்து ரவையை ஓரளவுக்கு சிவக்க  வறுத்துக் கொள்ளவும்..

இஞ்சியை  சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.. 

பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

பாத்திரம் ஒன்றில் அரிசிப் பொரி மாவு பொட்டுக்  கடலை மாவு ரவை,  .இஞ்சி சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

 கரைத்த மாவில்  பொடியாக நறுக்கிய  மிளகாய் கறிவேப்பிலை, கொத்த மல்லியையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசைகளாக  ஊற்றவும்.
 
ஓரத்தில் சிறிது நெய் விட்டு வேக வைத்து எடுத்தால் பொரி அரிசி தோசை..

 மிளகாய் தாசர்கள் தவிர்த்து மற்றவர்கள் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்வது நலம்.

மொர மொரப்பாக  இருக்குமா?..

அதெல்லாம் உங்கள் கைப்பக்குவம்!..

உங்களது
தேவைக்கேற்ப அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்..

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

சிவாய நம ஓம்
**

திங்கள், மே 26, 2025

பால் கேசரி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
திங்கட்கிழமை

அனைவருக்கும்
நல்வரவு


இன்று பால் கேசரி

தேவையானவை

ரவை  200 கி
பால் 390 மிலி
ரவை ஒரு பங்கு எனில் பால் மூன்று பங்கு
சர்க்கரை  சுவைக்கு ஏற்ப
(அதிக சீனி வேண்டாம்)
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய்  3
குங்குமப்பூ சிறிது
முந்திரி 10 
உலர் திராட்சை 10

செய்முறை :

ஏலக்காயை பொடி செய்து  கொள்ளவும்..
 வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து சற்றே  வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் ரவையை சேர்த்து இளந் தீயில்  வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிறிது பாலுடன் குங்குமப் பூவைக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதி வந்ததும், அதில் ரவையை இட்டு  கிளறவும்.  அத்துடன் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து கிளறி விடவும் .

ரவை நன்கு வெந்ததும், அதில் சீனியைச் சேர்த்து  கிளறி,  தளதள - என வருகின்ற போது, அதில் நெய் சேர்த்துக் கிளறவும்..

அடுத்து அதில் ஏலக்காய் பொடி  வறுத்த முந்திரி மற்றும்  திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான பால்  கேசரி .

இது வழக்கமான  கேசரி தான்.. 
வழக்கமாக சேர்க்கின்ற
தண்ணீருக்குப் பதிலாக பால்..
அவ்வளவே!...

பதிவுகளின் நடைமுறை மாறி இருப்பதால் முதல் பதிவாக பால் கேசரி...

மகிழ்ச்சி.. நன்றி..

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

ஓம் சிவாய நம 
**

திங்கள், மே 19, 2025

மசாலா

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி  
திங்கட்கிழமை


பிரியாணி மசாலா

தேவையானவை :
உலர்ந்த மல்லி - 50 கிராம்
மிளகு - 30 கிராம்
சோம்பு - 20 கிராம்
ஏலக்காய் - 15 
அன்னாசிப் பூ - 5 
பட்டை - 10 துணுக்கு
கிராம்பு - 10 
கசகசா - 10 கிராம்
பிரிஞ்சி இலைகள் - 10 


செய்முறை:

மேற்சொன்ன அனைத்தையும் தனித்தனியே வெயிலில் நன்கு காயவைத்து, மிக்ஸியில் ஒன்றாக இட்டு  அரைத்துக் கொள்ள  (பிரியாணி) கரம் 
மசாலா..

இந்த பொடி ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். 

இதை  அனைத்து வெஜ்., பிரியாணி, 
தக்காளிச் சாதம் மற்றும்
குருமா வகைகளில்  
தேவையான அளவு  சேர்க்கும் போது சுவையும் மணமும் கூடும்... 

இந்த மசாலாப் பொடியில் வர மிளகாய் சேர்க்கப்படவில்லை..

எனவே -
இதனைக் கொண்டு சமைக்கின்ற போது
தேவைக்கு ஏற்ப
காய்களுடன்  பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது சிறப்பு.. 

அதி காரம், 
அதிக காரம் இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல..
ஃஃ

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

வாழ்க நலம்
***

திங்கள், மே 05, 2025

திங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 22
திங்கட்கிழமை

காலிஃப்ளவர் பனீர் கூட்டு 
 

காலிஃப்ளவர் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு உரியது..

காலிஃப்ளவரை பனீருடன் சேர்த்து எளிய செயல்முறையில் குறிப்பு இது..

தேவையானவை :


காலிஃப்ளவர் 250 gr
பனீர் துண்டுகள் 150 gr
தேங்காய் ஒருமூடி
பல்லாரி  வெங்காயம் ஒன்று
புதினாவும்
மல்லித் தழையும் சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 2 Tsp
மஞ்சள் தூள் Tsp 
மிளகுத் தூள் 1 Tsp
ஓமம் Tsp
முந்திரி 10
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :

கடலெண்ணெய் தேவைக்கு
கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு - தங்கள் வழக்கப்படி
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 

செய்முறை :


காலிஃப்ளவர் வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து நன்றாக
அலசிக் கொள்ளவும்..

காலிஃப்ளவரை தனித் தனியாகப் பிரித்து ஆவியில் வேக வைக்கவும்.

தேங்காயைத் துருவி மிளகு ஓமத்துடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்  கொள்ளவும்..

இருப்புச் சட்டியில்
எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பனீர், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.

அவித்து எடுத்த காலிஃப்ளவரை இதனுடன் போட்டு மஞ்சள் தூள், உப்புத் தூள் சேர்த்து காலிஃப்ளவர் உடைந்து விடாதபடி மெதுவாகக் கிளறி விடவும்.

வாணலியில்
 எண்ணெய் விட்டு முந்திரிப் பருப்புகளை சிவக்க வறுக்கவும்.

காலிஃப்ளவருடன் 
 வறுத்த முந்திரி, தேங்காய் விழுது மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  அடுப்பை நிறுத்தி காலிஃப்ளவரை மூடி
வைக்கவும்.. 

இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்..

இதையே பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து மசாலா
குழம்பாகவும் வைக்கலாம்..

கூட்டு ஓரளவுக்கு தளர்வாக இருப்பது - அவசியம்..

சற்று இறுக்கமாக தயாரித்தால் -
Veg., பிரியாணி போன்றவற்றுக்கு துணையாக அமையும்..
**
ஓம் அன்னபூர்ணாயை நம: 

ஞாயிறு, மே 04, 2025

வாசி வாசி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 21 
ஞாயிற்றுக்கிழமை

விலைவாசி

இந்த விலைப்பட்டியல் வெளியான வருடத்தைக் கவனியுங்கள்.. 

அப்போது தான்
இப்போதுள்ள நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அகம் மகிழலாம்.. ஆனந்தக் கூத்தாடலாம்...

ஒற்றை ரூபாய்க்கு லாட்டரி அடித்த காலம் ஒன்று இருந்தது..

ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா என்றாலும் நூறு பைசா...

ஐம்பது பைசாவிற்குள் கனமான காலைச் சிற்றுண்டி...

அத்தனையும் பொய் புரட்டு இல்லாத ஆரோக்கிய உணவுகள்..

இன்றைக்கு எத்தனையோ விதமான வசதிகள்...

ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை என்று எதுவும் இல்லை..

இன்றைக்கு நடு வீட்டிற்குள் வைர வைடூரிய வணிக விளம்பரங்கள்..

என்றாலும் - 
பணம்  படைத்தவர்க்கே உலகம்..

இருந்தாலும் -
மகிழ்ச்சியடைவோம்..


அன்றைய நடைமுறைக்கு எடை அளவு விவரங்கள் சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன்..

ஒரு உழக்கு - 336 ml 

ஒரு தோலா - 11.7gr
10 தோலா  - 117 gr.

ஒரு பலம் =  35 gr
(எட்டு பலம்  ஒரு சேர்)
வீசை - 1.4 Kgr
(ஐந்து சேர் ஒரு வீசை)
தூக்கு - 1.7 Kg.

ஒரு வீசை = ஆயிரத்து நானூறு கிராம்.

ஒரு ஆழாக்கு 200 gr .
(5 ஆழாக்கு 1 கிலோ)
ஒரு படிக்கு 8 ஆழாக்கு 
(1. 600 Kg)
நன்றி இணையம்
 
வாழ்க்கை வாழ்வதற்கே!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 31, 2025

தக்காளி சூப்

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17 
திங்கட்கிழமை


தக்காளி மிளகு சூப்..

தக்காளிப்பழங்கள் இரண்டு
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
மிளகுப் பொடி 1⁄2   tsp  
சீரகப் பொடி 1⁄2   tsp  
சோள மாவு  1⁄2   tsp  
வெண்ணெய் தேவைக்கு 
மல்லித் தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

செய்முறை

தனியானதொரு பாத்திரத்தில் தக்காளிப் பழங்களை  போட்டு மூழ்கும் அளவுக்கு கொதி நீரை ஊற்றி
சில நிமிடங்கள் கழித்து -

தோலை உரித்துக் கொள்ளவும்..

வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி  - தோலுரித்த தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கிண்ணம் ஒன்றில்  தனியாக வைக்கவும்.. 

50 ml தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொள்ளவும்..

உத்தேசமாக 500 ml 
நீரை அடுப்பில் ஏற்றி அரைத்து வைத்திருக்கின்ற
 தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க  விடவும்.

சோள மாவு கரைத்த
கலவையைக்  கொதிக்கின்ற விழுதுடன் கலக்கவும்.

உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.  வெண்ணெயையும்
சேர்க்கவும்.

நன்கு கொதித்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..

மூன்று பேருக்கானது இது..

வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
மழை குளிருக்கு இதமான தக்காளி  சூப் என்றாலும் எல்லா நாளும் 
உடலுக்கு நலமளிப்பது..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய
**

ஞாயிறு, பிப்ரவரி 23, 2025

பாதாம் பால்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
ஞாயிற்றுக்கிழமை

இன்று பாதாம் பால்


கறந்த பாலாக இருப்பின் நல்லது..


தேவையானவை :

பசும்பால் 750 ml
பாதாம் பருப்பு 150 gr
முந்திரிப் பருப்பு 50 gr
வறுக்கப்பட்ட நிலக்கடலை 50 gr
பனங்கற்கண்டு 150 gr
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
சுத்தமான மஞ்சள் தூள் சிறிது
ஏலக்காய் 3

செய்முறை

வறுபட்ட நிலக்கடலையின் தோலை நீக்கி  விடவும்..
பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து பாதாம் பருப்பு  நிலக்கடலை
இரண்டையும் மிக்ஸியில் இட்டு பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். ஏலக்காயை இடித்து . முந்திரியை நெய்யில் வறுத்து  நொறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த பாதாம் பாலை - பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் பனங்கற்கண்டு,  குங்குமப்பூ, மஞ்சள் தூள் மீதியுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து  சற்றே கொதிக்க விட்டு சுண்டக் காய்ச்சி -  நொறுக்கிய முந்திரியை அதில் தூவி  - அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் 
இதனை  சில்லரில் சற்று நேரம் வைத்து
குளிரூட்டிய பின்   பரிமாறவும். .

இரசாயன வண்ணமாகிய கேசரி பவுடர் வேண்டாம்..


நான்கு பேருக்கானது..
மிக மிக ஆரோக்கியமான பாதாம் பால்..

வேண்டுமெனில் பாலின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம்..

இது மிகவும் திடமானது.. 

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்  அருந்துவது நல்லது..

நமது நலம்
நமது கையில்..

ஓம் 
சிவாய நம ஓம்
**