ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
ஆறுபடை வீடுகள் அன்றி மற்றுமுள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள பக்தர் அநேகர்.
ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் ஏற்று - பழனிக்கு பாதயாத்திரை சென்று தைப்பூச நாளில் முருகனை தரிசித்து விரதத்தை
நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று -
காவடியுடன் முருகனைத் தரிசிப்பதே பிறவிப் பயன் எனக் கருதும் பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் - உலகம் முழுதும்!..
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலிலும் மலேஷியாவில் - தண்ணீர்மலை, பத்துமலை எனும் திருத்தலங்களில் உள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக நிகழும். சீனர்கள் கூட முருகனை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம்.
பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்,
பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து
வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் - கடந்த நாட்களில்
ஸ்ரீமுத்துக்குமாரசாமி காலையிலும் மாலையிலும் தந்த பல்லக்கு,
வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை - என பல்வேறு வாகனங்களில் திருவீதி
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வியாழன்று முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு
8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜனவரி17) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில்
நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் பழனியம்பதியில் குழுமியுள்ளனர்.
திருத்தேரில் பவனி வருகின்றான் திருமுருகன். - வடிவேல் முருகன்!..
கந்தனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் -
அவனிடம் ஏதாவது கேட்கலாம்!..
அவன் கொடுப்பான்!..
அவனிடம் கேட்டுப் பெறலாம்!..
வாட்டம் தீர்க என்று - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
வள்ளி தேவயானையுடன் வருகின்றான் - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..
ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!..
எனில் - என்ன கேட்பது!..
இதோ ஒரு ஞான விண்ணப்பம்!..
1823 அக்டோபர் ஐந்தாம் நாள் - சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் - ராமையா சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவரும் ,
வளரும் பருவத்திலேயே - இறை நாட்டம் விளைந்து, தொடர்ந்த பக்தியினால் வடிவேலவனை - நிலைக் கண்ணாடியில் தரிசனம் கண்டவரும்,
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - என்று ஞானப்பயிர் வளர்த்தவரும்,
''..பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி, அவற்றின் பசி தீர்ப்பதே - புண்ணியம். பசிப்பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடானது என்று எந்தப் புண்ணியத்தைச் சொல்லமுடியும்?.. ஜீவ காருண்யமே - மோட்சத்தினை அளிக்க வல்லது!..'' - என்று உபதேசித்தவரும் - ஆன,
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் - நம் பொருட்டு அருளிய திருப்பாடல்!..
முருகப் பெருமானிடம் கேட்டுப் பெறுவதற்கு -
இவைகளை விடவும் வேறு உளவோ!..
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே!..
வள்ளலார் சுவாமிகள் - தாம் எழுப்பிய - மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், 1874ல் ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சித்தியடைந்து ஒளி வடிவாகினார்.
வள்ளலார் சித்தியடைந்த நாள் -
புனர்பூசமும் பூசமும் கூடிய - தைப்பூசம்.
அருட்பெரும் ஜோதி!.. அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..