நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தை பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தை பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 17, 2014

அருட் பெருஞ்ஜோதி

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.  

ஆறுபடை வீடுகள் அன்றி மற்றுமுள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள பக்தர் அநேகர். 


ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் ஏற்று - பழனிக்கு பாதயாத்திரை சென்று   தைப்பூச நாளில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

தைப்பூசத்தன்று  -  காவடியுடன்  முருகனைத் தரிசிப்பதே பிறவிப் பயன் எனக் கருதும்  பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் - உலகம் முழுதும்!..

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலிலும் மலேஷியாவில்  - தண்ணீர்மலை, பத்துமலை எனும் திருத்தலங்களில் உள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக நிகழும். சீனர்கள் கூட முருகனை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம். 


பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வந்து முருகப் பெருமானை  தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பத்து  நாட்கள் நடைபெறும் தைப்பூச  விழாவில் - கடந்த நாட்களில் ஸ்ரீமுத்துக்குமாரசாமி காலையிலும் மாலையிலும் தந்த பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை - என பல்வேறு  வாகனங்களில்  திருவீதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வியாழன்று முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜனவரி17) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெறுகிறது. 

இதில்  கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் பழனியம்பதியில் குழுமியுள்ளனர். 


திருத்தேரில் பவனி வருகின்றான் திருமுருகன். - வடிவேல் முருகன்!.. 

கந்தனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் - 

அவனிடம் ஏதாவது கேட்கலாம்!.. 
அவன் கொடுப்பான்!.. 
அவனிடம் கேட்டுப் பெறலாம்!.. 

வாட்டம் தீர்க என்று  - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
வள்ளி தேவயானையுடன் வருகின்றான்  - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..

ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!.. 

எனில் - என்ன கேட்பது!.. 

இதோ ஒரு ஞான விண்ணப்பம்!..

1823 அக்டோபர் ஐந்தாம் நாள்  - சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் - ராமையா சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவரும் ,

வளரும் பருவத்திலேயே - இறை நாட்டம் விளைந்து, தொடர்ந்த பக்தியினால் வடிவேலவனை - நிலைக் கண்ணாடியில் தரிசனம் கண்டவரும்,


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  - என்று ஞானப்பயிர் வளர்த்தவரும்,

''..பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி, அவற்றின் பசி தீர்ப்பதே - புண்ணியம். பசிப்பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு  ஈடானது என்று எந்தப் புண்ணியத்தைச் சொல்லமுடியும்?..  ஜீவ காருண்யமே - மோட்சத்தினை அளிக்க வல்லது!..''  - என்று உபதேசித்தவரும் - ஆன,

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் - நம் பொருட்டு அருளிய திருப்பாடல்!..

முருகப் பெருமானிடம் கேட்டுப் பெறுவதற்கு - 
இவைகளை விடவும்  வேறு உளவோ!..

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவ மணி 
சண்முகத் தெய்வமணியே!..

வள்ளலார் சுவாமிகள் - தாம் எழுப்பிய - மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், 1874ல்  ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு  சித்தியடைந்து ஒளி வடிவாகினார்.


வள்ளலார் சித்தியடைந்த நாள் - 
புனர்பூசமும் பூசமும் கூடிய - தைப்பூசம்.

அருட்பெரும் ஜோதி!.. அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!.. 

சனி, ஜனவரி 26, 2013

தைப்பூசம்

தை 14 (27 - 01 - 2013 ) ஞாயிற்றுக்கிழமை

மகர மாதமாகிய தை மாதத்தில் நிகழ்வுறும் திருநாட்களுள் பூசம் சிறப்பானது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவது தை பூசம் ஆகும். 

தமிழகத்தின் பல சிவாலயங்களிலும் தனித்து விளங்கும் முருகன் திருக்கோயில்களிலும் அன்பர்கள் குடும்பத்துடன் சென்று வழிபடுவதைக் காணலாம். 

பக்தி பூர்வமானதும் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் இல்லங்களில் அன்புடன் அனுசரிக்கப்படுவதும் தை பூசம் ஆகும். தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம்.

எனவே ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக இந்நாளினைக் கொண்டு, அடியார்கள் விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும் முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 

thanjavur14
அருள்மிகு தண்டாயுதபாணி, பழனி
தமிழகத்தில் பழனியம்பதியில் தை பூசம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு நேர்ந்து கொண்டு ஆயிரம் ஆயிரமாய் -  மயில்காவடி, மச்சக்காவடி, சர்க்கரைக்காவடி, சந்தனக்காவடி, பால் காவடி, பன்னீர் காவடி என எடுத்து வந்து மலையேறி தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.   

தை பூசத்தன்று பழனி முருகனைத் தரிசனம் செய்ய - தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வருகின்றனர்.

சிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தை பூச நாளில் பகல் பொழுதில் - அம்பிகையுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.

இலங்கையிலும், சிங்கப்பூரிலும் மலேசியாவில் பத்துமலை முருகன் திருக்கோயிலிலும் மற்றும் தண்ணீர்மலை  முருகன் திருக்கோயிலிலும் வெகு சிறப்பாக தை பூசப் பெருவிழா நடைபெறுகிறது. நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதை காணலாம்.  

தை பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.

லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தை பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில்  சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து  தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம்  நிகழ்வுறும்.

தஞ்சை - கரந்தையில் உள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் தை பூச தினத்தன்று மாலை,

thanjavur14
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி அம்பாள்
அருள்மிகு  வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,

thanjavur14
அருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை
வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.

ஞானகுருவாகிய முருகனுக்கு உகந்த நாளாக விளங்கும் இந்நாளில், கை நிறைய மலர்களைக் கொண்டு, முருகனின் திருப்பாத மலர்களைப் போற்றி வணங்குவோமாக!... 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!.....

திருச்சிற்றம்பலம்