நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 31, 2023

தமிழமுதம் 15

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 15
ஞாயிற்றுக்கிழமை

 குறளமுதம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.. 80
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.. 15
**

" எல்லே.. இளங்கிளியே!..
இன்னுமா உறங்குகின்றாய்?.. "

" சில்லென்று சத்தமிடாதீர்களடி.. 
இதோ வருகின்றேன்!.. "

" உனது பேச்சு மட்டுமே உனக்கு பலம்.  
உன்னைப் பற்றித் தான் முன்பே அறிவோமே..
வாயாடி!.. "

" நீங்கள் தான் வாயாடிகள்! 
என்னையா வாயாடி என்கிறீர்கள்?.. "

" ஆமாம்!.. "

" என்ன வேண்டும் என்றாலும் சொல்லி 
விட்டுப் போங்கள்!.. "

" சீக்கிரமே நீ வருவாயடி.. 
உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?!.. " 

" சரி.. சரி.. எல்லாரும் வந்து விட்டார்களா?.. " 

" ம்ம்.. நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்!.. "

" குவலயாபீடம் எனும் யானையைக் கொன்றவனை, 
பகைவர் படை முடித்த பரந்தாமனை மாயனை மாதவனைப் பாடுவோம்.. வாராய் கிளியே!.."
**
திருப்பாசுரம்


குன்றனைய குற்றம் செயினும்  குணங்கொள்ளும்
இன்று முதலாக என்நெஞ்சே என்றும்
புறனுரையே ஆயினும்  பொன்னாழிக் கையான்
திறன்உரையே சிந்தித் திரு.. 2122
-: பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு



பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 4
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத்து அடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 4
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, டிசம்பர் 30, 2023

தமிழமுதம் 14

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 14
சனிக்கிழமை

 குறளமுதம்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.. 77
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்  செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்  நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்..14
**

நங்கையே.. உங்கள் வீட்டுத் தோட்டத்துக் குளத்தில் செங்கழுநீர்ப் பூ மலர்ந்து ஆம்பல் கூம்பி விட்டதைப் பார்ப்பதற்காவது எழுந்து வா..

தவமுடையார்கள் பல் துலக்கிக் குளித்து செங்கற் பொடி நிற  ஆடையுடன் திருக்கோயிலில் சங்கொலிப்பதற்குச்
செல்கின்றனர்..

அதிகாலையில் வந்து எங்களை  எழுப்புவேன் என்று 
சொன்னவளே.. நாணமில்லா நாவினை உடையவளே.. எழுந்து வருவாயாக..

சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனை தாமரைக் கண்ணனைப் பாடிப் பரவுவோம்!..
**

திருப்பாசுரம்


இறையும் நிலனும்  இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை  படுதுயரம் காத்துஅளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. 2110
-: பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்துகேட்கப் படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன் குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத் தோர் தொழும் அடிகள் வே டங்களே.. 3/25/1
-: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)


மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 3
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

தஞ்சையில் உயிர் காக்கும் பாரம்பரிய உணவுத் திருவிழா..

எவ்வித செயற்கை கலப்பும் இல்லாத நூறு சதவீத சுத்த சித்த சைவ உணவுகள்..

நுழைவுக் கட்டணம் இன்றி நடைபெறுகின்றது..

பார்வையாளர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளன..

30 டிச 2023, 30 டிச 2023
1 ஜன 2024 
ஆகிய மூன்று நாட்களும்
காலை 11.30 முதல்  இரவு 10 மணி வரை நடைபெற இருக்கின்றது..

தஞ்சை - மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ் மஹாலில் - 
உணவியல் கண்காட்சியுடன்
நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளின் கண்காட்சியும் நடைபெறுகின்றது..
**
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, டிசம்பர் 29, 2023

தமிழமுதம் 13

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 13
வெள்ளிக்கிழமை

 குறளமுதம்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.. 75
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.. 13
**

கொக்கு வடிவாக வந்த அரக்கன் வாயைப் பிளந்தவன்.. பொல்லாத  கம்சனைக் கிள்ளிக் களைந்தவனன்..
அவனது புகழைப் பாடிக் கொண்டு கன்னியர் அனைவரும் நோன்புக்  களத்தில் நுழைந்து விட்டார்கள்..

வானில் விடிவெள்ளி எழுந்து வியாழன் மறைந்து விட்டது.. பறவைகளும் கூச்சலிடத் தொடங்கி விட்டன.. பூக்களைப் போலும்  கண்கள் உடையவளே.. குளிர்ந்து  நீராடாமல் இன்னும் படுத்துக் கொண்டிருக்கின்றனையே?.. 

நன்னாள் ஆகிய இன்று கள்ள எண்ணங்களைக் களைந்து  விட்டு  எங்களுடன் கலந்து பெருமானை வணங்குதற்கு எழுந்து வருவாயாக!..
**

திருப்பாசுரம்


நின்று நிலம் அங்கை  நீரேற்று மூவடியால்
சென்று திசைஅளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ஊர்தி  பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி.. 2102
-: பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்
 தேவாரம்
திருக்கடைக்காப்பு


நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித் திருத்தாண்டகம்
( திரு ஆரூர்)


வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழல் அறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 2
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனேன் உடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 2
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், டிசம்பர் 28, 2023

தமிழமுதம் 12

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 12
வியாழக்கிழமை

 குறளமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..72
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி  நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேருறக்கம்  அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்..12
**

கன்றினை ஈன்றிருக்கும் எருமை , தனது இளங்கன்றை நினைத்துக் கொள்ள  - அந்த நினைப்பினால்  மடி சுரந்து வழிகின்றது.. அந்தப் பாலால் நனைந்து  சேறாகும் தொழுவங்களை உடைய நற்செல்வனின் தங்கையே! 

தலையில் பனி விழுவதையும் பொருட்படுத்தாமல் இந்த இளங்காலைப் பொழுதில் உன் வீட்டு வாசல் கதவைப் பற்றிக் கொண்டு,  மனத்துக்கு இனியனான ஸ்ரீராமனைப்  பாடிக் கொண்டிருக்கிறோம்..

தென்னிலங்கை இராவணனை வெற்றி கொண்ட , 
ஸ்ரீ ராமனின் புகழினைப் பாடக் கேட்டும் நீ வாயைத் திறக்கவில்லை!.. இனியாவது எழுந்திருப்பாய்!..  
என்ன இது இப்படியான பெருந் தூக்கம்?.. 

ஏனைய இல்லத்தார்கள் அனைவரும்
உறக்கம் கலைந்து எழுந்து விட்டார்கள் என்பதை 
அறிந்து கொள்வாயாக!..
**

திருப்பாசுரம்


அரன் நாரணன் நாமம்  ஆன்விடை புள்ஊர்தி
உரைநூல் மறைஉறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்புஅளிப்பு  கையதுவேல் நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று.. 2086 
-: பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்

தேவாரம்
திருக்கடைக்காப்பு


மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ..1/23/1
-; திருஞானசம்பந்தர் :-
**

போற்றித் திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..6/32/1
-: திருநாவுக்கரசர் :-
**

 திருவாசகம்


உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 1
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், டிசம்பர் 27, 2023

தமிழமுதம் 11

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 11
புதன் கிழமை

 குறளமுதம்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.. 49
**
இன்று
திரு ஆதிரை
ஆருத்ரா தரிசனம


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 4/23/1
-: திருநாவுக்கரசர் :-
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து  செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றரவு அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.. 11
**

கன்றுடன் பசுக்களையும்  வளர்த்து அவற்றின் பொருட்டு எதிரிகளின் திறல் அழியப்  போர் புரியும் குற்றமில்லாத கோவலர் குலத்தின் பொற்கொடியானவளே!.. 
நாக படம்  போல்  அழகிய இடையினை உடையவளே.. வன மயிலைப் போல் வனப்புடையவளே.. எழுந்து வருவாயாக!..  

தோழியர் அனைவரும்  உன் வீட்டு முற்றத்தில் புகுந்து நின்று கார்மேக வண்ணனின் சீர் மேவும் பெயர்களைப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டும், ஏதொன்றும்  சொல்லாமல்
(எழுந்து  வாராமல்) இருப்பதற்கு - 
செல்வப் பெண்ணே என்ன அர்த்தம்?.. 
சொல்வாயாக!..
**

திருப்பாசுரம்


வையம் தகளியா  வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யான்அடிக்கே  சூட்டினேன்சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று ..  2082 
-; பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்

தேவாரம்
திருக்கடைக்காப்பு


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.. 1/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**

திருத்தாண்டகம்


தண்டி குண்டோதரன் பிங்கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும்
பாரை அளந்தான் பல் லாண்டு இசைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.. 6/93/7
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்..


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.. 20
-: மாணிக்கவாசகர் :-
**
திருப்பெருந்துறை
(ஆவுடையார் கோயிலில்)
ஸ்ரீ மாணிக்கவாசகர் 
அபிஷேகம்


திருவெம்பாவை 
இந்த அளவில்
நிறைவடைகின்றது
**
ஆவுடையார்
 கோயில்
தேர்த்திருவிழா






தில்லையில்
தேரோட்டம்


 -:  நன்றி :-
சிவனடியார்
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், டிசம்பர் 26, 2023

தமிழமுதம் 10

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 10
செவ்வாய்க்கிழமை

 குறளமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.. 34
**
இன்று

உத்தரகோசமங்கை
மஹா அபிஷேகம்.


வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 5/100/1
-: திருநாவுக்கரசர் :-
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்  போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.. 10
**

நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்று சொன்னவளே!.. வாசல் கதவைத் திறக்காத நீ மறுமொழியாவது 
சொல்லக் கூடாதா?..

நறுந்  துளசியைத் திருமுடியில் சூடியுள்ள ஸ்ரீமந்நாராயணன் நாம் வேண்டியதை 
எல்லாம் தந்தருள்வான். 

அந்தப் புண்ணியனிடம்
முன்பு ஒரு நாள் தோற்று 
யமன் உலகில் விழுந்த கும்பகர்ணன் - தான்  அங்கு செல்வதற்கு முன்பாக அவனது தூக்கத்தை உனக்குத் 
தந்து விட்டுச் சென்றானோ?..

பெருந்தூக்கத்தை உடையவளே! பொற்கும்பம் போன்று அழகுடையவளே!.. தூக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாயாக!..
**

திருப்பாசுரம்


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை 
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.. 901
:- தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்

திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்



வகையெலாம் உடையாயும் நீயே என்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே என்றும்
வெண்காடு மேவினாய் நீயே என்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே என்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே என்றும்
நின்றநெய்த் தானா என் நெஞ்சு ளாயே.. 6/41/1 
:- திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.. 10
-: மாணிக்கவாசகர் :-

இந்த அளவில்
திருப்பள்ளி எழுச்சி நிறைவடைகின்றது..
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.. 18
-: மாணிக்கவாசகர் :-
**
வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்ரீ சிறை காத்த ஐயனார் திருக்கோயிலில் நடைபெற்ற  மண்டல பூஜையின் காட்சிகள்..












ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***