நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 02, 2023

செங்கோல்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19
 வெள்ளிக்கிழமை

செங்கோல் - தமிழின் சிறப்புடைச் சொற்களுள் ஒன்று..

தமிழகத்தின் சிறப்புடை அடையாளங்களுள் ஒன்று..

கோல் - செங்கோல், தர்மத்தின் கோல். துலாக்கோல்..


அத்தகைய கோலை உடையவனே கோன் - இறைவன். அரசன்..

கோன் எனப்பட்ட அரசனை - கோ என்று ஓரெழுத்து ஒரு மொழியால் சிறப்பித்தது தமிழ்..

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.. 542
(அதிகாரம் : செங்கோன்மை)
- என்பது திருவள்ளுவர் காட்டும் செங்கோல்..

அரசனுக்கு தர்மமே செங்கோல்.. எனில் தமிழுக்கு
தமிழன்னைக்கு செங்கோல் திருக்குறள்..

(தமிழன்னை) ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும்!.. - என்று திரைப்படப் பாடல் ஒன்று சிறப்பித்தது..

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்..

- என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு..

சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் காணப் பெறும் சொல்..

பூவேறு கோன் என்று  நான்முகனைக் குறிக்கின்ற மாணிக்கவாசகர் -


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே..

- என்று உருகுகின்றார்..

மாமன்னன் ராஜராஜ சோழன் - சோழ மண்டலத்தை
உலகளந்த கோல் என்பதனைக் கொண்டு அளந்து முறைப்படுத்தியது வரலாறு..


திவ்ய தேசமாகிய தஞ்சை மாமணிக் கோயிலில் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கரத்தில் செங்கோலுடன் சேவை சாதிக்கின்றார்.. 


மலைமகள் கோன், விண்ணவர் கோன், உம்பர் கோன், வானவர் கோன், அமரர் கோன் - எனும் வார்த்தைகள் மூவர் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பாடல்களில் காணப்படுகின்றன..

இலங்கையர் கோன், அரக்கர் கோன் - என்றெல்லாம் தனித்தன்மையுடன் குறிக்கப்படுபவன் இராவணன்..

நம் கோன், எம் கோன் - என்று ஈசனைக் குறிக்கும் திருஞான சம்பந்தர் 
வளவர்கோன் பாவை - என, பாண்டியன் தேவி மங்கையர்க்கரசியாரைக் குறித்தருள்கின்றார்..

திருமகள் கோன் (நாராயணன்) நங்கள் கோன் - என்பன சுந்தரர் தம் திருவாக்கு..

உம்பர் கோன், வானவர் கோன், அமரர் கோன் - என்பன  இடத்துக்குத் தகுந்தவாறு ஈசனையும் இந்திரனையும் குறிக்கின்றன..

புகலியர் கோன், காழியர் கோன் - என்பன, ஞான சம்பந்தர் திருப்பதிகங்களில் விரவி வருவதைப் போல,

நாவலர் கோன் - என்ற பதம் சுந்தரர் திருப்பதிகங்களில் விரவி வருகின்றது..

ஏயர்கோன், ஐயடிகள் காடவர் கோன் - அடியார் திருத் தொகையுள் குறிக்கப்படும் நாயன்மார்கள்..

சிவ மரபில் நந்தியானது தர்மத்தின் அடையாளம் என்பதை நாமறிவோம்..

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளன்று மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடத்தி    செங்கோல் சமர்ப்பிப்பது வழக்கம்..
 

அது முதல் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடப்பதாக ஐதீகம்.. 

ஆவணி மூலத் திருவிழாவின் ஏழாம் நாளில் சுந்தரேசர் பட்டாபிஷேகம்.. செங்கோல் ஒப்படைப்பு.. அதன் பிறகு பெருமானின் ஆட்சி  என்பதாக நடைமுறை..

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் வசந்த உற்சவத்தின் போது செங்கோல் எழுந்தருள்கின்றது..

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருவிழாவின் போதும் செங்கோல் எழுந்தருள்கின்றது..

இந்தப் பதிவில் - ஈசனின் நடனம் காட்டும் மூன்று ஓவியங்களிலும்  ஈசனின் திருக்கரத்தில் நந்தி தண்டம் (செங்கோல்) விளங்குவதைக் காணலாம்..

ஸ்ரீ விருபாக்ஷி கோயில்
சிவபெருமான் திருக்கரத்தில் நந்தி உருவத்துடன் கூடிய தண்டத்தை ஏந்தியவாறு அரக்கன் மீது நடனமாடுகின்ற (ஊர்த்துவ தாண்டவம்) சிற்பமானது - கர்நாடக மாநிலத்தின் பட்டடகல் விருபாக்ஷி கோயிலில்
காணப்படுகின்றது...

பட்டடகல்  - விருபாக்ஷர் கோயில் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களுள் ஒன்று..

கல்வெட்டுகளின் அடிப்படையில் இக்கோயில்
எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கட்டப் பட்டதாக அறியப் படுகின்றது..

பட்டடகல் என்பது  சாளுக்கியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் இடமாகும்...
(நன்றி : விக்கி)

பொன் நெடுங்கோல் என்று பாசுபத அஸ்திரத்தை ஞான சம்பந்தப் பெருமான் குறித்தருள்கின்றார்..

இங்கே எல்லாம் 
செம்மையாக இருக்கும் வரை தான் செங்கோல் 
சிவ தண்டம் ..

செங்கோல் தவறினால் யம கண்டம் தான்..

கோல் கொண்டவனே கொடூரன் எனில், 
சீர் தரு செங்கோலானது பொன் நெடுங்கோல் எனும் பாசுபத அஸ்திரமாகி விடும் - என்பது திருக்குறிப்பு..

அன்றைக்கு தீயவர் மீது பாசுபதத்தை அருச்சுனன் ஏவியதாக குறிப்புகள் ஏதும் இல்லை..

தீயவர் தீயாகப் பெருகி இருக்கும் இன்றைய சூழலில் தர்மம் தானே பாசுபதத்தை ஏவி - இம் மண்ணையும் மக்களையும் காத்து நிற்கும் என்பது திண்ணம்..

தஞ்சை - திருச்சோற்றுத்துறை கோயிலில் நாளும் நடைபெறுகின்ற செங்கோல் சேவை..
(இக் காணொளி நேற்றிரவு கிடைத்தது..)


காணொளிக்கு நன்றி..

கல் நெடு மால்வரைக் கீழ் அரக்கன் இடர் கண்டானும்
வில் நெடும் போர்விறல் வேடனாகி விசயற்கு ஒரு
 பொன் நெடுங்கோல் கொடுத்தானும் அந்தண் புகலி நகர்
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே.. 3/7/8
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூன் 01, 2023

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 18
வியாழக்கிழமை


இன்றைய பதிவில் 
Fb ல் வந்த 
காணொளிகள்..


கீழுள்ள காணொளி
கொங்கு வள்ளி கும்மி குழுவினர்..


நெஞ்சார்ந்த நன்றி..

வாழ்க நலம்
நலம் வாழ்க..
***

புதன், மே 31, 2023

வெயில்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17
 புதன் கிழமை

Fb ல் வந்த காணொளி


டேய்.. தென்ன மரத்துல என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே??...

சரியான வெயில்.. தாங்க முடியலை!.. 


சரி.. அதுக்காக!..

ஒரே ஒரு குரும்பைய மட்டும் குடிச்சேன்..
வேற எதும் தப்பா நெனச்சு 
தோப்புக்கார அண்ணன்.. கிட்ட 
போட்டு உட்டுடாதீங்க!.. 
கிக்கீ.. கிக்கீய்!..

வாழ்க வையகம்..
***

செவ்வாய், மே 30, 2023

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
 செவ்வாய்க்கிழமை

இந்த வருடம் நானும் பாலகுடம் எடுத்ததால் தொடர்புடைய படங்கள் பதிவில் இல்லை..

சனிக்கிழமை மாலை எங்கள் மண்டகப்படி ஆராதனையின் படங்களும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த சந்தனக் காப்பு அலங்காரமும் ஊஞ்சல் திருக்காட்சியும் பதிவில் இடம் பெற்றுள்ளன..







முளைப்பாரியும் சீர்வரிசைகளும்..















ஆயுளொடு ஆரோக்ய ஐஸ்வர்யம் அருள்கவே
அன்னை வீரமாகாளி உமையே!..

சுபம் சுமங்கலம்
சௌபாக்கியம்.

ஓம் சக்தி ஓம்
***

திங்கள், மே 29, 2023

தரிசனம் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 15
திங்கட்கிழமை

வைகாசி 11 வியாழக் கிழமை காலை பூர்வாங்க வேள்வி - விநாயக  வழிபாடுகளுடன்
ஸ்ரீ வீரமாகாளியம்மனின்
சித்திரைத் திருவிழா தொடங்கியது..

வெள்ளி இரவு அம்பாள் சிம்மவாஹினியாக வீதியுலா..

எதிர்பாராத விதமாக கும்பகோணம் வட்டாரத்தில் சூறைக் காற்று.. பலத்த மழை.. 

அசாதாரணமான சூழ்நிலையில் வீதியுலா புறப்பட்ட அம்பிகை நடுநிசிக்குப் பின் இரண்டு மணியளவில் ஆலயம் திரும்பினாள்.. அதுவரைக்கும் கோயிலில் தான் நான் இருந்தேன்.. 

ஆலயம் திரும்பிய அன்னைக்கு ஆரத்தி, நிவேத்யம் ஆன பிறகு நடை அடைப்பு..

சனிக்கிழமை மாலை எங்களது மண்டகப்படி.. குளிரக் குளிர அபிஷேகமும் அலங்காரமும் அன்னையின் ஆஞ்ஞைப்படி கைத்துணைக்கு ஒருவருடன் எளியேன் இயற்றினேன்..

அன்னைக்கு பஞ்சமுக ஆரத்தியுடன் புஷ்பாஞ்சலி செய்யப் பெற்றது..

ஞாயிற்றுக்கிழமை (வைகாசி 14) காலை பால்குட வைபவம்..
நூற்றுக்கணக்கான வேண்டுதல்கள்.. 

மாலை - கிராம வழக்கப்படி  மக்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர்..

மூலஸ்தானத்தில் அன்னையின் திருமேனிக்கு சந்தனக்காப்பு..
உற்சவ நாயகிக்கு ஊஞ்சல் வைபவம்..
புஷ்பாஞ்சலியுடன் ஆனந்த தரிசனம்..

நிறைவாக நிவேதனம், மங்கல ஆரத்தி, பிரசாத விநியோகம்.. 

வியாழன் வெள்ளி இரு நாட்களின் படங்கள் இந்தப் பதிவில்..













சுபம். சௌபாக்கியம்.
சுமங்களம்..

ஓம் சக்தி ஓம்
***

ஞாயிறு, மே 28, 2023

பாலோடு குடம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 14
ஞாயிற்றுக்கிழமை

கடந்த 
வெள்ளிக்கிழமை (வைகாசி 12) இரவு 
ஸ்ரீ வீரமாகாளியம்மன் சிம்ம வாகனத்தில் 
எழுந்தருளி வலம் வந்த நிலையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை  பால்குட உற்சவம்.. 

எளியேன் அவ்வப்போது கோயில் பணியில்.. 
எனவே திருவிழா காட்சிகளை அடுத்து 
வரும் பதிவுகளில் தருகின்றேன்..

இங்கு உள்ளவை 
நேற்று எடுக்கப்பட்ட  படங்கள்..

செவ்வாய்க்கிழமை 
காலையில் எழுந்த பாட்டு இது..
**

பாலோடு குடம் எடுத்து 
பாதவழி வருகிறோம்..
பட்சமுடன் பாலரையும்
பார்த்து அருள் காட்டுமம்மா..
சேலோடும் நதிக்கரையில்
கோயில் கொண்ட காளியம்மா..
மேலாடும் பழி தீர்த்து 
மேன்மையிலே வைப்பவளே.. 1

கோலமிகு ஐங்கரனை
கொஞ்சி வரும் தேவியம்மா
வேலெடுத்த முருகனுக்கு
வெற்றிப் பொட்டு வைத்தவளே
கங்காள  ஈசனுடன் 
கலந்தாடும் ஈஸ்வரியே
கார்மேக வண்ணனுக்கு
அன்பான சோதரியே.. 2 


வேப்பமர நிழலுக்குள்ளே
வீற்றிருக்கும் காளியம்மா
வீரனுடன் கருப்பசாமி
ஆடிவர வாருமம்மா
வேண்டி நிற்கும் அடியார்க்கு
வேதனையை தீருமம்மா
ஆயுளொடு ஐஸ்வர்யம்
ஆரோக்கியம் தாருமம்மா.. 3

ஆயிரமாய் பழிபாவம்
அத்தனையும் நீயறிவாய்..
ஆதரவு காட்டி நல்ல
அடியாரைக் காத்திடுவாய்..
அம்மா நீகோபங் கொண்டால்
ஆதரிக்க யாரும் இல்லை
அன்பெடுத்து வருகின்றோம்
அருளெடுத்து காத்திடுவாய்.. 4


தெருவோடு கிடந்தாலும்
தேவி உந்தன் பிள்ளையம்மா
விழிகொண்டு பார்த்திடுவாய்
வேதனையை தீர்த்திடுவாய்
நீதியென்று வரும் போது
நெற்றிக் கண்ணைத் திறப்பவளே
நீங்காத பாசத்துடன் 
எங்களையும் காத்திடுவாய்.. 5

உன் வாசல் வருவதற்கும்
உத்தரவு தாருமம்மா
உள்ளத்திலே ஒளிவீச
உத்தமியே பாருமம்மா..
ஊர்கூடி உனைப் போற்ற
ஓரத்திலே நானிருந்து
உன் முகத்தைப் பார்ப்பதற்கு
ஓர்வரமும் தாருமம்மா.. 6


ஏழை எந்தன் மனக்குறையும்
ஏந்திழைக்குக் கேட்கலையோ
பாருலகில் பட்டதெல்லாம் 
பார்வதியும் பார்க்கலையோ..
நானடைந்த இன்னலெல்லாம்
நானுரைக்க ஆகாதே..
நாலுவழி வாழ்க்கையிலே
நல்லவழி காட்டுமம்மா.. 7

காளியெனும் பெயர் எடுத்து
காரிருளைத் தீர்ப்பவளே
கை வணங்கும் மானிடர்க்கு
கை விளக்காய் வருபவளே
அம்மா நீ ஆதரிக்க
அரும் பிணிகள் ஓடாதோ
கோலத் திருவிழி இருக்க 
கோடி நலம் சேராதோ.. 8


நோய் நொடிகள் வாராமல்
நொந்து மனம் வாடாமல்
தாயே உன் சந்நிதியே
நாடி வந்தேன் சரணமம்மா
மாகாளி நீ யிருக்க
மக்களுக்கு ஏது குறை
வாழ்க மனை வாழ்க என்று
மகராசி வந்திடம்மா.. 9

என்வார்த்தை தமிழ் கேட்டு
ஈஸ்வரியே வாருமம்மா
எல்லாப் பிழை பொறுத்து
இன்முகத்தைக் காட்டுமம்மா
நல்லார்க்கு நல்வரமாய்
மாகாளி வாருமம்மா..
பொன்மாரி பொழிந்து நல்ல
மங்கலங்கள் தாருமம்மா!.. 10

 ஊஞ்சல் வைபவம் (2022)
ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்
***

சனி, மே 27, 2023

கங்கையிற்..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13
சனிக்கிழமை


பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே  ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!.. 873

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் 
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை 
இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா 
கோயில் கொண்ட 
கரும்பினைக் கண்டு கொண்டு என்கண் 
இணை களிக்கு மாறே.. 888


கங்கையிற் புனிதமாய காவிரி 
நடுவு பாட்டு 
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் 
அரங்கம் தன்னுள் எங்கள் 
மால் இறைவன் 
ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் 
ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும் 
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே.. 895


போதெல்லாம் போது கொண்டுன் 
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேன் 
அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே 
என் செய்வான் தோன்றி னேனே!. 897
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ரங்கா.. ரங்கா
ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, மே 26, 2023

திரு அருணை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 12
வெள்ளிக்கிழமை

இன்று
திரு அருணைத் திருப்புகழ்


தனனா தனனத் தனனா தனனத் 
தனனதா தனனத் ... தனதான

அருமா மதனைப் பிரியா தசரக் 
கயலார் நயனக் ... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத் 
தணையா வலிகெட் ... டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் 
றிளையா வுளமுக் ... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக் 
கிருபா தமெனக் ... கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் 
டுரமோ டெறிபொற் ... கதிர்வேலா
உறைமா நடவிக் குறமா மகளுக் 
குருகா றிருபொற் ... புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற் 
றெரியா வரனுக் ... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் 
றிருவீ தியினிற் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-


அழகனாகிய மன்மதனை விட்டுப் 
பிரியாத பூங்கணைகளைப் போன்றதும் கயல் போன்றதுமாகிய கண்களை உடைய 
பொல்லா மங்கையரின்

அழகுடன் பூரித்து புனுகு மணம் கமழும், 
மலை போன்ற மார்பகங்களில்
அணைந்து இணைந்து
வலிமை இழந்து உடல் நலிந்து 
இருமலில் வீழ்ந்து பேச்சும் உணர்வும் அற்று

இளைத்து 
உள்ளம் மெலிந்து உயிர் சோர்வடைந்து
எரியும் நரக நெருப்பில் புகாத வண்ணம்
எனக்கு உன் திருவடிகளைத்
 தந்தருள்வாயாக..

பெரியதாய் நின்ற கிரெளஞ்ச மலை 
சிறு சிறு துகளாகும் படிக்குச் செய்த
வலிமை மிக்க கதிர் வேலினை உடையவனே

மான்கள் துள்ளித் திரிகின்ற 
வனத்தில் குறமகள் வள்ளிக்கு உருகிய 
பன்னிரு தடந்தோள் பெருவீரா

திருமாலும் 
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும் 
காண்பதற்கு அரியவராகிய 
சிவபெருமானின் திருக்குமாரனே

நீர் நிறைந்த செழுமையான வயல்களால் 
சூழப்பட்டிருக்கும் திருஅண்ணாமலையின் 
திருவீதிகளில் மகிழ்ச்சியுடன் 
உலா வருகின்ற பெருமாளே!..
**

முருகா.. முருகா..
***