நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 22, 2024

நீராடல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 6
திங்கட்கிழமை



எண்ணெய்க் குளியல்

நாளுக்கு இருமுறை
வாரத்திற்கு இருமுறை
பட்சத்திற்கு இருமுறை
வருடத்திற்கு இருமுறை 

- என்ற பழங்கணக்கில்
வாரத்திற்கு இருமுறை என்று எண்ணெய்க் குளியலை வகுத்துள்ளது  - 
பழந்தமிழ் சித்த மருத்துவம். 

கோடையில் வாரம் இருமுறை என்றால் மழைக் காலத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும் - என்றும்  சொல்லி வைத்தனர் ஆன்றோர்..

ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் கண்டிப்பாக
எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும் அந்நாட்களில்...

இன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே  இல்லாமல் போய்விட்டது.. 

தீபாவளி எண்ணெய்க் குளியல் மட்டும் தான்..

எங்கள் வீட்டிலும் தீவளிக்குத் தீவளி தான்..

எண்ணெய்க் குளியலுக்கு  உகந்தது - நல்லெண்ணெய்..

கேரளத்தில் தேங்காய் எண்ணெய்க் குளியல் பிரதானம் என்று அறிந்திருக்கின்றேன்.. 

இன்று போல தொ.கா. நிகழ்ச்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில்  அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
எதிர்ப்புற வீடுகளும்,  பக்கத்து வீடுகளுமே உற்ற துணை..

விளம்பரங்களில் கும்மியடிப்பவர்கள் எவரும் நடு வீட்டுக்குள் வந்து 
பெரிய பெரிய அறிவுரை ஏதும் சொல்ல வேண்டிய அவசியம் - அப்போது இல்லாதிருந்தது..

பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுரையின் படி சிலர் -  மூலிகைகளைக் கலந்து சுட வைத்துத் தைலங்கள் தயாரித்து குளியலில்  பயன்படுத்திக் கொள்வர்.. 

எண்ணெய் வழி மருத்துவம் கேரளத்தில் பிரசித்தமானது..

இன்றைக்கு மீண்டும் எண்ணெய்க் குளியல் முன்னெடுக்கப்பட்டால்  
எண்ணெயில் இட்டுக் காய்ச்சுவதற்கு
பிரியாணி மசாலாப் பொடி தான் சிறந்தது!.. 
அதுவும் நாங்க தான் உங்களுக்காக தயாரிக்கிறோம்!.. ன்னு
விளம்பரத்திலும்   யூட்டீப்பிலும் கதறிக் 
கொண்டிருப்பார்கள்!.

நல்லவேளை.. தப்பித்தோம்!..

எண்ணெய்க் குளியலின் போது
முதல் துளியை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்து விட்டு வலது உள்ளங்கையில் எண்ணெய் எடுத்து உச்சந்தலையில் அழுத்தமாக தேய்த்துக் கொள்வதும் தொடர்ந்து உந்திக் குழியில் தடவிக் கொள்வதும் மரபு..

அதன் பிறகே உடல் முழுக்க எண்ணெய் தடவிக் கொள்வர்.. 

உள்ளங்காலில்  எண்ணெய் தடவிக் கொள்வது அவசியம்..

ஆண்கள் வீட்டின் உள்ளிருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வது கூடாது..

இடக்கையால் எண்ணெய் எடுப்பதோ தடவிக் கொள்வதோ கூடாது.. அது அமங்கலத்தைக் குறிப்பது..

எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளத்திற்குச் செல்லக் கூடாது.. 
எண்ணெய் தேய்த்துக் கொண்டு வீதியில் செல்வது அபசகுனம்..

உடல் முழுக்க நல்லெண்ணெய் வாசம் கமழ்ந்திருக்க - ஒரு நாழிகை வெயில் சார்ந்த நிழலில் இருந்து விட்டு கிணற்றடியில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல்...

திருமணம் நடந்த மறுநாள் காலையில் மாப்பிள்ளையை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து மோதிரம் அணிவிப்பது சில சமூகங்களில் வழக்கம்.. 

எண்ணெய்க் குளியலால் சிலருக்கு பிரச்னைகளும்  வந்து விடுகின்றன.. அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு..

குளியலின் போது 
சீயக்காயே சிறந்தது!

ரசாயன நுரைகளைத் தவிர்த்து விட்டு சீயக்காய்  குளியலே சிறந்தது..

சாதாரணமாக
உடலுக்கு ஆரோக்கியம் தருபவை சீயக்காய்த் தூள் நலங்கு மாவு போன்றவையே.. ரசாயன நுரைப்புகள் அல்ல...

உடல் அழுக்கும் கிருமிகளும் நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்..

எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, பெண்கள் கூந்தலுக்கு சாம்பிராணி தூபம் (புகை) இட்டுக் கொள்வது வழக்கம்.. 


கூடலில் - 
செண்பகப் பாண்டியன் - பூங்குழலியின் கூடலில் - 


கொங்கு தேர் வாழ்க்கை வடிவத்தில்
நக்கீரரின் விதி வந்து விளையாடியது இப்படியான நேரத்தில் தான்!..

தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை அகற்றி நறுமணம் ஊட்டும்.

ஆனால், இப்போது எல்லாம் கலப்படம் என்ற நிலையில் நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சாம்பிராணியாக பார்த்து வாங்கி தூபம் இட்டுக் கொள்வது நல்லது.. 

நல்ல சாம்பிராணியாக கிடைக்காத பட்சத்தில் நாமே தூபப் பொடி தயாரித்துக் கொள்ள வேண்டியது தான்..

சூரியன் உதித்ததில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்திடல் வேண்டும்.. ஒன்பது மணிக்குப் பிறகு எண்ணெய்க் குளியல் கூடாது.. நடுப்பகலில்
அந்தியில் இரவில் கூடவே கூடாது..

ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அன்று மட்டுமே உதயாதி நாழிகைக்கு முன் எண்ணெய்க் குளியலுக்கு அனுமதி (தீபாவளி)..

எண்ணெய்க் குளியலால்
உடலில் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்...

முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், எண்ணெய்த் தேய்ப்பு  செய்து குளிப்பது நல்லது.

குளிர்ச்சியான எந்த உணவையும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று மதியம் சோறும் மிளகு ரசமும்  தான் சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது..

ஆயினும்,
எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளின் மதிய உணவுக்குள்  
கோழியும் ஆடும் மற்றதும் எப்படி
உள்ளே புகுந்தன என்பது தெரிய வில்லை..

புலால் உணவுகளைக் கூடுமானவரை எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று
உண்ண வேண்டாம்...

இங்கே நம்முடைய கபாலச் சூடு உடல் சூடு - குறையாதபடிக்கு  நுரைப்பி விளம்பரங்கள் கரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கின்றன..

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய எண்ணெய்க் குளியல் நமக்கே நமக்கான பாரம்பரியம் என்பதை மறவாது இருப்போம்..
புறந்தூய்மை நீரால் அமையும்..

சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சிறப்பான குறிப்புகள்.  அந்தக் காலத்தில் வீட்டுக்குள் குழாய் கிடையாது, கிணற்றடியில் சேந்தி குளித்தார்கள்.  இப்போது அப்படி இல்லையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தீபாவளிக்கு கூட நாம் கே வாசிதான் எண்ணெய் தேய்த்து குளியல்! சுத்தமாக நின்று போன வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மீட்டு எடுக்கலாம்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. எனக்கு முழங்கால்கள் இரண்டும் வலிதான்.  மிகவும் சிரமப்படுகிறேன்.  ஆனால் எண்ணெய்க் குளியல் எப்படி இதைச் சீராக்கும்?  முழங்காலில் எண்ணெய் வைத்து மஸாஜ் செய்தே உள்ளே இறங்கும் எண்ணெய் போதமாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரம்பரிய மருத்துவத்தில நீடித்துள்ள சில பிரச்னைகளுக்கு தொடர் வைத்திய முறைகள் நன்மையளிக்கின்றன..
      தற்போது நடைமுறை யில் பயன் பெற்றுக் கொண்டு இருக்கின்றேன்...

      நன்மைகள் நிச்சயம்...

      நீக்கு
  4. அப்போதெல்லாம் அம்மா அப்பா சொற்படி குழந்தைகளுக்கு சனி நீராட்டி விட்டு விடுவார்.  பாட்டி மாசத்துக்கொருதரம் வேப்பிலைக் கட்டியுடன் துரத்துவார்,  இப்போது சத்து மாவு கஞ்சிதான்.  அது கூட வீட்டில் அரைக்காமல் ரெடிமேடாக கடையிலிருந்து வாங்கி காய்ச்சி குடிக்கிறோம்!  எங்கள்; வீட்டிலேயே தேர்ந்தெடுத்த பொருட்களை வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //// சத்து மாவு கஞ்சி . அது கூட வீட்டில் அரைக்காமல் ரெடிமேடாக கடையிலிருந்து வாங்கி காய்ச்சி குடிக்கிறோம்!... ///

      கடையில் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும்...

      வீட்டில் தயாரிப்பதற்கு நேரம் கூடி வரட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  5. சென்ற சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க விட்டுப்போய்விட்டது. திருநள்ளாறு சென்றபோது அர்ச்சகர் புதன் சனி எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்

    பதிவு தலைப்பைப் பார்த்து, இன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் எனச் சொல்லுகிறீர்களோ என்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து வருகின்ற புதன் கிழமையில் எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்..

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  6. எண்ணெய்க் குளியல் பற்றிய தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. எண்ணைக் குளியல் பற்றி நல்ல தகவல்கள்.

    எண்ணைக் குளியல் விட்டு எவ்வளவோ காலமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மீட்டு எடுக்கலாம்.


      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  8. சிறப்பான குறிப்புகள். நீங்கள் சொல்வது போல எண்ணெய் குளியல் பல வீடுகளில் இல்லாமலேயே போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மீட்டு எடுக்கலாம்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  9. எண்ணெய் குளியல் பற்றிய அருமையான குறிப்புகள். நீங்கள் சொல்வது போல எங்கள் குடும்பத்தில் உண்டு.
    திருமண சடங்கில் நலுங்கு வைத்தல் பெண்ணின் அண்ணன் அல்லது தம்பி செய்து புது உடைகள் மாப்பிள்ளை , பெண்ணுக்கு கொடுத்து, புது மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவிப்பார். மாப்பிள்ளை வீட்டார் எதிர் மரியாதையாக உடை, மோதிரம் கொடுப்பார்கள்.

    எண்ணெய் தேய்த்து குளித்தால் அன்று தூங்க கூடாது.
    அன்று தலைக்கு வேறு எண்ணெய் தேய்க்க கூடாது
    நிறைய உடல் நலம் கருதி அதை சாஸ்தரமாக சொன்ன காலம், அறிவுரைகளை எடுத்து கொண்ட காலம்.
    இப்போது யாரும் எண்ணெய் குளியல் செய்வது இல்லை.
    ஆங்கில மருத்துவர்களும் அதனால் ஒரு நன்மையும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
    ஆயுர்வேத மருத்துவர்கள் தான் எண்ணெய் குளியல் மற்றும் பல குளியல் முறைகளை வைத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக விபரங்கள் சிறப்பு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..