நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 05, 2012

ஸ்ரீ கால வைரவர்

''கால பைரவாஷ்டமி'' கார்த்திகை 21 வியாழக்கிழமை  ( 6.12.12 )



விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!...
                                                                                 - திருநாவுக்கரசர்.
- தலம் திருச்சேறை ( நான்காம் திருமுறை. திருப்பதிக எண் : 73/6 )

தேவாரத்தில் வைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறை என்னும் திருத்தலத்தில் திருநாவுக்கரசர் உழவாரப் பணி புரிந்து இறைவனைத் தரிசித்தனர். அப்போது பாடிப் பரவிய திருப்பதிகத்தில் கால வைரவரின் திருமேனியழகை வர்ணிக்கின்றார்..

''பற்பலவாய் விரிந்து எங்கும் பரவும் ஒளிக் கதிர்கள் பொருந்திய சூலத்தினையும்  வெடியென முழங்கும் உடுக்கையையும் தம் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்துடன் கால வைரவன் எனத் தோன்றி - தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து தம் மீது ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட அருஞ்செயலைக் கண்டு,  அச்சம் கொண்ட உமையவளை நோக்கி ஒளி பொருந்திய பெருஞ் சிரிப்புடன் அருள் செய்தாரே!... அந்த சிவபெருமான் செந்நெறிச் செல்வனாக இங்கே, திருச்சேறை எனும் இந்தத் திருத்தலத்தில் உறைந்து நமக்கும் புன்னகையுடன் அருள் புரிகின்றார் '' - என்பது திருக்குறிப்பு.

ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து, இத்திருப்பாடலை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. 

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சிவபெருமான் யானையை உரித்த வீரட்டம் நிகழ்ந்த திருத்தலம் வழுவூர். இத்தலத்தில் ஈசன் கஜ சம்ஹார மூர்த்தி எனவும் அம்பிகை பாலகுஜாம்பிகை எனவும் திருப்பெயர் கொண்டு திருவருள் புரிகின்றனர். யானையை உரித்த - திருக்கோலம் பஞ்சலோகத் திருமேனியாக விளங்குகின்றது.

வழுவூர்,  திருஆரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் மங்கநல்லூருக்கு உட்புறமாக 2 கல் தொலைவில் உள்ளது. யானையை உரித்த - திருக் கோலத்தினை கோயில் கோபுரங்களில் சுதை வடிவாகத் தரிசிக்கலாம். எனினும், 

யானையை உரித்த திருக்கோலம் திருத்துறைப்பூண்டி- அருள்மிகு பிறவி மருந்தீசர் திருக்கோயிலிலும் தனியாக கருவறையில் பெருந் திருமேனியாகத் திகழ்கின்றது.

மேலும்,

ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன் கைவாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங்காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!...
                                                                                 - திருநாவுக்கரசர்.
- தலம் திருநள்ளாறு ( ஆறாம் திருமுறை. திருப்பதிக எண் : 20/1 )

முந்தி நின்று அகங்காரத்துடன் அல்லாதன மொழிந்த பிரம்மனின் முகத்தைத் மூண்டெழுந்த சினத்துடன் -  தன் கை நகத்தினால் வைரவர் கிள்ளியெடுத்ததை திருநள்ளாறு தலத்தில் போற்றிப் பாடுகின்றார் திருநாவுக்கரசர் . 

முன்னொரு காலத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையில் -  '' யார் பெரியவர்'' என்று பெருங்கலகம் விளைந்தது. அப்போது சிவபரம்பொருள் நெற்றியிலிருந்து, வைரவரைத் தன் அம்சமாகத் தோற்றுவித்து அவர்களிடையே அனுப்பினார். 

அக்னி ஜூவாலைகளுடன் படர்ந்த கேசம். மூன்று திருவிழிகள். ஒளிரும் கோரைப் பற்கள். தண்டத்துடன் சூலம், உடுக்கை, பாசம் தாங்கியவராக ,   ஒலிக்கும் மணிகள் புரளும் ஆரத்துடன் வெண் சிர மாலையும் பூண்டு . இடையில்  நாகக் கச்சை புரள, திருவடிகளில் வீரத்தண்டைகள் முழங்க  - அவ்விடத்தில் தோன்றிய வைரவரைக் கண்ட பிரமன் - (அச்சமயத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள்) - அல்லாத சொல்லாக - '' வா என் மகனே'' - என்று அழைக்கவும் ,

மூண்டெழுந்த சினம் விழிகளில் தெறிக்க - முந்தி நின்று அகங்காரத்துடன் அல்லாதன மொழிந்த அந்த முகத்தைத் தன் கை நகத்தினால் கிள்ளியெடுத்தார் வைரவர். 

இப்போது திசைக்கு ஒன்றாக பிரம்மனுக்கு நான்கு முகங்கள். ஆறாத சினத்துடன் அடுத்த தலையையும் பறிக்குமுன் -  அகங்காரத்துடன் பொய் உரைத்த பிரம்மனை மன்னித்து அருளுமாறு, திருமால் வேண்டிக் கொள்ள - 

சினம்  தணிந்த  சிவபெருமான், '' வேதம்  ஓதுபவர்களுக்கு  நீயே குருவாக விளங்குவாய்'' என்று மீண்டும் படைப்புத் தொழிலை, செருக்கு நீங்கிய பிரம்மனிடமே அருளினார்.

இச்செயல் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாக தேவாரம் முழுவதுமே புகழ்ந்து போற்றப்படுகின்றது. இச்செயல் நிகழ்ந்த திருத்தலம் தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூர். 

ஈசனின் திருப்பெயர் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் மங்களநாயகி. வைரவ மூர்த்தியின் முதற் திருத்தோற்றம் நிகழ்ந்த தலம் கண்டியூர். அட்ட வீரட்டங்களுள் முதலாவது நிகழ்ந்த தலமும் இதுவே.


வைரவர் ஞானமூர்த்தி. அளப்பரிய வலிமையுடையவர். தம்மை அண்டினோர்க்கு சத்ரு பயத்தை நீக்கி, அடைக்கலம் அருள்பவர்.  காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யத்திலிருந்து உலகைக் காத்தருளும் பொறுப்பினை வைரவரிடமே - சிவபெருமான் வழங்கினார். காவல் நாயகம் என்பதால் நாய் இவருடன் திகழ்கின்றது. 

ஆணவம், அகங்காரம், செருக்கு, இறுமாப்பு, கர்வம் - இப்படியெல்லாம் மனிதனுள் மண்டிக் கிடக்கும் ''களை'' களைக் களைந்து, அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்ற - 

அதுவே மங்களத்தை - நித்ய சுப மங்களத்தை அருளும் என்பது இந்த புராணத்தின் தத்துவம்.

இந்த நிலையை நாம் எளிதில் எய்திட உறுதுணையாய் விளங்குவது, வைரவ  வழிபாடு.

தேய்பிறை அஷ்டமி மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் வைரவ வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நாள் வைரவர்  தோன்றிய திருநாள். இந்நாளை ''கால பைரவாஷ்டமி'' என்று வழங்குகின்றனர்.

சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் அனைத்திலும் ஈசான்ய  (வடகிழக்கு)  மூலையின் ஒரு பகுதியில் வைரவரின் திருமேனி விளங்கும். வைரவரின் அருகில் சனி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஏனெனில்  சனி  பகவானுக்கு வைரவரே முழுமுதற் குரு என்பதாக ஐதீகம். இதனால் வைரவரை மனப்பூர்வமாக வழிபடும் அன்பர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதனை சொல்லவும் வேண்டுமோ!...

இந்த வருடம் கார்த்திகை 21- வியாழக்கிழமை அன்று (6.12.12) தேய்பிறை அஷ்டமி. இந்நாளே  ''கால பைரவாஷ்டமி''. 

வியாழக்கிழமை அன்று மாலையில் திருக்கோயில் சென்று ஈசனை வணங்கி வலம் வந்து அருள்மிகு வைரவரிடம் விளக்கேற்றி வைத்து நம்மைப் பற்றி முறையிடுவோம். 

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம். 

ஸ்வானத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

5 கருத்துகள்:

  1. பைரவர் பற்றியும் அவர் தம் திருகோயில் பற்றியும் அறிய வேண்டும் என இருந்தோம். இப்போது அறிந்த படியால் ஆண்ட தலம் பற்றி விசாரித்து செல்ல போகிறோம். இது பற்றி அறிந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க. வளர்க.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!.. அருள்மிகு பைரவரின் திருவருள் எல்லாரையும் நல்வழிப்படுத்துவதாக!..

    பதிலளிநீக்கு
  3. பைரவர் குறித்த தகவல்கள் அருமை, வளிக்கமாக பல செய்திகள் அறிந்தேன். சமீபத்தில் இவர் குறித்த பதிவு எழுதியுள்ளீர்கள் என நினைவு,,

    பிற்பகுதி அறிவுரை நன்றாக இருக்கு, முயற்சிக்கிறேன்,,,

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..