நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 18, 2025

புஷ்பாஞ்சலி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 5 
வெள்ளிக்கிழமை


அரைக்காசு அம்மன் எனப்படும்
ஸ்ரீ பிரகதாம்பாள்
போற்றிப் பாமாலை.
108 மலர் வழிபாடு.



 ஓம்
அன்பின் உருவாம் பிரகதி போற்றி
நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி
நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி
தூமலர் தூவித் தொழுதேன் போற்றி!.. {4}

கரிமா முகனைப் பயந்தாய் போற்றி
அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி
இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி
விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி
வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி
மங்கல நாயகி மாமணி போற்றி
எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}

யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி
சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி
பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி
நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}

போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
பாகம் பிரியாய் பராபரை போற்றி
ஐயாற மர்ந்த அறமே போற்றி
ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}

உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி
அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி
சிவகாமி எனும் செல்வி போற்றி
நவமா மணியே நாரணி போற்றி!..{24}

கத்துங் கடலிடை முத்தே போற்றி
நத்தும் நல்லவர் நட்பே போற்றி
கற்றவர்க் கின்பக் கதியே போற்றி
உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}

அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி
செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி
செண்டாடும் விடைச் சிவையே போற்றி
உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}

வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி
கொடியிடைக் கோமள வல்லி போற்றி
மங்கலம் அருளும் மங்கலி போற்றி
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி
சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி
வீழ்வினை யாவர்க்கும் அருள்வாய் போற்றி
சூழ்நலம் காக்கும் சுந்தரி போற்றி!..{40}

கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி
கடவூர் வளரும் கற்பகம் போற்றி
அபிராமி எனும் அமுதே போற்றி
மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}

சிவகதி காட்டும் சங்கரி போற்றி
பரகதி அருளும் தற்பரை போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}

இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..
மலையத் துவசன் மகளே போற்றி
முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி
முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}

ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி
வெளிக்குள் வெளியாய் விளைவாய் போற்றி
மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி
கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}

பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி
நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி
சும்பநி சும்ப சூதனி போற்றி
சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}

சிம்ம வாகினி ஜனனி போற்றி
மகிஷ மர்த்தனி துர்கா போற்றி
நீலி பயங்கரி நின்மலி போற்றி
தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}

ஆரணி பூரணி காரணி போற்றி
மாலினி சூலினி சௌந்தரி போற்றி
சூளா மணியே சுடரொளி போற்றி
ஆளாம் அடியார்க் கருள்வாய் போற்றி!..{68}

மேலை வினைகடி விமலி போற்றி
வாலை வளந்தரு வராஹி போற்றி
திருவும் அருவும் திகம்பரி போற்றி
பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}

வேற்கண் அம்மை மீனாள் போற்றி
நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி
மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி
மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}

பவளவரை மேற்பசுங் கொடி போற்றி
தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி
தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி
பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}

குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி
இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி
புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி
பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}

சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி
சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி
கலைமகள் பணியும் மலைமகள் போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}

திருக்கோ கர்ணத் திருவே போற்றி
ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி
நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி
நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}

பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி
கண்ணின் மணியாய்க் காப்பாய் போற்றி
குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி
தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}

அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி
உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி
பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி
வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}

புல்லர்கள் போயற புரிகுவை போற்றி
நல்லன நவின்றன நல்குவை போற்றி
குங்குமம் தந்தருள் திருவடி போற்றி
மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}

போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி
போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி
போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி
போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}

ஓம் சக்தி ஓம்
**
இப்பதிவுக்காக
படம் வைக்க முயற்சி செய்த போது ஸ்ரீதுர்கா தேவியின் திருவுருவமே கிடைத்தது..

 காரணத்தை அறிய வேண்டும் எனில் கீழுள்ள இணைப்பில் செல்லவும்..


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. சர்வ மங்கல மாங்கல்யே சிவே
    சர்வார்த்த ஸாதகே
    சரண்யே திரியம்பிகே கௌரி
    நாராயணி நமோஸ்துதே|

    பதிலளிநீக்கு
  2. பிரகதாம்பாள் புஸ்பாஞ்சலி பாடல் நன்றாக உள்ளது. பாடி வணங்கினோம்.

    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
  3. போற்றி பாமாலை மிக அருமையாக இருக்கிறது.
    பாமாலையை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..