நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆவணி 14
  வெள்ளிக்கிழமை


தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ... தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ... பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ... குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ... தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ... றவனீயே..

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ... புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ... முருகோனே

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் 
திருத்தணி மேவும் ... பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-


எனக்கென்று பொருள்  சேர்ப்பதற்காக நாளும் உழைத்து இளைத்து  ஓய்வின்றி  
எடுக்கின்ற பற்பல பிறவிகளுடன்

வெட்கமில்லாத பிறப்புச் சுழல்
ஓய்ந்திடும்படி உன்னைத் திருப்புகழால் பாடிப் புகழ்கின்றவர்களது
 இருப்பிடத்திற்குச் சென்று 
அவர்களது அறிவுரையைக் கேட்டு அதனை விட்டு விலகாது அதன்படி நடந்து

ஒளி மிகுந்த உனது திருவடியைத் தொழுகின்ற பேற்றினை நானும் பெறுவேனோ?..

தனது வில்லின் மீது நம்பிக்கையுடன் தவநிலையைக் கலைக்க என்று அன்றொருநாள்  வந்து அம்பு எய்த மன்மதன்

வெந்து விழும்படிச்
செய்தவராகிய  சிவ பெருமான் -

 ' நீயே பிரணவப் பொருளை 
உரைப்பாயாக.. ' - என்று கேட்க,

பிரம்மதேவனும் மகிழும்படிக்கு 
வேதத்தின் பொருளை உரைத்தவனே..

கோபத்துடன் சூரனை வீழ்த்தி 
வேலால் அவனது சரீரத்தைப் பிளந்த முருகனே..

தினைப்புனக்
குலக்கொடி வள்ளி நாயகியுடன்
 திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே!..


முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. முருகனைப் பணிந்து நலம் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  2. முருகனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

    பதிலளிநீக்கு
  3. திருத்தணி முருகா போற்றி.

    இத்தலம் நேரடியாக தரிசிக்க எமக்கு கிடைக்கவில்லை.

    அனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருப்புகழ் பாடி அதன் விளக்கமும் படித்தறிந்து கொண்டு இறைவனை வணங்கிக் கொண்டேன். முருகா சரணம் எனக் கூறும் போது, நம் பாப வினைகள் அகன்று விடும். நேற்றைய உவரி தரிசனமும் பெற்றுக் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் தந்து குறைவற வைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. முத்திரை ஆடி வெள்ளி என்று வந்து இருக்கிறது.

    ஆவணி வெள்ளியில் திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..