நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 21, 2022

பஞ்ச புராணம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 5
   திங்கட் கிழமை
முதற் சோமவாரம்


சிவாலயங்களில் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும் போது பன்னிரு திருமுறைகள் ஓதப்படுவது வழக்கமாகும். 

அவ்வாறு பன்னிரு திருமுறைகளை ஓதுதற்கு இயலாத நேரத்தில்  -  தேவாரம், திருவாசகம், திருஇசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் எனப்படும் பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் எனக் கொண்டு அவைகளில் இருந்து ஐந்து பாடல்களை ஓதும் முறை உருவாக்கப் பெற்றது.. 

இதனையே பஞ்ச புராணம் ஓதுதல் என்பர்..

பிற்காலத்தில் -
இவ்வைந்து பாடல்களுடன் முருகப் பெருமானது
திருப்புகழினையும்  கந்த புராண வாழ்த்துப் பாடலையும் இணைத்து பாடும் வழக்கம் உண்டாயிற்று..

அடுத்து வரும் சோம வாரப் பதிவுகளிலும் பஞ்ச புராணப் பாடல்கள் இடம் பெறும்.


திருச்சிற்றம்பலம்
தேவாரம்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-

திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் 
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் 
பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகர் :-

திரு இசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.
-: திருமாளிகைத்தேவர் :-

திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் 
பத்தர்கள் வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே 
புகுந்து புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை 
கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த 
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே..
- : சேந்தனார் :-

பெரிய புராணம்
உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
-: சேக்கிழார் :-

திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் .. குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

கந்தபுராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க 
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் 
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்!..
-: கச்சியப்ப சிவாசாரியார் :-


திருச்சிற்றம்பலம்
***

15 கருத்துகள்:

  1. பஞ்சபுராணம் பற்றி அறிந்தேன்.  ஆறுமுகப்பெருமானும் ஆறாவதாக இணைவது சிறப்பு.  வணங்கிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இன்று சிவன் கோயில்களில் சங்காபிஷேகம், பிரதோஷம்.
    பஞ்சபுராணம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா21 நவம்பர், 2022 11:57

    Arumai Arumai nandri ayya🙏🙏

    பதிலளிநீக்கு
  5. சிதம்பரம் கோயிலில் தினந்தோறும் பஞ்சபுராணங்கள் ஓதப்படும். தீக்ஷிதர்களே ஓதுவார்கள். தருமை ஆதீனத்தின் சிவனடியார் ஒருவர் தான் அங்கே ஓதுவாராக இருந்தார். பின்னர் ஒரு பெண்மணி வந்தார். இப்போ யார் இருக்காங்கனு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உமா மகேஸ்வரி என்றொருவர் ஓதுவாராக இருந்தார்..

      இப்போது எப்படி என்று தெரிய வில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் மேலதிக தகவலும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. சிதம்பரம் கோயிலில் தினந்தோறும் பஞ்சபுராணங்கள் ஓதப்படும். தீக்ஷிதர்களே ஓதுவார்கள். தருமை ஆதீனத்தின் சிவனடியார் ஒருவர் தான் அங்கே ஓதுவாராக இருந்தார். பின்னர் ஒரு பெண்மணி வந்தார். இப்போ யார் இருக்காங்கனு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா....

      நீக்கு
  7. பஞ்சபுராணம் ஓதுதல் என்பது இதுதான் என்பது தெரிந்து கொண்டேன். இப்போது திருப்புகழும் வாழ்த்தும் ஆறாவதாக இணைந்துள்ளன என்றால் சத் புராணங்கள் என்று சொல்லப்படுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..