நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 23, 2013

ஆடிச் செவ்வாய்

மண்ணெல்லாம் மணக்கும் மாதம்.

மனமெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி மாதம். 


நினைக்கும்போதே பரவசமாக இருக்கின்றது. ஆடி மாதத்தை முழுக்க முழுக்க பெண்மைக்கே - ''..பெண்மையே வாழ்க!..'' - என்று நம் முன்னோர்கள் அர்ப்பணித்து விட்டனர்.

ஏன்?.. எதற்கு?.. என்று எந்த ஆணும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு விசேஷம்  - இந்த ஆடி மாதத்தில் நிகழ்கின்றது. மிகவும் வற்புறுத்திக் கேட்டாலோ - கிடைக்கும் ஒரே பதில் -

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

இன்னும் சொல்வதானால்- அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள -

பெண்ணாகப் பிறந்தவர்க்கு மட்டுமே இன்முகத்துடன் ஏகமனதாக அனுமதி!..

பெற்று வளர்த்து பேணிக் காத்த தந்தையோ, கண்ணின் மணியாக மணியின் நிழலாகக் கலந்து பிறந்த அண்ணனோ தம்பியோ, அன்பின் வடிவான அருமைக் கணவனோ,  மாமனோ மைத்துனனோ - யாராயிருந்தாலும்  - அவ்வளவு ஏன்!...

ஆறு அல்லது ஏழு வயது ஆன - ஆண் பிள்ளைகளுக்கே அங்கு அனுமதி கிடையாது. 

ஆறு வயது தொடங்கி - பற்றற்று, பற்களும் அற்று -  பழமாக விளங்கும் பாட்டன்களுக்குக் கூட அந்த விசேஷத்தின் நிவேத்யங்கள் கிடைக்காது என்றால் - அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!.

''அதென்ன?.. அப்படிப்பட்ட விசேஷம்!..'' -  என்கின்றீர்களா!..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்!..

ஆடியில் முதல் அல்லது மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் - பெண்கள் - பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விருப்புடன் நிகழ்த்தும் -


செவ்வாய் பிள்ளையார் வழிபாடு!...

இது தென்மாவட்டங்களில் ''ஒளவையார் நோன்பு'' என்று வழங்கப்படுகின்றது. தமிழகம் முழுவதுமே செவ்வாய் பிள்ளையார் வழிபாடு  உண்டு என்கின்றனர். 

நமது தஞ்சைப் பகுதியில் - செவ்வாய் பிள்ளையார் கும்பிடுவது என்றே சொல்கின்றனர். அல்லது இன்னும் வேறு பெயர்கள் ஏதேனும் உண்டா? - என்பது எனக்குத் தெரியவில்லை.

சரி!.. உங்களுக்கு எப்படித் தெரியும்?.. என்கின்றீர்களா!..

என் அப்பாயி நாகம்மையார் அவர்கள் செவ்வாய் பிள்ளையார் வழிபாட்டினை முன்னிருந்து  நடத்துவதை சின்ன வயதில் கண்டிருக்கின்றேன். 

வீடு முழுவதும் கோலமிட்டு நல்ல விளக்கேற்றி வைத்திருப்பார்கள். தூக்கக் கலக்கத்துடன் சாமியாடியபடி உறங்கி விடும் என்னை - விடியலில்  எழுப்பி -  கொழுக்கட்டை கொடுப்பார்கள். உண்டிருக்கின்றேன்.

மேலதிகத் தகவல்கள் - இல்லத்தரசியிடம் கெஞ்சிக் கூத்தாடித் தெரிந்து கொண்டவை!..

செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாகவே - கலந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ள பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசி அல்லது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு - யார் வீட்டில் வழிபாட்டினை நடத்தலாம் என்று நிச்சயித்துக்கொண்டு அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கின்றனர். 

எத்தனை பேர் என்று - சமயத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து  தாயும் மகளுமாக கலந்து கொள்வதானால் அதற்கு ஏற்றபடி - கணக்கிட்டுக் கொண்டு எல்லாம் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் விடியலில் எழுந்து குளித்து முழுகி  - சுத்தமான ஆடைகளை அணிந்து விரதம் ஏற்கின்றனர். 

செவ்வாய் - மாலை மூன்று  முதல் நாலரை மணி வரை ராகு காலம். அதனால் நாலரை மணிக்கு மேல் -  சுத்தம் செய்து ஊறவைத்த பச்சரிசியை - உரலில் இட்டு இடித்து -   மாவாக்கிக் கொள்வார்கள். 

உரலில் மாவு இடிப்பது, அம்மியில் ஆட்டுரலில் அரைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது, குனிந்து கோலம் போடுவது - இதெல்லாம், இடுப்புக்கும் தோள்களுக்கும் மார்புகளுக்கும் நல்ல பயிற்சிகள். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக கோலம் போடுவது மட்டும் இன்னும் வாழ்கின்றது. மற்றவை எல்லாம் ?.....

சில சந்தர்ப்பங்களில் மாவு இடிப்பது முதற்கொண்டு - எல்லாவற்றையும் முன்னிரவில்  - செய்வதும் உண்டு. வழிபாடு தொடங்கும் முன் - 

முதற்கட்டமாக - வழிபாடு நடத்தப்படும் வீட்டில் உள்ள ஆண்கள் அன்புடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர்!.. 

பூஜை நடத்தப்படும் இடம்  சுத்தம் செய்யப்பட்டு - அழகாகின்றது!..


இந்த விசேஷத்தின் நடுநாயகம் - கணநாயகம்!...

அத்தனைப் பெண்களின் மத்தியில் அவர் ஒருவர் தான் - ஆண் பிள்ளை!... அவர் ஆண் பிள்ளை என்றாலும் - நீலி திரிசூலி நீங்காத பொட்டுடைய ஒரு பெண்ணின் பிள்ளை!... 

ஆம்!.. நித்ய கன்னி - நித்ய சுமங்கலியாகிய அம்பாள், தன் திருமேனியில் திகழ்ந்த மஞ்சளைத் திரட்டி -  உருவாக்கி உயிர் கொடுத்து உலகுக்கு அளித்த பிள்ளை!.. இருந்தாலும் - அந்தப் பிள்ளையும் - இறைவனின் கோபத்திற்கு ஆளானது. 

ஏனென்றால், தானொரு பங்காயிருந்தும் தன்னை மீறி - சக்தி மட்டுமே, அந்தப் பிள்ளையை உருவாக்கியதால் - ''..இந்தப் பிள்ளை யார்?.'' எனப் - பெருமான் கேட்டு, பெரும் பிரச்னையாகி - பிள்ளையின் தலை தனியாகப் போனது!.. 

பின்  - அதுவே ஆனைத்தலை கொண்டு  அனைத்திற்கும் தலையானது!..

இப்படி தனி நாயகம் ஆன கணநாயகம் - இந்த விசேஷத்தின் போது மஞ்சளில் பிடித்து வைக்கப்படுவதில்லை. 

ஈனாக் கன்று!. சூல்கொள்ளாத பசுங்கன்றின் -சாணத்தில் பிடிக்கப்படுவார்.

அரிசி மாவினால் அம்சமாகக் கோலமிட்டு, புங்கமரத்தின் இலைகளைப் பரப்பி அதில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து, பிள்ளையாருக்கு திலகமிட்டு, அருகம்புல் மற்றும் நறுமலர்களைச் சூட்டி  - குத்து விளக்கேற்றி வைப்பர்.

முற்றிய தேங்காயை உடைத்து,  அதன் தண்ணீரை அரிசி மாவில் ஊற்றி, அந்தத் தேங்காயை சிறு சிறு துண்டுகளாகக் கீறிப்போட்டு - பிசைந்து கொழுக் கட்டைகளாகவும் அடைகளாகவும் ஆக்கிக் கொள்வர்.

(குறிப்பு : - அடை கொழுக்கட்டை இவற்றில் உப்பு சேர்ப்பது இல்லை)

முன்னிரவில் தொடங்கி - இதெல்லாம் செய்வதற்கே  நடு இரவாகி விடும்.

புது மண்சட்டியில் புது வைக்கோலை பரப்பி தண்ணீர் ஊற்றி, ஆவி வந்ததும் - 

''என்னது!... ஆவியா?... நடு ராத்திரியில் ஆவியா?..''

''ஆவின்னா - அந்த ஆவி இல்லீங்க!.   -  தண்ணீர் கொதித்து வரும் ஆவி!..'' -

''அதானே!.. நல்லவேளை!..''

வைக்கோல் மீது  பிசைந்து வைத்த கொழுக்கட்டைகளையும்  அடைகளையும் வைத்து மூடி - நன்றாக வெந்ததும்  அவற்றை எடுத்து பிள்ளையாருக்கு முன் தலை வாழையிலையில் வைத்து மற்ற பழவகைகளுடன் தாம்பூலமும் சமர்ப்பித்து தீர்த்தம் கொடுத்து - 


தூப,  தீப , கற்பூர ஆராதனைகளுடன்  வணங்கி மகிழ்வார்கள்.

அதன் பின்னர் - வயதில் மூத்தவரான பெண்மணி - பிள்ளையார் நோன்பின் கதையைச் சொல்வாராம். 

அது என்ன கதை!..

பெண்களின் மனதில் ரகசியம் தங்காது - என்கின்றார்களே!. அது முழுப் பொய்!.

ஏனெனில் அது உண்மையாக இருந்தால்தான் - அந்தக் கதை என்ன என்று  இந்நேரம் தெரிந்திருக்குமே!. இதுவரை ஆண்கள் யாருக்குமே தெரியாத கதை!.

பிள்ளையார் நோன்பின் கதை ரகசியம் இன்று வரையிலும் மாதர் குல மாணிக்கங்களால் மரபு வழுவாமல் கட்டிக் காக்கப்படுகின்றது!.. இனியும் காக்கப்படும்!..

மங்கள ஆரத்தி செய்தவுடன் அவரவர்க்கும் உரிய நிவேதனங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடு அவரவர்க்கும் அணிவிக்கப்படும். சந்தனம், மஞ்சள், குங்குமம் - மலர்ச் சரத்துடன் பிரசாதமாக வழங்கப்படும்.

அத்துடன் அங்கேயே நிவேத்ய பிரசாதங்கள் உண்டு தீர்க்கப்படும். 

முன்பு சொன்ன மாதிரி ஐந்து வயதிற்குட்பட்ட இளம் பாலகர்களுக்கு மட்டுமே அடையும் கொழுக்கட்டையும் வழங்கப்படும்.  

விடிவதற்குமுன் - ஒருவேளை கொழுக்கட்டைஅடை இவை மீதம் இருந்தால், 

பூஜையில் வைக்கப்பட்ட பிள்ளையார்,  நிர்மால்யப் பொருட்கள்,  புங்க இலை புது சட்டிகளுடன் - அவையும் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ பக்தியுடன் கரைக்கப்படும்.

''..மீண்டும் நல்லபடியாக இந்த பூஜையைச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும். பிள்ளையாரப்பா!..'' - என்ற வேண்டுதலுடனும் - 

மலர்ச்சரங்களைத் தலையில் சூடி, மங்கலகரமாக, மலர்ந்த முகத்துடனும் - மஞ்சள் குங்குமத்துடனும்  - பெண்கள் தமது இல்லங்களுக்குத் திரும்பும் போது - 

கீழ்வானில் வெள்ளி முளைத்து - புத்தம் புதிய நாள் ஒன்று - புதன் என்று தோன்றியிருக்கும்!.

விடியற்காலையில்  - வீட்டிற்குள் நுழைபவர்களிடம் ஏதாவது கேட்டால் - கிடைப்பது - மலரினும் மெல்லிய புன்னகை மட்டுமே!.. அதன் பொருள் - 

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

அப்படியே ஆகட்டும்!.. 

இன்பம் ஆவதும் பெண்ணால்!.. துன்பம் அழிவதும் பெண்ணால்!..

நம்மைப் பெற்ற தாய் நமக்கு உவந்தளிக்காமல் - உண்ணும் ஒரே பொருள்!..

எதையும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனைவி - பகிர்ந்து கொள்ளாத ஒரே பொருள்!..

செவ்வாய் பிள்ளையார் விரதத்தின்  - நிவேத்யங்கள்!..


அடையையும் கொழுக்கட்டையையும் - தாம் உண்டு விட்டு, 

செவ்வாய் பிள்ளையார்  வழங்கிய - 
அருட்கொடையை மட்டும் நம்மிடம் வழங்கும் பெண்மை வாழ்க!..

பெண்மை மலர்ந்திருக்கும் இடத்தில், மகிழ்ந்திருக்கும் இடத்தில் - 
தான் என்றும் அகலாது வாசம் செய்வதாக  
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருள்கின்றாள்!..

அவ்வண்ணமே ஆகட்டும்!..

''..பெண்மை வாழ்க!.. பெருஞ்சிறப்புடன் வாழ்க!..''

14 கருத்துகள்:

  1. பெண்மையின் பெருமை போற்றும் செவ்வாய் பிள்ளையார் வழிபாடு அறிந்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!...தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  2. மிகவும் அருமையான பதிவு. இது வரை அறியா பதிவு. மிகவும் நன்றி.
    ந. பரமசிவம்.
    New Jersey.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. நீங்கள் ஒன்று எழுத மறந்து விட்டீர்களோ என்று நினைக்கிறேன் .
    நானும் தஞ்சை பூர்வீகமாக
    கொண்டவள் தான்.நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் கொழுக்கட்டை அடை எல்லாமே உப்பில்லாமல் செய்யப்பட வேண்டுமே
    சரி தானே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி!.. நீங்கள் குறிப்பிட்டுள்ளது தான் சரி!... தவறுதலுக்கு மன்னிக்கவும்!... பதிவினைத் தட்டச்சு செய்யும் ஆனந்த பரவசத்தில் சற்று கவனக் குறைவாக இருந்து விட்டேன்!.. பிழையினைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!...

      நீக்கு
  4. செவ்வாய் பிள்ளையார் வழிபாடு பற்றிய முழு விளக்கம் மிகவும் அருமை... நல்ல பயிற்சிகளையும் குறிப்பிட்டது சிறப்பு...

    எல்லாம் நல்லதுக்குத்தாங்க...

    அப்படியே ஆகட்டும்...

    நன்றிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே!.. என்றபடி என் மனதில் இருந்தவற்றை பதிவு செய்துள்ளேன்!..தங்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி!...

      நீக்கு
    2. செவ்வாய் பிள்ளையார் நோம்பு பற்றிய செய்தி எனக்கு புதியதாகவும்
      வியப்பாகவும் இருக்கிறது.

      தஞ்சையில் பெரும்பாலும் என் நாட்களை கழித்த எனக்கு இது தெரிய வில்லையே !!

      நீங்கள் தஞ்சை வாசி எனக்கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      இது போன்ற பாரம்பரியங்களை நமது அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கான நுமது பணி சிறப்புடைத்து.

      வாழ்க. வளர்க.

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      நீக்கு
    3. அன்புடையீர்!.. தங்களிடைய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!...தங்களின் தொடந்த வருகை நமது வலைத் தளத்தினை மேலும் செம்மையாக்கும்!..

      நீக்கு
  5. வணக்கம் இதே போல் வெள்ளிக்கிழமை வெள்ளிப்பிள்ளையார் விரதம்முறை எப்படி என்று சொல்லுவீர்களா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் இதே போல் வெள்ளிக்கிழமை வெள்ளிப்பிள்ளையார் விரதம்முறை எப்படி என்று சொல்லுவீர்களா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் இதே போல் வெள்ளிக்கிழமை வெள்ளிப்பிள்ளையார் விரதம்முறை எப்படி என்று சொல்லுவீர்களா

    பதிலளிநீக்கு
  8. ஆஹா.... வருடம் தவறாமல் இந்த விரதத்தை கடை பிடித்து வந்தாலும் கூட, இந்த பதிவு உள்ளூர மகிழ்ச்சியை பொங்க செய்கிறது... படிக்க படிக்க என்னமோ அப்படி ஒரு பரவசம்.... காரணம்..... இனி என்றும் திரும்ப அனுபவிக்க முடியாத சிறு வயது ஞாபகங்களை , உங்கள் வரிகள் சில நிமிடம் கண் முன்னே காண்பித்து விட்டது. செவ்வாய் பிள்ளையார் விரதம் பற்றி வேறு எந்த பதிவிலும் ஏற்படாத ஒரு அருமையான உணர்வு உங்கள் பதிவில் ஏற்படுகிறது. மேலும், பெண்மையை , இவ்வளவு இனிமையாக போற்றியதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.... நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..