கடந்த வெள்ளிக்கிழமை (24/6) அன்று காலை 6.30 மணியளவில் பரபரப்பு மிகுந்த சென்னை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் -
ஸ்வாதி எனும் இளம்பெண் 24 வயதுடையவர் - துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்..
ஸ்வாதி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர். செங்கல்பட்டு செல்வதற்காகக் காத்திருந்த வேளையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது..
ரயில் நிலையத்திற்கு அவரது தந்தையுடன் வருவது வழக்கமாம்..
அன்றைக்கும் அப்படித் தான் வந்திருக்கின்றார்..
என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு - அங்கே காத்திருந்தாரோ!..
அருகில் வந்தவன் ஒற்றையாய்த் தனி ஆள்..
கண்ணிமைக்கும் போதில் - வெட்டிச் சாய்த்திருக்கின்றான்..
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி..
***
இந்தக் கொடுமை நடத்தப்பட்டபோது - ரயில் நிலையத்தில் அங்குமிங்குமாக இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்..
ஏதும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு!..
- என்று நினைத்துக் கொண்டார்களோ - என்னவோ!..
உயிருக்குப் போராடுகின்ற சக பயணிக்கு ஒத்தாசையாக - கூக்குரலிடக் கூட அவர்களுக்கு இயலவில்லை...
அதுமட்டுமல்லாமல் -
ஸ்வாதியை - இரத்தச் சகதியில் வீழ்த்தி விட்டு கொலைகாரன் நிதானமாக வெளியேறிய பின் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்..
மகாகவி - ஊமை ஜனங்கள் - என்றுரைத்தாரே..
அப்படி ஆயினர் போலும்!..
அல்லது -
தான் ... தன் சுகம்!... - என்று வாளாயிருந்து விட்டனர் போலும்...
சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி..
***
அங்கிருந்தோரில் எவருக்கேனும் -
இந்த ஸ்வாதி உடன் பிறப்பாக உற்றாராக இருந்திருந்தால் -
இப்படி வாய் மூடி வேடிக்கை பார்த்திருக்கக் கூடுமோ?..
கூக்குரலிட்டு களேபரம் செய்வதற்கு - உடன் பிறப்பாக உற்றாராக இருக்கத் தான் வேண்டுமெனில் - அங்கிருந்தோர் எவரும் மனிதரில் சேர்த்தியில்லை..
தன் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதவராக நடைமேடையில் விழுந்த சுவாதி உயிருக்குப் போராடிய கணம் மிகக் கொடுமையானது...
குப்பை மேட்டில் மேய்ந்து திரியும் கோழிக் கூட்டத்துள் வல்லூறு புகுந்து விட்டால் - உடனிருக்கும் மற்ற கோழிகள் பெருங்குரலெடுத்துச் சப்தமிடுவதைக் கிராமங்களில் வசித்தவர்கள் கேட்டிருக்கக் கூடும்..
அந்த கோழிகளுக்கு உள்ள உணர்வுகள் கூட -
அங்கிருந்தவர்களுக்கு இல்லாமல் போனது பெரும் சோகம்...
கொலை செய்து விட்டு நிதானமாகச் சென்ற படுபாவியைத் துரத்திப் பிடிக்கக் கூட அங்கிருந்தோர் முயலவில்லை - எனில் ,
இவர்களைக் குறை கூறுவதற்கு -
உலக மொழிகள் எவற்றிலும் வார்த்தைகள் இல்லை!. - என்பது தான் உண்மை..
பெண் என்றால் பேயும் இரங்கும்!.. - என்பார்கள்..
திட்டமிட்டு வந்தவன் இதயத்தில் அதற்கெல்லாம் இடம் இருக்க நியாயமில்லை தான்!...
ஆனால் - அங்கிருந்தோருடைய இதயங்களிலும் இல்லாமல் போனதே!..
அப்படி எங்கேதான் போய்த் தொலைந்ததோ - இரக்கம்!..
மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே பேணி இருந்தாரடீ..
***
அந்தோ பரிதாபம்!...
துடிதுடித்து இறந்து போன ஸ்வாதி -
துறுதுறுப்பாக சமூக சேவை ஆற்றுவதில் ஆர்வம் உடையவராம்!..
சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை பெருமழையில் சிக்கிக் கொண்டபோது தன்னார்வமாக - மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கின்றார்..
தன் கைப்பொருளையும் பிறரிடம் வேண்டிப் பெற்ற பொருளையும் -
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி துயர் துடைத்திருக்கின்றார்..
தர்மம் தலை காக்கும்.. தக்க சமயத்தில் உயிர் காக்கும்!..
கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது..
ஆனால் - ஸ்வாதிக்கு அவ்விதம் நடக்கவில்லையே!..
துயருற்றோர் தம் துன்பம் தீர்ப்பதற்குத் தன் கரத்தை நீட்டியிருக்கின்றார்...
ஸ்வாதிக்கு ஆதரவாக ஒரு கரம் கூட நீளவில்லையே..
டேய்.. விடாதே.. பிடி!.. - என்றொரு குரல் கூட எழும்பவில்லையே...
ஓர் உயிரை எடுத்து விட்டு - நிதானமாக நடந்து சென்ற கொலைகாரனைத் துரத்திச் செல்வதற்குக் கூட யாருக்கும் துணிவில்லை... எனும் போது ,
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது மனிதர்களின் மத்தியில் தானா?.. -என்று ஐயம் எழுகின்றது...
மனிதம் மாண்டு போனதோ!..
பெண்களுக்கு எதிரான கொடுமைகளுள் -
ஸ்வாதிக்கு நேர்ந்தது முதலும் அல்ல.. கடைசியும் அல்ல!..
இன்னும் எத்தனையோ - காத்திருக்கின்றன..
என்ன செய்யப் போகின்றோம் - பெண்களின் துயர் துடைக்க!..
மூன்றாண்டுகளுக்கு முன் காரைக்கால் பேருந்து நிலையத்தில் விநோதினி என்ற இளம் பெண் அமில வீச்சுக்கு ஆளானாள்..
கொடூர காயங்களுடன் படாத பாடுபட்டு - அகால மரணத்தைத் தழுவினாள்..
குற்றவாளி நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்..
இன்னும் சில வருடங்களில் விடுதலையாகக் கூடும்..
சென்ற ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் இது...
கிழவன் ஒருவன் பதினைந்து வயதுடைய - தன் பேத்தியை சக கிழவர்களுடன் பகிர்ந்து கொண்டான்..
அந்தப் படுபாவிகள் இன்னும் நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றார்கள்..
வயது குறைந்தவன் இவன் - என்ற நோக்கில் அரசு அவனைப் பரிபாலித்தது..
அவனோ - தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை - வயதுக்கு மூத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வன்புணர்வு செய்தவன்..
குற்றுயிராகக் கிடந்த அந்த இளம் பெண்ணை மீண்டும் அனுபவித்ததோடு கையினால் துழாவி - கம்பி ஒன்றினால் அவளது குறியைக் குத்திக் கிழித்து அவளுடைய மரணத்திற்கு வித்திட்டவன்...
குறைந்த தண்டனைக்குப் பின் அவனது நல்வாழ்விற்கு அரசே பெருந்துணை புரிந்தது...
அவனும் இன்று நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்...
இத்தகைய இழிபிறவிகளுக்காத்தான் இந்தத் திருக்குறள்..
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.. (0550)
வள்ளுவப் பெருமானுக்கு -
நீருக்கு நடுவே சிலை எழுப்பி வைப்பதெல்லாம் பெருமையே அல்ல!..
நெஞ்சுக்கு நடுவே எழுப்பி வைத்து நீதியைக் காப்பதுதான் பெருமை!..
இதை நினைவில் கொள்ளாவிடில் நமக்குத் தான் சிறுமை!..
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி..
***
நம்பிக்கை!..
கொள்வதும் கொடுப்பதும் அந்த ஒன்றுதான்!..
அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்..
நம்பிக்கை கொள்ளவும் இல்லை..
நம்பிக்கை கொடுக்கவும் இல்லை!... எனில்
- என்ன மாதிரியான கட்டமைப்பு இது!..
கேவலம்..
***
பதிவில் உள்ள படங்கள் - இணையத்தில் பெற்றவை...
காணொளி :- தந்தி தொலைக்காட்சி.. அவர்தமக்கு நன்றி..
எல்லாவற்றுக்கும் மேலாக -
இரத்த தானம் செய்வதில் மிகுந்த விருப்புடைய - ஸ்வாதி
தனது நண்பர்களிடம் கூறுவது - இப்படி...
இறைவன் படைத்தது ஒரு பிறப்பு..
அதற்கு இரத்த தானம் கொடுப்பது - மறு பிறப்பு!..
அதன்படியே ,
மண் மகளுக்கும்
தன் குருதியைக் கொடையாய்க்
கொடுத்து விட்டு சென்று விட்டார் ..
மனித நேயம் கொண்டு மலர்ந்த மலர்
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது..
ஸ்வாதி
உன் ஆன்மா அமைதியுறட்டும்!..
***