நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 20, 2023

மனை மங்கலம்1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 5
செவ்வாய்க்கிழமை


வைகறையில் துயில் எழ வேண்டும்.. 

இதெல்லாம் கிராமத்து வாழ்க்கையில்.. இப்போது எங்கெங்கும் தனி வீடுகள் - ராஜ்ஜியங்கள் - எனும் போது அவரவர் விருப்பம்.. சூழ்நிலை.. 

வைகறை எனில் 
சூரியோதயத்துக்கு முந்தைய நிமிடங்கள்..
சூரியோதயத்துடன் எழுவதும் நல்லதே..

பிரம்ம முகூர்த்தத்தில் (நாலரை மணிக்கு முந்தைய பொழுது) எழுந்தால் கூட அந்த நேரத்தில் நீர் நிலைகளில் நீராடுதல் நல்லதல்ல என்பார்கள்..

இயற்கையான மூலிகைப் பொடியால் பல் துலக்குதல் நலம்..  அவசியமும் கூட..

அடுத்த அத்தியாவசியத்தில்
கிழக்கு வடக்கு நோக்கி ஒருபோதும் அமரக் கூடாது.. மரத்தின் நிழலிலும் மேய்ச்சல் நிலங்களிலும் எவ்வித அசுத்தமும் செய்யக் கூடாது.. 

கால் கழுவுதலில் ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன.. ஆதலால் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏதுவாக விட்டு விடுவோம்..

நடைபாதையில் உமிழ்தல் கூடாது.. முக்கியமாக நேர் முகமாகவோ (இந்திர திசை) வலப் புறமாகவோ ( பித்ரு திசை) உமிழவே கூடாது..

இதற்குப் பின் கிணற்றிலோ இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டும்..

குளம் ஏரி எனில் வடக்கு நோக்கியபடி முங்கிக் குளிக்க வேண்டும்.. ஆறு எனில் கிழக்குத் திசை நோக்கி முங்கிக் குளித்து சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்க வேண்டும்.. இதையே வடக்கு நோக்கி செய்வது மிகவும் உத்தமம்..

ஆடையின்றி நீராடக் கூடாது.. நீர் நிலைகளில் இரட்டைத்  துணியுடன் நீராடுதல் வேண்டும். இதெல்லாம் சுய மரியாதை சமூக பாதுகாப்புக்குத் தான்.. 

நீராடிய பிறகு -
படித்துறையில் நாலுபேர் மத்தியில் ஈரத் துணியை உதறக் கூடாது..

குளித்த பின் - உலர்ந்த துணிகளையே அணிதல் வேண்டும்.. உடுத்திக் களைந்த உடுப்புகளை ஒருபோதும் அணிந்து கொள்ளக் கூடாது..

வேறொன்று இல்லாத நிலையில் மட்டுமே கிழிந்த ஆடைகள்..

எந்த நிலையிலும் நமது வறுமையை பறை சாற்றக் கூடாது..

காலை உணவுக்கு முன் ஐந்து நிமிடங்களாவது மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை வணங்க வேண்டும்.. 

இந்த வாழ்வும் வளமும் இறைவனிடம் இருந்து பெற்றதே!.. 

காலைக் கடன் என்பது இறை வழிபாடு.. - என்பார் வாரியார் ஸ்வாமிகள்..

அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் தமிழகத்தில்!..

இறை வழிபாடுதான் இல் வாழ்வானுக்குரிய ஐந்து அடிப்படை தர்மங்களின் ஆதாரம்..

பலருக்கும் கடமை என்றால் காலையில் விழித்து பல் துலக்குவது காபி அருந்துவது தொலைக் காட்சியில் ஊரார்ப் பிரச்சினையைக்  கேட்பது தலையில் நாலு டப்பா தண்ணீரை ஊற்றிக் கொள்வது..

நெற்றியில் பேருக்கு திருநீற்றைப் பூசிக் கொண்டு, அலுவலகம் செல்வது.. 

மாலையில் திரும்பி வந்து தொலைக் காட்சியில் - சதி, சந்தேகம், அழுகை, ஆபாசம், ஓலம், ஒப்பாரி - இப்படியான காட்சிகள்  நிறைந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு, இரவில் ஒதுங்கி உறங்கி எழுவது என்று  நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்..

அன்றைய கடமை என்ற ஒன்றைப் பற்றி நினைப்பதே இல்லை..

அதுதான் வேலைக்குப் போய்ட்டு வர்றோமே!.. அதற்கு மேலும் அன்றைய கடமை என்று ஒன்றா?.. 

ஒன்றல்ல.. ஐந்து!..

அடிப்படையான ஐந்து  கடமைகள் - தர்மங்கள் இதோ..

வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது அல்லது மந்திர ஸ்லோகங்களைச் சொல்லி வீட்டில் வணங்குவது.. இது தேவ யக்ஞம்..

அடுத்தது பிரம்ம யக்ஞம்..
திருக்குறள், தேவார திருவாசக பிரபந்தம் போன்ற ஞான நூல்களைப் படிப்பதும் சிந்திப்பதும்..

இனி பித்ரு யக்ஞம்..
நமது முன்னோர்களை நாளும் நினைவு கூர்ந்து வணங்குவது.. நம்முடன் வாழும் அன்னை தந்தையருடன் அன்புடன் அளவளாவுதல் உயர்விலும் உயர்வு..

அடுத்தது மானுட யக்ஞம்..
அற்றார்க்கும் அலந்தார்க்கும்
நடைவழிச் செல்வோருக்கும் 
இயன்றவரை உதவி செய்வதும் விருந்தோம்புவதும்..

நிறைவாக பூத யக்ஞம்..
மரங்களுக்கு நீர் ஊற்றுவதும்  பறவை விலங்குகளுக்கு உணவிடுதலும்..

இவை ஐந்தும் திருக்குறளில் பயின்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

இதைக் குறிக்கும் திருமந்திரப் பாடல்..

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே..

பறவை விலங்குகளுக்கு உணவிடுதல் என்றதும் காற்றில் மிதக்கும் வல்லூறு காட்டுப் புலி கரடிகளை நினைத்துக் கொள்ள வேண்டாம்..

உங்களால் முடிந்தால் அவைகளுக்கும் செய்யலாம்.. 

அனகொண்டாவைக் கட்டிப் பிடித்து அன்பு முத்தம் கூட கொடுக்கலாம்..

நோக்கம் என்ன எனில்
நம்மை அண்டி வாழ்கின்ற சிற்றுயிர்கள்..

சரியாகச் சொல்ல வேண்டும் எனில் நாம்  தான் சிற்றுயிர்களை அண்டி வாழ்கின்றோம்..

மகாகவியின் பாடலில் இதற்கான விளக்கம்..

வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா..

கொத்தித் திரியும் அந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடும் அந்த காக்கை - அதற்கு
இரக்கப்பட வேணுமடி பாப்பா..

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா..

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுது வரும் மாடு
ஆண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!..

சரி.. இதற்கு
மேலும் உண்டா!..

உண்டு.. 
மேலதிக விஷயங்கள் 
நாளைய பதிவில்!....

வாழ்க நலம்
நலமே வாழ்க..
***

17 கருத்துகள்:

  1. காலை நாலரை மணிக்கு நான் எழுந்து விட்டாலும், வடக்கு நோக்கியே கணினியில் அமர்கிறேன்! குளியலறையில் தெற்கு நோக்கிக் குளிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....

      வாழ்க நலம்..

      நீக்கு
  2. அருமையான பதிவு. இதில் எவ்வளவு கடைபிடிக்கிறோம், எவ்வளவு கடைப்பிடிக்க முடியும், தெரியவில்லை.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயன்றவரை கடைபிடிக்க
      வேண்டியது தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. மிக அருமையான பதிவு.

    பல கூடாதுகள், பாதுகாப்பு, பொது இடங்களில்்பிறருக்கு கஷ்டம் கொடுக்காமை, சுத்தம் சுகாதாரத்தை ஒட்டி அமைக்கப்பட்டவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ....

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. யதார்த்தமான ஒன்று, நம்மைச் சுற்றி வாழும் சிற்றுயிர்களுக்கு உணவிடுதல்....மிக நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ....

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி....

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. சிறப்பான தகவல்கள். எத்தனை கடைபிடிக்க முடிகிறது என்று சிந்தனை செய்தேன். பல விஷயங்களுக்கான காரணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் போனதும் வருத்தமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் போவது தான் வருத்தமான விஷயம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. தேவையான விஷயங்களைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி. இவற்றை முறையாகக் கடைப்பிடிப்பவர் அரிதிலும் அரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா....

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. நல்ல பல விடயங்கள்.

    பறவைகள் மிருகங்களிடத்து அன்பு கொள்ளல் பாரதி பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..