நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 23, 2023

ஸ்ரீ மாணிக்கவாசகர்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 8 
 வெள்ளிக்கிழமை

இன்று
ஆனி மகம்

ஸ்ரீ மாணிக்கவாசகர் தில்லையம்பதியில் 
ஈசனொடு கலந்த நாள்..


மதுரையை அடுத்திருக்கும் திருவாதவூர் தனில் அவதரித்த புண்ணியர்..

கல்வி கேள்வியிற் சிறந்து விளங்கிய இவரைக் கண்டு வியந்த அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக ஆக்கிக் கொண்டான்..

படைப் பெருக்கத்திற்காக கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கும் குதிரைகளைத் தேர்வு செய்து வாங்கி வருமாறு பெரும் பொருளுடன் மன்னன் மாணிக்கவாசகரை அனுப்பி வைக்க - திருப்பெருந்துறையில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.. 

அங்கே ஈசனுக்காக கோயில் ஒன்றினை எழுப்பினார்..

உடனிருந்தோர் நடந்தவற்றை மன்னனுக்குத் தெரிவிக்கவும் மன்னன் அழைத்து விசாரித்தான்..

ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் - என ஈசன் உரைத்த மொழியை  அப்படியே மன்னனிடம் தெரிவித்தார்..

ஈசனும் தான் உரைத்தபடியே குதிரைகளுடன் வந்தான்.. 

அது முதற்கொண்டு நடந்தவை எல்லாமும் திருவிளையாடல்கள்..

ஈசன் கொண்டு வந்த பரிகள் எல்லாம் நரிகளாகி  கொட்டடியில் இருந்த பிற குதிரைகளையும் கடித்து வைத்து விட்டு - ஓடிப் போனதால் சினம் கொண்ட அரசன் - திருவாதவூரரை கடுமையாகத் தண்டித்தான்.. அவர் பொருட்டு வைகை பெருகி வந்தது.. 

இதனூடாக வேலையாளாக வந்து
உதிர்ந்த பிட்டு தனைக் கூலியாக உண்டு வந்தியம்மைக்கும் சிவகதி அளித்தான் ஈசன்..


உண்மையை உணர்ந்த மன்னவன்,
சிவயோகத்தில் திளைத்திருந்த திருவாதவூரரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..

பொறுப்புகளில் இருந்து மீண்ட மாணிக்கவாசகர் மதுரையில் இருந்து தில்லையை வந்தடைந்தார்..

அங்கே திருக்கோவையார் இயற்றினார்.. அற்புதங்கள் பல நிகழ்ந்தன..


மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல ஆடற்கரசன் தானே - தன் கைப்பட அனைத்தையும் ஓலையில் வரைந்து பொன்னம்பலத்தில் வைத்து மறைந்தான்..

தில்லை மறையோர் இது கண்டு வியந்து - " இதன் பொருள் யாது?.. " - என வினவிய போது, சந்நிதியில் ஆடற்கரசனைக் காட்டி - 

" அவனே இதன் பொருள்!.."  - என்று உரைத்த வண்ணம் கருவறையினுள் ஒளியாகக் கலந்தார் மாணிக்கவாசகர்..


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் (26) 
மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.. 

எல்லாப் பிறப்பும் பிறந்தாயிற்று.. 
உனக்கென்ன ஆணவம்?.. - என்று, 
நமது பழிகளைச் சுட்டெரிக்கும் 
அருட்பிழம்பு..


வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20


ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்..

- என்று, கர்ப்பத்தினுள் உருவாகி வளரும் கருவின் வளர்ச்சியைப் பாடியருளிய சிவஞானி..


கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 4


தோலும் துகிலுங்
குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.. 18
***
எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!..

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு.. அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. மதுரையில் இருந்தபோது திருவாதவூர் சென்றதில்லை.  சென்னை வந்து பல வருடங்களுக்குப் பிறகு 2016 க்கு முன் மதுரை சென்றபோது இங்கு சென்று வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திருவாதவூர் சென்றதில்லை..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. மாணிக்கவாசகரைப் போற்றுவோம். சிவனைச் சரணடைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம்.. ஓம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய.... அனைவருக்கும் ஈசன் அருள் புரியட்டும். சிறப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. பல் விருகமாகி - முதலில் விருட்சத்தைத்தான் விருகம் என்று குறிப்பிடுகிறாரோ என்று யோசித்தேன். விருகம் என்பது மிருகம் என்பதைக் குறிக்கிறது என்று தோன்றியது. பல்வேறு மிருகங்களாகவும் பிறப்பெடுத்திருந்தேன் என்பதைக் குறிப்பிடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்காகவும் தான் இந்த வார்த்தைகள்..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி நெல்லை..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகரின் பக்தி புராணங்களை எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் புதிதாக கேட்பதாகவே தோன்றும். ஈசன் தன் பக்தர்களுக்காக இப்புவியில் வந்து செய்த உதவிகளை (திருவிளையாடல்கள்) அளவிட முடியாது. அவ்வகையில் மாணிக்கவாசகரின் வாழ்விலும் சிவபெருமானின் பங்கு நம் இதயத்தை பக்தியால் நிரம்ப செய்பவை. ஸ்ரீ மாணிக்கவாசகரின் நாமம் வாழ்க. இனிய நாமமாகிய ஓம் நமசிவாய மந்திரத்தை விடாமல் நாமும் எந்நாளும் ஜபிப்போம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஈசனின் திருவிளையாடல்கள் அளவிட முடியாது. அவ்வகையில் மாணிக்கவாசகரின் வாழ்விலும்..

    உண்மை.. உண்மை..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  8. மாணிக்கவாசகர் இறைவனுடன் கலந்த நாள்
    ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  9. திருவாதவூர் போனதில்லை இன்னமும். ஏனோ விட்டுப் போயிருக்கு.

    பதிலளிநீக்கு
  10. திருவாதவூர் போய் தரிசனம் செய்த நினைவுகள் மனதில் வருகிறது.
    மாணிக்க வாசகர் திருவடி போற்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..