நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 15, 2021

ஆநிரைச் செல்வம்..

 செல்வம் பசு..

உண்மையில் பசு தான் செல்வம்..


இதனால் தான் ஐயன் திருவள்ளுவர் -
கல்வியின் பெருமையைக் கூறும்போது

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..

- என்று சிறப்பிக்கின்றார்..

கல்விதான் செல்வம்.. அதைவிடப் பெருஞ்செல்வம் வேறெதுவும் இல்லை.
செல்வம் என்பதனை மாடு எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்...

தேவாரத் திருமுறைகளிலும் இவ்வாறே அருளப்படுகின்றது..

மருவி நின்பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே!...

எம்பெருமானே.. நினது திருவடிகளை அன்றி மற்றொரு செல்வம் இலேன்!..
- என்று உருகுபவர் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

பொருள் எனும் செல்வத்தைப் பாதுகாத்த நாம் -
பசு எனும் செல்வத்தைப் பாதுகாத்தோமா!.. என்றால்

இல்லை!.. - என்பதே விடை..


இப்படி ஒரு சூழல் எதிர்காலத்தில் வரும்!..
- என்பதனை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள்
தை மாதத்தின் இரண்டாம் நாளை கால்நடைச் செல்வங்களுக்கானதாக உருவாக்கித் தந்தார்கள்...

ஆனால், நாம் உள்ளத்தில் கொள்ளவில்லை...

பெரும்பாலும் ஏழையின் வீட்டில் கூட கன்றும் பசுவும் இருந்தன ஒரு காலத்தில்...

அதனால் தான் 99% ஆரோக்கியம் நிலவியது கிராமங்களிலும் நகரங்களிலும்...


நாம் எல்லாரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே!..

ஏனெனில், வேளாண்மை தானே உலகின் ஆதி!..


உலகின் முதல் மனிதன் மண்ணில் கை வைக்காது இருந்திருந்தானே ஆயின் -
இம்மண்ணுலகு மண்ணுலகாகவே ஆகியிருக்கும்...

அப்படி அவன் காப்பதற்கு முனைந்தபோது
அவனுக்குத் தோள் கொடுத்து நின்றவை - காளைகள்..

அதனால் தான்
தான் வணங்கிய ஈசனுக்கு அருகில் கொண்டு போய் காளையை வைத்தான்...

கடவுளை வணங்கியதோடு காளையையும் வணங்கினான்...

தனது வாழ்க்கைக்குத் துணையாய் இருந்த அத்தனைக்கும் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினான்..


இதனை உய்த்துணராத மூடர்கள் -

கல்லை வணங்குகின்றான்...
காற்றை வணங்குகின்றான்..
மண்ணை வணங்குகின்றான்... மரத்தை வணங்குகின்றான்...
மாட்டையும் வணங்குகின்றான்... காட்டுமிராண்டி!..

- என்று கதைத்து வைத்தார்கள் கருத்தழிந்தவர்களாய்!....,.

இப்படி இவன் இவற்றைச் சிறப்பித்து வணங்கி
அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்திராவிட்டால் -

கருத்தறிந்து கதைத்தவர்களும் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்பார்கள்..


வேளாண்மையும் தாளாண்மையும் தான் தமிழனின் முதுகெலும்பு...
அதனுள் ஓடும் உயிர் நாளம் தான் கால்நடைச் செல்வம்!..

- என்பதைப் புரிந்து கொண்ட ஆதிக்க வெறி பிடித்த அந்நியர்கள்
உயிர் நாளத்தை அறுத்து முதுகெலும்பை முறிக்க முனைந்தார்கள்..

அதிலே வெற்றியும் கண்டார்கள்..

அதன் விளைவாக -
இன்றைக்கு கிராமங்களில் கூட
கால்நடைகள் அறுகிப் போயின...

பாரம்பர்யங்களை மாற்றியதால்
கழனிகளும் களங்களும் கருகிப் போயின...

கால்நடைகளின் அழிவினால்
இயற்கை எருவிற்குப் பஞ்சமானது..
இரசாயனங்களைக் கொட்டியதால் வயல் வெளியும் பாழானது...

நாட்டுப் பசு ஒரு வேளைக்கு உழக்கு பால் கொடுப்பதே அரிது..

ஆனால், அந்த உழக்குப் பாலின் துளிகள் அத்தனையும் அமுதமாக இருந்தன..


காலம் மாறிய சூழ்நிலையில்
நாட்டுப் பசுவுக்கு மாற்றாக செயற்கை முறையில்
கருவூட்டப்பட்ட பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன...

இதன்பின் -
ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த
நாட்டுப் பசுக்களும் செயற்கைக் கருவூட்டலுக்கு ஆளாயின...

அதனால் பொலி காளைகளுக்கு வேலை இல்லாமல் போனது..

ஏறு எனப்பட்ட காளைகள்
தமது இணைகளின் முகங்களைப் பாராமலேயே -
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு
வீட்டுச் சட்டிக்குள் கொதித்து அடங்கின...


காளையின் தழுவல் இல்லாமல்
கருவுற்ற பசுக்கள் - கன்றினை ஈன்ற பின்
குடம் குடமாக பாலைக் கொடுக்கும் - என்று எதிர்பார்த்தால்
ஏமாற்றமே மிச்சமாகப் போனது பேராசைக்காரர்களுக்கு...

அத்தோடு விடாமல் பால் சுரப்புக்கு என்று ஒரு மருந்தைக் கண்டுபிடித்து
கறப்பதற்கு முன்பாக அந்த மருந்தை ஊசி மூலம் பசுவிற்குச் செலுத்தி
தனது ஆசையைத் தணித்துக் கொண்டான் மனிதன்..

இப்போதெல்லாம் மாடுகளின் உலர் தீவனத்திலேயே
பால் பெருக்கத்துக்கான மருந்துகள் கலக்கப்படுவதாக சொல்கின்றார்கள்...

இப்படி கிரியா ஊக்கிகள் மூலமாகப் பெறுவதனால் தான்
தமிழகத்தில் இரவு பகல் எந்நேரமும் பால் தடையின்றி
கடைகளின் குளிர் சாதனப் பெட்டிக்குள் கிடக்கின்றது...

சரி.. இந்தப் பால் நல்லது தானா?..

இல்லை..

இந்தப் பாலே கிரியா ஊக்கிகளின் மூலமாகப் பெறப்பட்டது..

இப்படிப் பெறப்பட்ட பாலின் கட்டமைப்பும்
இரசாயனங்களின் மூலமாக மாற்றப்பட்டு விடுகின்றது..

ஒருகாலத்தில் பாலைக் காய்ச்சி
உறையூற்றி தயிராக்கி
அதைக் கடைந்து அதிலிருந்து
வெண்ணெயையும் மோரையும் பிரித்து
அந்த வெண்ணெயை உருக்கி
நெய்யாக்கினார்கள்..

ஒரு வீட்டில் வெண்ணெயை உருக்கினால் அந்தத் தெருவே மணக்கும்...

சர்.... சர்... சர்... - எனத் தயிரைக் கடைவதனால் எழுந்த சத்தத்துடன்
நறுமணமும் எழுந்து தயிர் கடைந்த ஆய்ச்சியர்களின் மீது படிந்திருந்தது!..

வாச நறுங்குழல் ஆய்ச்சியர்!.. - என்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க்கோடியாள்...

இன்றைக்குக் கடைகளில் விற்கப்படும்
செயற்கை நெய்யில் மணம் என்பதே இல்லை..

பாட்டில்களில் அடைபட்டிருக்கும் நெய்யைப் போட்டுக்
கொளுத்தினால் கூட நறுமணம் கமழ்வதில்லை...

நெய்யில்லா உண்டி பாழ்!.. - என்றார் ஔவையார்..

ஔவையாரை விட அறிவாளியாகிய
இன்றைய நவீன மருத்துவம்
நெய்யை நினைத்துக் கூடப் பார்க்காதே!.. - என்கின்றது..

இதிலிருந்தே உண்மையினை உணர்ந்து கொள்ளலாம்...

ஆயிரம் ஆயிரம் டன் கணக்கில்
ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவிலும்
வெண்ணெயையும் நெய்யையும் தயாரித்து
அவற்றை உலகின் பல நாடுகளுக்கும்
ஏற்றுமதி என - அனுப்பி வைக்கின்றார்கள்..

இவை நல்லவை தானா?.. 
இவற்றைக் கொண்டு தயாராகும் உணவு வகைகளை நாளும் உண்பவர்களின் கதி!?...

சந்தேகமின்றி மருத்துவமனை தான்!..

இந்த நிலைமை நமது நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கின்றது...

இதைப் பற்றி இன்னும் எழுதலாம்..
ஆயினும் அவற்றை வேறொரு பொழுதில் சிந்திப்போம்...


தஞ்சாவூர் பெரிய நந்தி..

ஆகவே, இன்றைய நிலையில்
நலம் நாடுவோர் எவராயினும் இயன்றவரைக்கும்
பழைய வாழ்க்கை முறையைக் கடைபிடித்தல் அவசியமாகின்றது...

இனிவரும் நாட்களில் நாட்டுப் பசுவையும் அதன் பாலையும் ஆதரிப்போம்..

இப்போது கூட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாட்டுப் பசுவின் பால் விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்கள்..ஆனாலும் விலை சற்று அதிகம்..

தேவை அதிகம்.. உற்பத்தி குறைவு..
நாட்டுப் பசுவிற்கு பராமரிப்பும் சற்று அதிகம்..

எல்லாரும் நாட்டுப் பசுவின் பாலை ஆதரித்தால்
உண்மையான பசுமைப் புரட்சி ஏற்பட வாய்ப்புண்டு...

அந்த நாளை ஆவலுடன் வரவேற்போம்!..

வீட்டில் கால்நடைகள் இல்லாவிட்டாலும் அவற்றின் நலனுக்காக பொங்கல் வைத்து விளக்கேற்றி வேண்டிக் கொள்வோம்..


ஆநிரைகளை வாழ வைப்பதுவே
உண்மையான மாட்டுப் பொங்கல்!..

ஆநிரைகள் வாழ்ந்தால் 
அதனை அண்டியுள்ள மக்களும் 
நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்..

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போம்!..
ஆநிரைகளின் நல்வாழ்வினுக்கு
வேண்டிக் கொள்வோம்!..


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
-: திருஞானசம்பந்தர் :-

வாழ்க நலம்.. வளர்க வளம்!. 
***

18 கருத்துகள்:

  1. இன்று வித்தியாசமான முறையில் பதிவை வழங்கி இருப்பது சிறப்பு.  ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள்.  எங்கள் இல்லத்தின் அருகே நாட்டு பசும்பால் கிடைக்கும் என்று நோட்டிஸ் காணபப்டுகிறது சமீப காலமாய்..   அதிலேயே எந்த அளவு நேர்மை இருக்கும் என்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      முடிந்த அளவுக்கு பாக்கெட் பாலைத் தவிர்ப்போம்... ஆனால்,
      தங்களைப் போன்ற சென்னை வாசிகளுக்கு சிரமம்...

      தஞ்சையில் எங்கள் வீட்டில் அவசரத்துக்கு மட்டுமே ஆவின்... ப்க்கத்துக் கிராமத்தில் இருந்து பசும்பால் தினமும் வருகின்றது..

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு மிக அருமை. ஆதிரையை பற்றிய அழகான விளக்கங்கள். இன்றைய தினத்தில் தங்கள் பதிவின் மூலம் பசு பற்றிய உண்மை சிறப்புகளை பகிர்ந்தது நன்றாக உள்ளது. பசுக்களை நாம் புறக்கணித்த தங்கள் மன ஆதங்கமும் புரிகிறது. இதை இன்றைய மனிதர்கள் உணரவில்லை. இப்போது நிறைய
    கிராமங்களும் அருகி வருவதால்தான் இந்நிலைகள் உருவாகி விட்டது.

    பசுதான் வீட்டின் செல்வம். அதுவும் பசு தன் உடலில் அத்தனை தெய்வங்களையும் அடக்கி வைத்திருக்கும் ஒரு தெய்வீக செல்வம். அதன் சிறப்பறிந்து இனியாவது ஆவினத்தை போற்றுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி. இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்க..

      பொங்கல் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. விழிப்புணர்வைத் தூண்டுகின்ற பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதத்திற்கு மன்னிக்க...
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மாடு = சிறந்த முதலீட்டு உடைமை

    வெள்ளத்தாற் போகாது...
    வெந்தழலால் வேகாது...
    வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது...
    கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது...
    கள்ளர்க்கோ மிகவரிது...
    காவலோ மிகவெளிது...
    கல்வியெனும் உள்ளத்தே
    பொருளிருக்க வுலகெல்லாம்
    பொருள்தேடி யுழல்வதேனோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. பசுவைப்பற்றிய அரிய செய்திகள் ஜி மனதுக்கு கலக்கத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கால சூழ்நிலை இவ்வாறு ஆகி விட்டது..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வித்தியாசமான தலைப்பும் இடுகையும்.

    சுயநலம், பேராசை எல்லார் மனதிலும் புகுந்தபிறகு, நாட்டுப் பசு, பால் என்பதெற்கெல்லாம் value இருக்கிறதா என்று சிந்தக்க வேண்டும். பசு வளர்ப்பவன் ஊசி போட்டு பாலை முழுவதுமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிட்டால், பிறகு அங்கு அறம் என்பது எங்கு இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      சொல்வது போல எல்லாமே அறமில்லா வியாபாரம் என்றாகி விட்டது.. வீட்டில் பசு வளர்க்க ஆசைப்பட்டேன். இயலவில்லை..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. பசுக்கள்/காளைகள் இவற்றை அடியோடு கிட்டத்தட்ட அழித்தாயிற்று. செயற்கைக் கருவூட்டலே பெரும்பாலான பசுக்களுக்குப் பல காலமாய் நடக்கிறது. காளைகளைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறதே! நல்ல விழிப்புணர்வுப் பதிவு. இந்தக் காலத்துக்கு ஏற்ற பதிவு. விரிவாக அலசியும் இருக்கிறீர்கள். போய்ச் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      செயற்கைக் கருவூட்டல் பால் சுரக்க ஹார்மோன் ஊசி இவைகள் பல பிரச்னைகளுக்குக் காரணம்..

      கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நல்ல பால் கிடைப்பதற்கும் கால சூழ்நிலை கொடுமையாகி விட்டது..

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. இன்றைய சூழலை எடுத்துச் சொன்ன, நாம் இழந்தவற்றை எடுத்துச் சொன்ன பதிவு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      பாராட்டு/ வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..