நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 03, 2021

மார்கழி முத்துக்கள் 19

தமிழமுதம்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது...(101) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 19


குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்..
  *
தித்திக்கும் திருப்பாசுரம் 


பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன்சேவடி மேலன்பாய் - துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது..(2246)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திரு இராமேஸ்வரம்


இறைவன் - ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ தர்மசம்வர்த்தனி


தல விருட்சம் - கொன்றை
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு


அணையலை சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரந்
துணையிலி தூமலர்ப் பாதம் ஏத்தத்துயர் நீங்குமே..(3/10)

மேற்குறித்த திருப்பாடலில் ஞானசம்பந்தப் பெருமான் 
சேது அணையைக் குறிப்பதைக் காணலாம்..
இவ்வாறே திருநாவுக்கரசு சுவாமிகளும்
கடலிடை மலைகள் தம்மால் அடைத்து
என்று திருப்பதிகத்தில்
போற்றுகின்றார்..

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇராமேச் சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே..(4/61)
-: திருநாவுக்கரசர் :-
***


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் 
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் 

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்...
-: மாணிக்கவாசகர் :-  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***


4 கருத்துகள்:

  1. அரங்கன் தரிசனமும், ராமநாத ஸ்வாமி, அம்பிகை தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். அழகிய பதிகங்கள், பாசுரங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    தாமதமாக வந்து சொல்வதற்கு மன்னியுங்கள்!
    அருமையான தமிழமுதம்! மிக மிக அர்த்தமுள்ளதும்கூட!!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..