நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 11, 2021

மார்கழி முத்துக்கள் 27

தமிழமுதம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு...(396) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 27

இன்று மங்கலகரமான
கூடாரவல்லி..

யாம் பெறும் சம்மானம் நீ தானே!..

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..
*
     
தித்திக்கும் திருப்பாசுரம்


வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் - பொருந்தும் 
சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது...(2305)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
சிவ தரிசனம் 

திருத்தலம் 
திருமயிலை - மயிலாப்பூர் 


இறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்   
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி 


தல விருட்சம் - புன்னை 
தீர்த்தம் -  கபாலி தீர்த்தம்


அன்னை மயிலாக உருமாறி
ஈசனை வழிபட்ட திருத்தலம்..

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பாக
 கடற்கரை ஓரமாக விளங்கியது திருக்கோயில்..

அன்னிய வெறியர்களால் திருக்கோயில்
தரை மட்டமாக்கப்பட்ட போது
நல்லோர் ஒன்று கூடி
மூல மூர்த்திகளைப் பாதுகாத்தார்கள்..

மயிலாப்பூர் திருக்குளம் - 1906

பின்னாளில்
கோயிலும் குளமும்
மயிலாப்பூரினுள் உருவாக்கப்பட்டது...

கிரேக்கத்தின்
வானியல் அறிஞரான
தாலமி (0068 - 0168)
தான் வரைந்த உலக வரைபடத்தில்
மயிலார்ப 
என்று மயிலாப்பூரைக்
குறித்திருப்பதாக தமிழறிஞர்கள்
கூறுகின்றனர்..


திருக்கோயிலில்
சிங்கார வேலவனின் சந்நிதி
சிறப்புடையது..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு


மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்..(2/47)

திருமயிலையில்
கபாலியையும் கற்பகவல்லியையும்
தாம் தரிசித்ததைப் பற்றி
ஸ்ரீ திருநாவுக்கரசர் 
திருஒற்றியூரில் அருளிய
தேவாரம் 

வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம்
வருவாரை எதிர் கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்தலை ஒன்றேந்தி வந்து
திருஒற்றியூர் புக்கார் தீயவாறே.. 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 17- 18

தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்!..

சூடுவேன் பூங்கொன்றை சூடிச்சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்...
-: மாணிக்கவாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. அட நம்மூர் மயிலாப்பூர்!  பழைய கோவில் இருந்திருந்தால் எவ்வளவு பழமையாக, எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      பழமையாகவே இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அங்கே தானே இப்போ சர்ச் இருக்கு என்கிறார்களே! :(

      நீக்கு
    3. ஆமாம்...

      திருஞானசம்பந்தர் வழிபட்ட கபாலீச்சரம் வேறு..இன்றைய கபாலீச்சரம் வேறு.. முன்பு இருந்த இடத்தில் திருக்கோயில் இல்லை.. கொடியோர்களால் அகற்றப்பட்டு விட்டது...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய இனிக்கும் திருப்பாவை பாசுரம் பாடி மகிழ்ந்தேன். ஆண்டாளின் விருப்பங்களை நிறைவேற்றியது போல்,நம்மையும் அந்த பரந்தாமன் காத்து ரட்சிக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    மயிலையில் கபாலிஸ்வரரையும் கற்பகவல்லி தாயாரையும் பக்தியுடன் தரிசித்து கொண்டேன். நான் சென்னை சென்ற புதிதில் பதினைந்து வருடங்கள் மயிலையில் குடியிருந்து அவரை கண்ணாற தரிசித்து இருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் தளத்திலும் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.

      கயிலையே மயிலை..
      மயிலையே கயிலை..
      மனதுக்குப் பிடித்த திருத்தலம்..

      கற்பக வில்லியும் கபாலீசனும் அனைவருக்கும் நல்லருள் புரிவார்களாக..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      சிவாய நம ஓம்..

      நீக்கு
  4. சிறப்பான தகவல்கள். பழமையான கோவில் இருந்திருந்தால்... நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      பழைமையான கோயில்களைப் பாதுகாக்கத் தவறி விட்டோம்...

      இனியாவது திருந்துவோம்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மயிலைக்கோயிலை அறுபதுகளில் இருந்து பலமுறை தரிசனம் செய்திருக்கோம். அருமையான தரிசனமும் இன்று கிடைத்தது. திருவொற்றியூருக்கும் போயிருக்கோம். அங்கே ஶ்ரீசக்ரம் இருக்கும் அம்பிகை சந்நிதியில் எனக்குச் சிலிர்ப்பு அதிகம் ஆக ஏழு மாசம் வயிற்றில் குழந்தையுடன் இருந்த எனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என பயந்தனர். ஆனால் அம்பிகை அருளால் பிரச்னைகளுக்கு இடையே நல்லபடியாகவே பெண் பிறந்தாள். அதன் பின்னரும் போய் வந்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கபாலீச்சரத்தைத் தரிசித்த பின்பே சென்னையிலிருந்து குவைத்திற்குப் புறப்படுவேன்.. கடந்த இரு தடவையும் இயலவில்லை.. ஆனாலும் அம்மையப்பனின் அன்பும் ஆதரவும் என்னுடன் இருக்கின்றது...

      மயிலையே கயிலை..
      கயிலையே மயிலை..

      அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..