நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 23, 2023

திருப்பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 9  
திங்கட்கிழமை

ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
அருளிச் செய்த திருத்துருத்தி
திருப்பதிகம்

திருத்தலம்
திருத்துருத்தி
திருவேள்விக்குடி
(குத்தாலம்)


இறைவன்
ஸ்ரீ உத்தாலவேதீஸ்வரர்
சொன்னவாறு அறிவார்


அம்பிகை
ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
அரும்பன்ன வனமுலையாள்

தலவிருட்சம்
உத்தால மரம்

தீர்த்தம்
காவிரி, 
சுந்தர தீர்த்தம்
பத்ம தீர்த்தம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 74

தோல் நோய் தீர்ந்த
திருப்பதிகம்

நன்றி:
பன்னிரு திருமுறை
படங்கள்: திருத்துருத்தி Fb


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுதெழும் அன்பராம்  அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம் பெருமானை என்னுடம்படும் பிணி இடர் கெடுத்தானை.. 1

மின்னலுடன் கூடிய கரிய மேகங்கள் பொழிந்த மழை நீர்
ஓசையுடன் அருவிகளாகப்  பாய்ந்து வழிய -  அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதியபடி ஓடி வருகின்ற அன்னமாம் காவிரி நதியின், அகன்ற கரையில் திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்  வீற்றிருப்பவராகிய தலைவனும் தமது அடியிணையைத் தொழுது எழுகின்ற அன்பின் அடியார்கள் வேண்டிக் கொண்ட வகைகளை எல்லாம்    நிறைவேற்றி
அருள்கின்றவரும் என்னை வருத்திய பிணியைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் மறப்பதற்குக் காரணம் யாது!..

கூடுமாறுள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடு மாகோங்கமே மருதமே பொருது மலை எனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடுமாற றிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்றறுத் தானை.. 2

கூடத் தக்க  ஆறுகளோடு கூடியும் , அவை வேறாகக் காணப்படாதவாறு கோத்தும் கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் நெற் கதிர்களையும் சிதற அடித்துக் கொண்டு இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முறித்தும்,  மலை தகர்ந்தாற் போல பழக் குலைகளை வாரிக் கொண்டும்
கரைகளைத் தகர்த்துக் கொண்டும் பாய்கின்ற  காவிரி ஆற்றின் அகன்ற கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது பழவினைகளை அடியோடு தொலைத்தவருமாகிய எம்பெருமானைப் பாடும் வகையினைக் குற்றம் உடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான்   அறிகிலேன்!.. 


கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லு மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லுமாற றிகிலேன் எம்பெருமானை தொடர்ந்தடும் 
கடும்பிணித் தொடர்வ றுத்தானை.. 3

பகைவரைக் கொல்லுகின்ற பெரிய யானையின்
தந்தங்களையும் , மணம் பொருந்திய செழுமையான கனிகளையும் வாரிக் கொண்டு, அவற்றின் இயல்பினைப் பொருந்தி வந்து வலம் செய்து வணங்கித் தவம் புரிகின்ற இல்லறத்தாரும் துறவறத்தாரும் விடியற் காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற காவிரி ஆற்றின் பெரிய கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் என்னைத் தொடர்ந்து வருத்திய கடும் பிணியினை  அறுத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் சொல்லும் வகையை அறிகிலேன்!..

பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்திழிந்த ருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடலுற விளைப்பதே கருதி தன்கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியுமாற றிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை.. 4

அருவிகள் கொண்டு வந்து  போட்ட சந்தனக் கட்டைகளாலும் , அகிற் கட்டைகளாலும்  புன்செய் நிலம் மூடிக் கொள்ள, சிறந்த மிளகு வாழை இவற்றை தள்ளிக் கொண்டு சென்று கடலில்  சேர்ப்பதையே கருத்தாகக் கொண்டு தன் இரு கரைகளிலும் அலை வீசியபடிச் செல்கின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும் எனது அரு வினைகளாகிய  குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!..


பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும் புனல் ஈண்டி, எண்திசை யோர்களும் ஆட வந்திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை.. 5

 மும்மதங்களைப் பொழிகின்ற  யானையின் தந்தங்களையும்  வேங்கை மரத்தில்
பொன் போல மலர்கின்ற நல்ல மலர்களையும் தள்ளிக் கொண்டு அருவிகள் பலவும் வீழ்வதலால் மிக்க நீர் நிரம்பி எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து மூழ்கிக் களிக்குமாறு  சுழித்துக் கொண்டு பாய்கின்ற காவிரியாற்றின் கரையினில் உள்ள திருத்துருத்தியிலும்  திரு வேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும், என்னைப் பற்றியிருந்த நோயை இன்றே முற்றாக நீக்கியவனும் ஆகிய எம்பெருமானை, குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்!..

புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நன் மலர் உந்தி
அகழும் மா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந் தீர்த்தஞ்சனம் அலம்பி,
திகழும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழுமாறறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை.. 6

புகழ்தற்குரிய சந்தனம் அகிற் கட்டைகள் பொன், மணி ஆகிய இவைகளை வாரிக் கொண்டும் நல்ல மலர்களை அள்ளிக் கொண்டும் தன்னால் அகழப்படுகின்ற பெருங் கரைகளில் செல்வம் பெருகுமாறு  செய்தும் தன்னில்
முழுகுகின்றவர்களது பாவங்களைப் போக்கியும் மங்கையர் கண்களில் தீட்டிய மையைக் கழுவியும் செல்கின்ற காவிரி ஆற்றின் கரையில் விளங்குகின்ற 
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவனும் என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவனும் ஆகிய எம் பெருமானை குற்றமுடையேனும்
 நாயினும் கடையேனும்
 ஆகிய யான் இகழும்படிக்கு நினைய மாட்டேன்!..


வரையின் மாங்கனி யொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்தாய் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெருமானை உலகறி பழவினை அற ஒழித்தானை.. 7

அளவில்லாதபடிக்கு  - மா, வாழைப் பழங்களை வீழ்த்தியும் கிளைகளோடு சாய்த்தும் , மரா மரங்களை முறித்தும்  கரைகளை அரித்தும் கரு நிறக் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து கொண்டு ஒளி மிக்க முத்துக்கள் இரு பக்கங்களிலும் தெறிக்கும்படி விரைந்து ஓடுகின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் உலகறிந்த எனது பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் துதிக்கும் வழியை அறிகின்றிலேன்!..

ஊருமா தேசமே மனம் உகந்து உள்ளி புள்ளினம் பல படிந்தொண் கரை உகள
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்தொண் பளிங்கு இடறி
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆருமாற றிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை.. 8

பற்பல ஊர்களில் உள்ள மக்களோடு இந்த நாடு முழுதிலும் உள்ளவர்களும்  மனம் விரும்பி நினைக்கும் படியும்  பறவைகள் கூட்டமாக மூழ்கி எழுந்து அழகிய கரைகளிலுள்ள சோலைகளில் பறந்து திரியவும் நீர் நிறைந்த கருங் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு கவரி மானின் முடிகளைச் சுமந்தபடி ஒளி மிகுந்த பளிங்குக் கற்களை உடைத்துத் தள்ளியும் நானிலங்களிலும் உள்ள பலவித பொருள்களையும் கண்டு செல்கின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் எனக்கு இனிவரும் பிறவியில் வரக் கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே களைந்து ஒழித்தவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும் , நாயினும் கடையேனும் ஆகிய யான் துய்க்கும் வழியினை அறிகிலேன்!..


புலங்களை வளம்படப் போக்கறப் பெருகி பொன்களே சுமந்தெங்கும் பூசல் செய்தார்ப்ப
இலங்குமார் முத்தினோடு இனமணி இடறி இருகரைப் பெரு மரம் பீழ்ந்து கொண் டெற்றி
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் விலங்குமாற றிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடு வித்தானை.. 9

வயல்கள் வளம்பட  நீர் பெருக்கி அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும்  பொற் கட்டிகளை  உருட்டிக் கொண்டும் ஒளி மிக்க  முத்துக்களையும் பலவகை மணிகளையும் வாரி எறிந்தபடி இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முறித்துத் தள்ளி கரையைத் தாக்கி அவ்விடத்தில் உள்ளவர்கள் ஆரவாரம் செய்யும்படிக்கு  கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கும் தலைவனும் இனிவரும் பிறப்பில் எனக்கு வரக்கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் நீங்கிச் செல்லும் வழியினை நினைய மாட்டேன்..


மங்கை ஓர்கூறு கந்து ஏறு கந்தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றி மற்றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுது தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்றம ருலகம் ஆள்பவரே.. 10

மங்கையாகிய உமாதேவியை ஒருபாகத்தில் வைத்து இடப வாகனத்தில் விரும்பி வருபவரும் மாறுதலை  உடைய முப்புர அசுரர்களை நீறுபட அழித்த கரங்களை உடையராகிய எம்பெருமானது கழலடிகளையன்றி வேறொன்றை அறியாதவன் ஆகியும் அவனுக்கு அடியவனாகியதுடன்
அவன் அடியார்க்கும் அடியவன் ஆகிய நம்பி ஆரூரன் கங்கையைப் போன்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கின்ற தலைவனுக்குச் செய்வித்த இப்பாடல்களை - தங்கள் கையால் தொழுது  நாவிற் கொள்பவர்கள் தவநெறியில்  சென்று அமர லோகத்தை ஆள்வார்களே!..

திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. ஓம் நமச்சிவாய... சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. ஈசனின் பாதங்களைத் தொழுவோம்.

    கோபுரப் படம் மிக அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றியக்கா...

      நீக்கு
  5. தேவார பதிகம் பாடி தரிசனம் செய்து கொண்டேன். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவார பதிகம் இருக்கிறது, நம்பிக்கையுடன் பாடி நம் வினைகளை, பிணிகளை போக்கி கொள்ளலாம்.
    பதிவும் பாடல் பகிர்வும், பாடல் விளக்கமும் , படங்களும் அருமை.
    ஓம் நமசிவாய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தேவார பதிகம் இருக்கிறது,

      நம்பிக்கையுடன் பாடி நம் வினைகளை, பிணிகளை போக்கி கொள்ளலாம்.

      அன்பின் வருகையும் இனிய கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பெயரில்லா25 ஜனவரி, 2023 19:06

    திருத்துருத்தி திருவேள்விக்குடி இறைவா போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்துருத்தி திருவேள்விக்குடி இறைவா போற்றி.. போற்றி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..