நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 25, 2018

மங்கல மார்கழி 10

ஓம் 
தமிழமுதம் 

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.. (095) 
*** 

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 10


நன்றி - திரு. கேசவ் ஜி 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்..
***

பெண்ணிற் சிறந்தவளே..
பெருந்தூக்கம் உடையவளே!...
தெளிந்த மனத்தினளாய் வந்து கதவைத் திறவாய்...

கதவைத் திறக்கலாது என்றாலும்
ஒரு வார்த்தையாவது சொல்லக்கூடாதா?..

நமக்கு மங்கலங்களைத் தந்தருளும் நாரணன்
நறுமணம் கமழ் துழாய்த் தொங்கலுடன் திகழும் தூயவன்
அவனைப் போற்றிப்பாடி பாவை நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுவதற்குக் காத்திருப்பவளே!..

முன்னொரு காலத்தில்
இப்பெருமானின் திருக்கரத்தால்
கூற்றுவனுக்கு இரையாகி வீழ்ந்த கும்பகர்ணன்
தனது பெருந்தூக்கத்தை
உனக்கே பெருங்கொடையாய்த் தந்து சென்றானோ!...

யாதொன்றும் அறியோம்..
பைங்கிளீ.. எழுந்து வா!..
வந்து கதவைத் திற!..
***

தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ ஒப்பிலியப்பன் 
அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது.. (2138) 
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்

நாவல்



ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு
மிகவும் விருப்பமான பழம் என்றுரைப்பார்
வாரியார் ஸ்வாமிகள்..

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..

எனும் ஸ்லோகத்தில் வரும்
ஜம்பு எனப்படுவது நாவற்பழம்...

சுட்ட பழம் வேண்டுமா..
சுடாத பழம் வேண்டுமா!... - என்று
ஔவை மூதாட்டிக்கு ஆறுமுகப் பெருமான்
சோதனை வைத்தது
நாவற்பழத்தைக் கொண்டு தான்!...

அம்பிகை ஈசனைப் பூஜித்த
தலங்கள் பலவுண்டு...

அவற்றுள் குறிப்பிடத்தக்கது
திரு ஆனைக்கா...

இங்கே
அம்பிகை எம்பெருமானைப் பூஜிக்க
நிழலாய் விரிந்திருந்தது
வெண் நாவல் மரம்...



நாவல் - ஊர்.. நாவலூர்..
திருநாவலூர் என்று
நாவல் பெயரைக் கொண்டு விளங்கிய
திருத்தலத்தில் தான்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தோன்றியருளினார்...

காவிரிப்பூம்பட்டினத்தில்
மணிமேகலையின் திருக்கரத்தால்
அன்னம் வாங்கி உண்டு
காயசண்டிகை எனும் கந்தர்வப் பெண்
தனது பசி தீர்த்துக் கொண்டதற்குக் காரணம்
நாவற்பழம்...

இத்தகைய சிறப்புகளை உடைய
நாவற்பழம் ஆடி, ஆவணி மாதங்களில்
மட்டுமே மிகுதியாகக் கிடைக்கக் கூடியது...

சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு
மிகச் சிறந்ததோர் வரப்ரசாதம் - நாவல்கனி..

துவர்ப்பும் சற்றே புளிப்பும் இனிப்பும்
கலந்திருக்கும் பழத்தில்
கொஞ்சம் உப்பைப் போட்டுக் குலுக்கி
இரண்டு இரண்டாக சுவைக்கும்போது
அந்த சொர்க்கம் கிடைத்தாலும் வேண்டாமென்றே
சொல்லும் மனம்!...



நாவற்பழம் குடற்புண்களை ஆற்றுகின்றது...
நோய் வராமல் தடுக்கும் காரணி..
என்றல்லாம் சொல்கிறார்கள் இப்போது...

அந்தக் காலத்தில்
கூரைப் பள்ளிக்கூட வாசலில்
வயதானவர்கள் விற்பார்கள்..
ஐந்து காசுக்கு ஒரு சுண்டு!.. - என்று...

சுண்டு என்பது அளவு குவளை..
அதைத் தின்னலாம் நாலைந்து பேர்...

அந்த ஐந்து காசும் இல்லாமல்
நிற்கும் பிள்ளைகளின் கையில்
மனமுவந்து அள்ளிக் கொடுப்பார்கள்...

அப்படியான நாட்களெல்லாம்
இனி ஒருக்காலும் வராது...
*** *** ***


சிவ தரிசனம்
திருநாகேஸ்வரம்

இறைவன்
ஸ்ரீ சண்பகவனநாதர், ஸ்ரீ நாகேஸ்வரர் 

அம்பிகை
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை

தல விருட்சம் - சண்பகம்
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம்

பராசக்தியாகிய அம்பிகை
இத்தலத்தில் சண்பக மர நிழலில்
தவம் புரிந்ததாக ஐதீகம்...

ஆனால் - அதையெல்லாம் மீறியதாக
ராகுவின் தலம் என்றே
பெரும்பாலான மக்களால் அறியப்படுவது...

ஊடகங்கள் அப்படிச் சொல்லுகின்றன..
திருக்கோயில் நிர்வாகமும்
அப்படியே பெயர்ப் பலகை 
வைத்துள்ளனர்...

ஸ்ரீ நாககன்னி நாகவல்லி உடனாகிய ஸ்ரீ நாகராஜன்  
சிவராத்திரியின் இரண்டாம் காலத்தில்
நாகராஜன் வழிபட்ட திருத்தலம்
என்பது திருக்குறிப்பு..

வெளித் திருச்சுற்றின் நிருதி மூலையில்
ராகுபகவான் என்று சொல்லிக்கொண்டு
ஸ்ரீ நாகராஜ மூர்த்தியை
வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகள்
தமது திருப்பதிகத்தில்
சந்திரன் சூரியனோடு
ஐந்தலை அரவாகிய நாகராஜன் வழிபட்டு
அருள் பெற்றதாக குறித்தருள்கின்றார்...

மாய வடிவம் கொண்டு அமுதருந்திய அசுரன்
ஜகன்மோகினியால் தண்டிக்கப்பட்டான்..

தலை வேறு முண்டம் வேறாகிக் கிடந்த அவனுக்கு
நாகத்தின் தலையும் முண்டமும் தான்
கிடைத்ததே ஒழிய
தேவ வடிவமோ மனித வடிவமோ
கிடைக்கவில்லை என்பது ஐதீகம்..

இரு கூறாகிய
ராகுவும் கேதுவும் தமது தவறுக்காக 
சிவ வழிபாடு புரிந்திருக்கின்றனர்..

ஆயினும்
திருநாகேஸ்வரத்தில் விளங்குபவன்
ஸ்ரீ நாகராஜன் என்றே உணர்த்தப்படுகின்றது..

எந்த ஒரு திருக்கோயிலிலும் 
நடை அடைக்கப்பட்ட பிறகு
திருச்சுற்றில் வலம் செய்தலாகாது..

ஆனால் - இங்கே 
செவ்வாய், வியாழக்கிழமைகளில்
ராகு கால அபிஷேகம் செய்த பிறகு
பக்தர்களை திருச்சுற்றில் வலம் வரச் செய்வது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..
***
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திரு நீற்றர்போலும்
எம்பிரான் எம்மை ஆளும்
இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும்
நாகஈச் சரவ னாரே..(4/66)

நாவலம் பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.. (5/52)

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் 
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே.. (5/52)

***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 10



புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப் பெருந்துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே!..

இந்த அளவில்
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி நிறைவு பெறுகின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

12 கருத்துகள்:

  1. காலை வணக்கம். பைங்கிளி எழுந்து வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அந்தப் பைங்கிளி யாருன்னு இப்ப சொல்லியாகனுமாக்கும்!! ஹா ஹா ஹா இல்லைனா எப்படியும் அதிரா வந்தால் கேக்கத்தான் போறாங்க...

      கீதா

      நீக்கு
  2. பொருத்தமான கேசவ் ஓவியங்களை சென்ற வருடப் பதிவிலிருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. அடடே... ஒப்பிலியப்பன்... நம்ம ஒப்பிலாத பெருமாள்! எங்கள் திருமணம் நடக்க இடம்கொடுத்து ஆசி வழங்கியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இது நல்லாவே நினைவில் இருக்கு நீங்க ஒரு பதிவுல/கருத்துல சொல்லிருந்த நினைவு!!!

      ஒப்பில்லாத பெருமாள் நு ஒரு பாட்டு உண்டுல்லையா அதை நாங்க சின்ன வயசுல உப்பில்லாத பெருமாள் அடுத்த வரியும் உப்பிலியப்ப என்றே பாடிட்டுருந்தோம்..(ஏன்னா அங்கு ப்ரசாதம் உப்பு இல்லாமத்தானே அப்படினு நினைச்சு..)..அப்புறம் தான் அது ஒப்பிலியப்பன்னு தெரிஞ்சு சரியா பாடியது

      கீதா

      நீக்கு
  4. பொருத்தமான கேஷவின் ஓவியங்களோடு அருமையான விளக்கங்கள் அடங்கிய பதிவு. நாவல் பழம் காசியில் விட்டுட்டோம். இல்லாட்டி மட்டும் சாப்பிட்டிருக்கப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  5. உப்பிலி அப்பன் கோயிலும், திருநாகேஸ்வரமும் அடிக்கடி போயிருக்கோம். திருநாகேஸ்வரம் முற்றிலும் வியாபாரத் தலமாக மாறி விட்டது. உப்பிலி அப்பன் கோயிலில் இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைமை!

    பதிலளிநீக்கு
  6. கேஷவ் படம் அருமை. பாடல் விளக்கம் எல்லாமே அருமை அண்ணா. நாவற்பழத்தின் சிறப்பு ப்ளஸ் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் அருமை அண்ணா. திருநாவலூர் பற்றியதும் சிறப்பு..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பதிவு மிக அருமை.
    பாடலின் விளக்கமும் அருமை.
    உப்பிலி அப்பன் கோயிலும் , திருநாகேஸ்வரமும் அடிக்கடி போகும் தலம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை அழைத்து செல்வோம்.
    திருநாகேஸ்வர கோவிலில் ஒரு கிணறு குபேரகிண்று என்று பெயர் சூட்டி மக்கலை காசு போட வைக்கிறார்கள், முன்பு கிடையாது. முன்பு கூட்டமே இருக்காது இப்போது பயங்கர கூட்டம். நவக்கிரக ஸ்தலங்கள் என்ற பின்தான் இவ்வளவு கூட்டமும்.
    எப்படியோ ஜனங்கள் இறைவனை வணங்க கோவில்கள் வருகிறார்கள் என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  8. நாவல்பழம் இப்போது விலை உயரத்தில் இருக்கிறது.
    அதன் பயன்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  9. நாவற்பழம் குறித்து அறிந்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  10. திரு கேஷவ் அவர்களின் ஓவியம், நீங்கள் தேர்ந்தெடுத்து தந்த படங்கள், இன்றைய பாசுரத்திற்கான உங்கள் விளக்கம் என அனைத்துமே அருமை....

    தொடரட்டும் பகிர்வுகள்.

    நாவற்பழம் எனக்கும் பிடித்தது. இங்கே சீசனில் நிறையவே கிடைக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..