நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 18, 2018

மங்கல மார்கழி 03

ஓம்

தமிழமுதம்


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.. (026) 
-: :-
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 03


நன்றி - கேசவ் ஜி..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..
***

செல்வம் வேண்டும்!...
அதிலும் நீங்காத செல்வம் வேண்டும்!..
அந்த நீங்காத செல்வமும்
மனையில் நிறைந்திருக்க வேண்டும்!..

அது எங்கே கிடைக்கும்!?..

அதைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டியதில்லை..
நம்முடன் நம் மனையில்
தாய்க்குத் தாயாக சேய்க்குச் சேயாக விளங்கும் 
ஆனினம் தான் அது!..

நாளும் விடியலில் நீராடி பாவை வழிபாடு செய்கையில்
ஓங்கி உலகளந்த உத்தமனின் மனம் குளிர்கின்றது..

கார்முகில் ஆகிய அவனது மனம் குளிர்வதனால்
மாரி எனும் மழை பெய்கின்றது..
அதுவும் மாதந்தோறும் மூன்று மழை...

அங்கே இங்கே என்றில்லாமல்
நாடு முழுதும் நல்ல மழை..

யாருக்கும் எவ்வுயிர்க்கும் தீங்கில்லாத மழை...
அதனால் வயற்காடுகள் ஓங்கு பெருஞ்செந்நெல்லுடன்
தழைத்துக் கிடக்கின்றன..


அந்தக் கழனிகளின் நீருக்குள்ளே
 கயற்கூட்டம் கவலையற்றதாய்
கலக்கியடித்துக் கொண்டிருக்கின்றது...

வயல் செழித்திருக்க வரப்பு தனித்திருக்குமோ!...
நீர் ததும்பும் அதன் கரைகளில் குவளைப் பூக்கள்
பூத்துக் கிடக்கின்றன...
அதனுள் தேனருந்தப் புகுந்த வண்டுகளோ
அங்கேயே தூங்கிக் கிடக்கின்றன...

இப்படியான இயற்கை நிகழ்வினால்
மடி நிறைந்த பசுக்களோ
வள்ளல் தன்மை உடைத்ததாய்
மனம் நிறைந்து திகழ்கின்றன...

கையில் சிறுகுடத்துடன் மடிக் காம்பினைப் பற்றும்
ஆயனின் மனம் நிறைய - அவன் கைக் குடம் நிறைய
அன்பெனும் அமுதைப் பொழிந்து மகிழ்கின்றன...

அங்குமிங்குமாகத் ததும்பும்
இந்த மகிழ்வு தான் செல்வம்..

இயற்கை - இயற்கையாக
அருளும் இந்த மகிழ்வே நீங்காத செல்வம்
என்று - தோழியரே.. உணர்வீர்களாக!...
***

தித்திக்கும் திருப்பாசுரம்..

இன்றைக்கு ஸ்ரீ வைகுந்த ஏகாதசி
திரு அரங்க தரிசனம்

திருமங்கையாழ்வார் அருளிச் செய்தவை
(இரண்டாவதாயிரம் - ஐந்தாம் பத்து - ஆறாந்திருமொழி)


கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை
எம்மானை எனக்கென்றும் இனியானைப் பனிகாத்த
அம்மானை யான்கண்ட தணிநீர்த் தென்னரங்கத்தே.. (1398)

ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே.. (1400)

நேற்று (17/12) காலை
பத்தாம் திருநாளன்று மோகினி ரூபமாக
திருஅரங்கன் எழுந்தருளிய திருக்காட்சி


நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை அன்றரக்கன்
ஊரழலால் உண்டானைக் கண்டார்பின் காணாமே
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்
ஆரழலால் உண்டானைக் கண்டதுதென் அரங்கத்தே.. (1402)

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்

ஆல்


ஈசன் எம்பெருமானின்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருக்கோலத்தை
ஆலமர் செல்வன் என்ற் தேவாரம் காட்டும் ...

சனகாதி முனிவர்க்கு மெய்ப்பொருள் உணர்த்தியபோது
ஈசன் ஆல மரத்தின் நீழலில் அமர்ந்தனன் என்பது ஐதீகம்...

பாரதத்தின் சிறப்புறு அடையாளம் ஆலமரம்...
நமது தேசிய மரமாகக் குறிக்க்ப்பட்டது
ஆலமரமே!...

தமிழகத்தில் ஆலின் பெயரோடு
விளங்கும் ஊர்கள் பலப்பல..


எல்லா மரங்களும் நிழல் தருகின்றன..

ஆனால் - ஆலின் நிழலில்
மகத்துவம் உண்டு..
மருத்துவம் உண்டு..

உடல் வெம்மையைக் குறைத்து
மனதிற்கு அமைதியைத் தருவதோடு
ஞானத்தையும் நல்குவது ஆலின் நிழல்...

வேர் முதல் கொழுந்து வரை மருத்துவ குணமுடையவை..
எனினும் தக்க மருத்துவரின் மேற்பார்வை அவசியம்...


எளிதாக வசப்படுவது ஆலம்பட்டை பற்பொடி..

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்றனர் ஆன்றோர்..
அதற்காக விழுதின் நுனியை உடைக்கின்றனர் மூடர்கள்..
விழுதின் நுனிகளை உடைத்து விட்டால்
விருட்சம் தழைப்பது எவ்வாறு?..

ஆலம் பட்டையை நசுக்கி ஒரு குவளை நீரில்
கொதிக்க வைத்து அருந்தினால்
இரத்தத்தில் சர்க்கரை சமன்படுகிறது...

ஸ்ரீஹரிபரந்தாமன்
மார்க்கண்டேய மகரிஷிக்கு
 ஊழிப் பெருவெள்ளத்தைக் காட்டும்போது
ஆலிலையில் குழந்தையாகத்
தன்னைக் காட்டியருள்கின்றான்..
எனின் ஆலின் பெருமை விளங்கும்..
***

சிவ தரிசனம்
திரு மயிலாடுதுறை



இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீ அஞ்சொலாள், அபயாம்பிகை

தலவிருட்சம் - மா மரம்
தீர்த்தம் - காவிரி


ஸ்ரீ அபயாம்பிகை 
அம்பிகை மயிலாக உருமாறி
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

காசிக்குச் சமமான ஆறு திருத்தலங்களுள்
இதுவும் ஒன்று..

ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்
பாடிப் பரவிய திருவூர்...
-: :-

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

ஸ்ரீ மயூரநாதர்  
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக்குங் கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.. (5/39)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 03


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்த ருளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

13 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

    ஓங்கி உலகளந்தவனின் பேர் பாடும் உங்கள் பதிவை வாசிக்க வருகிறேன்...கொஞ்சம் வேலை முடிச்சுட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங். ஓங்கி உலகளந்த உத்தமன் பெயர் பாடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. வைகுண்ட ஏகாதசிக்கு திருவரங்கன் தரிசனம் ஆச்சு.... நன்றி.

    பதிலளிநீக்கு
  4. குரு தட்சிணாமூர்த்தி புகழுடன் ஆலின் புகழையும் சேர்த்து அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி!

    பதிலளிநீக்கு
  6. வைகுண்ட ஏகாதசி நாளில் நல்லதொரு பகிர்வு. எல்லாம் வல்லவனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  7. //கரைகளில் குவளைப் பூக்கள்
    பூத்துக் கிடக்கின்றன...
    அதனுள் தேனருந்தப் புகுந்த வண்டுகளோ
    அங்கேயே தூங்கிக் கிடக்கின்றன...//

    இயற்கையை அழகாக விவரித்த திருப்பாடல் (03) அருமை ஜி

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.
    பாடலும், படங்களும் அருமை.
    மயூரநாதரையும், அபயாம்பிகையும் தரிசனம் செய்தேன், மகிழ்ச்சி அடைந்தேன்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பெனும் அமிழ்தை பொலிந்து மகிழ்கின்றன ...ஆஹா

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு. கேஷவின் ஓவியம் அதை விட அழகு. இன்றும் கிட்டத்தட்ட திரிவிக்கிரமனையே வரைந்திருக்கிறார், வேறே மாதிரி! கொடுத்துள்ள இனிமையான பாசுரங்களும், பதிகங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் அருமை. ஆலமரத்தைப்பற்றிய விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  11. அருமை அண்ணா..கூடவே ஆலின் பெருமையும் சொன்னது சிறப்பு...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கேசவ் ஓவியம், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..