நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 26, 2023

ஆரோக்கியம்

 

நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
 ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில் இருந்து செய்தித்
தொகுப்பு - நன்றி
**

இன்றைய நாளில் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக் கூடிய உணவு வகைகள்..

சென்ற ஆண்டு எனக்குச் சொல்லப் பட்டவைகளுடன் இணையத்தில் கண்டறிந்த செய்திகளையும் இந்தப் பதிவில் தொகுத்துள்ளேன்.. 

இந்தக் குறிப்புகள் பிறருக்கு மாறுபடலாம்..

நான் இன்று வரை ஆயுர்வேத மருந்துகளையே எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆறாண்டுகளுக்கு முன்பிருந்தே - புலால் மறுத்து விட்டதால் புலால் உணவு பற்றிய குறிப்புகள் இந்தப் பதிவில் இல்லை..

பொதுவான உணவுக் குறிப்புகள் :

காலையில் :
ஆவாரம்பூ கஷாயம்,
வெந்தயம் ஊறிய நீர்.
லவங்கப்பட்டை கஷாயம் இவற்றில் ஏதாவது ஒன்று..

மதிய உணவில் காய்கள் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்..

முருங்கைக்கீரை, முளைக் கீரை, பசலைக்கீரை அவசியம் இடம் பெற  வேண்டும்.. 

காய்களில் இருந்தும் கீரைக்ளில் இருந்தும் தேவையான உப்பு கிடைத்து விடுவதால் இரசாயன உப்பினைத் தவிர்த்து கல் உப்பினை மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி சேர்த்துக் கொள்ளவும்..


சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கள்:
வெண்டைக்காய், பாகற்காய், 
கொத்தவரை,கத்தரிக்காய், பீர்க்கங்காய், நூல்கோல், பீன்ஸ்,


புரக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ்,
முருங்கைக்காய், குடமிளகாய்
வாழைத்தண்டு, வாழைப்பூ
பூசணிக்காய், சுரைக்காய்,சௌசௌ, வெள்ளரிக்காய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி
புதினா, இஞ்சி.


பாகற்காயும் கீரைகளும் ஒருநாள் விட்டு ஒருநாள்
என்ற கணக்கில் .. 

கேரட், பீட்ரூட் இரண்டும் வாரம் இரு முறை..

நீரிழிவு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்னைகள் இருந்தால் தேங்காய் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் போதும்.. 

மேற்கத்திய முறையில்
தேங்காயும் தேங்காய் எண்ணெயும் இன்னும் முழுமையாக தீர்மானிக்கப் படாதவைகளாகவே இருக்கின்றன..

மற்றபடி நீரிழிவுக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தேங்காய் தான் காரணம் என்பதில் உண்மை  இல்லை..

சட்னி வகைகள்:
தக்காளி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, 
வெங்காயச் சட்னி, சாம்பார்.


பழங்கள்:
ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை..


மற்றவை:
பசும் பால் காலையில் மட்டும் (ஒரு குவளை 150)..

காலை உணவு 8:00 மணி
இட்லி (3) தோசை (4)
சப்பாத்தி (4)  - இவற்றில் ஏதாவது ஒன்று.

சிறு தானிய உப்புமா அல்லது சிறு தானிய பொங்கல் அல்லது வெண் பொங்கல், 
சட்னி, சாம்பாருடன் (தேங்காய் முடிந்தவரை குறைத்துக் கொள்ளவும்)

வேக வைக்கப்பட்ட காய்கள்..
(கிழங்கு வகைகளைத் தவிர்க்கவும்)

இடைநேர உணவு சிவப்பு அவலுடன் சிறிது தேங்காய் துருவல் பழஞ்சர்க்கரை சேர்த்து ஒரு கையளவு சாப்பிடலாம்..

பச்சைப்பயறு சுண்டல்
கொண்டைக் கடலை சுண்டல்
(இவ்விரண்டும் வாரம் இரு முறை)


பச்சைப் பட்டாணி,
சோயாபீன்ஸ் - இவை ஏதாவதொன்றில் வாரம் ஒருமுறை சுண்டல்..

வெள்ளரிக்காய் துருவலுடன் நறுக்கிய காய்கள்..

முளைகட்டிய வெந்தயம்
முளைகட்டிய பயறு 
( ஒருநாள் விட்டு ஒருநாள் தினமும் கையளவு)

டீ, காபி அளவோடு அருந்தலாம்.. 
நான் டீ, காபி அருந்துவதில்லை..

பிற்பகல் 11:00 மணி
காய்கறி சூப்,  துருவிய வெள்ளரிக்காய் அல்லது அரிசிப் பொரி ஒரு கோப்பை

மதிய உணவு 1:00 மணி
சாதம், கீரை காய்களுடன் சாம்பார், ரசம், மோர்..

மாலை 4:00 மணி
பயறு அல்லது கொண்டைக் கடலை சுண்டல் அரிசிப் பொரி ஒரு கோப்பை

இரவு உணவு 8:00 மணி
கேழ்வரகு அடை (3) இட்லி (3) 
தோசை (4) சப்பாத்தி (4) - இவற்றில் ஏதாவது ஒன்று. காய்கறிக் கூட்டு..

அமாவாசை ஒருநாள் மட்டும்  சிறு குவளை ஒன்றில் அரை இனிப்புடன் கூடிய வெல்லப் பாயசம்..

ஒரு நாள் முழுவதற்கும் சமையலுக்குரிய எண்ணெய்  2 - 3 தேக்கரண்டி மட்டுமே.

தவிர்க்க வேண்டியவை:
(அரிசி, கேழ்வரகு, கோதுமை) கஞ்சி, களி, கூழ்..

எல்லாக் கிழங்கு வகைகளையும் தவிர்க்கவும்.

தவிர்க்க வேண்டிய பழங்கள்:
வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா, தர்பூசணி.

மற்றும்
பனை எண்ணெய் (பாமாயில்), எருமைப் பால், தயிர், வெண்ணெய், நெய்,  வனஸ்பதி, டப்பா வெண்ணெய்/நெய்.
 ஜவ்வரிசி அரோரூட் மாவு.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரீச்சை உலர்ந்த பழங்கள்.
இவைகளைக் கலந்து தினமும் ஒரு கையளவு உட்கொள்ளலாம் என்றொரு கருத்து பொதுவானது..

எண்ணெயில் வறுத்த / பொரித்த உணவுப் பொருட்கள்.


அப்பளப் பிரியர் எனில் 
எண்ணெயில் பொரித்தது வேண்டாம்.. சுட்ட அப்பளம் நல்லது..

பப்ஸ், சிப்ஸ், வடை, முறுக்கு, சமோசா போன்றவை..

நாக்குக்கு ருசி அதிகம் என்றால் அலுப்பைப் பார்க்காமல் வீட்டிலேயே செய்து சாப்பிடவும்.. புலால் உணவு பிரியம் எனில் வெளியில் வேண்டவே வேண்டாம்..

பிஸ்கட், பிரட், பன், கேக், ஐஸ்கிரீம். 

மைதா சம்பந்தப்பட்ட எல்லாமும் - குறிப்பாக பரோட்டா..

அந்த பரோட்டா, இந்த பரோட்டா, குத்து பரோட்டா, கும்மி பரோட்டா, சில்லி பரோட்டா, சில்க் பரோட்டா - என்று  எத்தனை வகை உண்டோ அத்தனையும் ஒதுக்கித் தள்ளவும்..  உணவகங்களில் வேண்டவே வேண்டாம்..

பிரியாணி, குஸ்கா போன்றவை புலால் கலப்பின்றி இருந்தாலும் - வெளி உணவகங்களில் சாப்பிட்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்..

இப்போதே ஊரில் இருந்த நாய் பூனை காக்காய்களில் பெரும்பாலானவற்றைக் காணவில்லை என்று பரவலாக செய்திகள் வருகின்றன.

சமையல் எண்ணெய் என்ற கூச்சலுடன் வருவனவற்றை ஒருமுறைக்கு இருமுறையாக யோசித்த பிறகு வாங்கவும்..

சூரியகாந்தி எண்ணெயோ நல்லெண்ணெயோ எதுவானாலும் ஒருவருக்கு மாதம் ½ லிட்டர் என்ற கணக்கில் தான்..

தவிர்க்க வேண்டியவை:


உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, 
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய்.

கீழ்க்கண்டவற்றை எல்லாம் சர்க்கரை  குறைபாடு உள்ளகள் விட்டு விடுவது நல்லது..

டுபாக்கூர் பழச் சாறுகள் மற்றும் மன்னார் & கம்பெனியின் குளிரூட்டப்பட்ட பானங்கள்..



இனிப்புப் பண்டங்கள் ( மிகவும்  வருத்தத்துக்கு உரியது

எண்ணெயில் பொரிக்கப்பட்ட - பூரி, சிப்ஸ், வடை, முறுக்கு, சமோசா, அப்பளம் போன்றவை

பிஸ்கட், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், 

மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், 

இயற்கை மருத்துவத்தின் ஆலோசனைப்படி சேர்த்துக் கொள்ள வேண்டியவை:
கரும்புச்சர்க்கரை, வெல்லம், பனஞ் சர்க்கரை, கருப்பட்டி,
பசு நெய்..

நெய்யில்லா உண்டி பாழ் - என்று இருந்த உணவு முறை காலச் சுழற்சியில் நெய்க்கும் நமக்கும் பகை என்று ஆகி விட்டது..

வளவன் ஆயினும் அளவறிந்து உண் என்பது ஔவையின் மொழி..

பதற்றத்தைக் குறைத்து மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்..

மன நலமும் உடல் நலமும் சீரடைவதற்கு - தேவாரம் திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் என்றும்
தியானம் முத்திரை என்றும் 

எளிய முறை உடற் பயிற்சி, நடைப் பழக்கம் - என்று நிறையவே உள்ளன.. 

இவற்றில் நமக்கு ஏற்றது எதுவோ அதில் மனம் ஒன்றி நம்மை  மேம்படுத்திக் கொள்வோமாக..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

32 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    ஆரோக்கியம் நம் கையில்.
    அளவோடு சாப்பிட்டு வளமாக வாழ நல்ல பதிவு.
    எளிய முறை உடற்பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம், இறைநாமத்தை சொல்வது, பாடுவது நல்லதுதான்.
    முடிந்தவரை கடைபிடிக்கலாம்.
    நீங்கள் சொல்வது போல நம்முடைய நலம் நம் கையில்தான்.
    இறைவனும் துணையாக வர வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்முடைய நலம் நம் கையில்தான்.
      இறைவனும் துணையாக வர வேண்டும்.//

      நல்லனவற்றை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்வோம்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க...

      நீக்கு
  2. மிக கண்டிப்பான லிஸ்ட் என்று தெரிகிறது.  இதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.  என்னால் முடியாது!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பின்பற்றுவதைத்தான் இங்கே சொல்லி இருக்கின்றேன்..

      சிறு தானியங்களில் கேழ்வரகு மட்டும் தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. திராட்சை இரண்டு லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  4. பரோட்டாவை என்னால் தவிர்க்க முடியாது.  எப்படியும் மாதிடத்தில் மூன்று நான்கு நாட்கள் சாப்பிட்டு விடுவேன்.  அரிசி சாதம் தினந்தோறும்.  இதில் சாமை தினை என்றெல்லாம் இல்லாமல் சாதாரண பச்சரிசி.  காய்கறிகள் முடிந்தவரை சேர்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படியும் மாதிடத்தில் மூன்று நான்கு //

      மாதத்தில்!!!  மாதத்தில்!!

      நீக்கு
    2. பரோட்டா மூணு நாலு மாத்த்திற்கு ஒருமுறை. வட இந்திய சைட் டிஷ்கள் எனக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.

      நீக்கு
    3. நெல்லை, துரை அண்னாவும் ஸ்ரீராமும் சொல்லியிருக்கும் பரோட்டா வட இந்திய கோதுமை மாவில் செய்யும் பரோட்டா வகை இல்லை என்று நினைக்கிறேன். புரோட்டா...சால்னா...மைதாவில் செய்யப்படும் புரோட்டா மற்றும் அதற்கானது. இந்தப் புரோட்டாவிற்குத் தொட்டுக் கொள்ள வட இந்திய சைட் டிஷ்கள் இல்லை

      கீதா

      நீக்கு
    4. பரோட்டாவை நீக்கத் தான் வேண்டும்... அது தனிப்பதிவாக வர இருக்கின்றது..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
    5. புரோட்டா...மைதாவில் செய்யப்படுவது என்பதே முக்கிய காரணம்..

      நீக்கு
    6. எந்த வகையிலும் மைதா சேர்க்கப்பட்ட உணவுகள் வேண்டாம்...

      நெல்லை அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்..

      நீக்கு
    7. தங்களது கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  5. அது சரி, மிளகாய், தக்காளி சாஸ் என்ன செய்தது பாவம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் விற்பனையாவதில் ரசாயனக்கலப்பு உள்ளது..

      வீட்டில் செய்ய முடிந்தால் சரி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  6. அப்பளம், கேக், ஐஸ்க்ரீம் மீதல்லாம் விருப்பம் இல்லை எனினும் அவ்வப்போது சிப்ஸ்.  இந்தக் கடையிலாவது சூடாக வடை போட்டுக் கொண்டிருந்தாள் கால்கள் நின்று விடும்.  நகராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மதுரையில் வடை கடை பார்த்தும் வாங்க விட்டுப்போய்விட்டது. வாங்கிப் பிடிக்காத்து ஃபேமஸ் ஜிகர்தண்டா என்ற தண்டம் சாதா ஜிகர்தண்டா 30-40 ரூபாய்க்கு சூப்பர்

      நீக்கு
    2. எண்ணெய் எது என்பது தான் பிரச்னை... கடலை மாவில் சுலபமாக கலப்படம் செய்யலாமே...

      சுடச்சுட விற்பனை என்பது ஒரு தந்திரம்..

      நீக்கு
  7. ஊத்துக்குளி வெண்ணெய் வாங்கி அதைக் காய்ச்சிய உடன் மூன்று நான்கு நாட்கள் நெய் போட்டுக்கொள்வேன்.  சமயங்களில் வெறும் நெய் மட்டுமே கூட போட்டுக் கொள்வேன்!  சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலேயே நெய் தயாரித்துக் கொள்வது சாலச் சிறந்தது..

      மகிழ்ச்சி..

      நீக்கு
  8. வாழைப்பழம் என் ஃபேவரைட்.  தவிர்க்க மிகச்சிரமம்.  மாம்பழ சீசனில் அவ்வப்போது கொஞ்சம்.  மற்ற பழங்கள் ஓகே, தவிர்க்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருட்ம் முழுதும் கிடைப்பது வாழைப்பழம்...

      இப்போது நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றேன்..

      நீக்கு
  9. மிக உபயோகமான பதிவு.

    அப்பளம் உப்பு அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரமான அப்பளம் என்பதெல்லாம் இப்போது கிடையாது.. சோடா உப்பு முதலானவை தாராளமாக சேர்க்கப்படுகின்றன..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  10. பலருக்கும் பயனுள்ள பதிவு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  11. இவை அனைத்தையும் மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  12. பதிவு அருமை துரை அண்ணா.

    நான் எந்தப் பழங்களையும் தவிர்ப்பதில்லை. ஆனால் அதற்கு ஏற்றார் போல மத்த உணவுகளை எடுத்துக் கொள்வதுண்டு. மாம்பழம் பலா, வாழை இவற்றைச் சாப்பிடுவதென்றால் காலையில் எடுத்துக் கொண்டுகூடுதல் நடை உடற்பயிற்சி

    நானும் வெந்தயம் நீர் அல்லது பட்டைக் கஷாயம் எடுத்துக் கொள்கிறேன்.

    பயனுள்ள பதிவு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழங்கால் வலி இன்னும் தீராததால் உடற்பயிற்சி எதுவும் இல்லை..

      நாளும் அரை மணி நேரம் நடப்பது தான்..

      தினமும் வெந்தய நீர் அல்லது பட்டைக் கஷாயம் ஏதாவது ஒன்று நிச்சயம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  13. நாங்க காலம்பர எழுந்ததும் ஆயுர்வேத மருந்துப் பொடியோடு நெல்லிக்காய்+பாகல்+இஞ்சி+சின்னவெங்காயம்+பச்சை மஞ்சள் நறுக்கி அன்றாடம் புதிதாக எடுக்கும் சாறைக் குடித்துவிடுவோம். பின்னர் முக்கால் மணி நேரமாவது ஆகும் காஃபிக்கு. முன்னெல்லாம் இரண்டு தரம் காஃபி சாப்பிட்டது இப்போது கொரோனாவுக்குப் பின்னர் ஒரே காஃபியாகி விட்டது. காலை உணவு கஞ்சி தான். மோர்விட்டுக் குடிப்போம். தொட்டுக்கச் சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிளகு அப்பளம் அல்லது துண்டம் மாங்காய். பின்னர் மதிய உணவு ரொம்ப அளவாக. மாலை முன்னெல்லாம் தேநீர் குடிச்சோம். இப்போ காஃபி. அதோடு ஏதேனும் ஸ்னாக்ஸ், வீட்டில் செய்தது ஒன்றிரண்டு. இரவு உணவு இட்லி எனில் 3 தோசை/அடை/சப்பாத்தி2 உப்புமா கொஞ்சம் போல. சில நாட்கள் வெறும் மோர்சாதம் மட்டும் சாப்பிடுவோம்.இன்னிக்கு மோர் சாதம் தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..