நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 02, 2023

ஸ்ரீ மார்க்கண்டேயர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 18
வியாழக்கிழமை
-::-

விரைவாக நடந்த மார்க்கண்டேயர் - திருக்கடவூர் என, பெயர் பெற்றிருந்த தலத்தினை நெருங்குவதற்கும் சந்தியா வேளை கூடி வருவதற்கும் சரியாக இருந்தது. 

ஆசார அனுஷ்டானங்களை முடித்தார்.. சிவபூஜைக்கென கமண்டலத்தைக் கையில் எடுத்ததும் அதனுள்ளிருந்து கங்கை -  பிரவாகமாகப் பொங்கி - பெருகி வந்தாள்..


சந்தோஷமாக பூஜையை நிறைவு செய்த மார்க்கண்டேயர் தியானத்தில் ஆழ்ந்தார்.

இதற்கு முன்
திருக்கடவூரில் நிகழ்ந்த அற்புதங்கள் எல்லாம் அவருடைய மனவெளியில் காட்சிகளாக விரிந்தன. நிறைந்த மனத்தினராக பூஜையினின்று, தீர்த்தப் பிரசாதத்தினை அருந்தினார்.

வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் வெளிப்பட்டன. 

சில தினங்களாக தரிசனம் செய்த  தலங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த வேளையில் - இமயத்தின் அடிவாரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் தந்தை, மிருகண்டு முனிவர் -  தம் நினைவலைகளில் குறுக்கிடுவதை உணர்ந்தார். பளிச்சென எழுந்து நின்ற மார்க்கண்டேயர்,

''..வணக்கம்!... தந்தையே!..'' - என்றார்.

''..நல்லாசிகள்.. மகனே!.. இறைவன் அமிர்தகடேஸ்வரராகவும் அம்பிகை அபிராமவல்லியாகவும் எழுந்தருளியுள்ள திருக்கடவூரில் இருக்கின்றாய்  - நீ,  இப்போது!..''

''..ஆம்!...ஐயனே!..''

''..இத்துடன் நீ நூற்றெட்டு சிவதலங்களில் வழிபட்டிருக்கின்றாய்!..''

''..அப்படி - கணக்கில் கொள்ளவில்லை!..''

''..ஆயினும் நீ கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றாய்!..''

''..யாருடைய கவனத்தில்?..''

''..காலனின் கவனத்தில்!..''

''.........  .........  .........'' 

மார்க்கண்டேயர் மெளனமாக இருந்தார்.

''..உன் தாய் உன் நினைவாகவே இருக்கின்றாள்!..''

''..அன்னையிடம் என் வணக்கத்தினைச் சொல்லுங்கள்!.. காலம் வகுத்த பாதையில் தான் உயிர்கள் அனைத்தும் பயணிக்க வேண்டும். நாரைக்கு ஒளித்த குளமும் நமனுக்கு மறைத்த உயிரும் உலகினில் உண்டா தந்தையே!..''

''..கலக்கமா... மார்க்கண்டேயா!..''

''..இல்லை!... எம்பெருமானின் திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருந்தேன்!..''

''..மேற்கு நோக்கிய சிவ சந்நிதி உனக்கு நன்மைகளை அருள்வதாக!. சிவ நாமம் உன்னைக் காக்கும்!.. நாளை - சூர்யோதயத்திற்குப் பின் எதுவும் நடக்கலாம்!..''

''..பெற்று வளர்த்துப் பேணிக் காத்த தாய் தந்தையர்க்கு என் பணிவான வணக்கங்கள்!..  நாம் மீண்டும் சந்திக்க - இறைவன் நல்லருள் புரிவானாக!..''

''..ஜயமுண்டு.. பயமில்லை.. ஓம் நம சிவாய!..''

''..சிவாய நம ஓம்!..''

மகனுடனான மானஸ உரையாடலை நிறைவு செய்து கொண்டார் மிருகண்டு முனிவர்.

இங்கே நான்முகனால் விளைந்திருந்த வில்வ மரத்தின் நிழலில் தலை சாய்ந்த மார்க்கண்டேயர் மெல்ல நித்திரையில் ஆழ்ந்தார்.

மகப்பேறின்றி வருந்திய மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும்  - ஈசன் அருளால் பிறந்தவர். பிறக்கும் போதே - பதினாறு வயது மட்டுமே என்ற நிர்ணயத்துடன் பிறந்தவர்.. வளர்கின்ற போதே சிவபூஜையில் நாட்டம் கொண்டு விளங்கியதால் சிவநேசச் செல்வனாக ஒளிர்ந்தார். 


அதனால் - காலனை எண்ணிக் கலங்காமல் வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சிவபூஜை நிகழ்த்த  விரும்பி, தீர்த்தயாத்திரை புறப்பட்ட - அவருடைய கமண்டலத்தில் - நினைக்கும் போதெல்லாம் கங்கை நீர் பெருகும் எனும் வரத்தினைப் பெற்றார்.. எனில் அவர்தம் பெருமை தான் என்னே!...

கூவின பூங்குயில். கூவின குருகுகள்!.. 

கீழ் வானம் சிவந்தது..
மின்னிக் கொண்டிருந்த தாரகைகள் ஒளியிழந்து மறைந்தன. நித்திரை கலைந்து எழுந்த மார்க்கண்டேயர் சிவ நாமத்தில் திளைத்தபடி அனுஷ்டானங்களை முடித்து விட்டு வந்து  - 

விடியற் காலை வெளிச்சத்தில் நன்றாக உற்று நோக்கினார் - அமிர்த லிங்கத்தின் சிரசில் -  பிஞ்சிலம் எனப்படும் ஜாதி முல்லைப்பூ!..

பனியில் நனைந்திருந்த பூவினைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். 

சிவசிந்தனையுடன் பூஜைக்காக கமண்டலத்தைக் கையில் எடுத்தார். வழக்கம் போல் அதில் கங்கை பெருகினாள். அப்போது தான் கண்டார். கங்கை நீரில் ஜாதி முல்லையின் பூங்கொத்து மிதந்து வருவதை!... 

தமக்காக மலர் கொண்டு வந்த கங்கைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.  

எப்போதும் போல சிரத்தையுடன் சிவபூஜையினை நிகழ்த்தினார். முல்லைப் பூக்களை இறைவன் மீது சாற்றினார்..

ஆரத்தி செய்தார். வலம் வந்து
வணங்கினார்.. வாழ்த்தினார்.. உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டார். ஐயனின் திருவடிகளில் தண்டனிட்டு  - எழுந்தார்.

இலையும் தளிருமாக கங்கை கொண்டு வந்து கொடுத்த முல்லைப் பூங்கொப்பு அருகில் இருந்தது. அதை எடுத்து வாஞ்சையுடன் நோக்கிய மார்க்கண்டேயர் - தென்புறமாக ,  மண்ணில் ஊன்றி வைத்தார். கைகளால் நீரை வார்த்தார். ' தழைத்து வாழ்வாயாக!.. '  - என்று வாழ்த்தினார்.

நடப்பட்ட முல்லைக் கொப்பு இப்படியும் அப்படியுமாக காற்றில் அசைந்தது.

மீண்டும் சந்நிதிக்கு வந்தார். சிவ தியானத்தில் அமர்ந்தார்.

திடீரென பெருஞ்சத்தத்துடன் அனல் காற்று!... விழித்து நோக்கினார்.

சற்று தூரத்தில் தர்ம ராஜனாகிய யமன். யமன் கையில் பாசக் கயிறு சுழன்று கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் காலதூதர்கள் தம்முடைய இயலாமையைச்  சொல்லிக் கொண்டிருந்தனர்..

''..பிரபு!.. மார்க்கண்டனுடைய தவவலிமை அக்னியாக சுட்டது!. எங்களால் நெருங்கக்கூட முடியவில்லை!..''

ஈசன் அருளிய - பதினாறு ஆண்டுகளின் இறுதி விநாடிகள்!.. 

அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!.. 

சுழன்று கொண்டிருந்த பாசக் கயிறு - காற்றில் பறந்து - மார்க்கண்டேயனின் கழுத்தை நோக்கி வருவதற்கும் மார்க்கண்டேயன் -

''..இறைவா!...'' - என்றபடி அமிர்தலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொள்வதற்கும் சரியாக இருந்தது!..


தன் கடமையினைச் சரியாகச் செய்வதாக நினைத்துக் கொண்ட யமன்  - பாசக் கயிற்றினைச் சுண்டி இழுத்தான்!... அது அமிர்தலிங்கத்தையும் சேர்த்துப் பற்றியிருப்பதை உணராமல்!..

அப்போது தான் அது நிகழ்ந்தது..

அண்ட பகிரண்டமும் சேர்ந்து  குலைந்து அவன் தலையில் விழுந்த மாதிரி இருந்தது..

 ''..என்ன!.. ஏது!..'' என்று யோசிப்பதற்குள் எருமையின் மீதிருந்து கீழே விழுந்தான்.  

நான்முகன் படைப்பில்  - ஈ , எறும்பு என எண்ணாயிரங் கோடி யோனி பேதம் உடைய  - அத்தனை உயிர்களின் ஆயுளையும் முடித்துக் கணக்கைத் தீர்க்கும் யமனின் கணக்கு தீர்ந்து விட்டது.

தன்னுடல் கீழே கிடப்பதையும் தனது ஆவி தனியாக  - தவித்திருப்பதையும் கண்டான்!.. திடுக்கிட்டான்.. எதிரே - 


எம்பெருமான் - சம்ஹார மூர்த்தியாக உக்ரத்துடன் எழுந்தருளியிருப்பதையும் கண்டான்!.. 

தான் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பிணைத்திருப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கிய யமன் -

 ''..ஆ!.. மோசம் போனேன்.. பெருமானே.. என்னை மன்னியுங்கள்!..'' - என்று அலறியபடி ஐயனின் அடித்தாமரைகளில் வீழ்ந்தான்..

அதற்குள் - தேவாதி தேவர்களும் மகரிஷிகளும் மஹாவிஷ்ணுவும் நான்முகப் பிரம்மனும் அங்கே கூடி காலசம்ஹார மூர்த்தியைச் சாந்தப்படுத்திக் கொண்டிருந்தனர். 

''..காலன் மாண்டு விழுந்த ஒரு நொடியில் விளைந்த பாரத்தினை என்னால் சுமக்க முடியவில்லையே!...'' - என பூதேவி கண்ணீருடன் கலங்கி நின்றாள்.

அப்போது மின்னல் கொடியெனத் தோன்றிய அம்பிகை - பாலாம்பிகையாக ஐயனின் இடப்புறமாக எழுந்தருளினள்.

அன்னை புன்னகைத்தாள். ஐயனும் புன்னகைத்தார்.

தன்னுயிர் மீண்டும் உடலில் பிரவேசிப்பதை உணர்ந்த யமன் - துள்ளி எழுந்து பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டான். 

அழுதான். தொழுதான். துதித்தான். துவண்டான்.

''..மார்க்கண்டேயனே!. இன்று போல் என்றும் பதினாறாக - சிரஞ்சீவியாக நீடூழி வாழ்வாயாக!..''

''..எல்லாம் தங்களது பெருங்கருணை.. எம்பெருமானே!..'' - மார்க்கண்டேயர் பணிந்து வணங்கி வலஞ்செய்து  போற்றினார்.

''...யமதர்ம ராஜனே!.. சிவராஜதானியின் பிரதிநிதி அல்லவா நீ!.. உனக்கு நிதானம் வேண்டாமா!..''

''..ஐயனே!.. தாங்கள் இட்ட பணியேற்று வாழும் ஏழையேனாகிய நான் எடுத்த காரியத்தில் இடறி விழுந்தேன்..  பிழை ஏதும் நேரக்கூடாது என எண்ணி பிழை புரிந்து விட்டேன்.. கடையனாகிய யான் தங்கள் கருணையினால் மீண்டும் பிழைத்தேன்.. என் பிழை பொறுத்த புண்ணியனே.. நின் பதம் போற்றி.. போற்றி!..''

''..யமனே!.. இனி இத்தலத்திற்கு வந்து எம்மை வழிபடும் எவருக்கும் நீ மரணபயம் கொடுக்கலாகாது!..''  - அன்னை திருவாய் மலர்ந்தாள்!.

''..உத்தரவு தாயே!. எல்லாம் உன் தயவு!. ஐயனின் திருமேனியில் இடங் கொண்ட இமயவல்லீ!.. நீயல்லவோ அருள் செய்தாய்!.. என்னை உதைத்து உருட்டியது உனது பாதம் அல்லவோ!.. ஈசர் பாகத்து நேரிழையே.. உன் திருவடியல்லவோ எனக்கு தீட்சை கொடுத்தது.. இனி உன்னை நினைப்பவர்கள் பக்கம்  - திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்!..'' -  என்று பணிவுடன் கை கட்டி வாய் மூடியபடி - மொழிந்தான் யமன்.

கூடியிருந்தோர் அனைவரும் சிரித்தனர். யமனும் அதில் சேர்ந்து கொண்டான்.

அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கினான்.

''காலசம்ஹார மூர்த்தியாக தாம் இத்தலத்தில் இருந்தருளி - அனைவருக்கும் அடைக்கலம் தந்தருளவேண்டும் பெருமானே!...'' 

- நான்முகன் வேண்டிக் கொண்டார்.


தென்திசை நோக்கிய காலசம்ஹார மூர்த்தியின் திருக்கோலத்தினைத் தரிசித்தபடியே  யமனும்   -  ஐயனின் எதிரில் அமர்ந்தான்.

அன்னை புன்னகைத்தாள். ஐயனும் புன்னகைத்தார்.

யமபயம் நீங்கிய உயிர்க்குலமும் புன்னகைத்தது..

(Thanks to Animation Images - Markandeya story  - Telugu)

அமிர்தகடேஸ்வர ஸ்வாமி போற்றி..
அபிராமவல்லி அன்னையே போற்றி.. போற்றி!..
***

17 கருத்துகள்:

  1. ​சுவாரஸ்யமான நடை. மூன்று முறை சென்று வந்திருக்கிறேன் இத்தலத்துக்கு. உறவுகள் இங்குதானே பீமரத சாந்தி முதல் சதாபிஷேகம் வரை செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. காலை வணக்கம். மனதைத் தொட்ட பகிர்வு. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அருமையான முறையில் மார்க்கண்டேயர் கதையை சொல்லி விட்டீர்கள்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.யமபயம் இல்லாமல் அனைவரும் நலமாக இருக்கட்டும்.
    அமிர்தகடேஸ்வர ஸ்வாமி போற்றி!
    அபிராமவல்லி அன்னையே போற்றி போற்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக இருக்கட்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்..
      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. மார்க்கண்டேயர் கதையை நீங்கள் சொல்லியவிதம் அருமை , துரை அண்ணா.

    படங்கள் எல்லாம் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ.

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும், மார்கண்டேய சரிதமும் மெய்சிலிர்க்க வைத்தது. கால சம்ஹார மூர்த்தி உலகில் காலன் பற்றிய பயமகற்றி அனைவரையும் காக்க பிரார்த்தித்து கொள்கிறேன். ஐயன் அமிர்தகடேஸ்வரர், அன்னை உமா மஹேஸ்வரி பாதம் போற்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கால சம்ஹார மூர்த்தி உலகில் காலன் பற்றிய பயமகற்றி அனைவரையும் காக்க பிரார்த்தித்து கொள்கிறேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. தன்னிடம் சரணடைந்த மார்க்கண்டேயரின் சிவ பக்தியை மெச்சி இறைவன் யமனை காலால் உதைத்து காத்த ,கதையை அருமையான படங்கள் விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. விவரணை அருமையாக உள்ளது. கண்ணெதிரே பார்ப்பதைப் போல் இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..