நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 07, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 13

சதி வலை 

உதித்தெழுந்த செங்கதிர் உச்சிக்குச் செல்லும் முன்
நாணங்கொண்டு ஒதுங்கி நின்றான். ஏன்!?.. 

மணிகண்டனுக்கு கல்வி கற்பித்த
குருநாதரின் பல்லக்கு முன்னே செல்ல... 
அதைத் தொடர்ந்து சென்ற பல்லக்கினுள் -
ஆயிரங்கோடி சூரியனைப் போல -
மணிகண்ட மூர்த்தி வீற்றிருந்தான்...

ஐயனின் அழகைக் கண்டே ஆதவன் அயர்ந்திருந்தான்..   


பட்டினப் பிரவேசமாகும் முன் நகர எல்லையிலிருந்தே -
கோலாகலக் கொண்டாட்டங்கள்!.. ஆரவாரங்கள்!..

வீதியின் இருமருங்கிலும் வண்ணமயமான
தோரணங்கள் இளங்காற்றில் அசைந்தாடி -
வருக.. வருக.. மணிகண்டா!.. - என்று வரவேற்றுக் கொண்டிருந்தன... 

அன்பு கொண்ட மக்கள் - திருவிளக்கேற்றி வைத்து -
நிறைமங்கலச் சின்னங்களுடன் புன்னகை சுமந்து நின்றனர்... 

நீ மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி!..
- என்று சூரியனைக் கோபித்துக் கொண்டன - நீர் கொண்ட மேகங்கள்... 

அவை ஒன்றாகத் திரண்டு வந்து
ஐயனின் முகத்தைக்காண முண்டியடித்துக் கொண்டு நின்றன... 

இதை எல்லாம்  நோக்கிய வாயு  -
அவனும் விரைந்து வந்து மேகங்களுடன் உரசிக் கொள்ள -
பந்தளத்தின் வீதிகளில் பன்னீர்ச் சாரல்!..

மணிகண்டனைக் கண்டதும் மக்களுக்கு மட்டுமா - ஆனந்தம்!..

கொட்டாரத்துக் குதிரைகள் இருப்பு கொள்ளாமல் தவித்தன.. தாவிக் குதித்தன..

எங்கும் - ..விஜயீ பவ!.. - எனும் கோஷங்கள்...


அரண்மனையின் வாசலில் - மங்கல ஒலியுடன்
வேத கோஷங்களும் முழங்கின...

தங்கத்தாலான நெற்றிப் பட்டம் - ஒளி வீச  -
அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டிருந்த ராஜ குஞ்சரம்
மணிகண்டனுக்காகக் காத்திருந்தது. 

குரு நாதர் அமர்ந்திருந்த பல்லக்கு
அரண்மனையின் தோரண வாயிலை அடைந்தது...
மன்னரும் மற்றவர்களும் பூரண கும்ப மரியாதையுடன்
அவரை வரவேற்றனர். 

அடுத்த சில நொடிகளில் -
மணிகண்டன் அமர்ந்திருத பல்லக்கு - நெருங்கியது தான் தாமதம்!..

வாசமிகு மலர்களைத் தூவி -
வாராது வந்த மாமணியை வரவேற்று ஆரவாரித்தனர்.

குருநாதர் - பந்தள ராஜனின் கைகளில் - மணிகண்டனை ஒப்படைத்தார்.

தாயையும் தந்தையையும் வலம் செய்து வணங்கினான் மணிகண்டன்.

ஆரா அமுதினை - ஆரத்தழுவிக்கொண்டார்  - அரசர்.

வந்தவர்க்கெல்லாம் - பொன்னும் பொருளும் வாரிக் கொடுக்கப்பட்டது...
பின்னும் வயிறார உண்டு மகிழ்ந்த மக்கள் வாயார வாழ்த்திச் சென்றனர்.

இப்படி - ஆயிரம் ஆயிரமாய் மக்கள்
ஆனந்த வெள்ளத்தில் அழுந்திக் களித்துக் கொண்டிருக்க - ஒருவன் மட்டும்,

புழுங்கித் தவித்து - வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தான்.

அவன் -  பிரதான மந்திரி...

அவனுடைய இதயத்தில் -
இருட்டு மூலை என்றில்லாமல் -
இதயமே - இருட்டாகிக் கிடந்தது. 

எல்லாம் காலம் செய்த கோலம்...

அடுத்த சில தினங்களில் -
பந்தள மன்னர் - அரசியிடம் சொன்னார் -
நமது குமாரனுக்கு முடி சூட்டு விழா!.. என்று...

அரசியார் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை...

இதைத்தானே நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...
நமது செல்வன் எப்போது செங்கோல் ஏந்தி
சிம்மாசனத்தில் அமர்வான் என்று!.. இன்றாவது -
இதயம் குளிரும்படிக்கு இன்சொல் கூறினீர்களே!..

- என்று, ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி தேவி அகமகிழ்ந்தாள்...

அதன்பின்  - பட்டாபிஷேகப் பெருவிழாவுக்கான
வேலைகளில் ஆர்வமாக அனைவரும் ஈடுபட்டவேளையில் - 

குருட்டு மதியும் இருட்டு மனமும் கொண்ட  மந்திரி -
அரசியாரின் காதுகளில் விஷத்தை ஊற்றினான்.

நீங்கள் ஆயிரம் தான் கூறினாலும் -
மணிகண்டன் தான் எனது மூத்த பிள்ளை!...
இனியொரு முறை விஷமமாக ஏதேனும் கூறினால் -
ராஜ துரோகி எனும் பட்டத்துடன் நாடு கடத்தப்பட வேண்டியிருக்கும்!..

மகாராணி!. தயவு செய்து சிந்தியுங்கள்...
ஆண்டாண்டு காலமாக அரச பரம்பரையினர்
வீற்றிருந்த சிம்மாசனத்தில் -
எங்கோ கிடைத்த வனவாசி அமர்வதா!..
தங்கள் உதிரத்தில் உதித்த குலக்கொழுந்து அமர்வதா!..

நீங்கள் சற்றே ஒத்துழைத்தால் போதும்...
தங்கள் மணி வயிற்றில் பிறந்தவனுக்கு செங்கோல்!..
அங்கே ஆற்றங்கரையில் கிடைத்தவனுக்கு சரக்கோல்!..

மகராணியின் சிந்தை கலங்கியது...
செவ்விழிகளுக்குள் மேலும் குருதி பாய்ந்தது...
வில்லெனும் புருவங்கள் நெரிந்தன... 

என் மனம் குழம்புகின்றது... என்னவோ செய்யுங்கள்...

இதைச் சொல்வதற்குள் மகராணியின் மனம் தவித்தது... நா உலர்ந்தது... 

மனம் என்ற ஒன்று குழம்ப வேண்டும்...
அப்போது தானே தெளிவு பிறக்கும்...
இனி நீங்கள் கவலை ஏதும் கொள்ள வேண்டாம்...
எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்!..

பிரதான மந்திரியின் முகத்தில் பிரகாசம்... 

அவனை முன்வைத்து - காலம் தன் கையிலிருந்த
சதுரங்கத்தில் காய்களை வேகமாக நகர்த்தியது.

முதல் வேலையாக -
மாந்த்ரீகத்தில் கரைகண்ட ஒருவனைத் தேடிச் சென்றான்...
இரவின் முன் ஜாமத்தில் தீட்டப்பட்ட நாடகம் - நள்ளிரவில் அரங்கேறியது.

என்ன நாடகம் அது!?..

காலகாலமாகக் கசடர்கள் செய்யும் காரியம் தான் அது!..
மணிகண்டனின் மீது - பில்லி சூனிய மாந்த்ரீகம் ஏவப்பட்டது... 

விடிவதற்குள் - வேலையை முடித்தால் -
உங்களுக்கு நிரந்தர விடுதலை என்ற ஒப்பந்தத்தின் பேரில் -
பூத ப்ரேதங்களும் பேய் பிசாசுகளும் அவிழ்த்து விடப்பட்டன...

அவிழ்த்து விடப்பட்ட ப்ரேதங்களும் பிசாசங்களும்
அரச மாளிகையை நோக்கிப் பாய்ந்தன...

அரச மாளிகையை நோக்கிப் பாய்ந்த பூதப் ப்ரேத பிசாங்கள் -
ஆங்கே அருட்ஜோதியாக வீற்றிருந்த மணிகண்டனைக் கண்டதும்
கதறிக் கலங்கி ஓய்ந்தன... தம்முள் மயங்கித் தரையில் சாய்ந்தன...


நல்ல பொழுது விடிந்தது - என, மகிழ்ந்த மந்திரி -
நந்தவனத்தில் மணிகண்டனைக் கண்டதும் 
மனம் பேதலித்துப் போனான்...

ஓடினான் - மந்திரவாதியின் வீட்டை நோக்கி!..
வீட்டுக்குள் அவன் கண்ட காட்சியில் அவனது கல் மனம் அதிர்ந்தது..

மாந்த்ரீகன்  - சின்னாபின்னமாகி -
இரத்தச் சகதியில் குற்றுயிராகக் கிடந்தான்...

அங்கே என்ன நடந்தது!?.. - மந்திரி வினவினான்...

நீ கொடுத்த பொன்னும் மணியும் என் கண்களை மறைத்து விட்டன...
மணிகண்டன் சாமான்யன் அல்ல... அவன் தெய்வப் பிறப்பு...
காலங்காலமாக என்னிடம் அடிமைப்பட்டுக் கிடந்த
பூத ப்ரேத பிசாசங்களுக்கு அவன் விடுதலை கொடுத்து விட்டான்...
சுதந்திரமான ப்ரேதங்கள் ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து
என்னை அழித்து விட்டன... நீ மணிகண்டனைப் பகைத்துக் கொள்ளாதே!..

என, அறிவுரை கூறிய மாந்த்ரீகன்,
தான் பறித்த குழியில் - தானே விழுந்து மாண்டான்...    

ஆனாலும், மந்திரியின் காதுகளில் அவை விழவில்லை...

நாடகத்தின் அடுத்த காட்சியாக - அவன் தேடிச் சென்றது -
புற்றுக்குள் கையை விட்டுப் புதையல் தேடும் பாம்புப் பிடாரனிடம்!..

இவன் சென்ற நேரம் - அவன் கொடும் நாகங்களுடன்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்...


குணம் மாறாத கொடியவர்களின் கைகளில்
பணமும் நஞ்சும் இடம் மாறின...

சதி வேலைகளுக்கு உகந்ததாக -
இரவும் வந்து சூழ்ந்தது - மந்திரியின் மனதைப் போல!..

அரச மாளிகையில் உணவு வேளை..
கவனமுடன் பரிசோதிக்கப்பட்ட பின் - பரிமாறப்பட்டது உணவு... 

உணவு அரங்கத்தில் -
புன்னகை பூத்தவனாக வளைய வந்த மந்திரி -
புற்று அரவினுக்குச் சமமானவன் என்பதை உணராத  மன்னர்
- தன் மக்களுடனும் மனைவியுடனும் மனம் மகிழ்ந்து உண்டார்...

மந்திரி மதி நுட்பத்துடன்  -
மணிகண்டன் அருந்துதற்காக வைக்கப்பட்டிருந்த
பாலில் நாகத்தின் நஞ்சினைக் கலந்தான்...

நேரம் ஆயிற்று...

பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த
மன்னருக்கும் உறக்கம் வந்தது... 

பஞ்சணையில் சாய்ந்த மணிகண்டனைத் தழுவி
உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார்...

மகனின் காதுகளில் தேனூறும்படிக்கு
ஸ்ரீபஞ்சாட்சரத்தை ஓதி - திருநீறு அணிவித்தார்... 

அலங்காரத் திருவிளக்குகளின் சுடர்களைக் குளிர்வித்தார்...
மணிகண்டனின் சயன அறையிலிருந்து வெளியேறினார்...

மணிகண்டன் அருந்திய பாலில் கலக்கப்பட்டிருந்த விஷம் -
கண்டவுடன் கொல்லும் திறன் படைத்திருந்த
திட்டி விடம் எனும் நாகத்தினுடையது!... 

அதன் வீரியம் சற்றே குறைக்கப்பட்டிருந்ததால்
அந்த நஞ்சு மெதுவாகத் தன் வேலையைத் தொடங்கியது...

தூக்கம் இமைகளைத் தழுவிய வேளையில் -
தொண்டைக்குள் ஏதோ உருள்வதாக உணர்ந்தான் - மணிகண்டன்... 

நா வறண்டது... வெகுவாக வியர்த்தது...
நீர் அருந்தலாம் என நினைத்தால் -
கைகளை அசைக்க முடியவில்லை...
யாரையும் அழைக்கலாம் என்றால் குரலும் எழவில்லை... 

தனது மேனியில் பூத்த வியர்வைத் துளிகளால்
-  உடம்பு புண்ணாவதைக் கண்டான் மணிகண்டன்... 

அழகான திருமேனியில் -
ஆங்காங்கே குமிழ்கள் - கொப்புளங்கள் உருவாகின...
ஒரு விநாடிக்குள்ளாக அவை உடைந்து அடுத்தடுத்துப் பரவின... 

தன் வசம் இழந்து  மயங்கினான் - மணிகண்டன்...

ஜோதிக்கும் ஜோதியான சுந்தரவதனனின்  நிலையைக் கண்ட
- தூண்டாமணி விளக்கு அங்கும் இங்குமாகத் தவித்தது...

சிவமே.. சிவமே!.. - என்று துடித்தது...

ஓம் ஹரிஹர சுதனே
சரணம்!.. சரணம்!..
மணிகண்ட மகாப்ரவே
சரணம்.. சரணம்..
ஃஃஃ 

13 கருத்துகள்:

  1. காலை வணக்கம். ஆரம்ப வரிகளே அட்டகாசம்.. கவிதை நடையில் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. பந்தளத்தின் வீதிகளில்
    பன்னீர்ச் சாரல்
    தஞ்சையம்பதியில்
    தமிழ்த்தூவல்...

    பதிலளிநீக்கு
  3. புலிப்பால் கேட்கும் முன் இத்தனை சதிகளா? இவைகளை நான் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  4. மணிகண்டனுக்கும் கண்டமா? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பந்தள மக்களின் வரவேற்பு வர்ணனையும் மழை குறித்த வர்ணனையும் அபாரம். தமிழ் துள்ளி விளையாடி இருக்கிறது. அடுத்து மணிகண்டன் எப்படித் தப்பித்தான் எனத் தெரியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மணிகண்டனுக்கு வரவேற்பு நிகழ்வு மிக அருமையாக இருக்கிறது.கண்முன் காட்சியாக விரிந்தது.

    செய்வினைகள் செய்தவனை தாக்கும் என்பது உண்மைதான்.
    தந்தை பஞ்சாட்சரத்தை ஓதி திருநீறு அணிவித்து விட்டார்.
    மணிகண்டனுக்கு வந்த கண்டம் நீலகண்டன் அருளால் நலமாகும்.
    தொடர்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. //பிரதான மந்திரியின் முகத்தில் பிரகாசம்//

    வில்லனின் வர்ணனை அருமை ஜி.

    நாகத்தின் விஷம் அறியாத விடயம் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. திரைப்படத்தின் திருப்புமுனை போல விறுவிறுப்பாக, அதே சமயம் பக்தி மணத்துடன் அருமையாக...தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. விறுவிறுப்பாக உள்ளது ஐயா... அருமை...

    பதிலளிநீக்கு
  10. எத்தனை சதி செய்திருக்கிறார்கள்.... மேலும் நடந்ததை உங்கள் மூலம் தெரிந்து கொள்ளத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அழகிய வர்ணனை. தமிழின் ஜாலம். அழகு ஜொலிப்பு என்று கதையை மேலும் அழகு படுத்துகிறது ஐயா..

    தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. சதிகள் பல இப்படித்தான் பல பல புராணக் கதைகளிலும் வருகிறது இல்லையா...ராமாயணம், மகாபாரதம் என்று பலவற்றிலும்...அடுத்த பகுதிக்குப் போகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..