நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 03, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 09

மீண்டும் பிறந்தான்
ஹரிஹரசுதன்..

மகிஷி தன் வழியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டாள்...

தர்ம நெறிகள்  பாழாக்கப்பட்டன... ஆசார அனுஷ்டானங்கள் சீர்குலைந்தன... 

வானவர் நாடு வழி திறக்க வேண்டும்!...
என்று - தானமும் தவமும் செய்தவர்கள் தடுமாறிப் போனார்கள். 

எனினும், அவர்கள் தடம் மாறாமல் சென்று சரணடைந்த இடம் எம்பெருமானின் திருவடிகள்.

எல்லாம் வல்ல சிவம் இன்முகத்துடன்
பாற்கடலில் துயிலும் ஸ்ரீஹரி பரந்தாமனை
தம்முடைய ஹ்ருதய கமலத்தில் கொண்டது...

அலைகடல் துயிலும் ஆதி முதல்வனும்  -
முக்கண் முதல்வனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்டான்... 

ஓங்கிய பேரொளி  அண்ட ப்ரபஞ்சம் எங்கும் வியாபித்து நின்றது.

அந்தப் பேரொளியின் உட்பொருளாக அன்னை பராசக்தி கலந்து நின்றாள்.

தாய் தந்தையரின் மனம் ஒன்றிய வேளையை உணர்ந்த -
ஸ்ரீ தர்ம சாஸ்தா - தமக்கு முன்பே விதிக்கப்பட்டிருந்தபடி -
பூர்ணகலா, புஷ்கலா தேவியரிடம் விடை பெற்றுக்கொண்டார்.


இப்பூவுலகில் ஹரிஹரசுதன் மீண்டும் ஒரு குழந்தையாய்த் தோன்றினார்.

தேவதேவர்களும் பூமாரி பொழிய -
மகரிஷிகளும் வித்யாதரர்களும் வேத மந்த்ரங்களை முழக்கினர்...

சிவகணங்கள் எல்லாம் கூடிநின்று
திருக்கயிலாய வாத்யங்களை இசைத்தன...

நான்கு வேதங்களும் பொற்றாமரைப் பூவாகி
ஐயனைத் தாங்கிக் கொண்டன.

விண்ணும் மண்ணும் களிப்புடன்  புன்னகை பூத்திருக்க,
ஐயன்  - தான் மட்டும்,

ங்கா... ங்கா!...  - என்று, திருவாய் மலர்ந்தருளினான்.. 

தர்மமும் நீதியும் வாழ வேண்டி
ஆன்றோரும் சான்றோரும் வாழ வேண்டி
அற்றாரும் அலந்தாரும் வாழ வேண்டி -
ஸ்ரீ தர்ம சாஸ்தா இப்பூவுலகில் தவழ்ந்து வந்தான்..  .

சிவகுமரனின் மழலைக் குரல் சகல லோகங்களிலும் கேட்டது..

அதைச் சிறிதும் பொறுக்காத இயலாதவளான - 
ஜகன்மோகினி, ஜகத் காரணி, சர்வ ஜனரட்க்ஷகி -
பராசக்தி அம்பிகை - ஓடோடி வந்தாள்...

மழலையை வாரி எடுத்துத் -
தன் மார்புறத் தழுவிக் கொண்டாள்.

அவள் கிடக்கின்றாள்... மதி கெட்ட மகிஷி!..
தாயின் கருவறை தங்காத தங்கமகன்.. - என்று தானே கேட்டாள்...
தாய் மார்புறத் தழுவாத தங்கமகன்.. - எனக் கேட்கவில்லையே!..

அள்ளியெடுத்த பிள்ளையின் உச்சி முகர்ந்தாள்...
அகங்குளிர அரவணைத்து - முத்தாடி மகிழ்ந்தாள்...
தாயின் மடியில் பிள்ளை!.. - என,
எவ்வளவு நேரம் தழுவிக் கிடந்தார்களோ!..
அவர்களுக்கே வெளிச்சம்!.. 


பிறை சூடும் பெருமான் - பிள்ளைப் பாசத்தில் பித்தாகி நின்றார்.

அந்தப் பிள்ளை நதிக்கரையில்!..
அடுத்த பிள்ளை மலை உச்சியில்!..
இந்தப் பிள்ளையாவது
நம் அருகில் இருக்கும் என்று பார்த்தால்?!..
எல்லாம் - நாம் படைத்த விதி!..

புன்னகையுடன் மணி மாலை ஒன்றினை அணிவித்தார்...
திருநீறு அணிவித்து ஹரிஹர புத்ரன் - எனத் திருநாமம் சூட்டினார்.

வானோரும் ஏனோரும்
வியப்புடன் விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே  - 

பால சாஸ்தா வளர்ந்து -
இளங்குமரனாக  பன்னிரண்டு வயதுடையவராக
ஆயிரங்கோடி சூரியன் போல விளங்கி நின்றார். 

ஆதியில் ஸ்ரீமந் நாராயணனைப் போல,
நீல நிறத்துடன் விளங்கிய -
அவரது திருமேனி இப்போது -
பொன்னெனப் பிரகாசித்தது.

தாய் தந்தையரை வலம் வந்து வணங்கிப் பணிந்து எழுந்தார்...

எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள்
தனது சூலாயுதத்தின் பிரதியாக  - தண்டம் ஒன்றினை வழங்க, 

ஜகன்மோகினியாகிய - ஜனார்த்தனன் -
கோதண்டத்துடன் அஸ்த்ரங்களையும் வழங்கினான்... 

அன்னை பராசக்தி தன் பங்கிற்கு -
மகிஷாசுர சம்ஹாரத்தின் போது தன் கரத்திலிருந்த
ஒளி பொருந்திய வாள் தனை வழங்கினாள்.

ஹரிஹர புத்ரன் அவற்றைத் தன் திருக்கரங்களால் பெற்று
கண்களில் ஒற்றிக் கொண்டார்..

தனது திருமுடியின் மேல் தாங்கி  மரியாதை செலுத்தி மகிழ்ந்தார். 


ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய 
சத்ரு நாசனாய மதகஜ வாகனாய 
ப்ரத்யட்ச சூலாயுதாய மஹா சாஸ்த்ரே நமோ நம:

- என்ற மகாமந்த்ரத்தை முழங்கியவாறே -
முப்பத்து முக்கோடி தேவர்களும்
வலம் வந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து  வணங்கினர்..

ஐயனே!.. என்றனர்..
அப்பனே!.. என்றனர்..
  - ஆனந்தக் கூத்தாடினர்..
கொண்டாடிக் களித்தனர்..

அவருக்கு வாகனங்கள் என - வெள்ளை யானையும்
வெள்ளைக் குதிரையும் வழங்கப்பட்டன...

தேவர்கள் எழுப்பிய ஜயகோஷம் ஈரேழு புவனங்களையும் கடந்து
மகிஷியின் காதுகளிலும் கேட்டது..


அன்றொருநாள் ப்ரம்மதேவனிடம் கேட்டு வாங்கிய வரம்
இன்றைக்கு எப்படி மலர்ந்திருக்கின்றது!..
- என்பதைக் காண்பதற்கு ஆவல் கொண்டவளாக -
வெளிப்பட்டாள் - மகிஷி...

அதோ... சற்று தொலைவில்
தேஜோமயமாக!...

என்ன அது!?...

சூரியனா!.. சந்திரனா?...

அவைகளை விடவும் அளவிற் பெரியதாய்
வார்த்தைகளுக்கு அடங்காத வண்ணமாய்!...

ஆனை வரும் பின்னே..
மணியோசை வரும் முன்னே.. என்பார்களே!..

அதைப் போல - ஹரிஹரசுதனுக்குக் கட்டியங்கூறும்
ஞான ஒளிப் பிழம்பா!...

எதுவாயினும் - சரி..
நேருக்கு நேராய் முகங்காட்டு!...

மகிஷியின் நெஞ்சம் ஒரு விநாடி தடுமாறியது!...

இனி எல்லாம் சரியாகி விடுமோ!...

ஸ்ரீ ஹரிஹர சுதனே 
சரணம்.. சரணம்.. 
ஃஃஃ 

9 கருத்துகள்:

  1. அழகிய வர்ணனை! அதை விட அழகான படங்கள் கோபுலு அவர்களின் கை வண்ணத்தில். மிக அருமையான எழுத்துநடை! படிக்கப் படிக்கப் பரவசம்.

    பதிலளிநீக்கு
  2. இறைவனே படைத்த விதியை நினைக்கும் போது நான் மட்டும் என்ன ?
    நானும் பிள்ளைகள் அருகில் இல்லை என்று மனம் வருந்துவது கூடாதுதான்.
    குழந்தையை மார்புடன் தழுவி அன்னை நினைக்கும் நினைப்பு அருமை.
    ஞானஒளி வந்து விட்டது இருண்டு கிடங்கும் நெஞ்சங்களில் ஒளி பரவ செய்ய.
    இனி எல்லாம் நலமே!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எத்தனை அழகிய வார்த்தை கோர்ப்புகள் ..

    நெகிழ்கின்றன மனம் ...

    பிறை சுடும் பெருமான் பிள்ளை பாசத்தில் ....ஆஹா

    பதிலளிநீக்கு
  5. அழகிய வர்ணனைகளுடன் நடையழகு... தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  6. ஐயா வித்தியாசமாக பாணியில் ஐயப்பன் கதை அருமை! தொடர்ந்து வாசித்தும் வருகிறேன்.

    துளசிதரன்

    துரை அண்ணா கதை நீங்கள் சொல்லும் விதமா என்று தெரியவில்லை....மாறுபட்ட விதத்தில் மிக மிக அருமையாக உங்கள் எழுத்து பிரமிக்கத்தக்க வகையில் எழுதறீங்க...இப்படியும் புராணக் கதை சொல்லலாம் என்ற விதத்தில் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நேர்தியாகச் சொல்லி வருகிறீர்கள். கோர்வையாகச் சொல்லி வருகிறீர்கள். அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பகச் செல்கிறது தொடர். நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..