நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 21, 2023

நிலவு வந்த நேரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 7
  சனிக்கிழமை
தை மாதத்தின் அமாவாசை
**

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன்பு, இதே  -  தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (பொய்யும் புரட்டும்) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

அதே சமயம் - அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


" என்னவாம்!?.. "

" நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!.. "

" யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி.. ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..  "

" அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிண்டார்!.. "

" யார் கிட்டே!.. "

" மகராஜா கிட்டே!.. "

" என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு.. "

" தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்.. "

" .. ம்!.. "

" கோயிலுக்கு வந்தவர் .. கோயிலுக்குள்ள நம்ம சுப்ரமணிய குருக்கள் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்துட்டார்.. "

" அடடே!.. "


" நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. "

" ராஜாவே அவரைப் பார்த்து, 
குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி.. ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி இன்னிக்கு பௌர்ணமி.. ன்னு உளறிட்டார்!.. "

" அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. "

" அப்றம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமி.. ன்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

குருக்களும் - சர்தான்..போய்யா..  நிலா வரும்!.. அப்டி.. ன்னுட்டார்.. "

" கடுப்பான ராஜா.. இன்னிக்கு சாயங்காலம் நிலா வரல்லே... ன்னா.. உன்னைய நெருப்புல போட்டு வறுத்துடுவேன்.. னுட்டார்.. "

" அடடா!.. " 

" அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. "


" அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!. கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சோமா..  ரெண்டு ஸ்லோகத்த சொன்னோமா.. புளியோதரய.. வாங்கிண்ட்டு போனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. "

" சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!.. "

" யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு?.. இவனோட என்ன சேர்த்தி!..ன்னு  புலம்பிண்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவா?.. நீரே சொல்லும்!.. "

" அதுவும் சரிதான்!.. இருந்தாலும்.. "

" ஓய்!.. நீர் அவருக்காக இரக்கப்படுறீரா?.. 
கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து - நீ அழகா இருக்கே.. ன்னு சொல்லலை.. ந்னாலும் 

நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொல்லலாமா!?.. நம்ம ஊர் பொண்களுக்கு கோவம் வருமா.. வராதா?.. "

" வரும் தான்.. ஆனாலும் பாவம் யா.. நம்ம குருக்கள்!.. "

" நீர் வேறே...  ராஜாவுக்கு முன்னால உளறிட்டமே.. அப்படி.. ன்னு ஒரு வருத்தம் கூட குருக்கள்..கிட்ட இல்லை.. தெரியுமோ?.. ''

" அப்படியா!.. "


" என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படி.. ன்னு ஒரே வறட்டு வாதம்.. அபிராமி அம்பாளா இவர்க்கிட்ட வந்து சொல்லச் சொன்னா?.. இன்னிக்கு பௌர்ணமி.. ன்னு!.. "

" சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?.. "

" வாயை வெச்சுண்டு சும்மா இருக்கலை.. அவரோட முடிவை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் என்னைக் காப்பாத்துவா.. ன்னு இன்னமும் ஒளறிண்டு இருக்கார்.. " 

" கீழே நெருப்பை மூட்டி மேலே ஊஞ்சல் கட்டி தொங்க விட்ருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. நிலவே முகங் காட்டு.. ன்னு, பாட்டு பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. "

" நெருப்பு மேலே நின்னு பாட்டா!?.. "

" ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்... "

" இதெல்லாம் நமக்குப் புரியாது.. தெளிவா சொல்லுமையா.. "

" ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்.. இப்ப புரியுதா!.. "

" புரியுது.. புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?.. "

" யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போயிண்டிருக்கேன்!.. "

" அப்போ.. ஸ்வாமி தரிசனத்துக்கு இல்லையா?.. "

" அதெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!.. "

" அப்போ... நானும் வர்றேன்!.. என்ன தான் நடக்குது.. ன்னு பாக்கணும்!.. "

" ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!.. "

" ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்.. 
முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!.. "

" இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு!.. ஊரே கூடி நிக்குது பார்.. முதல்ல பாட்டைக் கவனி .. "

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

" கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர் தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள.. சொல்றார்!.. 
அட.. ஏன் மேல இடிக்கிறே!.. கண் தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலா இருக்குறப்ப!.. "

" நிலாவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. நீயும் பைத்யம் ஆயிட்டயா!.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!.. "

" என்னய்யா உளர்றே!.. நிலவு இல்லேன்னா இவ்ளோ  வெளிச்சம் எப்படி வரும்!?.. " 

" ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா!.. "

" என்னா இது?.. அதிசயமா இருக்கு.. நம்பவே முடியலயே.. இப்படியும் நடக்குமா!.. "

" நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள் தான்யா!.. பாட்டுப் பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!.. "

" இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் .. இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்ப முடியலயே!.. "


"கோயில் ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலை.. இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!.. "

" அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!.. "

" நாம தான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. அங்கே பார்.. மஹாராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுண்டு ... என்னது.. அபிராமி பட்டர்.. ன்னு பட்டயம்.. அஞ்சு ஊர் மான்யமா!. சர்தான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!.. "

" இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. கல்லு மனசெல்லாம கரையுதே!.. "

ஸ்ரீ அபிராமவல்லி
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை 
ஒளிர்மதிச் செஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை 
தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை 
இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

" பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு இந்த ஜென்மத்திலயே நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!.." 

" என்னய்யா.. கண்ணுல.. "

" ஆனந்த கண்ணீர்..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. 
உங்கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. "

" நாம எல்லாம் சுப்ரமண்ய குருக்கள அவதூறாப் பேசியும், 
அவர் நமக்கும் அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்.. ன்னா..  அவர் தான்யா மனுசன்.. "

" உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!.."

" நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனியும்.. "


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

" கேட்டீரா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. "

" வாரும்.. நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!.."

" எனக்குந்தான்!.. "
**
அபிராமவல்லியின் நாடகம் இனிதே நிறைவுறுகின்றது..
***
அன்பின் நண்பர்களுக்கு
2014 ல் வெளியான பதிவினை மீண்டும் வெளியிட்டுள்ளேன்..
நன்றி..
*
அபிராமபட்டர் வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-
***

18 கருத்துகள்:

  1. அபிராமி... அபிராமி... அபிராமி அன்னையே உன்னைச் சரணடைகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா21 ஜனவரி, 2023 13:06

      ஸ்ரீராம் இப்படிச் சொன்னா எனக்கு சென்டர் நினைவுக்கு வருதே!!!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  2. அறிந்த விடயம் தங்களது தமிழில் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  3. அபிராமிவல்லி நாடகம் மிக அருமை.
    முன்பு படிக்கவில்லை போலும் நான்.
    மிக அருமையாக இருந்தது உரையாடல்.
    நான் தை அமாவாசை பதிவு போட்ட போது என் கணவர் வரைந்து தந்த படம் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பதிவைப் படித்த நினைவு உள்ளது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. முன்னாடி படிச்ச நினைவெல்லாம் இல்லை. இப்போப் படித்தேன். ரசித்தேன். கண்டேன் அபிராமவல்லியை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. பெயரில்லா21 ஜனவரி, 2023 13:04

    கதையை அழகாகச்சொல்லியிருக்கீங்க துரை அண்ணா...

    அபிராமி!!! அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அபிராமி அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நாடக உரையில் அபிராமி பட்டர் கதை. படித்து உணரும் போதே மனது சிலிர்க்கிறது. அபிராமி அந்தாதி பிறந்த கதையை நன்றாக, தெளிவான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இதை சபிக்கும் போது ஆதிபராசக்தியில் அபிராமி பட்டராகவே சிறப்பாக நடித்த எஸ். வி. சுப்பையா அவர்களின் நினைவு வந்தது. அமாவாசையன்று தன் ஆத்மார்த்த பக்தனுக்காக பூரண நிலவை சுடர் விட வைத்த அன்னை அபிராமியின் திருவருளை போற்றி வணங்கு வோம்.🙏.

    இன்று யதேச்சையாக 1700 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் நிலா சுற்றி வருகிறது என்ற செய்தியையும் படித்தேன். அமாவாசை யாததால் இன்று நம் கண்களுக்கு தெரியாதாம். அந்த அதிசய செய்திக்கும், தங்கள் அபிராமி பட்டர் பதிவுக்கும் என்ன ஒரு தொடர்பு என வியந்து விட்டேன். நம்மையறியாமல் இப்படி நடப்பது அனைத்தும் அதிசயங்கள்தான்...! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // இன்று யதேச்சையாக 1700 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் நிலா சுற்றி வருகிறது என்ற செய்தி.. //

      புதிய தகவல்..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  7. 'ஆத்தாளை எங்கள் அபிராமி வல்லியை..........இந்நாளில் வணங்கி துதிப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..