நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 05, 2022

பாபநாசம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

திருநெல்வேலி - பாபநாசத்தில் இருந்து மேலே பொதிகை மலையில்  பன்னிரண்டு கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருத்தலம்..

ஆதியில் ஸ்ரீ ஐயனார் அவதரித்த பிறகு அவர் தமது பரிவார தேவதைகளுடன் சிவபூஜை இயற்றிய தலம் இது.. கால வெள்ளத்தில் இத்தலத்தை பூமகள் தன்னுள் வாங்கிக் கொண்டாள்..




பல காலங்களுக்குப் பின் ஸ்ரீ அகத்தியர் இங்கே விஜயம் செய்த போது இரவு நேரங்களில் பிரகாசமான ஒளியைக் கண்டார்.. ஆரவார கொண்டாங்களைக் கேட்டார்..
பெரும் வியப்பில் ஆழ்ந்த அகத்திய மகரிஷி இது குறித்து தியானித்த போது ஸ்ரீ ஐயனார் வெளிப்பட்டு அருளி நின்றார்.. அத்துடன் பிற்காலத்தில் பந்தளத்தில் மானுடப் பிறப்பெனத் தோன்றி சபரியில் கோயில் கொண்டு காந்த மலையில் ஜோதியாகத் திகழ இருப்பதையும் உணர்த்தி அருளினார்..

அந்த வகையில் இதுவே ஐயனாரின் ஆதி பீடமாகக் கொள்ளப்படுகின்றது..

ஸ்ரீ சொரிமுத்து ஐயனார்

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமியுடன் ஸ்ரீ பூர்ணகலா புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஐயப்பன் கோயில் கொண்டிருக்கின்றார்.. இதுவே மூலஸ்தானம்..
அருகிலேயே சப்த கன்னியர்..
சந்நிதியின் முன்பாக நந்தி, குதிரை, யானை வாகனங்கள்.. மூலஸ்தானத்தின் வலப்புறமாக
இம்மலையின் காவல் நாயகமாகிய ஸ்ரீ சங்கிலி பூதத்தார்.. அவருக்கருகில் ஸ்ரீ அகத்தியர்.. வெளி மண்டபத்தில் ஸ்ரீ வைரவர்..

ஸ்ரீ மந்த்ர மூர்த்தி

ஸ்ரீ தளவாய் மாடஸ்வாமி

ஸ்ரீ தூசி மாடஸ்வாமி

மூலஸ்தானத்திற்கு அருகில் ஸ்ரீ மந்திர மூர்த்தி, ஸ்ரீ தளவாய் மாட ஸ்வாமி, ஸ்ரீ தூசி மாடன் என , தேவ கணங்கள் வீற்றிருக்கும் சந்நிதி..

ஸ்ரீ பேச்சியம்மன் - ஸ்ரீ பிரம்மசக்தி
அருகில் ஸ்ரீ பிரம்மசக்தி அம்பிகையுடன் ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ சுடலை மாட ஸ்வாமி வீற்றிருக்கும் சந்நிதி..

ஸ்ரீ பட்டவராயர் திருக்கோயில்
எதிர்புறமாக ஸ்ரீ பட்டவராயர் கோயில்.. இவரது பெயர் முத்துப் பட்டவர்.. வேதம் அறிந்த அந்தணர்.. காலதேவனின் கணக்கின்படி - இவர் பொம்மக்கா, திம்மக்கா என்னும் சகோதரிகளைக் காதலித்து  மணந்து கொண்டார்.. மாமனாரின் சொற்படி அவரது குலத் தொழிலாகிய
செருப்பு தைப்பதையும் மேற்கொண்டார்..  முத்துப் பட்டவர் இப்பகுதியில் கால் நடைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார்.. ஒருமுறை கள்வர்களுடன் நடத்திய போரில் வீர மரணம் எய்தினார்..
மனைவியர் இருவரும் பட்டவருடன் விண்ணேகினர்..

ஸ்ரீ பட்டவராயர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்ததனால்  முத்துப் பட்டவர் ஸ்ரீ பட்டவராயர் என்றாகினார்.. ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் இவர்களுக்கு தனது எல்லையில் இடம் தந்து ஆட்கொண்டு அருளினார்..
ஸ்ரீ பட்டவராயர் கோயிலுக்கு எதிரில் தான் குருதி பூசைகள் நடக்கின்றன..

ஸ்ரீ பட்டவராயர் சந்நிதியில் செருப்புகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உள்ளது.. இந்த வருடம் எளியேனும் காணிக்கை செலுத்தினேன்..

மணி விழுங்கி மரம்


ஐயனின் கோயிலுக்குப் பின்புறமாக மணி விழுங்கி மரம்.. இது  தல விருட்சமாகிய இலுப்பை மரம்.. இதில் கட்டப்படும் மணிகளை சிறிது சிறிதாக மரம் உள்வாங்கிக் கொள்கின்றது..




இலுப்பை மரத்தின் கீழ் - மேடையில் கணபதி..  கணபதியுடன் சங்கிலியார், பாதாள கண்டிகை, கும்பாமணி, கச மாடன் - கச மாடத்தி..
எதிரில் கரடி மாடசாமி, மேல வாசல் பூதத்தார், பிலாவடி இசக்கியம்மன் எனும் காவல் நாயகங்கள்...
இன்னும் பல கணங்கள்
அருவமாக சொல்லப் படுகின்றனர்..

ஸ்ரீ மேலவாசல் பூதத்தார்




இங்கும் பாபநாசம் கோயிலைச் சுற்றியும் ஏராளமான லங்கூர் இன வானரங்கள் சுற்றித் திரிகின்றன.. இவைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்கிறது வனத்துறை... ஆனாலும் கனிகள் அற்ற காட்டுக்குள் இவைகளுக்கு என்ன கிடைக்கும்?.. தெரிய வில்லை..

என்னது!.. மாட்னி ஷோ இல்லையா?.


பா
பநாசத்திற்கு மேலே அகத்தியர் அருவி, கோயில், சேர்வலாறு அணை, கல்யாணி தீர்த்தம், அகத்தியர் பீடம், காரையாறு அணை - என்றெல்லாம் பார்க்க வேண்டிய இடங்கள்... அனைத்தையும்  கண்டு களிக்க வேண்டும்..

சுற்றிலும் பசுமை.. நெடிதுயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை..
கண்ணிற்கும் நெஞ்சிற்கும் விருந்தாகும் ஒப்பற்ற தலம்..

" பொதுவாக.. " - என்று சொன்னால் போதும்.. யார் யாரோ வந்து, " நானும் டம்ளன் தான்!.. " 
- என்று உள்ளே
புகுந்து கொள்கின்றார்கள்..

எனவே - சைவ வைணவ சம்பிரதாயங்களின்படி  வழிபாடுகள் இயற்றும் தமிழர்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்..

ஏனெனில், தமிழ் தோன்றிய திருத்தலம் ஆயிற்றே!..


வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. அய்யனாரின் ஆதி தலம் என்கிற தகவல் புதிது.  இதற்கு பின்னர்தான் பந்தள நாட்டில் அவதாரமா?  கோவில் பற்றிய விரிவான வர்ணனைகளை படத்துடன் விளக்கி இருப்பது சிறப்பு.  எங்கள் குலதெய்வத்தின் அருள் காலையிலேயே கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      இதுவே ஐயப்பனின் ஆதி தலம்.. பந்தள மன்னன் குழந்தையைக் காட்டுக்குள் கண்டெடுத்த போது மன்னன் மனதைத் தெளிய வைத்து ஆற்றுப்படுத்துபவர் அகத்தியர் பெருமான் தான்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சொரிமுத்து ஐயனார் குறித்த விரிவான தகவல்களுக்கு நன்றி. இது தான் ஆதித் தலம் என்பதையும் இன்றே அறிந்தேன். காலையில் ஐயன் தரிசனம் கிடைத்ததுக்கு நன்றி. கோயில் குறித்தும் பட்டவராயர் குறித்தும் அரிய தகவல்களை விரிவாகக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக அழகான படங்களுடன் கோயில் வரலாறும் படித்து தரிசனம் செய்தது நேரில் கண்டு மகிழ்ந்த உணர்வு.
    மணி விழுங்கி மரம், சொரிமுத்து அய்யனார் செருப்பு காணிக்கை எல்லாம் அற்புதம் . செருப்புகள் தேய்ந்து இருக்கும் அடுத்த தடவை போகும் போது என்பார்கள் காவல் தெய்வம் செருப்புகளை அணிந்து நடப்பதாக சொல்வார்கள்.
    அய்யனார் அனைவருக்கும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டவராயர் கோயிலில் நூற்றுக் கணக்கில் செருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன.மக்களின் நம்பிக்கையுடன் கலந்தவர்கள் காவல் தெய்வங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எங்கள் குலதெய்வம் கோயிலும் வள்ளியூர் சித்தூர்தான் ஜி தளவாய் மாடசாமி பேச்சியம்மன் எல்லோரும் உணடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. அருமை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  5. ஆன்மீகமும் இயற்கையும் இணைந்த இடங்கள் மனதிற்கு இதம்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்களும் விவரணங்களும் அருமை துரை அண்ணா. முன்பும் இக்கோயில் குறித்து நீங்கள் சொல்லியிருந்த நினைவு.

    இப்பகுதி இடங்கள் எல்லாம் பல முறை சென்றிருக்கிறேன். சேர்வலார், பாணதீர்த்தம், அகத்தியர் அருவி, முண்டந்துறை.

    அழகான இடம். எனக்கு ரொம்பப் பிடித்த இடம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. மூன்று வருடங்களுக்கு முன்பும் இந்தக் கோயிலைப் பற்றி எழுதி இருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ.

      நீக்கு
  7. சிறப்பான தகவல்கள். ஐயனின் தரிசனம் கண்டு மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..