நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
ஞாயிற்றுக்கிழமை
சில பதிவுகளுக்கு முன்பு -
" மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்ணாடி பலகைகள் படம் அழகாக இருக்கிறது. உள்நாழி என்றால்!..
"
- என்று மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன் அவர்கள் கேட்டிருந்தார்கள்...
உள்நாழி என்பது வெளிப்புறத்தில்
கருவறையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்ற தொட்டி (போன்ற அமைப்பு)..
முன்பெல்லாம்
நோயினால் துயருற்று இருப்பவரோ அவருக்காக வேறு ஒருவரோ நலம் வேண்டி நேர்ந்து கொண்டு உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..
இப்படி தண்ணீர் நிரப்புவதால் மூலஸ்தானத்தில் மூர்த்தியின் மனம் குளிரும் என்பது நம்பிக்கை..
இப்பழக்கம் கால வெள்ளத்தால் மறைந்து விட்டது...
தொன்மையான சிவாலயங்கள் பலலற்றில் உள்நாழி இன்னும் உள்ளது...
சிவாலயங்களில் ஜூர ஹரேஸ்வர லிங்கம் என தனியாக சந்நிதியில் பிரதிஷ்டை இருந்தால் உள்நாழித் தொட்டியில் தான் சிவலிங்கம் இருக்கும்..
தொற்று நோயாக காய்ச்சல் பரவிடும் போது அது தீர்வதற்காக மக்கள் உள்நாழித் தொட்டியில் தண்ணீர் நிரப்புவர்..
தனியொரு வீட்டில் ஜூரம் என்றாலும் குடும்பத்தினர் உள்நாழியை தண்ணீர் கொண்டு நிரப்புவர்...
இதற்கு ஏதுவாக கோயிலுக்குள் கிணறும் இருக்கும்..
கதிர் கண்ட பனி போல கஷ்டமும் விலகும்...
அதெல்லாம் மூட நம்பிக்கை என்றான பின் சொல்வதற்கு ஏதும் இல்லாமல் போனது...
தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது..
ஜூரஹரேஸ்வர லிங்கமும் உள்நாழித் தொட்டியில் தான் இருக்கின்றது...
திரு ஐயாறு மூலஸ்தானத்தில் உள்நாழித் தொட்டி அமைப்பு உள்ளது...
மூலஸ்தானத்தைச் சுற்றி ஈசனின் ஜடாபாரம் (திருமுடிக் கற்றை) விரிந்திருப்பதாக ஐதீகம். அதனால் அங்கு வலம் செய்வதற்கு அனுமதி இல்லை..
திரு ஐயாறு கோயிலில் அகப்பேய்ச்சித்தர் ஜூரஹரேஸ்வர லிங்கம் என சாந்நித்யம் கொண்டுள்ளார்..
![]() |
| கும்பகோணம் |
கும்பகோணம் ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயிலில் உள்நாழி அமைப்பு பராமரிப்பு இன்றிக் கிடக்கின்றது..
![]() |
| தஞ்சை |
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் கருவறையைச் சுற்றி உள்நாழி அமைப்பு உள்ளது...
இந்தப் பதிவு அன்றே தயாராகி விட்டது...
புன்னை நல்லூர் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது...
நேரம் கூடி வரவில்லை
எனினும் கமலா ஹரிஹரன் அவர்களால் ஆயிற்று..
உள்நாழி படங்களும் கிடைத்தன..
இருப்பினும்
சற்றே தாமதம்...
கோயில் குளம் கிணறு விருட்சம் பக்தி என்று எல்லாமும் ஒருங்கிணைந்திருந்த காலத்தில்
மக்களுக்கு அனைத்தும் சாத்தியமாக இருந்தன...
சத்தியமாகவும் இருந்தன...
பெரிய நோய்கள் சூழ்ந்து கொண்ட காலத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உற்ற துணையாக இருந்தன...
இன்றைக்கு அப்படி இல்லை..
எனவேதான் -
நவீன மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களிலும் நெரிசல்..
ஓம் நம சிவாய
***










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..