நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 28, 2025

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 16
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது


தனனா தனத்த தனனா தனத்த  
தனனா தனத்த ... தனதான

கருவாய் வயிற்றி லுருவா யுதித்து முருகாய் மனக்க ... வலையோடே

கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த தலைபோய் வெளுத்து ... மரியாதே

இருபோது மற்றை யொருபோது மிட்ட கனல்மூழ்கி மிக்க ... புனல்மூழ்கி

இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை ... மொழிவாயே

அருமாத பத்தஅமரா பதிக்கு வழிமூடி விட்ட ... தனைமீள

அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனே பிடித்து ... முடியாதே

திருவான கற்ப தருநா டழித்து விபுதேசர் சுற்ற ... மவைகோலித்

திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து,
இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன்

படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிப் படித்துப் பிதற்றி வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து,
வீணனாக இறந்து போகாமல், 

நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு
வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்)
வளர்த்த மூலாக்கினியில் முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த
மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும்,

சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலான) முனிவர்கள்
போற்றுகின்ற  திருமந்திரத்தை எனக்கும் உபதேசித்து
அருள்வாயாக.. 

ஒளி மிகுந்த தேவர்களின் நகருக்குச் செல்லும் வழியை
 அடைத்து விட்டு, 

அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி,
ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம் கண்களை உடைய இந்திரனை  பிடிக்க முயன்று, அங்ஙனம் பிடிக்க முடியாமல் போன காரணத்தால்,

செல்வம் நிறைந்த, கற்பக
விருட்சத்தைக் கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி, 

தேவ சிரேஷ்டர்களை
அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து,

வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த
சிறையினின்றும்  அவர்களை  விடுவித்து மீண்டும்
தேவலோகத்தில் குடிபுகச் செய்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் 
சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..