நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2024

ஊற்றத்தூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 16  
ஞாயிற்றுக்கிழமை


திருத்தலம்
திருஊற்றத்தூர்

இறைவன்
ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம்
வில்வம்

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று இன்றைய நாளில் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

இந்தக் கோயிலில் தான் உலகிலேயே  அரிதான, பஞ்சநத கல்லில் வடிக்கப்பட்ட
நடராஜர் விளங்குகின்றார்..

பஞ்சநத நடராஜர்..

அதென்ன பஞ்சநத நடராஜர்!..


ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், கஜ நதனம், யாழி நதனம்  - என்ற ஐந்து வகையான கற்களில் பஞ்சநதனம் என்பது ஒளி வீசும் தன்மை உடையது..

ஸ்ரீ சிவகாமசுந்தரி
மிகவும் அரிதான, இந்த பஞ்சநத கல்லில் செய்யப்பட்டது தான் இக்கோயிலின் நடராஜர் திருமேனி. 

பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வருகின்ற ஆரோக்கியக் கதிர்களை ஈர்த்து வைத்து வழங்குகின்ற ஆற்றல் உடையனவாம்.. 

இந்த வகைக் கல் தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதனப் பாறையினால்  நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என்ற போற்றப்படுகின்றது..

இன்றைய ஊட்டத்தூர் முற்காலத்தில் ஊற்றத்தூர்.. 
வரலாற்றுச் சிறப்புடன் விளங்கிய ஊர்..

ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்  ராஜராஜ சோழரின் திருப்பணி.. 

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடாலூர் என்ற ஊரில் இருந்து நான்கு கிமீ. தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில்.. 

ராஜராஜ சோழன் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகச்  சொல்லப்படும் இந்தக் கோயில்  பற்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

இந்தக் கோயிலில் வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சந்நிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. 

மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்!..

சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கின்ற திருத்தலம் என்று அனைவராலும் கொண்டாடப்படுகின்ற திருக்கோயில்..

சிறுநீரகக் கோளாறுகள் என்றில்லை, நமது சகல பிரச்னைகளுக்கும் தீர்வெனும் மருந்து என - இத்தலத்தின் இறைவனான  ரத்தினேஸ்வரர். 

வருடந்தோறும் மாசி மாதம் 12,13,14 ஆம் நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படர்கின்றன.. 

பஞ்சநதனக் கல்லிற்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக சித்தர்கள் திருவாக்கு..  

பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை அணிவித்துப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து - அந்த தீர்த்தத்தை நாற்பத்தெட்டு நாட்கள் பருகினால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி அம்மனையும்
 நடராஜப் பெருமானையும் தரிசித்து, உடற்பிணிகளோடு மனப் பிணிகளும் நீங்கிட வேண்டும் என்று வணங்கி  வருவோம்...

இப்பதிவினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

அப்பர் பெருமான் 
இத்தலத்தினை வணங்கியுள்ளார்... 

ஆயினும் 
தனியான திருப்பதிகங்கள் 
கிடைக்கப் பெறவில்லை..

ஊற்றத்தூர் சொல்லப்பட்டுள்ள திருவூர்த் தொகை (க்ஷேத்ரக் கோவை) யின் இரண்டு திருப்பாடல்கள்..


நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.. 6/70/10..

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழ இடர்கள் தொடரா அன்றே.. 6/71/4
-: திருநாவுக்கரசர் :-

ம் நம சிவாய
சிவாய நம ஓம் 
*** 

12 கருத்துகள்:

  1. ரத்னேவரர் சகல நோய்களையும் நீக்கி அருள வேண்டும்.
    உடல், மன ஆரோக்கியத்தை அருள வேண்டும்.
    படங்களும், செய்திகளும் அருமை.
    பாடல்களை பாடி வேண்டி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரத்னேஸ்வரர் சகல நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும்..

      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி..
      நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  2. விவரங்கள் சிறப்பு.  படித்து அறிந்துகொண்டேன்.  சுத்த ரத்னேஸ்வரர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.  நிச்சயம் ஒரு முறையாவது சென்று வர ஆண்டவன் அருள வேண்டும்.  பதிவின் லிங்க்கை என் உறவினர் ஒருவருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரத்னேஸ்வரர் சகல நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  3. திருஊற்றத்தூர் இறைவன் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா. ஒவ்வொரு கோயிலின் சிறப்பும் தனிதான் இல்லையா.

    சிறுநீரகப் பிரச்சனை தீர்ப்பார் இப்படி இதைத் தீர்ப்பார் அதைத் தீர்ப்பார் என்று சொல்லப்படுவதற்காகச் செல்லாமல்
    அந்த மாபெரும் சக்தியை அறிய சிறப்பை அறிந்து கொள்ள என்று செல்ல வேண்டும். அந்த சக்திக்கு விளம்பரம் தேவையா என்ன? இது என் தனிப்பட்டக் கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரத்னேஸ்வரர் சகல நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரத்னேஸ்வரர் சகல நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும்..

      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  5. அற்புதமான கோவில்.

    பஞ்சநத நடராஜர் சிறப்புகள் அறிந்தோம்.

    ரத்னேஸ்வரர் அருளை வேண்டி வணங்கி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரத்னேஸ்வரர் சகல நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும்..

      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..
      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருஊற்றத்தூர் கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். பஞ்சநத நடராஜர் சிலை பற்றிய விபரங்களையும் விபரமாக கூறியமைக்கு மிக்க நன்றி. அப்பனையும், அம்மையையும் பக்தியுடன் வணங்கிக் கொண்டேன். அனைவரையும் இறைவன் நலமாக வைத்திருக்க என் பிரார்த்தனைகள்.அருமையான கோவில் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. கோவில் விவரங்கள் அனைத்தும் நன்று. பாடாலூர் அறிந்திருந்தாலும், இந்தக் கோவில் குறித்து அறிந்ததில்லை - சமீபத்தில் ஸ்ரீராம் பதிவு பார்க்கும் வரை! மேலும் விவரங்கள் உங்கள் பதிவு மூலம் கிடைத்தது. நன்றி. அடுத்த பயணத்தில் செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..