நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 17, 2022

ஐயப்ப சரணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல்நாள்
 வியாழக்கிழமை


ஐயப்பனின் அடியார்கள்
மாலையணிந்து 
விரதம் ஏற்கின்ற நன்னாள்..

இன்றைய தினத்தில் 
ஐயப்பனின் திருவடிகளுக்கு
எளியேனின் பாமாலை..


சாட்சியும் நானென்று வருபவனே
சார்ந்தவர்க்கருள் நலம் தருபவனே
ஆட்சியும் நானென்று அருள்பவனே
ஹரிஹரசுதனே சரணம் ஐயா.. 1

ஹரிஹரசுதனே சரணம் ஐயா
சந்நிதி வந்திட அருள் புரிவாய்
சஞ்சலம் தீர்க்கும் சத்குருவே
சரணம் சரணம் சரணம் ஐயா.. 2

சரணம் சரணம் சரணம் ஐயா
சங்கடம் தீர்க்கும் திருமகனே
தணியா தாகம் மிக உண்டு
சந்நிதி அழகைக் காண என்று.. 3

சந்நிதி அழகைக் காண என்று
சந்ததம் ஆவல் இருந்தாலும்
சக்தி கொடுத்திடு மெய்யப்பா
சந்நிதி வந்திட ஐயப்பா.. 4

சந்நிதி வந்திட ஐயப்பா
சரணம் விளிப்பார் பலகோடி
சத்தியக் கோயிலின் கோமகனே
நீயும் வருவாய் மகிழ்ந்தோடி.. 5

நீயும் வருவாய் மகிழ்ந்தோடி
நினைத்தே வருவார் துயர் தீர்க்க..
அன்பில் மூழ்கி வருவோர்க்கு
அருள்முகம் காட்டி ஆதரிக்க.. 6

அருள்முகம்  காட்டி ஆதரிக்க
ஆதரவில்லா மானிடரை..
ஆதரவில்லா மானிடர்க்கு
அடைக்கலம் நீயே ஐயப்பா.. 7


அடைக்கலம் நீயே ஐயப்பா
படைக்கலம் உந்தன் பெயரப்பா
தடைக்கல் உடைப்பாய் ஐயப்பா
நடைகொடு நலங்கொடு ஐயப்பா.. 8

நடைகொடு நலங்கொடு ஐயப்பா
வழிநடைத் துணையே ஐயப்பா
வாழ்வினில் வாழ்ந்திட பேறு கொடு
வளர்நலம் எல்லாம் வாரி இடு.. 9

வளர்நலம் எல்லாம் வாரி இடு
வாழ்வில் வாழ்வாய் வாழ்பவர்க்கு
வருந்துயர் காத்துக் காவல் கொடு
துணையின்றித் துயரில் தாழ்பவர்க்கு.. 10

துணையின்றித் துயரில் தாழ்பவர்க்கு
சங்கரன் மகனே சக்தி கொடு
உனையன்றி உறுதுணை யாருமில்லை
உன்பேர் அதுபோல் வேறு இல்லை.. 11

உன்பேர் அதுபோல் வேறு இல்லை
உன்துணை இருக்கப் பிணி இல்லை..
தவநெறி சார்ந்தார் திரு விளக்கே
காரிருள் தீர்க்கும் மணி விளக்கே.. 12

காரிருள் தீர்க்கும் மணி விளக்கே
சிவநெறி காட்டும் நெய் விளக்கே
ஸ்ரீஹரி புதல்வா வழி காட்டு
தனிவழி அதனில் ஒளி காட்டு.. 13

தனிவழி அதனில் ஒளி காட்டு
தாயாய் நின்றே நலங் காட்டு
தந்தை வடிவாய் வழி காட்டு
தமிழே அமுதே சுவை கூட்டு.. 14


தமிழே அமுதே சுவை கூட்டு
தாள்மலர் பாடிட நலங்கூட்டு
வேதனை ஓடிட விதி மாற்று
விளங்கிடும் மங்கல ஒளியேற்று.. 15

விளங்கிடும் மங்கல ஒளியேற்று
மாமலை வந்திட முகங்காட்டு
மன்னவனாய் நின்று நலங்காட்டு
மாமலை வாசனே அருள் காட்டு.. 16

மாமலை வாசனே அருள் காட்டு
மலரடி நினைந்திடும் எனை வாழ்த்து
என்பிழை எல்லாம் பொறுப்பவனே
என்குலம் வாழ்ந்திட அருள் காட்டு.. 17

என்குலம் வாழ்ந்திட அருள் காட்டு
என் நிலை யாவும் அறிந்தவனே
எளியவர்க் கிரங்கித் திகழ்பவனே
சாட்சியும் நானென்று வருபவனே!.. 18
**

ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***

20 கருத்துகள்:

  1. இவ்வளவு நீளமான அந்தாதியா?  பலே, பாராட்டுகள்.  நன்றாக வந்திருக்கிறது.  ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தாதியா!..

      அந்தாதி மாதிரி தானே தவிர அந்தாதி அல்ல..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. ஹரிஹரபுத்திரனுக்கு அழகான பாமாலையாக புனைந்து அவர் உள்ளம் குளிர சாற்றி விட்டீர்கள்.

    /மாமலை வாசனே அருள் காட்டு
    மலரடி நினைந்திடும் எனை வாழ்த்து
    என்பிழை எல்லாம் பொறுப்பவனே
    என்குலம் வாழ்ந்திட அருள் காட்டு/

    அழகான வேண்டுதல்..நாம் அறிந்தறியாமல் செய்திருக்கும்/ செய்யும் நம் பிழைகளை பொறுத்து நமக்கு வேண்டியதை அவன்தான் அருள வேண்டும். அவனை பாதம் பற்றி தொழுவதை தவிர்த்து நாம் ஒன்றும் அறிகிலோம்.

    ஹரிஹர புத்ராய..
    புத்ர லாபாய..
    சத்ரு நாசாய..
    மதகஜ வாகனாய..
    மஹா சாஸ்துருவே நமோ நமஃ

    ஓம். சரணம் ஐயப்ப்பா சரணம் ஐயப்பா

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவன் பாதம் பற்றி தொழுவதை தவிர்த்து நாம் வேறு ஒன்றும் அறிகிலோம்.//

      இது தான் சரணாகதி..

      ஓம். ஸ்வாமியே சரணம் ஐயப்ப்பா..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அயிகிரிநந்தினியின் ராகத்தில் பாடிப் பார்த்துக் கொண்டேன். இன்று முதல் சரண கோஷங்களை அடிக்கடி கேட்கலாம். ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அயிகிரி
      நந்தினியின் ராகத்தில் பாடிப் பார்த்துக் கொண்டேன்.//

      வழிநடைப் பாடல் இசையில் இந்தப் பாடல்.. பதினெட்டுப் படிகள் என்பதால் பதினெட்டுக் கண்ணிகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. //Geetha Sambasivam "ஐயப்ப சரணம்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    அயிகிரிநந்தினியின் ராகத்தில் பாடிப் பார்த்துக் கொண்டேன். இன்று முதல் சரண கோஷங்களை அடிக்கடி கேட்கலாம். ஸ்வாமியே சரணம் ஐயப்பா!// மெயில் பாக்ஸில் இருந்து இழுத்துக் கொண்டு வந்தேன். என்னடா நமக்கு பதிலே வரலையேனு வந்து பார்த்தால் காணோம், காணவே இல்லை, காணாமல் போயிருக்கு. திரும்ப மெயில் பாக்சில் போய்ப் பார்த்துக் கையோடு இழுத்துக் கொண்டு வந்து போட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழுத்துக் கொண்டு வந்த வரைக்கும் நல்லது..

      நானும் அடைபட்டிருந்ததை விடுவித்து விட்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. ஆனால் பின் தொடரும் கருத்துக்களும் துரைத்தம்பி மற்றவர்களுக்குச் சொல்லும்/சொன்ன பதில்களும் கரெக்டா வந்துடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது பின்னூட்டங்கள் மட்டுமே இப்படி ஆகின்றன..
      ஏன் என்று புரியவில்லை..

      எப்படியோ
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.

      நீக்கு
    2. நெல்லைக்கும் இப்படி ஆவதாகச் சொல்லி இருக்கார். இது ஏதோ கணினி தொழில்நுட்பக் கோளாறோ என எண்ணுகிறேன். அல்லது ப்ளாகர் பிரச்னையா இருக்கலாம்.

      நீக்கு
    3. //ஏதோ கணினி தொழில் நுட்பக் கோளாறு..//

      அதெல்லாம் நமக்கு எட்டாத விஷயங்கள்..

      நீக்கு
  6. பாமாலை மிக அருமையாக இருக்கிறது.

    பாமாலையை படித்து ஐயப்பனை வணங்கி கொண்டேன்.
    குலத்தை காப்பாய் மணிகண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குலத்தை காப்பாய் மணிகண்டா..//

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஐயப்பா சரணம்! சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயப்பா சரணம்.. சரணம் ஐயப்பா!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..