நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

திருவிளக்கு

ஒளி இன்றி உலகம் ஏது?..
விளக்கு இன்றி வீடு தான் ஏது?..
விளங்குகின்ற வீடுகள் இன்றி நாடு தான் ஏது!..

இன்று நாடுமுழுதும் இரவு ஒன்பது மணிக்கு வீடுகள் அனைத்திலும்
விளகேற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்
நமது பாரதப் பிரதமர் அவர்கள்...

சைவ வைணவ சமய ஆசாரங்களில் உள்ளவர்களுக்கு
இது ஒரு வரப்ரசாதம்...


தீபங்கள் ஏற்றுவது நமது பாரம்பர்யம்... 

நல்ல விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது ஒரு மங்கலம்..
அதில் ஒரு குற்றமும் இல்லை.. குறையும் இல்லை...

ஆகவே
பிரதமர் அவர்களின் வேண்டுகோளை அனுசரிப்பதில் மகிழ்ச்சியே...

பாரதத்தின் கலாசாரத்தில் நம்பிக்கையற்றவர்களும்
பாரதத்தின் கலாசாரத்தை மதிக்கும் மனம் அற்றவர்களும்
எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்...

அவற்றையெல்லாம் கேளாச் செவியராய் புறந்தள்ளி விட்டு
அவர்களது நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்...


தனக்கு ஊற்றப்படும் தண்ணீரை
தனது முட்களுக்காகவும் எடுத்துக் கொள்கிறது
ரோஜாச்செடி..


பிரதமர் அவர்களது வேண்டுகோளின்படி விளக்கேற்றி வைப்போம்..

வினைகளும் விஷக்கிருமிகளும் அழிந்து ஒழிவதற்கு
நம்மளவில் வேண்டி நிற்போம்...


சுகம் கரோதி கல்யாணம்
ஆயுர் ஆரோக்யம் தன ஸம்பத:
சத்ரு புத்தி விநாசாய
தீப ஜோதிர் நமோஸ்துதே..

ஆன்றோர்களும் சான்றோர்களும்
அடியார்களும் ஆழ்வார்களும் - எல்லாம் வல்ல எம்பெருமானை
ஒளிமயமானவன்.. ஜோதி வடிவானவன் என்றே சாற்றி நிற்கின்றனர்..


அந்த அளவிலே ஸ்ரீ வள்ளலார் ஸ்வாமிகளும்


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்சோதி!..

என்று போற்றிப் புகழ்கின்றார்...


புற இருளை அகற்றும் திரு விளக்கு
அக இருளையும் நீக்கி - பிணி, பகை, வறுமை எனும்
கேடுகளையும் நீக்கியருளட்டும்.. 


அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்...
-: வள்ளலார் :-

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்சோதி!.. 
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. தீபத்தின் ஒளியில் தீமைகளைப் பொசுக்குவோம்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பதிவு துரை. ஒன்பது நிமிடம் விளக்கேற்றச் சொல்லி இருப்பதிலேயே அதில் ஓர் காரணம் இருப்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 52 வீடுகளுக்கும் அகல் விளக்குகள் கொடுத்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      ஒன்பது நிமிடம் என்பது ஒன்பது கோள்களுக்காகவா?

      மேலும் என்ன காரணம் என தங்கள் பதிவிலேயே இன்று வரும் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஒன்பது கோள்களின் சஞ்சாரத்திற்ககாவும் எனச் சொல்லுகின்றனர். இதில் என்னுடைய நம்பிக்கையும் உண்டு. மற்றபடி வரும் செய்திகளில் பகிரலாம் எனத் தோன்றுவதைப் பகிர்கிறேன்.

      நீக்கு
  3. இரண்டு நாட்கள் முன்னர் காஞ்சி மடத்தில் இருந்து கோதுமை மாவில் மஞ்சள் பொடி போட்டுப் பிசைந்து நெய் ஊற்றிக் காலை பதினோரு மணியிலிருந்து பனிரண்டு மணி வரை எரிய விடும்படி வேண்டுகோள் வந்தது. அது போலவே இதுவும் யாரோ ஒரு பெரியவர் அல்லது பெரியவர்கள் சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. நலமே விளையட்டும் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. நலம் விளையட்டும் நல்லது நடக்கட்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அன்புடன் பக்தியுடன் குறிப்பிட்ட அந்த நேரத்தில் விளக்கேற்றுவோம். எப்போதுமே ஒன்பது மணி வரை வீட்டில் பூஜையறையில் விளக்கு எரியும். உலகம் முழுவதும் நல்லவை நடந்து அனைத்து மக்களும் நன்மையடைய நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நம் பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவிமடுப்பான்.

    பதிலளிநீக்கு
  8. விதியோடு விளையாடும் ராகங்களே...
    விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே...
    கனலேந்தி வாருங்கள் தீபங்களே...
    கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே...

    பதிலளிநீக்கு
  9. தீப ஒளி பிறக்கட்டும் . தீமைகள் மாயட்டும்.
    வாழ்க வையகம், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.



    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..