நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 02, 2020

சிவமே சரணம் 8

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்
பிணியும் பகையும் விலகிட வேண்டும்.. 
***
இன்றைய பதிவில் 
திருநாவ்க்கரசர் அருளிச் செய்த 
திருத்தாண்டகம்

ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் - 39

திருத்தலம் - திருமழபாடி



இறைவன் - ஸ்ரீ வஜ்ரதம்பேஸ்வரர், வைத்யநாதர்
அம்பிகை - ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ சுந்தராம்பிகை


தலவிருட்சம் - பனைமரம்
தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம், கொள்ளிடம்

ஸ்ரீ நந்தியம்பெருமானுக்கும் சுயம்பிரகாஷிணி தேவிக்கும்
திருமணம் நிகழ்வுறும் திருத்தலம்
இன்றைக்கு பங்குனி புனர்பூசம்.
நந்திகேசனின் திருமண நாள்..



நீரேறு திருமேனி உடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடிய விடமுண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி எங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே..1

கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரை மேலாடல் உடையான் கண்டாய்
அனலங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்
அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 2


நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்றம் இலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 3

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய் 
கொலையான கூறங் குமைத்தான் கண்டாய் 
கொல்வேங்கைத் தோலொன்று உடுத்தான் கண்டாய் 
சிலையால் திரி புரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய் 
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்  
மழபாடி மன்னு மணாளன் தானே.. 4


உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோடு இன்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்கம் ஆனான் கண்டாய் 
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய் 
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடி எந்தலை மேல்வைத்த   
மழபாடி மன்னு மணாளன் தானே.. 5

தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூ மலரான் ஏந்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலை ஒன்றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையில் ஏந்தி கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 6

திருமழபாடிக்கு எழுந்தருளும் ஐயாறப்பர் 
நீராகி நெடுவரைகள் ஆனான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்
பாராகிப் பௌவம் ஏழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க்கு அன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 7

பொன்னியலும் திருமேனி உடையான் கண்டாய் 
பூங்கொன்றைத் தாரொன்று அணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவர் இல்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 8

ஸ்ரீ நந்திகேசனும் சுயம்பிரகாஷிணி தேவியும்
ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க்கருள் செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் 
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் 
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்  
மழபாடி மன்னு மணாளன் தானே.. 9


ஒருசுடராய் உலகேழும் ஆனான் கண்டாய்
ஓங்காரத்து உட்பொருளாய் ஆனான் கண்டாய்
விரி சுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியும் ஆனான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
ஈடழிய இருபது தோளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் தானே.. 10

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. ஓம் நமச்சிவாய...   நாட்கள் விரைந்தும், அமைதியாகவும், நலமாகவும் கடந்து செல்ல அருள் செய் சிவனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஓம் நமச்சிவாய....

    திருமழபாடி - தலம் செல்ல வேண்டும் என நினைத்திருக்கும் தலம்.

    அனைவருக்கும் அவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      திருச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றனவே...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஓம் சிவாய நம...

      நீக்கு
  4. அரியதொரு பாடல்! இதைப்படிக்கத்தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சிவமே சரணம்.
    பதிகம் பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. ஓம் நமச்சிவாயம் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  7. மழபாடியுள் மாணிக்கம் இவர் தானே? எத்தனையோ போகாத கோயில்களில் இதுவும் ஒன்று. அருமையான பதிகப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..