நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 08, 2026

கோயிலிது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
ஞாயிற்றுக்கிழமை


இன்று மாசி 24 (8/3) ஞாயிறு

இன்று முதல் 
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை 
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி 
மேற்கொள்கின்றாள்..

பூச்சொரியலுடன் வைபவம் தொடங்கிற்று..

இந்நாட்களில்
அன்னைக்கு இளநீர், பானகம், மோர், துள்ளு மாவு இப்படியானவை மட்டுமே தினசரி நிவேத்தியம்..

அன்னைக்குப் புகழ்மாலை

கோயிலிது கோயிலிது
குலம் காக்கும் கோயிலிது
வாசலிது வாசலிது
வளம் தரும் வாசலிது

ஊர் கொண்ட நாயகியின்
ஓங்காரக் கோயிலிது
சீரங்கப்பெருமாளும்
சீர் கொணரும் வாசலிது..

கார் கொண்ட முகிலாக
அருள் பொங்கும் கோயிலிது
பேர் கொண்ட நலமாக
பிணி தீர்க்கும் வாசலிது..

காவிரியின் தீரத்திலே
கண்மலரும் கோயிலிது
கைகூப்பும் பேருக்கெல்லாம்
கைகொடுக்கும் வாசலிது

அன்றரக்கர் தமை வென்ற
அன்னையவள் கோயிலிது
நின்று தொழுவோர் தமக்கு
நிறை யளக்கும் வாசலிது..

தூங்காமணி விளக்கு
சுடர் ஓங்கும் கோயிலிது
தாங்காத துயர் மாற்றும்
தங்கத் திரு வாசலிது..

மண்ணளந்த மாதேவி
மங்கலத்துக் கோயிலிது
பொன்னளந்த புண்ணியத்தின்
பொற்பாத வாசலிது

கண் விளங்க ஆயிரமாய்
கரை காட்டும் கோயிலிது
பண்ணளந்த பசுந்தமிழால்
விண்ணளந்த வாசலிது..
**

இன்றைய நவீன உலகிற்கு 
இவளே
அமைதியைத் தரவல்லவள்..

 ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***

12 கருத்துகள்:

  1. சமயபுரம் அம்மனை பாமாலை பாடி வணங்கினோம்.
    உங்கள் பாமாலை நன்றாக உள்ளது.

    உலகை ஆளும் அன்னை நாம் வாழும் உலகிற்கு அமைதியைத் தர வேண்டு வோம்.

    ஓம் பராசக்தி சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகம் அவளுடையது..

      உலகை ஆளும் அன்னை உலகிற்கு
      அமைதியைத் தர வேண்டுவோம்.

      மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  2. சமயபுரம் சென்று வந்து நாளாகிறது. ஒரு தரிசனம் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னை அவளே துணை...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  3. சமயபுரம் மாரியம்மனுக்கான பா சிறப்பு. சில மாதங்கள் முன்னர் அங்கே சென்று அம்மனை தரிசித்து வந்தேன். பூச்சொரிதல் நிகழ்விற்கு வண்டி வண்டியாக பூக்களை எடுத்துச் செல்லும் பக்தர்கள் - ஒவ்வொரு வாரமும் நடந்து வந்து அன்னையை தரிசிக்கும் பக்தர்களை திருச்சியின் எல்லா பகுதிகளிலும் பார்க்க முடியும்.

    அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சமயபுரத்தில் வெகு சிறப்பான பூச்சொரியல் விழா...

      உண்மை தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. இன்றைய பாமாலையை மிகவும் ரசித்தேன். கோயிலிது, வாசலிது என்று மிக அருமையாக எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. அன்னைக்கு புகழ்மாலை கவிதையை படித்து அன்னையை வணங்கி கொண்டேன். புகழ்மாலை அருமை.
    சமயபுரத்து அன்னை அனைவரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.சமயபுரம் அன்னையை படங்களின் மூலமாக தரிசித்துக் கொண்டேன் நமக்காக விரதம் இருக்கும் அன்னையை மனதாற வணங்கி, அனைவரையும் நலமுடன் வைத்திருக்கும்படி பிரார்த்தனைகளும் செய்து கொண்டேன்.

    அன்னைக்கு தாங்கள் சூட்டிய பாமாலை நன்றாக உள்ளது. பக்தியுடன் பாடி அன்னையை வணங்கி கொண்டேன். அன்னைக்கு பூச்சொரிதலின் முதல் நாளன்று தாங்கள் தொடுத்த பாமாலையையும் அன்னை கண்டிப்பாக விரும்பி ஏற்றிருப்பாள். அனைத்து நலன்களையும் அன்னை அனைவருக்கும் தர வேண்டும். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகையும் வேண்டுதலும்
    மகிழ்ச்சி..
    நன்றியம்மா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..