நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
ஞாயிற்றுக்கிழமை
வழி கேட்டு நிற்பவர்க்கு
விழி காட்டி அருள்பவளே
பழி அஞ்சி வாழ்பவர்க்கு
பால் நிலவாய் திகழ்பவளே..
நிறை கொண்ட மனம் கண்டு
வளர் நலத்தைத் தரும் தாயே
சிறை கொண்ட துயர் மாற்றி
மறு வாழ்வும் தருவாயே...
ஆனபடி அத்தனையும்
அம்மா நீ அறிவாயே
ஆயிரங்கண் உடையவளே
அகலத்தை ஆள்பவளே..
நிறை எது குறை எதுவோ
நிகழ்ந்ததுவும் விதி வழியே
போனதெலாம் போகட்டும்
நலங்காட்டு விழி வழியே..
பொன்னாட பூவாட
அனலாடப் புனலாட
வேம்பாட கனியாட
காற்றாடி வருபவளே..
செந்தூர நெற்றியிலே
பூங்குழலும் சேர்ந்தாட
சிந்து மணி தானாட
சிரித்தாடி வருபவளே..
சிங்கம் உந்தன் வாகனமாம்
அன்னத்துடன் பூ ரதமாம்
தங்கப் பரி மேல் அமரும்
வித்தகியே வாருமம்மா..
வேம்பு எனும் விருட்சத்தில்
விருப்பமுடன் வாழ்பவளே
வழி கேட்டு வருபவர்க்கு
வசந்தம் என வாருமம்மா..
தங்கம் என்னும் குணத்தழகு
தாமரையின் நிறத்தழகு
குங்குமத்துப் பொட்டழகு
மஞ்சள் மதி முகத்தழகு..
தங்க நிறத் தாமரையே
தாள்மலர்கள் சரணமம்மா
தான் உதித்த வடிவழகே
சரணம் சரணம் சரணமம்மா..
*
ஓம் சக்தி ஓம்
***



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..